Tuesday, May 18, 2010

சின்னதா ஒரு ஜெயில் வாசம்

எங்க ஜாதகப்படி இன்னிக்குச் சிறை வாசம் லபிச்சது. தர்மஸ்தலா போய்ச்சேர்ந்தோம். வழியில் ஒரு பார்க் போல இருக்கு. அநேகமா இங்கே சுற்றுலாப்பயணிகள் குளிக்க ஒரு ஏற்பாடு இருக்கணுமுன்னு நினைக்கிறேன். அங்கே வரிசையாக இருந்த கடைகளில் மாற்று உடுப்புப் போல பலநிறங்களில் லுங்கி மாதிரி ஒன்னு தொங்கிக்கிட்டு இருந்துச்சு. ஒரு வேளை நேத்ராவதி ஆறு, குளிக்கும் படித்துறையோ? இல்லே சின்னதா ஒரு நீர்வீழ்ச்சியோ, இல்லை அணைக்கட்டுபோல மதகு வச்சு தண்ணீர் பீறிடும் அமைப்போ..... ஏதோ ஒன்னு. கழிவறைக்குப் போகும் வழின்னு அம்புக்குறியோடு ஒரு தகவல் பலகை, தமிழில்!!!
என்னுடைய யூகம் சரின்னு சொல்லுச்சு. தமிழ்க்காரர்கள் கூட்டம் அதிகம் போல! வேட்டியை மடிச்சுக் கட்டு........

கோவிலைப் பிரதானமா வச்சுதான் ஊரே அமைஞ்சுருக்கு போல நம்ம திருப்பதி மாதிரி. ஊரின் ஒரு பகுதி முழுசும் கோவிலுக்கே!

ஜேஜேன்னு இருக்குது ஊர். பெரிய பெரிய கட்டிடங்கள். கோவில் வாசலில் போய் இறங்கினோம். காலணிகள் பாதுகாப்பு, நிறைஞ்சு வழியுது. சாதுவா காட்சி அளிக்கும் வரிசை ஆரம்பிக்கும் இடத்துக்கு வந்தோம். ஒரு பத்துப் பதினைஞ்சு பேர்தான் நமக்கு முன்னால் நடந்துபோய்க்கிட்டு இருந்தாங்க. முதல்முறையா வர்றோமே.....பின் தொடர்ந்தோம். அவுங்க சட்னு பிரிஞ்சு இன்னொரு வாசலில் போனாங்க. 'தேவாலயத்திற்க்கு வழி' அம்பைப் பின்பற்றினோம் நாங்க.
கட்டம் கட்டமா நீளமா பிரிச்சுவச்ச கூண்டுக்குள் நுழைஞ்சு படுக்க வச்ச 'எஸ்' ஸைப்போல் பயணிச்சு கூண்டின் ஆரம்ப வரிசைக்குப் போனோம். ஒரு அம்பது பேர் நின்னுருந்தாங்க நமக்கு முன்னால். கம்பிக் கட்டங்களில் எல்லாம் கலர்கலரான நூல்கள் கட்டித் தொங்குது. பத்து நிமிசத்துலே சின்ன கதவைத் திறந்து வரிசை நகர்ந்துச்சு. சரியா நமக்கு முன்னால் ஒரு ரெண்டு பேர் இருக்கும்போது கதவை அடைச்சுட்டாங்க! கொஞ்ச நேரத்துலே திறப்பேன்னு சொல்லி அந்த ஆள் எஸ்கேப். பின்னால் திரும்பிப் பார்த்தால் ரெண்டு வரிசை நிறைஞ்சு போயிருந்துச்சு அதுக்குள்ளே. அஞ்சே நிமிசத்தில் அத்தனை வரிசைகளும் நிரம்பி வழியுது. பேச்சுச் சத்தம், குழந்தைகளின் வீறிடல் இப்படி வகைவகையா.......
நமக்குப்பின்னால் நின்ற பெரிய குடும்பத்தில் ஒரு இளைஞரைத்தவிர மற்றவர்கள் எல்லோரும் அப்படியே காலை மடக்கித் தரையில் உக்கார்ந்துட்டாங்க. இளைஞர் மட்டும் கோபிகைகளுக்கு நடுவே க்ருஷ்ணன் போல அப்படியே நடுவில் நின்ன போஸ். நேரம் ஆக ஆக கால்மாற்றி மாற்றி நின்னவர் ஒரு கட்டத்துலே ஓசைப்படாம அப்படியே நடுவில் உக்கார்ந்துட்டார்.
எனக்கு முன்னே இருந்த இளம் தம்பதியர் பெங்களூரு வாசிகளாம். கோவிலுக்கு ரெண்டாம் முறையா வர்றாங்களாம். இப்பத் திறந்துருவாங்க. இன்னும் ஒரு மணி நேரத்துலே தரிசனம் முடிச்சு வெளியே போயிறலாமுன்னு எனக்கு ஆறுதல் சொன்னாங்க. கால் வலிச்சாலும் என்னால் தாங்கிக்க முடியுமே தவிரத் தரையில் உட்காருவது ரொம்பப் ப்ரயாசம் எனக்கு. கஷ்டப்பட்டு உக்காரலாம். ஆனா எழுந்திரிக்க முடியாது. அதான் வம்பு வேணாமுன்னு நிக்கிறேன். கோபால் அவரோட ப்ளாக்பெரியில் மெயிலுக்குப் பதில் எழுதிக்கிட்டு ஆஃபீஸ் வேலை பார்த்துக்கிட்டு இருக்கார். நான் வண்ண நூல்களில் தூக்கிக்கெட்டி இருக்குன்ன பெண்டண்ட் வகைகளையும் வளையல்களையும் கவனிச்சுக்கிட்டே இருந்தேன்.
வரிசையில் நின்னு போரடிச்சுப்போன யாரோ ஒரு புண்ணிய ஆத்மா தன்னுடைய கையிலோ கழுத்திலோ இருந்ததை யதேச்சையாக் கழட்டி மாட்டி இருக்கலாம். இன்னிக்கு அது ஒரு சம்ப்ரதாயமா ஆகி எல்லோரும் நூலைக் கட்டிவிட ஆரம்பிச்சுட்டாங்க போல!

