
நிலத்தை வளைச்சுப்ப்போட்டு விவசாயம் பண்ண ஆரம்பிச்சவங்க, விளைஞ்சதையும், வளர்த்த மிருகங்களையும்(அட, இந்த ஆடு, மாடு, கோழி இதுகளைச் சொல்றேன்) வித்து வியாபாரம் செஞ்சு நாலு காசு பார்க்கணுமா இல்லையா?எல்லாத்தையும் அவுங்களே சாப்புட முடியுமா?
இங்கே இருந்து இங்கிலாந்துக்கு, அதான் அவங்க சொந்த நாட்டுக்கே பொருட்களையெல்லாம் கப்பல்லே ஏத்தி அனுப்பியிருக்காங்க. 1880களிலே ஆட்டு ரோமத்துக்கு இருந்த விலை மதிப்பு ரொம்பக் குறைவாப் போச்சு. கொஞ்சக்காசுக்கு ஏற்றுமதி பண்ணறதும், நிறையக்காசு கொடுத்து அங்கே இருந்து மத்த சாமான்களும் வாங்குனா கஷ்டம்வராம என்ன செய்யும்?
சின்ன ஊர்களிலே இருந்தவங்க எல்லாருக்கும் வேலை வாய்ப்பில்லாமப் போச்சு. நிறையப்பேருக்கு அவுங்க செஞ்சுக்கிட்டு இருந்த வேலையே போச்சு. வசதியே இல்லாத வீடுகள், சரியான சாப்பாடு இல்லாத குறைன்னு குழந்தையும் குட்டியுமாக் குடும்பத்தோட கஷ்டம். அரசாங்கமும் இவுங்களுக்கு ஒண்ணும் உதவி செய்யலை.
தொழிற்சாலைகளோட நிலையோ இன்னும் மோசம். ஆட்கள் ரொம்ப நேரம் வேலை செய்யணுமாம். எட்டுமணி நேரம்னு கணக்கெல்லாம் இல்லை. 'இஷ்டம் இல்லையா போ. உன் வேலையைச் செய்ய ஆள் இங்கே க்யூலே நிக்குது'ன்னுஇருந்துச்சாம். சரியான வெளிச்சம் கிடையாது. மெஷீன்லே வேலை செய்யறப்ப பாதுகாப்பு நடவடிக்கைன்னு ஒண்ணும் இல்லை.ச்சின்னவயசுப் பசங்களும் பொண்ணுங்களும் வேலைக்கு சேர்ந்துட்டாங்க. எல்லாம் அப்பா,அம்மாவுக்கு உதவியா இருக்கணுமேன்னுதான்.
1882லே முதல்முறையா, ஃப்ரீஸ் செஞ்ச இறைச்சியை ஒரு கப்பல்லே ஏத்தி பிரிட்டனுக்கு அனுப்புனாங்க.அந்தக்கப்பலுக்குப் பேரு 'டனேடின்'. ( இந்தப் பேருலே இங்கே ஒரு ஊர் இருக்கு. டச்சு நாட்டைச் சேர்ந்தவங்க நிறையப்பேர் அங்கே செட்டில் ஆயிருந்தாங்களாம்) இந்தக் கப்பலின் உடல்பகுதி (hull) இரும்புலே செஞ்சிருந்தாங்களாம். ஃப்ரீஸிங் மெஷினரி ஒண்ணும் உள்ளெ வச்சிருந்தாங்களாம். இந்த இறைச்சி கெட்டுப் போகாம நல்லபடியாப் போய்ச் சேர்ந்திருக்கு.நல்ல காசும் கிடைச்சதாம். கிலோவுக்கு ஒரு ஷில்லிங்கும், ஆறு பென்ஸும். அப்ப இது பெரிய லாபமாம்.
இதுக்கிடையிலே இங்கே ரெயில்பாதை போடறது, தபால்தந்தி ஆஃபீஸுங்க, டெலிஃபோன் நெட்வொர்க் போடறதுன்னுவேலைங்க கொஞ்சம் கொஞ்சமா நடந்துக்கிட்டுத்தான் இருந்துச்சு. ஆனாலும் ஜீவனம் கஷ்டமாத்தான் இருந்துச்சாம்.
இந்த நிலமை கொஞ்சம் அடங்குனவுடனே மளமளன்னு மத்த முன்னேற்றங்கள் ஆரம்பிச்சுச்சு. வெள்ளைக்காரங்க வந்த புதுசுலே இந்த பென்னிஃபார்திங்னு சொல்ற சைக்கிள்களை அவுங்க நாட்டுலே இருந்தே கொண்டு வந்திருந்தாங்க. அதாங்க ஒரு ச்சின்னசக்கரமும், ஒரு பெரிய ஜெயிண்ட் சக்கரமும் வச்சது. அதுலே எப்படித்தான் ஏறிப் போனாங்களோ?
