Tuesday, April 13, 2010

கண்ணனைக் கண்ணாரக் கண்டேனே!!!

ஊருக்குள் நுழையும்போதே, நாம் இருந்த பரவச நிலையைக் கொஞ்சமும் உணராம வண்டி நேராப்போய் கோவிலுக்கான பார்க்கிங் ஏரியாவில் நுழைஞ்சது. அங்கேயும் ஒரு வாசல். உடுபி ஸ்ரீக்ருஷ்ணா மஹாத்வார். பாதுகாப்புக்குன்னு ஒரு வண்டி போலீஸ் இருக்கு போல! பகல் பதினொன்னே முக்கால். கோவில் அடைச்சுருவாங்களோன்ற பதைப்பு. சில கடைகளைக் கடந்து போனால் ஸ்ரீக்ருஷ்ணா தர்சனம்ன்னு ஒரு அம்புக்குறி. பாய்ந்தோம்.


ஏதோ ரொம்பத் தெரிஞ்சமாதிரி கோபால் விறுவிறுன்னு போய்க்கிட்டே இருக்கார்.(போன ஜென்ம நினைவு???) சட்டையைக் கழட்டித் தோளில் போட்டுக்கிட்டேச் சட்னு ஒரு வாசலுக்குள் நுழைஞ்சார். நேர் எதிராச் சின்ன மாடத்துலே விஷ்ணு. அங்கே நாலைஞ்சுபேர் வரிசையில். நாமும் போய்ச் சேர்ந்துக்கிட்டோம். கருவறைச் சுவற்றின் சட்டத்தில் வரிசையாப் பிடிப்பிச்ச பித்தளை விளக்குகளின் வரிசை. கண் எதிரே க்ளோஸ்டு சர்க்யூட் டிவியில் பூக்களால் மூடப்பட்ட கிருஷ்ணன், மசமசன்னு இருக்கான். கூட்டமாப் பாட்டுப் பாடறாங்களா என்ன? கேட்டுக்கிட்டே, வரிசை நகர்ந்து வளைவு திரும்புனால்...... திண்ணைகள்.
இடதுபக்கத் திண்ணைகளின் சுவர்களில் கிருஷ்ணனின் ப்ரமாண்டமான பல்வேறு படங்கள். நேரெதிர் திண்ணையில் ஒரு பக்கம் ஆண்கள். அடுத்தபக்கம் பெண்கள் ஒரு முப்பதுபேர் இருக்கலாம். மைக் முன்னால் இருக்க, பாடிக்கிட்டு இருக்காங்க. கன்னட மொழியில் சேர்ந்திசை. இன்னொரு வளைவு திரும்புனோம். வலது பக்கம் ஜன்னலில் பக்தர்கள் நின்னு கும்பிட்டுக்கிட்டு நகர்ந்து போறாங்க. நமக்கிடது பக்கம் திண்ணைக்கும் ஜன்னலுக்கும் இடையில் ஒரு சின்ன மண்டபம். 6x6 அடி இருக்கும். அதன் தூண்களில் வெள்ளிக்கவசங்கள். அம்மா மடியில் குழந்தைக் கண்ணன். யசோதாவாகத்தான் இருக்கணும். நரசிம்மம், கருடன், ஆஞ்சநேயர்ன்னு வெள்ளியில் ஜொலிக்கிறாங்க. அட! முழு மண்டபத்துக்கும் வெள்ளி போர்வை!!!!

