இந்த நூத்தியெட்டு என்ற பெயரில் எனக்கு ஒரு ஈர்ப்பு இருக்கு ! திவ்ய தேசங்கள் எல்லாம் தெரிஞ்சுக்காத ஒரு காலம் அது ! முதல்முதலா நூத்தியெட்டு லிங்கங்கள் இருக்கும் கோவிலுக்கு போனது.... ஹரிஹர் என்னும் ஊரில். நம்ம பக்கங்களில் இருக்கும் சங்கரநாராயணர்தான் அந்த ஹரி + ஹரன் ! அது இருக்கும் , ஒரு அம்பது அம்பத்தியஞ்சு வருசங்களுக்கு முன்னே !
நூத்தியெட்டு சிவாலயமுன்னு வழியில் பார்த்த தகவலின் படி, இப்போ நாம் போய் வந்த பாலைவனநாதர் கோவிலில் நூத்தியெட்டு சமாச்சாரம் ஒன்னும் இல்லை என்பதால் , அது எங்கேன்னு தேடவேண்டியதாப் போச்சு. ஆரம்பத் தடுமாற்றத்துக்குப்பின் கூகுள் உதவியால் போயிட்டோம். அந்தக் கோவிலில் இருந்து இந்தக்கோவிலுக்கு இடையே 2.2 கிமீதான். வண்டியை நிறுத்திட்டு இறங்கி வலப்பக்கம் பார்த்தால் சின்ன குளமும் 108 சிவாலயம் என்ற போர்டும்.
பக்கவாட்டில் இருந்தக் கம்பிக்கதவினூடே புகுந்து கோவில் வளாகத்துக்குள் போயிட்டோம். இது ஏதோ புழக்கடை வழி போல இருந்தது. முந்தாநாள் சிவராத்ரி விழா கொண்டாட்டம் நடந்த சாட்சியா அலங்காரங்கள் பாக்கி!
மூலவரை நோக்கிப்போய் கும்பிட்டோம். ராமலிங்கஸ்வாமி ! இந்தக் கோவிலையே கீழை ராமேஸ்வரம் னு சொல்றாங்க. ( அப்ப நம்ம ஒரிஜினல் ராமேஸ்வரம் மேலை ராமேஸ்வரமா ? ஙே..... )
ராமனும் சீதையுமா அவுங்க கையாலேயே பிடிச்சு வச்ச சிவலிங்கங்களாம்....... ராவணவதம் முடிஞ்சு, ராமேஸ்வரம் வந்து மணல் லிங்கமெல்லாம் செஞ்சு ப்ரம்மஹத்தி தோஷம் தீர்ந்து அயோத்தி நோக்கிப்போறாங்க ராமரும் அவரைச் சேர்ந்தவர்களும். சீதைக்கு மட்டும் யாரோ இன்னும் பின் தொடர்ந்து வர்றதுபோல் இருக்கு. என்னன்னு பார்த்தால் மிச்சம் மீதி இருக்கும் தோஷங்கள்! யுத்தத்தில் பலரைக் கொன்ன பாவம் ! இதென்னடா சல்யம், இன்னொருக்கா சிவனைக் கும்பிடலாமுன்னு அக்கம்பக்கம் கண்களை ஓட்டினால்..... குடமுருட்டி ஆறும், கரையில் வில்வ மரமும் இருந்துருக்கு. இப்ப சிவலிங்கம்தான் ஒன்னு வேணும்! கூடவே இருந்த ஆஞ்சி, நான் போய்க் கொண்டுவரேன்னு கிளம்பிப்போனார். அவர் வரும்வரை ச்சும்மா உக்கார்ந்திருக்காமல், இப்பதான் மணல் லிங்கம் நல்லாவே செய்ய வருதேன்னு ராமனும் சீதையுமா ஆற்றங்கரை மணலில் லிங்கம் செய்ய ஆரம்பிக்கறாங்க. அதுபாட்டுக்கு சரசரன்னு செய்யவருது. ப்ராக்டீஸ் மேக்ஸ் பெர்ஃபெக்ட் !!!!
ஆஞ்சி, சிவலிங்கத்தோடு வந்து சேரும்போது பார்த்தால் இங்கே ஏகப்பட்ட லிங்கங்கள். எத்தனைன்னு எண்ணிப் பார்க்கும்போது நூத்தியேழு ! ஆஞ்சி கொண்டுவந்தது நூத்தியெட்டு ! இந்த நூத்தியெட்டு என்ற எண் ஆன்மிகச் சிறப்பும் வாய்ந்தது இல்லையோ !