ஒரு பையன் பத்து வயசு இருக்கும் மெள்ள என் அருகில் வந்தான். எங்கே இருந்து எப்படி வர்றான்னு கேட்டால், 'உங்க தலைக்கு மேலே ஃபேன் இருக்கே. அதில் கொஞ்சம் காற்று பிடிச்சுக்க வந்தேன்'னான். குடும்பம் பின்னால் இதே வரிசையின் கடைசியிலாம். கதவு திறக்கும்போது அங்கே போய்ச் சேர்ந்துக்குவானாம். பொடியன் பெண்களூர். பரிட்சை நேற்றொடு முடிஞ்சதாம். டூர் கிளம்பி இருக்காங்களாம். ரெண்டு முழுவாரம் சுத்தலாம்.
மாம்பழ ஜூஸ் விக்கிறவர் கம்பிக்கு அந்தப் பக்கம் இருந்து வியாபாரத்தை மும்முரமா நடத்தறார். ஜனங்கள் வாங்கி வாங்கிக் குடிச்சுட்டுக் காலி பாட்டிலைக் கம்பி வழியா வெளியே வீசி எறியறாங்க. எனக்கு எரிச்சல். குடிச்சு முடிச்ச பாட்டிலை அவரே சேகரிச்சுக் குப்பைத் தொட்டியில் போடலாமில்லே. படிக்கட்டின் பக்கத்தில் அந்தப் பக்கம் பெரிய குப்பைக்கூடைதான் இருக்கே.
ஒலிபெருக்கி கரகரத்துச்சு. காத்துக்கிடக்கும் சனத்துக்கு என்ன ஏதுன்னு தகவல் விளக்கம் வருமுன்னு பார்த்தால் அங்கே வழிபாடு நடத்த என்னென்ன செலவாகுமுன்னு வரிசைப்படுத்திக்கிட்டே இருக்காங்க. கீழே படம் இருக்கு பாருங்க. இதுலே இருக்கும் ஐட்டமெல்லாம் திரும்பத்திரும்பச் சொல்லிக்கிட்டே இருக்க நான் கேட்டுக்கேட்டே கிட்டத்தட்ட எனக்கு மனப்பாடமா ஆகிருச்சு:(
'கோவிலில் எதுக்கு தரிசனம் நிறுத்தி வச்சுருக்காங்க? எப்ப மறுபடி வரிசை நகரும்? இன்னும் எவ்வளவு நேரத்தில் அநேகமா தரிசனம் கிடைக்குமுன்னு மக்கள் மனம் ஆறுதலுக்கு எதாவது சொல்லக்கூடாதா?' குங்கும அர்ச்சனைக்கு இவ்வளவு, பெள்ளிக்காய நைவேத்யா இவ்வளோ, தீர்த்த பால்டி இவ்வளோன்னு........அடப்போப்பா.