வரிசையில் வந்து நின்னு பத்து நிமிசத்துக்குள்ளே நாம் ஜன்னலுக்கு முன்னால் நிக்கறோம். கனகதாஸா ஜன்னலாம். சதுரமா ஒம்போது கட்டங்கள். அதுக்குள்ளே பார்வையை அனுப்பினால் கொள்ளைப்பூக்களுக்கு நடுவில் குழந்தை நிக்கறான். எனக்கு லேசா கையும் காலும் நடுங்குது. தங்கச்சட்டங்களைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு உள்ளே உத்துப் பார்த்தேன். என்ன இப்படி மசமசன்னு இருக்கு? தேவையில்லாத சமயம் பார்த்துத் துளிர்க்கும் கண்ணீர். இப்பெல்லாம் இது ஒரு பேஜாராப் போச்சு. முந்தி எல்லாம் இது திருப்பதிக்கு மட்டும்தான். வரவர மனம் பூஞ்சையா மாறிக்கிட்டு இருக்கேப்பா......

நமக்குப்பின்னே பக்தர்கள் நிக்கிறாங்க. வழிவிட்டு ஒதுங்குவதுதான் நியாயம். மண்டபத்தில் ஒருத்தர் தீர்த்தம் கொடுத்தார். தெரியாமல் தலையில் தடவினப்புறம் சொல்றார் அது பஞ்சாமிர்தமாம். இனிப்பு.
திண்ணைக்கு முன்னால் ஒரு பெஞ்சு போட்டு அதில் ப்ரசாதங்கள் வச்சு நமக்குக் கொடுக்கறார் இன்னொரு பண்டிட். தீர்த்தம், புஷ்பம், துளிச் சந்தனம்.

திண்ணையில் ரெண்டு கோடிகளிலும் குட்டியா ரெண்டு சந்நிதிகள். இடப்பக்கம் பெரிய திருவடி, வலதில் சின்னவர். நேயர். இடப்பக்கம் திண்ணையில் போய் உக்கார்ந்தோம். கண்முன் வரிசை நகருது. பஜனைப் பாட்டு கேக்க இனிமையா இருக்கு. வரிசையில் நிற்கும் மக்களும் பாட்டைப் ஃபாலோ பண்ணிப் பாடுறாங்க. கருவறையை ஒட்டித்தான் வரிசை நிக்குது. அண்ணாந்து பார்த்தேன். மரக்கோவில். உசரமும் உறுதியுமா நிற்கும் உத்தரங்களில் அழகான செதுக்கு வேலைப்பாடுகள். பழைய கோவிலுன்னு பார்த்தாலே தெரியுது! பதிமூணாம் நூற்றாண்டு!

ஸ்ரீ மாத்வாச்சாரியார் ப்ரதிஷ்டை செஞ்ச ஸ்ரீ க்ருஷ்ணர் இருக்கும் இந்த இடம் கிருஷ்ணமடம். இவர் இங்கே வந்த 'கதை'யைக் கொஞ்சம் பார்க்கலாம். கம்ஸவதம் முடிஞ்சு தேவகியைச் சந்திக்கிறான் கிருஷ்ணன். பிறந்த அன்னிக்குப் பிரிஞ்ச குழந்தையை இப்போ வாலிபனாப் பார்க்கும்போது தேவகிக்கு மனசு பொங்குது. இவனுடைய பால்யகாலத்துலே எப்படி இருந்துருப்பான்? அதையெல்லாம் பார்க்கக் கொடுத்துவைக்கலையேன்னு விம்மி அழறாள். கவலைப்படாதேம்மா. நான் இப்படித்தான்னு இருந்தேன்னு காமிச்சால் ஆச்சுன்னு உடனே தன்னுடைய ' பால்ய லீலை'களை மாயையால் மீண்டும் நடத்திக் காட்டுறார்.

மாமியார் கூடவே ஒட்டிக்கிட்டு இருந்த கிருஷ்ணனின் மனைவி ருக்மணிக்கும் இந்தக் காட்சியெல்லாம் தெரியுது. 'குழந்தையா இருந்தப்ப நீங்க ஸோ க்யூட். எனக்கு உங்க குழந்தைப் பருவச் சிலை ஒன்னு வேணுமு'ன்னு கேட்டாள். விஸ்வகர்மாவைக் கூப்பிட்டு 'அப்ப நான் எப்படி இருந்தேனோ அதைப்போலவே ஒரு சிலையை செய்'ன்னதும் அவர் ஒரு சிலையை உருவாக்கித் தர்றார்.(அப்போ உளியின் ஓசை கேட்டதான்னு தெரியலை)

