Friday, May 23, 2025

தாயார் (2025 இந்தியப்பயணம் பகுதி 24 )

காலையில் சீக்கிரமாவே கோவிலுக்குப் போகலாமான்னேன்.  அப்புறம்ன்னா ரொம்ப வெயிலா இருக்கு.  ஆமாம்னு சட்னு  ரெடியாகி  ஸ்ரீரெங்கவிலாஸில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு எட்டே முக்காலுக்கேக் கிளம்பிப்போனோம்.  வந்து இன்றைக்கு மூணாம் நாள் ! இதுவரை தாயாரை ஸேவிக்கலை...... ப்ச்.... 
தாயார் சந்நிதியாண்டை இருக்கும் வாசல்வழியாகப் போனால்  ரொம்ப நடக்கவேணாம்தானே ?  மேற்கு கோபுரம் வழியாப்போய் வடக்கு உத்திரை வீதியில் (திருவிக்ரமன் திருச்சுற்று ) கோவில் வாசலாண்டை இறங்கினோம்.  இதுதான் நமக்கு முதல்முறை இந்த வாசல்வழியா வர்றது.....  கோபுரவாசல் தாண்டியதும் கண்ணெதிரே கம்பர் மண்டபம், அடுத்து மேட்டழகியசிங்கர், நமக்கு வலப்பக்கம் தாயார் சந்நிதி. 
கோவிலில் கூட்டம்  இன்னும் வரலை. தாயார் சந்நிதிக் கதவு   மூடியிருக்கு.  பக்தர்கள் அங்கங்கே தரையில் உக்கார்ந்துருக்காங்க. இந்தாண்டை மேட்டழகியசிங்கர் சந்நிதியும்  மூடித்தான் இருக்கு. நம்மவர் மட்டும் மேலே ஏறிப்போய் கதவாண்டை நின்னுட்டு வந்தார்.  இன்னும் எங்கேயும் தரிசனநேரம் ஆரம்பிக்கலை போல ! 
ச்சும்மா நிக்காம, மெது நடையா அந்தாண்டை அஞ்சுகுழி மூணுவாசல் வரை போனேன்.  நம்மவரிடம்  'முடியுமா'ன்னு கேட்டதுக்கு, 'இடுப்பை ஒடைச்சுக்கிட்டால் கஷ்டம்'னார். 
அடுத்த வாசல் கடந்துவந்தால்  சந்திரப் புஷ்கரணி கேட்டை யாரோ திறக்கறாங்களேன்னு போனால்....  அந்த மனிதர், கம்பிக்கிடையில் கை நுழைஞ்சுக் கும்பிட்டுக்கிட்டு இருந்தார்.  

இந்தப்பக்கம் உள்ளே நுழைஞ்சு பார்க்க நமக்கின்னும் வேளை வரலை. கோவில்  ஸ்தலவிருட்சம் புன்னைமரம் இங்கேதான் இருக்கு.  குளத்தையொட்டி உள்பக்கம் நிறைய சந்நிதிகள் இருக்கு.  ரொம்ப வருஷத்துக்குமுன்னே ஒரு சமயம்  கோவிலில் பரிச்சயமான பக்தை ஒருவருடன்  கோதண்டராமர் சந்நிதிப்பக்கம் இருந்த கேட் வழியா நான் உள்ளே போய் பார்த்திருக்கேன்.

இந்தப்பதிவை எழுதும்போது இந்த இடத்தை இன்னொருக்கா பார்க்கலாமேன்னு போய்ப் பார்த்தேன். ஸ்ரீதேவியின் தயவால் உள்ளே போனதும் க்ளிக்கிய படங்களும் எனக்கே பிடிச்சுப்போச்சு. நீங்களும் விரும்பினால்  இதோ லிங்க்கு !