இதுலே கோபால் வேற ' இப்ப மட்டும் ஸ்டாம்பீடாச்சுன்னா அவ்ளோதான்' என்கிறார். யாருக்காவது மருத்துவ உதவி, ஹார்ட் அட்டாக்ன்னாலும் எப்படி வெளியேற முடியும்? எதாவது ஆபத்துன்னா வெறும் புரளியா இருந்தாலும் ஜனங்க ஆவேசமா அடிச்சுப்பிடிச்சுத் தப்பிக்கப் பார்ப்பாங்களே.... என்ன ஏதுன்னு பார்க்காம ஆட்களை மிதிச்சுச் சவுட்டித்தானே பல விபத்துக்கள் ஏற்பட்டுப்போகுது கூட்டங்களில்.

பக்தர்கள் கூட்டம் இன்றைக்குக் கூடுதலா இருக்கறதாலே உங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்ன்னு ஒரு அறிவிப்பு நிரந்தரமா வச்சு நம் கஷ்டத்தைப் போக்கிட்டாங்க!!!!

இந்தியா போன்ற மக்கள்தொகை இருக்கும் நாட்டில் எங்கே போனாலும் கூட்டத்துக்குக் குறைவே இருக்காது. அதிலும் நாமோ கடவுளை நம்பி, பக்திப் பரவசம் பெற கோவில்களுக்குப் போகும் கூட்டம். இப்படி வரும் பக்தர்களைக் கூண்டில் அடைச்சு 'என்னவோ' ஆக்கிட்டாங்க பாருங்க:(


கதவை வெளியே இருந்து அடைச்ச ஆள் அங்கே வரவே இல்லை. தப்பா வந்து மாட்டிக்கிட்டோமேன்னு இருக்கு. அப்ப ஒருத்தர் சொல்றார் பனிரெண்டரைக்கு அபிஷேகம் இருக்கு. அதனால் தரிசனம் நிறுத்தி இருக்கலாமுன்னு. அதையாவது அதிகாரப்பூர்வமா ஒலிபெருக்கியில் சொல்லலாமில்லையா?
திடீர்னு அங்கே பாருன்னு கோபால் கை காமிச்சார். கம்பி வழியாக வெளியே வளாகத்துலே பார்த்தால் யானையார் வசூலில் பிஸி. அவரைப் பார்த்தாவது கஷ்டத்தை மறக்கலாமுன்னு நினைச்சேன். ஒரு மணி ஆகிருச்சு. பசி, களைப்பு எல்லாம் சேர்ந்து ஒரு மாதிரி இருக்கு.

கதவைத் திறந்ததும் வெளியே அடுத்தபக்கம் இருக்கும் சைடு கதவு வழியா வெளியே போயிடலாமுன்னு முடிவு செஞ்சோம். இனி காத்திருப்பு ஒன்றே வழி. மஞ்சுநாதா....இப்படி ஜெயில்வாசம் கொடுத்துட்டேயே......