குழந்தையைத் தன்னுடைய அறையில் வச்சுப் பூஜிக்கிறாள் ருக்கு. அப்போ அவுங்க த்வாரகையில் குடித்தனம். கண்ணனின் மறைவுக்குப் பின் ஏழாம் நாள் த்வாரகையைக் கடல் கொண்டுபோச்சு. அப்போ அரண்மனையில் இருந்த இந்தச் சிலையும் கடலுக்குள்ளே போயிருச்சு. அப்படியே மண் மூடிக் கட்டியாகி ஒரு பெரிய கல் போல கரையில் ஒதுங்குனதை ஒரு கடல் வர்த்தகன் பார்த்துட்டு, தன்னுடைய படகுக்கு பாரம் சமன் செய்யப் பயன்படுமேன்னு எடுத்து வச்சுக்கிட்டான். ரொம்ப நாளுக்கு அப்புறம் அரபிக்கடலில் (அரபிதக் கடல்ன்னு சொல்றாங்க) இந்த வழியா படகு போய்க்கிட்டு இருக்கும்போது புயல்காற்றடிச்சுப் படகு மாட்டிக்கிட்டுத் தத்தளிக்குது.

கடற்கரைக்கு போன மாத்வாச்சாரியார்( இவரைபற்றி நம்ம மதுரையம்பதி ரொம்ப அழகா ஒரு இடுகை வெளியிட்டு இருக்கார் பாருங்க) தத்தளிக்கும் படகைப் பார்த்ததும் தன் உத்தரீயத்தை எடுத்து வீசி ஆட்டுறார். புயல் 'சட்'னு அடங்கிருச்சு. வணிகன் கரைப்பகுதிக்கு வந்து இவரை வணங்கி, 'என் உயிர் பிழைச்சது உங்களால்தான் ஐயா. இனி நானும் என் படகில் உள்ள பொருட்கள் யாவும் உமக்கே சொந்தம்'ன்னான்.

'எனக்கெதுப்பா இதெல்லாம் நீ போ'ன்னு சொன்னாலும் கேக்கலை. எதையாவது எடுத்துக்கிட்டே ஆகணுமுன்னு பிடிவாதம் பிடிக்கிறான். இந்தப் பாரம் சமன் கல்லை உத்துப் பார்க்கிறார். மனசுலே என்னவோ தோணுது. அதை வாங்கிக்கிட்டுத் தன் தலைமேல் சுமந்தபடியே இறைவனைப் பாடித் துதிச்சுக்கிட்டே நாலைஞ்சு மைல் நடந்து உடுபிக்கு வர்றார். அப்போ அவர் பாடிக்கிட்டே வந்ததுதான் துவாதச ஸ்த்தோத்திரம்.
உடுபி வந்ததும் அங்கிருக்கும் ஒரு குளத்தில் இந்தக் கல்லைக் கழுவினார். மேலே படிஞ்சுருந்த காரைகள் எல்லாம் பொட்ன்னு உதிர்ந்து ஸ்ரீ கிருஷ்ணர் ஜொலிக்கிறார். சாளகிராமத்தால் ஆன அழகான குழந்தை வடிவம். தன் உயரத்துக்கு ஒரு மத்தைப் பிடிச்சுக்கிட்டு நிக்குது!