 https://thulasidhalam.blogspot.com/2017/11/74.html

புஷ்கரணியாண்டை,  கோவில் பூனைக்குப் பால்சோறு வச்சுட்டுப்போயிருக்காங்க.  முந்தியெல்லாம் காலை ப்ரேக்ஃபாஸ்ட், பெடிக்ரீயாத்தான் இருந்தது. எப்போ மெனு மாறுச்சோ ? 
இந்தாண்டை சொர்கவாசலை விடமுடியாது. எப்போ நேரில் பார்க்க வாய்ப்பு வருமோ? தெரியலையே.....
இந்தப்பெரிய கோவில் ஏழு சுற்றுகளுடன் கட்டப்பட்டுருக்கு ! ஏழும்,  ஏழுலகக் கணக்குதான் !  ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு தனிப்பெயரும்கூட இருக்கு !  இந்த சொர்கவாசல் இருக்கும் சுற்று, குலசேகரன் திருவீதி ! மொத்தம் இருபத்தியொரு கோபுரங்கள்.  மொட்டை மாடியில் இருந்து பார்த்தால்  ஜே ஜேன்னு இருக்கும் ! 
சந்நிதிகள் திறக்கட்டும்.   நாம் ராமர் வரை போகலாமுன்னு போனால்..... கோதண்டராமர் சந்நிதி திறந்துருக்கு !  ராமா......   பட்டர்ஸ்வாமிகள்  ஆரத்தி காண்பிச்சார்! நமக்கு ஏகாந்த தரிசனம்.  சந்நிதி இப்போ மூடும் நேரமாம்.  ஒரு முக்காமணியில் திறந்துருவோம்னு சொன்னார். சின்னப்பேச்சு சமயம், நாம் அயோத்யா போய் வந்ததைச் சொன்னோம். ஆர்வமா அதைப்பற்றி விசாரிச்சார்.  அவர் கம்பிக்கதவை பூட்டிக் கிளம்பினதும்  ராமனுக்குத் துணையா இங்கேயே கொஞ்ச நேரம் இருக்கலாமேன்னு மண்டபப்படியாண்டை ரெண்டு பக்கங்களிலும் இருக்கும்  குட்டித்திண்ணைகளில் இடம் பிடிச்சோம். முழங்காலுக்கு சிரமம் இல்லாமல் கொஞ்சம் உயரமா இருக்கு. 
ராமா.... நீ சின்னப்பையனா இருந்தப்ப எப்படி இருந்தாய்னு உனக்குத் தெரியுமோ ?  அந்தக் காலத்தில் ஃபோட்டோ எல்லாம் ஏது ?  உன் பால்ய கால ரூபத்தைக் கையோடு கொண்டு வந்துருக்கேன். உனக்குப் பார்க்கணுமுன்னா ஒரு எட்டு ஹயக்ரீவாவரைப் போய்ப் பார்த்துக்கோ ! டெலிபதிதான் .
அடுத்த அரைமணிக்கூறு  நமக்குப் பொழுது போகணுமேன்னு  ஆஞ்சு குடும்ப அங்கங்கள் வந்து  சர்க்கஸ் ஆட்டம்  போட்டதும் சந்தோஷமே ! 

கோபுரக்கிளிகளும் வந்து போயின !

நிம்மதியா உக்கார்ந்து, அக்கம்பக்கம் பார்த்து, நல்ல நினைவுகளை அசைபோடுவதும்  ஒரு தியானம்தான் இல்லை ? எனக்கு ரொம்பப்பிடிச்சதே இதுதான். கோவில்களுக்குப் போனோமா.... சிரமப்படாமல் மூலவரை தரிசித்தோமா..... கொஞ்சநேரம் ஒரு பக்கம் ஓரமா நிம்மதியா உக்கார்ந்துட்டு வந்தோமான்னு ......   அதுவும் இங்கே பெரியவரையும், தாயாரையும்    தரிசிக்கலைன்னாக் கூடப் பரவாயில்லை. கோவிலுக்குள் போய் ஒரு இடத்தில் உக்கார்ந்துட்டு வரலாம்.  

காசு வசூலில்   ரொம்பவே பிரபலமான  ஒரு கோவிலில் ஜஸ்ட்  ச்சும்மா  இப்படி உள்ளே போக முடியுமா என்ன ?  இல்லாத டிமாண்ட் உண்டாக்கி வச்சு, காத்திருந்து காத்திருந்து, கடைசியில் மூச்சடைச்சு,  நல்ல இருட்டுக்குள் நிற்பவனைப் பார்க்க,   ஒரு விநாடி நேரம் கொடுக்காமக் கையைப் பிடிச்சு இழுத்து வெளியே கடாசும் வல்லரக்கர்களை வேலைக்கு  வச்சுருப்பவனை என்னன்னு சொல்றது ?  மனக்குமுறலை  அப்பப்பக் கொட்டிவிடறதுதான்  நல்லது..... 
 கண்ணாடி ஆண்டாளைப் பார்க்கலாமுன்னு  மெல்ல எழுந்து போனால்  அங்கேயும்  கம்பிகேட் மூடி  இருந்தது. பட்டர் ஸ்வாமிகளுக்கெல்லாம்  காஃபி ப்ரேக் டைம் போல !  அந்தப் பெரிய மண்டபத்தில் தடுப்பு வச்சு நீளமா மறைச்சுருக்காங்க.  முதலுதவி மருத்துவ மையமாம்!  சரியாப் போச்சு.....
இவ்ளோ பெரிய கோவிலில்  ( 155 ஏக்கர்) ஏதோ ஒரு மூலையில் ஒருவருக்கு உதவி தேவைப்பட்டால் இம்மாந்தூரம் தூக்கி வருவாங்களா  ? இல்லை....தகவல் அனுப்பி, இங்கேயிருந்து உதவியாளர் அம்மாந்தூரம் போவாரா ?

  "பெருமாளே.... யாருக்கும் ஒன்னும் ஆகாமல் நீயே காப்பாத்து..... "
மணி பத்தாச்சேன்னு அங்கிருந்து கிளம்பி, நம்மவருக்குக் கம்பிவழியாகவாவது ஸ்ரீ பரமபதநாதரை காண்பிக்கலாமுன்னு போனால்...... ட்டடா.....    சந்நிதி ஓப்பன் ! உள்ளேபோய் கண்ணாடி ஆண்டாளையும்,  பரமபதநாதரையும் 'மற்றவர்களையும்'  தரிசனம் செஞ்சுட்டு அந்தாண்டை போய் மணல்வெளியைக் க்ளிக்கிட்டு  குலசேகரன் திருச்சுற்று (ஹா.... நம்ம சொர்கவாசல் இருக்கும் ) வழியாகத் திரும்பறோம்.