ஒன்னே கால் மணிக்கு அந்த ஆள் வந்து கதவைத் திறந்தார். பரபரன்னு வெளியே ஓடி இருக்கலாம். விதி யாரை விட்டது? ' இன்னும் கொஞ்சநேரத்துலே தரிசனம் கிடைச்சுரும். ஆனநேரம் ஆச்சு பார்த்துட்டே போகலாமு' ன்னு பெங்களூரு இளம்தம்பதிகளைத் தொடர்ந்து போறார் கோபால். அந்த வரிசை அப்படியே படிகள் இறங்கி வலப்பக்கமாய்ப் போய் இன்னொரு கம்பிக்கூட்டில் அடைஞ்சது. இங்கே இடுப்பளவு உசரம்தான் தடுப்பு. கூண்டுக்குள் அடைஞ்ச முகங்களை இனி கம்பிவழியாப் பார்க்க வேண்டாம் என்ற ஆசுவாசம்.
வரிசை மறுபடி படுக்க வச்ச 'எஸ்'. அடுத்த பக்கம் திரும்பும் இடங்களில் குடிதண்ணீர் விநியோகம் நடக்குது. கம்பி வழியா என்ன நடக்குதுன்னு பார்த்தால் இந்த வரிசை முடிஞ்சு வெளியே திறந்தவெளியில் கொஞ்ச தூரம் வரிசை நகர்ந்து எதிர்க் கட்டிடத்துக்குள்ளே போகுது. அங்கே துணிச்சுவரால் மறைவு போட்டு வச்சுருக்காங்க. வரிசை நகருதா இல்லையான்னுகூட நமக்குத் தெரியாது.. எத்தனை 'எஸ்' இருக்குமோ யார் கண்டா?
கொஞ்சம் நகரத்தொடங்கிய நம்ம வரிசை திடீர்னு நின்னுச்சு. அரைமணி போல ஆச்சு. மணி ரெண்டடிக்கப் போகுது. நமக்கோ இன்னும் மூணு மணி நேரத்துலே மங்களூர் ஏர்ப்போர்ட் போயிடணும். தங்கக் கவச முகமூடி
சிவன் தானே மஞ்சு நாதர்? பார்க்காட்டிப் பரவாயில்லை. இவரைத்தான் கத்ரியில் சேவிச்சாச்சே. ரெண்டரை மணி நேரம் வரிசையில் நின்னாச்சு. வரிசை நகர்ந்து திறந்தவெளி போனதும் விடு ஜூட்.
வெளியே தப்பிவந்து ஓடும்போது எதிர்ப்பக்கம் சாப்பாடு வரிசை ஆரம்பமுன்னு போர்டு இருக்கு. யாரும் இல்லை. போய்ப் பார்க்கலாமுன்னா பயமா இருக்கு. அங்கேயும் போய் மாட்டிக்கிட்டோமுன்னா? ஓடு ஓடுன்னு வெளியே ஓடி காலணிகளை வாங்கிக்கிட்டு வளாகத்தில் நிற்கும் யானையாரைப் பார்த்துட்டு சாப்பாடு கூடத்தை வெளியில் இருந்து க்ளிக்கிட்டு, ப்ரஷாந்தை வண்டியைக் கொண்டு வரச்சொல்லி நிழலில் ஒதுங்கி நின்னால்....... மனசை அப்படியே பிழிவது போல ஒரு காட்சி. ஊருக்கே சோறு போடும் இடத்தில் அன்ன ஆகாரமில்லாம நோய்வாய்ப்பட்ட ஒரு நாய் அலங்கோலமாத் தரையில் கிடக்கு. கடவுளே....உனக்குக் கண் இல்லையான்னு மனம்வெறுத்துப்போச்சு. கோவில் பணியாளர்கள் குறுக்கும் நெடுக்குமாப் போறாங்களே...யார் கண்ணிலும் படலையா........ ஒன்னும் செய்ய வகை இல்லாம அழுதுக்கிட்டே வண்டியில் ஏறினேன். குற்ற உணர்ச்சி அப்படியே பிடுங்கித் தின்னுக்கிட்டே இருக்கு இதுநாள் வரையிலும்:(