சிலையை ப்ரதிஷ்டை செஞ்சதும் எல்லோரும் கும்பிடுறாங்க. கொஞ்ச நாளில் இவர் ரெண்டாவது முறையா பத்ரிகாஸ்ரமம் போகக் கிளம்பறார். தன்னுடைய சிஷ்யர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ண பூஜையை தொடரச்சொல்லிட்டு கங்கை நதியை அடைஞ்சார். அதை கடக்க ஏற்பாடு செய்யும்போது, அப்போ அங்கிருந்த முகமதிய அரசரின் காவலாளிகள் தடை போடறாங்க. இவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமக் கங்கையைக் கடந்து போறார். மறுகரையில் சுல்தானின் காவலர்கள் இவரைக் கூட்டிட்டுப்போய் மன்னர் முன்னால் நிறுத்துறாங்க. 'தான் செஞ்சுது குற்றமே இல்லை. எல்லையில்லா பெருவெளியில் இருக்கும் கடவுளைத்தான் நாமிருவரும் வணங்கறோம். அப்போ மனுசனுக்கு ஏன் பயப்படணுமுன்னு' கேக்கறார்.
இவர் ஒரு உண்மையான மஹான்னு உணர்ந்த அரசர் நிறைய பொன்னும் பொருளும் அன்பளிப்பாத் தந்து ஆசி வேண்டினார். இதெல்லாம் தனக்கு வேணாமுன்னு அன்பா மறுத்துட்டு பத்ரிகாஸ்ரமம் போனாராம். இந்த விவரமெல்லாம் கோவில் வளாகத்தில் இருக்கும் ஒரு சந்நிதியில் சுற்றிவர வரைஞ்சு வச்சுருக்காங்க.
மாத்வருக்கு அடுத்த படியில் இருந்த எட்டுச் சிஷ்யப்பிள்ளைகளை எட்டுமடங்களுக்குப் பொறுப்பு எடுத்து நடத்தச் சொன்னார். உடுப்பியில் இருக்கும் எட்டு மடங்களும் ரெண்டு வருசத்துக்கொன்னா கோவிலை நடத்துது. கோவிலைச் சுத்தியே மடங்கள் எல்லாம் இருக்காம். பெஜாவரா, புட்டிகே, பாலிமரு, அடமரு, சோதே, கணியூரு, ஷிரூர், கிருஷ்ணபுரா இப்படி இருக்கும் எட்டுமடங்களில் கோவில் இருக்குமிடம் க்ருஷ்ணபுரா மடம்.
நேரமாச்சு கிளம்பலாமுன்னு இவர் எழுந்தார். இன்னொருக்கா சாமியைப் பார்க்கணும் என்ற ஆசையில் வரிசையில் போய் நிற்கலாமுன்னு நானும் கிளம்புனேன். கண் முன்னே நகரும் வரிசையில் ஒரு ஏழெட்டுப்பேர்தான் இருந்தாங்க. வாங்க வரிசைக்குப் போகலாமுன்னதும் உக்கார்ந்த இடத்துலே இருந்து வலப்பக்கம் நாலடி எடுத்து வைக்காம, கருவறையை வலம்வந்து நிக்கலாமுன்னு போன இவருடன் நானும் போனதுதான்............. தப்பாப் போயிருச்சு:(

(மீதி அடுத்த பதிவில்)

36 comments:

  1. உடுப்பி கிருஷ்ணரின் அழகே அழகு. குருவாயூர் மற்றும் உடுப்பி கிருஷ்ணர்களின் அழகு அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும். உள்ளம் கவர் கள்வனல்லவா அவன்

    ReplyDelete
  2. அப்படியே எடுத்து இடுப்பில் வைத்துக்கொள்ளலாம் போல் குழந்தை வெகு அழகு. தரிசனம் செய்ய வைத்த உங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. இந்த தல புராணக் கதையில் நேரடியாக நெஞ்சை தொட்டு கண்ணை கசிய வைக்கும் ஒரு உயிரோட்டத்தை உணர முடிகிறது.


    ஐ, நான் கடைசி bench இல்லை

    virutcham

    ReplyDelete
  4. இங்கே
    இங்கே

    ஒரு சின்ன விளம்பரம், பாருங்க! :P

    ReplyDelete
  5. வாங்க எல் கே.

    சத்தியமான உண்மை!

    ReplyDelete
  6. வாங்க அமைதிச்சாரல்.