அத்தனை லிங்கங்களையும் வச்சு, சிவனை பூஜிக்க தோஷங்களும் பாவங்களும் ஒரேடியாத் தொலைஞ்சது. (அப்பாடா..... ஊரின் பெயர்க் காரணம் கிடைச்சுருச்சு ! )நல்லவேளை, அந்த லிங்கங்களை அப்படியே விட்டுட்டு, அவுங்க அயோத்திப் பயணத்தைத் தொடர்ந்துருக்காங்க. மக்களுக்கும் நூத்தியெட்டு சிவலிங்கங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பும் அமைஞ்சது !
இப்படி நூற்றியெட்டு சிவலிங்களை தரிசிப்பது நமக்கு மூன்றாம் முறை. ஸ்ரீலங்காப் பயணத்தில் காயத்ரி ஆஸ்ரமத்தில் தரிசனம் செஞ்சோம். எதிர்பாராமல் அமைஞ்சது. என்ன ஒன்னு அந்த லிங்கங்கள் எல்லாம் நர்மதா நதியில் கிடைச்ச பாணலிங்கங்கள்.
https://thulasidhalam.blogspot.com/2019/06/110.html
அப்புறம் போனமுறை போன காசிப்பயணத்தில் ஒரு ஆஸ்ரமக்கோவிலில் ( மணி மந்திர் ) நூற்றி ஐம்பத்தொரு சிவலிங்கங்களை தரிசனம் செஞ்சோம். கறுப்புப் பளிங்கில் லிங்கங்களும், வெள்ளைப்பளிங்கில் ஆவுடையார்களுமா ஒரு அமைப்பு !
https://thulasidhalam.blogspot.com/2023/02/12.html
தான் கொண்டு வர்றதுக்கு முன்னால் எப்படி லிங்கம் செய்யலாம் என்ற கோபத்துடன் ஆஞ்சி இருக்க, 'சரி........ மணல் லிங்கத்தை எடுத்துட்டு, நீ கொண்டுவந்த லிங்கத்தை அங்கே வை ன்னு சீதை சொல்ல', ஆஞ்சியால் அதைக் கிளப்ப முடியாமல் போய், தன் வாலால், லிங்கத்தைச் சுத்தி இழுக்க, வால் அறுந்துபோயிருக்கு. நிலமெல்லாம் ரத்தம் !
இப்படி ஒரு சமாச்சாரத்தை நாம் ஒரிஜினல் ராமேஸ்வரத்தில் கேட்டுருக்கோம் இல்லை ? இதென்னடா ஹிஸ்டரி ரிபீட்னு எனக்குத் தோணுச்சு. நம்பினால்தான் சாமி. மனசே சும்மாக்கிடன்னு அடக்கி வச்சேன்.
சம்பவத்துக்கு ஆதாரமா..... இந்த பாபநாசம் ஏரியாவில் கொஞ்சதூரத்துலே இருக்கும் அனுமநல்லூர் என்ற ஊர்தான் அறுபட்ட வால் விழுந்த இடமுன்னும் சொல்றாங்க.
தனியா ஒரு சந்நிதியில் ஆஞ்சு கொண்டுவந்த லிங்கம் அனுமத்லிங்கம் என்ற பெயரில் பிரதிஷ்டை ஆகியிருக்கு.
அம்பாளுக்குத் தனிச்சந்நிதி ! பர்வதவர்தினி
ரொம்ப பழைய காலத்துக்கோவிலாம். இருக்காதா பின்னே..... த்ரேதாயுகத்துக்காரர் இல்லையோ ராமர். இப்ப நாம் பார்க்கும் கோவில் பல்வேறு மன்னர்கள் ஆட்சியில் பழுது பார்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டுப் புதுத் தோற்றத்தில் இருக்கு என்பது உண்மை. பத்து பனிரெண்டு நூற்றாண்டுகளில் சோழர்களும், அப்புறம் பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர மன்னர்கள்னு அவரவர் அவரவர் ஸ்டைலில் விரிவுபடுத்தியிருக்காங்க.