கசப்பான அனுபவத்தோடு தர்மஸ்தலாவை விட்டுக் கிளம்பினோம். என்னைப் பொறுத்தவரை இது அதர்மஸ்தலாவா ஆகி இருந்துச்சு. கொடுப்பினை இல்லை:( எங்கேயாவது நல்ல இடத்தில் சாப்பாட்டுக்குப் போகலாமுன்னு கோபால் சொல்ல, 'நான் சாப்பிட்டுட்டேன், இங்கே கோவில் சாப்பாட்டு ஹாலில்'னு சொல்றார் ப்ரஷாந்த்.

28 comments:

  1. nice post, thanks for sharing.
    btw, which camera have u been using, its nice (pls mention make name, model no)

    ReplyDelete
  2. வாங்க ராம்ஜி_யாஹூ.

    சாதாரணக் கேமெராதான். புகைப்படம் எடுக்கத்தெரிஞ்சவுங்க பயன் படுத்தினா இன்னும் அழகா வரும். நான்? ச்சும்மா எய்ம் & ஷூட்தான்.

    Samsung WB 500
    10.2 mega pixels
    10 x optical zoom
    bought in Singapore for 500$ last year June 09

    ReplyDelete
  3. arumai
    nan chinna vaysula orumurai poiruken. romba neram ninnum sami paakama tirumbinatha nyabagam

    ReplyDelete
  4. //கசப்பான அனுபவத்தோடு தர்மஸ்தலாவை விட்டுக் கிளம்பினோம். என்னைப் பொறுத்தவரை இது அதர்மஸ்தலாவா ஆகி இருந்துச்சு//

    Pala idangallla idhu madhiri than irukku teacher. Especially... lot of temples are becoming tourist spots where people just go and litter around the places. I had a recent similar experience at ISKON temple bangalore. Its not a temple, its a business centre.

    ReplyDelete
  5. கோயில் போகணும்னாலே என் பையன்கள் இதுனால அலறுவாங்க..

    ReplyDelete
  6. பழநி கோவிலில் ஒரு வாட்டி இப்படி சிறைப்பட்டது ஞாபகம் வருது.

    பெரிய பெரிய கோவில்களுக்கு போகணும்னாலே இப்பல்லாம் அலர்ஜியா இருக்கு.

    ReplyDelete
  7. பைரவரை பாக்கவே சங்கடமா இருக்கு

    ReplyDelete
  8. வாங்க எல் கே.

    அடடா..... உங்களுக்கும் தரிசனம் கிடைக்கலையா?

    ReplyDelete
  9. வாங்க ப்ரசன்னா.

    உண்மைதான். ரெண்டு முறை பெங்களூரு இஸ்கான் போயிருக்கேன்.

    ஆடம்பரமாக் கட்டி இருக்காங்க. அங்கே அந்தக் குன்றின்மேலே இருந்து நகரைக் காணலாம் என்பதைத்தவிர மனசு ஒன்னும் ஒட்டலை.

    இதுக்கு எங்க ஊருலே இருக்கும் ஹரே க்ருஷ்ணா கோவில் ரொம்ப ஹோம்லியா இருக்கு. இதே உணர்வை சண்டிகர் ஹரே க்ருஷ்ணாவில் மூணு நாள் முன்பு உணர்ந்தேன்.

    ReplyDelete
  10. வாங்க அமுதா கிருஷ்ணா.

    ரொம்ப கெடுபிடி செஞ்சா அங்கே போக நமக்கே பயமா இருக்கும்போது பிள்ளைகளுக்கு எப்படி இருக்கும்?

    ReplyDelete
  11. வாங்க புதிகைத்தென்றல்.

    கடவுளாவே இருந்தாலும் 'காட்சிக்கு எளியவனா' இருக்கணும். அப்பத்தானே மனசோடு ஒன்ற முடியும்.

