Monday, May 10, 2010

பஸாடிக்குப் போலாமா?

மணிபால்..... ரொம்பப் பொருத்தமான பெயர்தான்! money is your pal :-)))) அஞ்சே கிலோ மீட்டர் தூரத்துலே வெளிநாட்டுக்கு வந்துட்டோமோ? எல்லாமே அழகா அம்சமா நீட்டா இருக்கும் ஊர். ஒரு காலத்துலே, எந்த காலேஜ்லேயும் இடம் கிடைக்கலைன்னா....கடைசிக் கட்டமா இங்கே வந்து 'பணம்' கட்டிப் படிக்கலாம். அதுவும் வெளிநாட்டு மாணவர்கள்தான் ஏராளமாக வருவாங்க. அப்போ நம்மூர் ஆளுங்க சொல்றது........ "ஐய்ய.... மணிபால் யூனியா? தரம் கொஞ்சம் மட்டம்தான்"

இப்போப் பாருங்க தமிழ்நாடு பூராவும் தெருவுக்கு நாலுன்னு ப்ரைவேட் காலேஜ் அண்ட் யூனி(?!!!!) ரொம்பி வழியுது! நம்மாளுங்க காசு பண்ணும் வித்தையைப் பூரணமாக் கத்துக்கிட்டாங்க! அகில இந்தியாவில் முதன்முதலா ஆரம்பிச்ச தனியார் பல்கலைக்கழகம் மணிப்பால் யூனிதான். போணி!!!!

ஒருமணி நேரப்பயணத்தில் வராங்கா என்ற கிராமத்துக்குள்ளே நுழைஞ்சோம். கர்க்கலா வட்டத்தைச் சேர்ந்த இடம். உடுபியில் இருந்து நாப்பது கிலோமீட்டரில் கருங்கல் இருக்கு!!!! இந்தப் பெயர்தான் இப்போ மருவி கர்க்கலான்னு ஆகிப்போச்சு. இந்த ஊருக்குப் பழமையான பெயர் பாண்டி நகரம்! அரசர் வீரபைரவா, நிறைய பஸாடிகள் கட்டி இருக்கார். இவருக்கு ராமநாதன், வீரபாண்டியன்னு ரெண்டு பிள்ளைகள். ராமநாதன் சிறுவயதிலேயே மரணம் அடைஞ்சுட்டார். அவர் நினைவா ராமசமுத்ரம் என்ற பெயரில் பஸாடிக்கு முன்னே ஒரு பெரிய குளம் வெட்டி இருக்கார் அரசர். அவருக்குப் பின் பட்டத்துக்கு வந்த வீரபாண்டியா, தன்னுடைய குருவான லலித்கீர்த்தி என்னும் சமணமதப் பூசாரியின் வேண்டுகோளின்படி, கருங்கல் மலையின் மேல் ஒரு பெரிய பாஹூபலி சிலையை வச்சுருக்கார். இது 1432 வது வருசம்.இது அடுத்த இடுகைக்கான மேட்டர்) இவருக்குப் பிறகு அரியணை ஏறிய அபினவ பாண்டியா, ஸ்ரீ நேமிநாத் தீர்த்தங்கரருக்கு ஒரு பஸாடி கட்டி இருக்கார். அங்கேதான் இப்போ நாம் போறோம்.
வராங்கா கோவில் வளாகம் பெரிய நிலமாக்கிடக்கு. ஒரு பத்துப் பதினைஞ்சு க்ரிக்கெட் ஸ்டேடியம் கட்டலாம். ஒரு பக்கத்துலே சின்னதா வீடு மாதிரி அமைப்பு. நாம் போனதும், பக்கத்து கட்டிடத்துலே இருந்த அர்ச்சகர் சாவி கொண்டு வந்து கோவிலைத் திறந்தார்.
இந்த ' பஸாடி' என்ற பெயர் எனக்கென்னவோ.... கேட்டதும் சட்னு பிடிச்சுப்போச்சு. பஸாடி பஸாடின்னு சொல்லிப் பார்த்தால் ஏதோ ஒரு துள்ளல் மனசுலே. இதுக்கு அர்த்தம் என்னன்னு புரியாமச் சொல்லிக்கிட்டே இருந்து ஒரு சமணக்கோவில் அர்ச்சகரிடம் கேட்டப்போ அவர் சொன்னார்.... இந்து மதத்துலே கோவில்கள்ன்னு சொல்றீங்க இல்லையா ? சமணக்கோவில்களுக்கு பஸாடின்னு பெயர். பஸாடி = டெம்பிள். தட்ஸ் ஆல்:-)))