    நெத்தியில் ஒரு செயினை மாட்டி வச்சுருப்பதை எடுத்துட்டால் இன்னும் முகம் நல்லாத் தெரியும் இல்லே?

    ReplyDelete
  7. வாங்க விருட்சம்.

    கதையை இன்னும் அழகாச் சொல்லி இருக்கலாம். எனக்கு சொல்லத் தெரியலைப்பா....

    மன்சில் இருப்பது அப்படியே வெளியில் எழுத்தாப் பிறக்கலைன்னுதான் சொல்வேன்:(

    ReplyDelete
  8. வாங்க கீதா.

    சுட்டிகளுக்கு நன்றிப்பா.

    முந்தியே வாசிச்சு இருந்தாலும் இப்பவும் ஒருமுறை வாசிச்சேன்

    ReplyDelete
  9. அந்த ஐட்டத்துக்கு பேரு Hittu அல்லது Khotte என்னு நினைக்கிறேன்..

    இந்தக் கிண்டல் தானே வேண்டாம் என்பது, கன்னடத்தில் கோத்தி என்றால் குரங்கு என்று அர்த்தம் என்று சொன்னார்கள். எதுக்கும் சரியாக விசாரிக்கவும்.
    ஆகா உங்களுக்கும் சஸ்பென்ஸ் திரில் வந்துருச்சே. சீக்கிரம் அடுத்த பதிவைப் போ



    படங்கள் அருமை, நல்ல பதிவு டீச்சர்.

    ReplyDelete
  10. நாங்களும் சென்ற மாதம் தான் , மூகாம்பிகை, உடுப்பி, தர்மஸ்தலா, & ஹொர நாடு போன்ற மறக்க முடியாத புண்ணிய ஸ்தலங்களுக்கு போய் வந்தோம் .... சமயம் கிடைத்தால் எழுத வேண்டும் , உங்கள் வர்ணனை, புகை படங்கள் எல்லாம் அருமை.

    உடுப்பியில் அருமையான தரிசனம் ( மற்ற இடங்களிலும் கூட ) ...

    ReplyDelete
  11. \\இப்பெல்லாம் இது ஒரு பேஜாராப் போச்சு. முந்தி எல்லாம் இது திருப்பதிக்கு மட்டும்தான். \\

    வேலைக்கு சேர்ந்து முதல் மாசம் சம்பளம் வாங்கிட்டு நண்பர்களுடன் போட முதல் டூர் திருப்பதி....என்னோட நண்பர் ஒருதன் எல்லாம் முடிச்சிட்டு வெளியில வந்து கோபுரத்தை பார்த்துகிட்டே கண்ணீர் விட்டான்.

    ஏண்டா ஆச்சுன்னு கேட்ட அவனுக்கே பதில் தெரியலை.

    அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ;)

    ReplyDelete
  12. நாங்கள் செல்ல வேண்டும் என்று சென்றமுறை இந்தியா வந்த பொழுது நினைத்தது.ஆனால் குருவாயூர் மட்டும் செல்ல முடிந்தது.

    ஆனால் தங்களால் இங்கிருந்தே தரிசித்து விட்டோம் நன்றி. உண்மையில் நாங்களும் கண்ணனை கண்ணாரக் கண்டுவிட்டோம்.

    ReplyDelete
  13. எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

    ReplyDelete
  14. "கண்ணனைக் கண்ணாரக் கண்டேனே!!!"
    நாங்களும் தான்!
    சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
    அன்புடன்,
    எழிலரசி பழனிவேல்

    ReplyDelete
  15. ரொம்ப நாளைக்கு அப்புறம் சுந்தர் நான் கூறிய கருத்துக்களையே வழிமொழிந்து உள்ளார்.

    அவர் என்னிடம் சொன்ன விசயங்களை உங்கள் எழுத்துக்களில் படித்துக்கொண்டு வருகின்றேன்.