    கூட்டம் அதிகமுன்னு இப்படி ஏற்பாடுன்னாலும் அதிலும் ஒரு நியாயம் வேணாமா?

    ReplyDelete
  12. வாங்க குமார்.

    கொடுமை, கொடுமைன்னு கோவிலுக்குப்போனா அங்கே இன்னும் பெரிய கொடுமைன்ற பழமொழி இதைப்பார்த்துத்தான் வந்துச்சோ என்னவோ? :-))))

    ReplyDelete
  13. வாங்க சின்ன அம்மிணி.

    எல்லாம் விதின்னு காரணம் சொன்னாலும் மனசுக்குச் சமாதானமே ஆகலைப்பா அந்த பைரவரைப் பார்த்து:(

    ReplyDelete
  14. வேலூர் தங்கக் கோவில் போன அனுபவம் இப்படித் தான் இருந்தது. ஆண்களையும் பெண்களையும் தனி தனி கூண்டில் வேறு அடிச்சுட்டாங்க. இரெண்டும் வேறு வேறு வேகத்தில் நகர குடும்பத்தை மறுபடி பார்ப்போமா என்றே பயம் அள்ளிக் கொண்டது. போதுமடி அம்மா. இனி இங்கே மட்டும் இல்லை இது மாதிரி கூண்டில் அடைக்கும் எந்தக் கோவிலுக்கும் வர மாட்டேன்னு ஒரு சபதமே எடுத்தேன். கூட்டமே இல்லாத கோவில்களுக்கே செல்வது என்று முடிவுஎடுத்தோம்.

    http://www.virutcham.com

    ReplyDelete
  15. படங்களுடன் நீங்கள் இடும் இடுகை அபாரம்.இப்பொழுதுதான் கண்டு களிக்க வாய்ப்பு கிடைத்தது.தொடர்வேன் .பாராட்டுகள் சகோதரி.

    ReplyDelete
  16. சிறு வயதில் திருப்பதி செல்லும்போது பலமுறை அனுபவித்தது. குழந்தைகளுடன் செல்லும்போது மிகவும் கஷ்டம். இப்போது பரவாயில்லை தரிசனம் டிக்கெட் கிடைக்கிறது. ஆனாலும் உள்ளே செல்லும் பொழுது தள்ளு முள்ளுதான். ரொம்ப கொடுமை இந்த சிறை வாசம் அனுபவிக்கும் போது:(((((((

    ReplyDelete
  17. //கடவுளாவே இருந்தாலும் 'காட்சிக்கு எளியவனா' இருக்கணும்.//

    Very true

    ReplyDelete
  18. அமைதியான இடம்தான் நமக்கும் பிடிக்கும்.கூட்டத்தைத் தவிர்த்து விடுவேன்.

    ReplyDelete
  19. நமக்குப்பின்னால் நின்ற பெரிய குடும்பத்தில் ஒரு இளைஞரைத்தவிர மற்றவர்கள் எல்லோரும் அப்படியே காலை மடக்கித் தரையில் உக்கார்ந்துட்டாங்க. இளைஞர் மட்டும் கோபிகைகளுக்கு நடுவே க்ருஷ்ணன் போல அப்படியே நடுவில் நின்ன போஸ். நேரம் ஆக ஆக கால்மாற்றி மாற்றி நின்னவர் ஒரு கட்டத்துலே ஓசைப்படாம அப்படியே நடுவில் உக்கார்ந்துட்டார்.//
    இது சூப்பர்:0)
    நீங்க திருப்பதி ஒரு தடவை போய் விட்டு வாங்கோ. அப்புறம் எல்லாமே தேவ லோகம்தான்.
    எஸ் படுக்க வைத்த மாதிரி:)
    பாவம்பா அந்த பைரவர். உங்க கண்ணிலயும் பட்டு வைக்கிறது பாருங்க.
    படங்கள் ரொம்ப அழகு.