(சமண சந்நியாசிகள் வந்து தங்க இந்தக் கோவில்களிலெல்லாம் அருமையான வசதிகள் இருப்பதால் வசதி என்றதுதான் பஸாடின்னு மருவி இருக்குமோ? அதான் கன்னடத்துலே 'வ' வுக்கு 'ப' தானே சொல்றாங்க.)
உடுபியில் ஸ்ரீ அனந்தேஸ்வரன் கோவிலைப் பார்த்து வாயைப் பிளந்தேனே.... இங்கே..... ஹைய்யோஓஓஓஒ! முழுக்க முழுக்கக் கருங்கல் பாலங்களையே வச்சுக் கட்டி இருக்காங்க. மெஷீன் இல்லாத காலக்கட்டத்தில் ஒரே தடிமனில் பிசுறே இல்லாம எப்படி வெட்டி இருப்பாங்க? கருங்கல்லில் உளி பட்டதும் தெறிச்சுருக்குமே சில்லுகள்! எத்தனை பேருக்குக் கண்ணு போச்சோ...... மனக்குரங்கு ஆட ஆரம்பிச்சுட்டது...இனி புலம்பலை நிறுத்த முடியாது.....பாவம் நம்ம கோபால்:( முன் படிகளிலே ரெண்டு பக்கமும் நம்மாட்'கல்' தந்தங்கள் கூடத் தேய்ஞ்சு கரைஞ்சு போய் நிக்கறாங்க. உள்ளே அஞ்சடி உயரத்தில் மூலவர் நேமிநாத் ஸ்வாமி, சந்த்ரநாத் ஸ்வாமி, பத்மாவதி தேவி இப்படித் தனித்தனியா சந்நிதிகள். இருட்டுக் கருவறையில் ஒரு நிமிசம் தீபம் காமிச்சதோட சரி. கருவறை முகப்புச்சுவர்களில் விஷ்ணு, ஹனுமன் இப்படி செதுக்கி இருக்கு. த்வாரபாலகர்களும் உண்டு. ரொம்ப நுணுக்கமாச் செதுக்கி வச்ச தொங்கும் மணி சூப்பர். அதைச்சுற்றி ஒரே மாதிரியான எம்ப்ராய்டரி டிஸைன்கள்!

கருவறை முகப்பு
கோவிலுக்கு வெளியே ரெண்டு ஆள் நடக்கும் வகையில் சுத்திவர கல்மேடை வெளிப்பிரகாரம் சுத்தி வரலாம். முழுக்க முழுக்கக் கருங்கல். எப்படி ஒன்னோடு ஒன்னு பொருத்தி இருப்பாங்க? வெளியே மகாஸ்தம்பம் ஒன்னு நிக்குது. கோவிலுக்கு முன்னால் கொஞ்சம் நாலு படி இறங்கும் அளவுலே பெரிய நிலப்பகுதி. திருவிழா நடந்தால் ஜேஜேன்னு இருக்கும்!
இந்த நிலப்பகுதியின் அடுத்த ஓரத்துலே வலது பக்கம் இன்னொரு கோவில் இருக்கு 'அங்கே போகலாம் வாங்க'ன்னு அர்ச்சகர் கூட்டிப்போனார்.
கையில் எண்ணெய்த் தூக்குடன் அவர் விறுவிறுன்னு நடந்துபோயிட்டார். நாம் வண்டியில்தான் போகவேண்டி இருந்துச்சு. அட! அசல் செட்டிநாட்டு வீட்டுக்குள் நுழைஞ்சுட்டோம். வாசல் நிலையில் இருந்து அச்சு அசல் செட்டிநாடு வீடுதான். கஜலக்ஷ்மி இருக்காள்.