மணல் லிங்கங்கள் எல்லாம் இப்போ கருங்கல் லிங்கங்களாகத்தான் இருக்கு. மூலவர் சந்நிதிக்கு வலப்பக்கத்தில் நீளமா ஒரு மண்டபத்துக்குள்ளே நூற்றியாறு சிவலிங்கள். ஓரளவு பெரிய சைஸ்தான் ! மண்டபத்துக்குள்ளே மூணு வரிசை, இடையில் ரெண்டு வரிசைத்தூண்கள். ரெண்டு வரிசையில் முப்பத்தியஞ்சு, முப்பத்தியஞ்சு, ஒரு வரிசையில் முப்பத்தியாறு ! (கூட்டிப்பாருங்க. நூற்றியாறு வருதா ? ) உள்ளே போய் லிங்கங்களைத் தொட்டு வழிபடலாம். வெறும் பத்தே ரூபாய்தான் கட்டணம். நொண்டிக்காலை வச்சுக்கிட்டு என்னால் முடியாதுன்னு, நம்மவரை மட்டும் உள்ளே போகச் சொன்னேன். இல்லை. வேணாமுன்னுட்டார் (நீயில்லையேல் நானும் இல்லை ? ) இந்தப் பகுதியைப் படம் எடுக்க அனுமதி இல்லை.
கீழே படங்கள் வலையில் கிடைச்சவை. நன்றி !
பிரகாரம் சுத்தபோனோம். கோவில் அன்னதானத் திட்டத்துக்கு சாப்பிடும் வசதிகள் ஒருபக்கமும் தொட்டடுத்து அடுக்களையும் உள்ள அமைப்பு. ரெண்டு பெண்மணிகள் சமையல் வேலையில்..... இன்றைய மெனு : சுரக்காய், கத்தரிக்காய் சாம்பார் & உருளைக்கிழங்கு பொரியல் ! சுத்தமான இடம்தான் !
பிரகாரத்தில் நால்வர் சந்நிதியில் ஐந்தாவதாக சேக்கிழாரும் இருக்கார் !
ஐப்பசி பவுர்ணமிதினம் நூற்றியெட்டு லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் செய்யறாங்களாம்.
வலம் முடிஞ்சு மூலவராண்டை வந்தால், மண்டபத்தில் உண்டியலைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்காங்க. அறநிலையத்துறை, வசூல்வேட்டைக்கு வந்துருக்கு ! கோவில் குருக்கள் அங்கே நின்னு என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தார்.
காசை எண்ணி முடிக்கட்டுமுன்னு நாம் மூலவரைக் கும்பிட்டுக் கிளம்பிட்டோம். காசி ராமேஸ்வரத்துக்கு இணையா இந்தக் கோவில் இருக்குன்னும், அங்கெல்லாம் போகமுடியாதவர்கள் இங்கே வந்து தரிசனம் செஞ்சால் அதே புண்ணியம் கிடைக்கும்னு சொன்னார் , குருக்கள்.
பகல் சாப்பாட்டுக்கு எங்கே போகலாமுன்னு ஒரு யோசனை இப்போ ! எனக்கு மனசில் ஒரு இடம் தோணுச்சு !!!
தொடரும்....... :-)
PINகுறிப்பு : நேற்றைய விமான விபத்தால் உயிரிழந்த மக்களுக்கு நம் அஞ்சலிகளையும் அவர்தம் உற்றார் உறவினருக்கு நம் மனமார்ந்த ஆறுதல்களையும் துளசிதளம் மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம். நினைக்கும்போதே நெஞ்சம் பதைபதைக்கிறது.....
கீழை இராமேஸ்வரம் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். தல வரலாற்றுக் கதையும் அறிந்தோம்.
ReplyDeleteவிமான விபத்து நேற்றைய சன் செய்தியில் கேட்டதுமே திகில் நிறைந்ததாக இருந்தது.
இறை அஞ்சலி செய்வோம்.
ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம்.
வாங்க மாதேவி,
Deleteவிமான விபத்து... ப்ச்.....
ஒன்னும் மனசே சரியில்லைப்பா ...
தமிழ்நாட்டில் இரண்டு பாபநாசம் உண்டு. இரண்டுமே புகழ்பெற்ற தலங்கள்.
ReplyDeleteபடங்களும் விவரங்களும் அருமை.
வாங்க ஸ்ரீராம்,
Deleteஇதுவரை தின்னேலி பாபநாசம் போக வாய்ப்பு கிடைக்கலை.
நன்றி
ReplyDeleteவாங்க விஸ்வநாத்,
Deleteநன்றி !