    ReplyDelete
  20. வாங்க விருட்சம்.
    தங்கக்கோவிலுக்கு நான் போகலை. போகணுமுன்னு தோணவும் இல்லை ஒரு தோழி போய்வந்து சொன்ன கதை கேட்டபோது:(

    கடவுள் மீது இருக்கும் அன்பால் நகைநட்டு போட்டு அலங்கரிச்சு வழிபடுவதௌவரை எனக்கு ஓக்கே. ஆனா கோவிலை முழுசும் தங்கத்துலே மூடுவது, தங்க விமானம் அது இதுன்னு தங்கத்தை அங்கே கொட்டுவதில் சம்மதம் இல்லை. அந்தப்பணத்தை வச்சு எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்யலாம்.

    சாமிகிட்டே என்ன இல்லைன்னு நாம் இப்படிக் கூத்தடிக்கிறோம்?

    கல்வி, சுகாதாரம் இதையெல்லாம் பொருட்படுத்தாம...... என்னவோ போங்க......

    ReplyDelete
  21. வாங்க ஸாதிகா.
    முதல் முறையா நம்ம வீட்டுப்பக்கம் வந்துருக்கீங்க. நலமா?

    அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  22. வாங்க சுமதி.

    நானும் திருப்பதி போய் 11 வருசமாச்சு.

    அதுக்கு முந்தி போன ரெண்டு முறைகளும் தோமால சேவா, அர்ச்சனைன்னு அர்த்தராத்ரியில் போனதுதான்.

    மகளைக் கூட்டிக்கிட்டுப்போய் அந்தக் கூட்டத்தில் நிற்க முடியாது.

    ஒருமுறை திருப்பதிக்குப்போயிட்டு சாமியையும் பார்க்க முடியாமல், திரும்பிக்கீழே வர வண்டியும் கிடைக்காமல் நடந்தே இறங்கினோம்.

    அதான் எல்லோரும் மலையேறிவர ப்ரார்த்தனை செஞ்சால் இடும்பிக்கு இறங்கிப்போக ச்ச்சான்ஸ் கொடுத்தார்.

    ReplyDelete
  23. வாங்க ப்ரசன்னா.

    உண்மைதானே? மனசு நிறைய அவனை நினைக்க விடாமல் தள்ளும் முள்ளுமா இருந்தால் எப்படி?

    ReplyDelete
  24. வாங்க மாதேவி.

    இதுபற்றிய விவரம் கொஞ்சமாவது ஏற்கெனவே தெரிஞ்சுருந்தால் குறைஞ்ச பட்சம் ஒரு புத்தகமாவது கையில் கொண்டு போய் இருக்கலாம். கதை வேணாம். ஒரு ஸ்லோகப் புத்தகமோ இல்லை எதாவது சாமிப்புத்தகமோ. மனசுலே சாமியை ஒரு நிமிசம்கூட நினைக்கவிடாமல் ஜெயில் வாசம் போச்சு:(

    ReplyDelete
  25. வாங்க வல்லி.

    திருப்பதிக்கு வரவே வராதேன்னு சொல்லிட்டார்ப்பா. வந்துட்டு எதாவது எழுதுவேன்னு அவருக்கே இருந்துருக்கலாம்.

    அதுவுமில்லாமல் இப்பெல்லாம் ரொம்ப முன்னாலேயே (குலசேகர ஆழ்வார் படி?) திருப்பி விட்டுடறாங்களாம். தூர நின்னுதான் சேவிக்க முடியுமாம்.

    ReplyDelete
  26. கூட்டமில்லாத கோயில்கள்ல கிடைக்கிற நிம்மதி இங்கே கிடைக்கிறதில்லைதான். இடிபட்டுக்கிட்டு போகும்போது மனசுல பக்தி எங்கே வரும்?.. எரிச்சல்தான் வரும். அப்றம் கோயிலுக்கு போய் என்ன புண்ணியம் :-(

    ReplyDelete
  27. வாங்க அமைதிச்சாரல்.

    அதேதான் நானும் சொல்றேன்.

    இனிமே கூண்டுக்கு ஒரு பெரிய நோ!!!

    ReplyDelete