மேல் நிலையில் அஞ்சுதலை சேஷன் குடைபிடிக்க ஒரு தீர்த்தங்கரர். உள்ளே போனால் சுத்திவரத் தாழ்வாரம். முற்றம் மூணு படி வச்சுத் தாழ்வா இருக்கு. வாசலுக்கு நேரா முற்றத்தின் அந்தப் பக்கம் இருக்கும் கதவின் பூட்டைத் திறந்தார். உள்ளே செம இருட்டு. கண்ணை நல்லா விரிச்சு இருட்டை விழுங்கலாமுன்னா..... ஊஹூம். பளிச்ன்னு ஒரு மெல்லிய திரி போட்ட தீபத்தை ஏத்துனதும் சின்னதும் பெருசுமா ஏழெட்டுத் தீர்த்தங்கரர்களின் 2 சிலைகள். எல்லோரும் சம்மணம் போட்டு உக்கார்ந்த போஸில் இருக்காங்க. மேலாக இருந்த ஒரு சிலைக்குப் பின்னே விளக்கைக் கொண்டு போனார். ஹப்பா................... அந்தச் சின்ன ஒளி எப்படி ஊடுருவி அந்த இடமே பளிச்ன்னு ப்ரகாசமா ஆச்சுன்னு என்னாலே நம்பவே முடியலை. சந்த்ரகாந்த் ஸ்வாமி. மூன்ஸ்டோனில் செய்யப்பட்ட சிலை. விலைமதிப்பே இல்லாதது. அந்த சின்ன அறையில் 'தேமே'ன்னு நிக்குது!
வீட்டின் அழகைக் கெடுப்பதுபோல் அங்கிருந்த' டிஷ் ஆண்டெனா'தான் கண்னைக் கொஞ்சம் உறுத்துச்சு. ஆனால்.....காலம் மாறுதுல்லே?
கோவிலுக்கு வலப்பக்கம் அட்டகாசமான பெரிய குளம். குளமுன்னு சொல்றதே தப்பு. கடல்ன்னு சொல்லலாம். தளதளன்னு தண்ணீர் ததும்பி நிக்குது. அதுலே நடுவிலே இன்னொரு கோவில். கேரா பஸாடி. இதெல்லாம் 1000 வருசப் பழசுன்னு சொன்னாங்க.

இங்கிருந்து 24 கி.மீ தொலைவில் கர்க்கலா. வந்து சேர முக்காமணியாச்சு. ஊருக்குள்ளெ நுழைஞ்சதுமே கண்ணில் பட்டவர் நம்ம வெங்கடரமணர்:-) மேற்குத் திருப்பதின்னு புகழ்பெற்ற ஊர். 'pபாடுதிருப்பதி'ன்னு சொல்றாங்க. (பாடு(கன்னடா) = மேற்கு) அவருக்கு நேர் எதிரா நேயுடுவுக்கு ஒரு தனிக்கோவில். ரெண்டு கோவிலுக்கும் நடுவிலே குறுக்காலே போகுது ரோடு. வெங்கட்டு சின்ன உருவம். நேயர் ப்ரமாண்டமா பதினைஞ்சடி உசரத்தில்!!! எதிரும்புதிருமாப்போய் சேவிச்சோம்.
நேயடு வாசலில் இருந்து வெங்கடரமணரை சேவிக்கலாம். அங்கே இருந்து இவரையும். யஹா(ங்) ஸே வஹா(ங்)

மூலவர் ஸ்ரீனிவாசன் திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்டவராம். ஒரிஜனல் மூலவரைக் கள்வர்கள்கிட்டே இருந்து காப்பாத்தக் கிணத்துலே போட்டுட்டாங்களாம், மூல்கி என்ற ஊரில். அது உள்ளூர் ஒருவர் கையில் அகப்பட்டு அவரும் மூல்கியிலேயே ப்ரதிஷ்டை செஞ்சுட்டாராம். சாமியைத் திருப்பிக்கேக்கப் போனப்போ (வழக்கம்போல்) கனவுலே வந்து நான் இங்கியே இருக்கப்போறேன். நீ போய் திருப்பதியில் நான் சொன்னேன்னு சொல்லி வேற ஒன்னு வாங்கிக்கோ'ன்னுட்டார். அதுதான் இது! வருசம் 1450. பெருமாளைத் தேடிக்கிட்டு நம்ம நேயுடு 1539லே வந்தார். வீர மாருதின்னு இவருக்குப் பெயர். திப்பு சுல்தான் இவரோட பக்தராம். இவருக்கு அவர் செஞ்சு போட்ட வெள்ளி நெக்லேஸ் கழுத்துலே இன்னமும் இருக்கு

22 comments:

  1. ஞாப‌க‌ம் வைத்துக்கொள்ள‌ முடியாத‌ ஊருக்கெல்லாம் அழைத்துப்போகிறீர்க‌ள். ந‌ன்றி.