இந்தாண்டை  ஸ்ரீ தன்வந்த்ரி ,'வா'ன்னார்.  கொஞ்சம் படிகள் ஏறத்தான் வேணும்.  பக்கவாட்டில் ஒரு சறுக்குப் பாதை புதுசா இருக்கு.  கால் சரியில்லா மக்களுக்குக் கருணை காமிச்சுருக்காங்க.  'முழங்கால் வலியை நீரே குணப்படுத்தணும்' வேண்டுதல் ஆச்சு.
தாயார் சந்நிதிக்குள் போய் தரிசனம் முடிச்சுப்ரகாரம் சுற்றிவந்து, துளசிமாடத்தாண்டை ஒரு அஞ்சு நிமிட் உக்கார்ந்தாச்.  வாசலில்  இருக்கும் பூக்களில் மனோரஞ்சிதம்!  விடமுடியலை. 
உக்ரநரசிம்ஹர் சந்நிதியும் திறந்திருந்தது.  நம்மவர் போய் ஸேவிச்சுட்டு வந்தார்.   பத்தரை மணி இப்போ !  வெயிலுக்கு ஸ்ருதி ஏறுது.....  சரி... கிளம்புன்னுட்டு , விஜியை வரச் சொல்லி, ஹயக்ரீவா வந்துட்டோம். 
ஆயிரங்கால் மண்டபம், சேஷராய மண்டபம்னு எதையும்  இந்தமுறைப் போய்ப் பார்க்கலை என்றது ஒரு பெரிய குறைதான். இவ்ளோ சொல்றேனே..... இங்கே  தெப்போற்சவம் நடக்கும் தெப்பக்குளத்தை  இத்தனை பயணங்களிலும் ஒருமுறை கூடப்போய்ப் பார்த்ததில்லை.  வழக்கம்போல் இந்த முறையும்.....  ப்ச்..... 

ஆசையா, மனோரஞ்சிதத்தை முகர்ந்து பார்த்தால்..............  மணம்.....  கொஞ்சம்கூட இல்லவே இல்லை. ரொம்பப் பழைய பூ போல இருக்கு. விலையும் அதிகம்தான்..... ப்ச்.... படம் ஒன்னு க்ளிக்கி மகளுக்கு அனுப்பினேன். 

கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு லஞ்சுக்குப்போகலாம்.  சரியா ?    

தொடரும்........... :-)

6 comments:

  1. Replies
    1. வாங்க விஸ்வநாத்,

      நன்றி !

      Delete
  2. //இல்லாத டிமாண்ட் உண்டாக்கி வச்சு, காத்திருந்து காத்திருந்து, கடைசியில் மூச்சடைச்சு, // துளசி டீச்சர்.. கோவிலில் சன்னிதி கார்யங்கள் (ஆராதனம் போன்றவை) நடக்கணும். இடையில் இலவச தரிசனம், ஸ்பெஷன் தரிசனம், அதற்கான நெடிய மக்கள் கூட்டம். சில நேரங்களில் கூட்டம் அதிகம் என்றால் சட் என்று திருப்பிவிட்டுவிடுவார்கள். எனக்கும் பல கோயில்களில், கிடைக்கிற சில விநாடிகளில் பெருமாளைப் பார்க்க முடியாமல் பட்டாச்சார்யார்கள் குறுக்கே மறைத்து நின்றுகொண்டிருப்பது கடுப்பாகத்தான் இருக்கும். பெருமாளை பக்தர்களுக்கு எப்போதுமே மறைக்கக்கூடாது என்பதுதான் ஆகமப் படிப்பின் முதல் வரியாக இருக்கவேண்டும். இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத்தமிழன்,
      நீங்க சொன்னது முற்றிலும் சரி ! குறுக்கே நின்னு மறைச்சால் எப்படி ? நான் எப்பவும் நினைப்பேன்..... 'நான் மட்டும் பெருமாளா இருந்தால்.... மக்களைப் பாடாப்படுத்தும் கோவில்களின் விமானத்தில் ஏறி நின்னு, மக்களுக்குக் காட்சி கொடுப்பேன்'ன்னு ! ப்ச்......

      Delete
  3. இவ்வளவு சிரம தரிசனத்துடன் நீங்கள் வணங்கியதுபோல ஒரு ஓரமாக அமர்ந்து இருந்து மனக்கண்ணில் சேவிப்பதும் சுகமே.

    ReplyDelete
  4. வாங்க மாதேவி,
    இப்படிக் கால்வலி படுத்தும்போது, இனி மனக்கண்ணில்தான் சேவிக்கமுடியும்..... ப்ச்.....

    ReplyDelete