இந்தக் காலக்கட்டங்களிலே பொம்பளைங்களுக்குன்னு இருந்த உடைகள் எங்கியாவது ம்யூஸியத்துலே இருந்தாப் பாருங்க. அப்படியே பிரமிச்சு நின்னு போவீங்க. ச்சின்ன இடுப்பா இருக்கணும். ஆனா பாவாடைஅடிப்பாகம் பெரிய வட்டம். நம்மூர்லே கோழிக்குஞ்சுங்களை அடைச்சு வைக்கிற பஞ்சாரம் பார்த்திருக்கீங்களா?அதுக்குள்ளே நுழைஞ்சுக்கிட்டு அதோட மேல்பாகத்தை இடுப்புலே கட்டிக்கிட்டு நிக்கிற மாதிரி. அடுக்கடுக்கா துணிங்க. இது வெளியே போட்டுக்கிட்டுப் போறதுக்கு மட்டும். வீட்டுலே இருக்கப்ப பாதம்வரை நீளமா இருக்கற லாங் ட்ரெஸ்.
இப்ப 1888 லே டயமண்ட் ஃப்ரேம் வச்ச காத்து அடிச்சு ஏத்தற ட்யூப்,டயர்னு மாடர்னா சைக்கிள்ங்க வந்துருச்சு. ஏறி உக்காந்து மிதிச்சா அப்படியே 'ஸல்'ன்னு போகுது. கஷ்டப்படாம சுலபமா ஒரு நாளைக்கு80 லே இருந்து 120 கிலோ மீட்டர் ஈஸியாப் போயிட்டு வந்துரலாம். முக்கியமா செலவு கம்மி.
குதிரையிலே ஏறிக்கிட்டு, இம்மாந்தூரம் போறது ஒரு கஷ்டமுன்னா, அதுக்கும் சாப்பாடு, தீவனம் எடுத்துக்கிட்டுப் போகணும். அங்கங்கே அதுக்கும் ரெஸ்ட் கொடுக்கணும். தண்ணி காமிக்கணும். இந்த வேலையெல்லாம் சைக்கிளுக்கு இல்லை பாருங்க.
அப்பப்பார்த்து இங்கே எலக்ஷனும் வந்துச்சு. ஜெயிச்சது லிபரல் கட்சி. எல்லா ஜனங்களுக்கும் நல்ல வாழ்க்கைஅமைச்சுக் கொடுக்கறோமுன்னு வாக்குறுதி கொடுத்து ஜெயிச்சாங்க.
இங்கே மொதமொதல்லே கவர்மெண்ட் ஆஃபீஸ்னு ஆரம்பிச்சு வேலை நடந்துக்கிட்டு இருந்தப்ப (அதான் அந்த'வைட்டாங்கி ஒப்பந்த்தம் 1840 லே நடந்துச்சே, அதுக்கு அப்புறமா) அரசியல் கட்சிங்கன்னு ஒண்ணும் ஆரம்பிச்சிருக்கலை. 1853 லே இங்கிலாந்துலே இருந்து நியூஸிக்கு வந்த Henry Sewell ன்ற 46 வயசுக்காரர், இங்கே வந்து சேர்ந்ததும்கிறைஸ்ட்சர்ச் டவுனுக்கு M.P.யா ஆனார். ஏன்னா இங்கே வர்றதுக்கு முன்னாலேயே அவர் லண்டன்லே இருந்தப்பவே நியூஸிலாந்து கம்பெனின்னு அங்கே ஒண்ணு இருந்துச்சு பாருங்க, அதுலே உதவி சேர்மனா இருந்திருக்கார். இவர் வக்கீலுக்குப் படிச்சவர்.
இப்படியே ஒரு மூணு வருசம் இங்கே இருந்த பிரிட்டிஷ் காலனிக்கு எக்ஸிக்யூடிவ் மெம்பரா இருந்தார்.மேலிடம் இவரைக் கூப்புட்டு பிரதமரா இருக்கச் சொல்லிருச்சு. இவர்தான் இந்த நாட்டின் முதல் பிரதமர்.1856வது வருஷம்.
இவரோட பதவிகாலம் ரெண்டே வாரம்தான்! இவருக்கப்புறம், அடுத்து வந்த 34 வருசங்களிலே 11 பேர் பிரதமர்களா இருந்துருக்காங்க. ரெண்டு மாசம், ஒரு வருசம் இப்படி பல விதமா.
இந்த லிபரல் கட்சிதான் மொதல் அரசியல் கட்சியா உருவானது.
புது அரசாங்கம் என்ன செஞ்சது?
இதை அடுத்த வகுப்புலே பார்க்கலாம்.
பிகு: தாணு கேட்டுக்கொண்டபடி பழைய காலத்து போஸ்ட்டீயோட படம்.
கிடைச்சது. போட்டுருக்கேன்.