    ReplyDelete
  2. வாங்க குமார்.

    முன்னமே ஏற்பாடு செய்யப்பட்ட அரேஞ்சுடு டூரில் போனால் இதெல்லாம் பார்க்க முடியாது. ஆனால் இப்ப நம்ம விருப்பம்தானே? போகிற வழியில் என்னெல்லாம் இருக்குன்னு 'கர்நாடகா டூரிசம்' சொல்வதைக் கேட்டுக்கிட்டோமானால் எக்கசக்கமா விஷயங்கள் கிடைக்குது.

    நாம் பார்த்தது ஒரு 5 சதம்தான்:(

    ReplyDelete
  3. துளசி நேயுடு சூப்பர்பா.
    அந்தக் குளமும் அதுக்கு நடுவே இன்னோரு கோவிலா. எப்படிப் போவாங்க? படகு இருந்ததா.
    அது யாரு
    முற்றத்து ஓரமா,கனகாம்பரக் கனவுகள் கண்டுகிட்டு இருக்காங்க:)
    இப்படியே படங்களோட ஒரு புத்தகம் வந்தா எவ்வளவு உபயோகமா இருக்கும்!!

    உண்மையாவே எப்படிப்பா இந்தக் கருங்கள் மாளிகையெல்லாம்
    எழுப்பினாங்க. ஒரே அதிசயமா இருக்கு.

    ReplyDelete
  4. பஸாடி- சொல்லிப்பாத்தா ஏதோ ஒரு டான்ஸ் வகைப்பேர் மாதிரி இருக்கு. ஒடிஸி மாதிரி . அதான் ஒரு துள்ளல் :)

    ReplyDelete
  5. really amazing teacher. How you are finding out about such places? From google? I need to learn that technique from you and implement when i am going on trip. But right now its not necessary, as you have given info about almost all the places. We can use your blog itself as a guide. Really amazing.

    ReplyDelete
  6. கோவில் ரொம்ப நல்லா இருக்கு டீச்சர், நீங்கள் நிற்க்கும் போட்டோவும் நன்றாக உள்ளது டீச்சர்:))))

    ReplyDelete
  7. அருமையா இருக்கு. கருங்கல் கோவில் எப்படித்தான் கட்டினாங்களோ ஆச்சரியமா இருக்கு.

    ReplyDelete
  8. கருங்கல் கோவில்,செட்டிநாட்டு கோயில்,குளக்கோயில் பஸாடிகள் யாவும் ஆச்சரியப்பட வைக்கின்றன.

    நன்றி.

    ReplyDelete
  9. வாங்க வல்லி.

    குளத்துலே கோவிலுக்குப்போக ஒரு கட்டைச்சுவர் மாதிரி பாதை இருக்குன்னு நினைக்கிறேன். ரொம்ப ஆழம் இல்லை போல. எருமைகள் சில குளிச்சுக்கிட்டு இருந்துச்சு. போட்டி வேணாமுன்னு விட்டுட்டேன்:-))))

    ReplyDelete
  10. வாங்க சின்ன அம்மிணி.

    சில ஒலிகளுக்கு இப்படி ஒரு வல்லமை உண்டு. பஸாடி பஸாடி....:-))))

    ReplyDelete
  11. வாங்க ப்ரசன்னா.

    மங்களூர் விமானநிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான டெஸ்க்கில் கொடுத்த இன்ஃபோ ஷீட்டை வச்சுக்கிட்டுத்தான் முழுக்கமுழுக்கச் சுத்தினோம்.

    இப்படி ஒன்னு தமிழ்நாட்டுலே, சென்னை விமானநிலையத்தில் இல்லையேன்னும் நினைச்சேன்:(

    ReplyDelete
  12. வாங்க சுமதி.

    வருகைக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  13. வாங்க அமைதிச்சாரல்.

    க்ரேன் எல்லாம் இல்லாத காலக்கட்டத்தில் இவ்வளவு கனத்தை எப்படி ஏத்தி இருப்பாங்க!!!!!