    ReplyDelete
  16. புகைப்படங்களும் கட்டுரையும் அருமை டீச்சர்...

    ReplyDelete
  17. வாங்க பித்தனின் வாக்கு.

    தெலுகுலேயும் கோத்தின்னா.... குரங்குதான்!

    அடுத்த பதிவைப் போட்டாச்சு.

    பதிவின் நீளம் கருதி 'துண்டு' போடவேண்டியதாப் போயிருச்சுப்பா.

    ReplyDelete
  18. வாங்க அது ஒரு கனாக் காலம்.

    எழுதுங்க. உங்க அனுபவங்களைத் தெரிஞ்சுக்க ஆவல்.

    ReplyDelete
  19. வாங்க கோபி.


    ஆனந்தக் கண்ணீர்தான் 'குபுக்'ன்னு வந்துருது. என்னமோ ஒரு வித உணர்ச்சி மனசுலே!

    ReplyDelete
  20. வாங்க சுமதி.

    குருவாயூர் போய் பலவருசங்களாச்சு. சரியாச் சொன்னால் 21 வருசம்.

    மகளுக்குத் துலாபாரம் கொடுக்கப் போனோம்.

    யானைக்கொட்டடி போய் வந்தீங்களா?

    ReplyDelete
  21. எல் கே,

    வாழ்த்து(க்)களுக்கு நன்றிப்பா

    ReplyDelete
  22. வாங்க எழிலரசி.

    இன்னிக்குப் பதிவுலேயும் கண்ணன்தான்.
    அங்கே விருந்து வேற ரெடியா இருக்கு.
    வாங்க வாங்கன்னு வரவேற்கிறேன்:-)

    ReplyDelete
  23. வாங்க ஜோதிஜி.

    கண்டதை எழுதுறேனோன்னு சிலசமயம் நினைப்பேன். ஆனால் 'கண்டதைத்தானே' எழுத முடியும்:-)))

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  24. வாங்க லோகன்.

    ஆதரவுக்கு நன்றி.

    இன்றையப் பதிவில் ஒரு ஆல்பம் போட்டுருக்கேன் பாருங்க.

    ReplyDelete
  25. கிருஷ்ணன் என்றால் கிருஷ்ணந்தான். இத்தனூண்டு இருந்து கொண்டு மத்து இவ்வளவு பெரிசா வைத்திருக்கிறான் பாருங்க. அதுக்கு ஏதாவது கதை இருந்ததோ என்னவோ.கோவிலழகு. அதைப் பத்தி யாரு சொல்றாங்கங்கரதும் எப்படி சொல்றாங்கன்னும் வித்தியாசம் இருக்கே.நான் கோவிலுக்குப் போய்க் கட்டுரை எழுதினா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன்:) :(
    அடுத்தப் பதிவுக்குப் போறேன்!

    ReplyDelete
  26. வணக்கம், துளசி டீச்சர்

    நாங்களும் எங்கள் 5வயது மகளுக்கு துலாபாரம் கொடுத்தோம். யானை கொட்டடியும் போய்வந்தோம் கிட்டத்தட்ட 60 யானைகளுக்கு மேல் பார்த்தோம். எனது மகளும், எனது அண்ணன் 3வயது மகனும் மிகவும்
    ரசித்தார்கள்.

    ReplyDelete
  27. வாங்க வல்லி.


    அது யசோதாவின் மத்து.


    சைஸு வாரியா மத்து இருக்கா? அந்தக் காலத்துலே பெரிய பானைகளில் தயிர் உறைய வச்சுக் கடையரதுதான். அதுவும் கைகளில் சிலிப்பாம ஒரு பெரிய தூணுக்குப் பக்கத்தில் பிரிமணை போட்டு அதுலே தயிர்ப்பானை. நீளமானபிடி இருக்கும் மத்தை அந்த தூணோடு சேர்த்து ஒரு கயிறு சுத்தித்தான் நின்னுக்கிட்டே கடைவாங்க.