    ReplyDelete
  14. வாங்க மாதேவி.

    செட்டிநாடு வீட்டைப் பார்த்து அப்படியே அசந்து போயிட்டேன் என்பதுதான் நெசம்1

    ReplyDelete
  15. முன்னர் கேள்விப்பட்டிராத ஊர்களைப்பற்றியும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.படிக்கும்போதே நாமும் சென்றுவர ஆவலைத் தூண்டுகிறது. நேரம் கிடைக்கும்போது எங்கள் ஊரையும்(திருச்செங்கோடு) ஒருமுறை வந்துபாத்து அர்த்தநாரீஸ்வரர் அருள்பெற அழைக்கிறேன். அதுபற்றிய விபரங்களை http://www.arthanareeswarar.com
    என்ற பக்கத்தில் பார்க்கலாம்

    ReplyDelete
  16. வாங்க பிரகாசம்.

    முதல்முறையா நம்ம வீட்டுக்கு வந்துருக்கீங்க போல! நலமா?

    ரொம்ப யோசிக்காம சட்னு 50% பெண் இட ஒதுக்கீடு கொடுத்தவர் இருக்கும் ஊர் இல்லையோ உங்க ஊர்!!!!

    வரத்தான் வேணும். பல வருசங்களுக்கு, முன்பே அங்கே இருந்து 'விஜய்'ன்னு ஒரு வாசகர்
    கூப்புட்டுக்கிட்டே இருக்கார். நேரம் எப்ப வாய்க்குமோ தெரியலை.

    உங்க அன்பான அழைப்புக்கு நன்றி.

    ReplyDelete
  17. நிறைய தகவல்.. நல்ல பகிர்வு

    //வராங்கா கோவில் வளாகம் பெரிய நிலமாக்கிடக்கு. ஒரு பத்துப் பதினைஞ்சு க்ரிக்கெட் ஸ்டேடியம் கட்டலாம்//

    அப்புறம் ஒரு ஸ்டேடியம் கட்டி "வராங்கா வாரியர்ஸ்"னு டீம் வித்திடுவாங்க.. :)

    ReplyDelete
  18. வாங்க புபட்டியன்.

    வராங்கா வாரியர்ஸ்.... கேக்கறதுக்கு எங்கூரு ரக்பி டீம் பெயர்மாதிரி இருக்கு!

    ஆமாமாம். க்ரிக்கெட்லே எதுவும் நடக்கும். டீமை யார் வாங்குவாங்கன்னு க்விஸ் வைக்கலாம்:-))))

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. ஸகோதரிக்கு வணக்கம். நான் 2 வருடங்கள் முன்பே bloggerல் பதிவு செய்திருந்தாலும் bloggging பற்றி அதிகம் தெரியாததால் என்னுடைய பக்கத்தில் ஏதும் அதிகமாகப் பதியவில்லை. தற்செயலாகத் தங்கள் பதிவுகளைக் கண்டபோது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. தமிழ்த் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள் 50 வார்த்தைகளில் 45 ஆங்கிலமும் 5 தமிழ் வார்த்தைகளும் பேசும் இக்காலத்தில் தாங்கள் ஃபிஜியிலும் நியூசிலாந்திலும் இருந்துகொண்டு 2004 முதல் தமிழில் பதிவுகள் செய்திருப்பது மிகவும் போற்றப்படவேண்டியது. திரு. சாவி மற்றும் திரு. மணியன் ஆகியவர்களின் பயணக்கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். தங்கள் பதிவுகள் அதேபோன்ற அனுபவத்தைத் தருகின்றன.

    ReplyDelete
  21. பிரகாசம்,

    இன்னிக்கு ப்ளொக்கர் தகராறு. உங்க பின்னூட்டம் வெளியிட முடியலை. எர்ரர்ன்னு சொல்லுது. இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து ப்ளொக்கர் உடம்பு சரியாகுதான்னு பார்க்கலாம்:-)

    ReplyDelete
  22. பிரகாசம்,

    ஏதோ அன்பினால் அந்த மலைகளுக்குச் சமமான இடத்தில் இந்த மடுவையும் வச்சுட்டீங்க.

    எழுத்துலகில் இன்னும் நான் போகவேண்டிய தூரம் அதிகம்.

    அன்புக்கு நன்றி.

    ReplyDelete