    அதைத்தான் குழந்தை கையில் பிடிச்சுக்கிட்டு நிக்கறான்.

    மண்பானைத் தயிருன்னதும் எனக்கொரு குடும்பக்கதை நினைவுக்கு வருது. வச்சுக்கறென் அதை நம்ம 'அப்புறம் கதைகள் 1500 லே"

    ReplyDelete
  28. வாங்க சுமதி.

    வணக்கம்.

    என் மகளுக்கும் அன்றைக்குப் பயங்கர மகிழ்ச்சி:-)

    ReplyDelete
  29. குழந்தைக் கண்ணன் தர்சனம் மனத்திற்கு இதமாய் இருந்தது.

    ReplyDelete
  30. வாங்க மாதேவி.

    குழந்தைக் கண்ணன் அழகுலே மயங்காதவர்கள் யார்?

    ReplyDelete
  31. அப்பவே பார்த்தாலும் படித்தாலும் பின்னூட்ட முடியாம இருந்தேன் டீச்சர்! காரணம் - //வரவர மனம் பூஞ்சையா மாறிக்கிட்டு இருக்கேப்பா......// அதான் எட்டி எட்டி மட்டும் பாத்துக்கிட்டே இருந்தேன்!

    அந்தச் சின்னூண்டு குழந்தை கண்ணனைப் பார்க்கும் போதெல்லாம்...அந்த ஜன்னல் துவாரங்களுக்கு இடையே கையைச் செலுத்தாமல், உயிரையே செலுத்தி...உள்ளே போய்...தொட்டு, துடிச்சி...அப்படியே இறுக்கப் பிடிச்சி...சாஞ்சி...

    கிருஷ்ணா நீ பேகனே...பாரோ!
    கிருஷ்ணா நீ வேகமாய்...வாராய்!

    ReplyDelete
  32. வாங்க கே ஆர் எஸ்.

    நம்ம ஆசை 'அவனுக்குத் தெரியாமலா இருக்கும்'?

    அதுக்கும் ஒரு வழி செஞ்சுட்டான்.

    விவரம் வரப்போகும் இடுகைகளில்:)

    ReplyDelete
  33. he he..sorry..dunno how many times i came to this post...
    antha closed circuit tv photo-la irukkura antha mada payal-ai paathu kitte irukka thonuthu :)

    neenga 1st day one time, 2nd day 4 times ellam paatheenga...but naan ungaLa vida jaasthiyaa paathings...paathings...paathings! :)

    ReplyDelete
  34. pic wide-aa irukkarathaala, konjam gundaa theriyaaRaan pola...but hez not that much gundu, lean only..like me :)

    ReplyDelete
  35. கிருஷ்ணா நீ பேகனே, பாரோ!
    கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!
    :)))

    வேகமாய் வாராய், திருமுகம் தாராய்!
    (கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்!)

    காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்!
    நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்!
    (கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

    இடுப்பிலே ஒட்டியானம், விரல்களில் மோதிரங்கள்
    கழுத்திலே தவழ்ந்திடும் வைஜயந்தி வனமாலை!
    (கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

    காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும்
    பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க
    (கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

    வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா
    உலகத்தின் காவலா, நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
    (கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

    ReplyDelete
  36. கே ஆர் எஸ்,

    பாலும் வெண்ணெயும் தயிருமாத் தின்னா உடம்பு குண்டாகாதாமே:-)))))

    தின்னதுமுழுசும் செரிக்கத்தான் காட்டுலே ஓட்டமும் விளையாட்டமுமாப் பொழுது போச்சேப்பா!!!!

    கிருஷ்ணனைத் தமிழ்ப் 'படுத்தியது'
    ரொம்ப நல்லா இருக்கு.
    டேங்கீஸ்.

    நீங்ககூடக் கட்டித்தயிரும், கெட்டி வெண்ணையும் சாப்பிட்டு 'ஓடி' விளையாடுங்க:-)))))

    ReplyDelete