Friday, April 09, 2010

போகுமிடம் வெகுதூரமில்லை

நல்லவேளையா அதிக தூரம் இல்லை. வெறும் 6 கிலோமீட்டர்கள்தான். கத்ரின்னு கேட்டதும் சாமி ஞாபகம் சட்ன்னு வர்றதில்லை. சாக்ஸஃபோன்தான் வருது. அடடா..... மனுஷன் என்னமா வாசிக்கிறார்ன்னு.... உள்ளூர் கோவிலிலேயும் நிறைய வாசிச்சு இருப்பார் இல்லே?

வாசலில் இறக்கி விட்ட ப்ரஷாந்திடம் போய் பார்க்கிங்லே இருக்கச் சொல்லிட்டு நிமிர்ந்து பார்த்தால்...... படிக்கட்டுகளுடன் சின்னதா ஒரு கோபுரம்.
என்னவோ பெயர்ப்பலகை. இப்பெல்லாம் கொஞ்சம்கூட கூச்சமே இல்லை படிக்கத் தெரியலையேன்னு. அதை ஹைதராபாத்லேயே விட்டுட்டேன்.

30 நாளில் கன்னடம் புத்தகம் ஃபிஜி அக்காவிடம் இருந்து ஓசி வாங்கி 27 வருசம்தான் ஆச்சு. எழுத்துக்களைத் தெரிஞ்சுக்கிட்டாப் போதும்னு...... உத்து உத்து ஜாங்கிரிகளைப் பார்த்ததும் ஆர்வம் போயே போச். ஒரு ஏழெட்டு வருசம் முந்தி, நெட்லே இருந்து ப்ரிண்ட் அவுட் எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு தெலுகுதேசத் தோழியிடம் கத்துக்க ஆரம்பிச்சேன். அதுவும் போயிந்தி.
எங்க பாட்டி தலைதலையா அடிச்சுக்கிட்டாங்க..... தெலுங்கு படிக்கக் கத்துக்கோன்னு. தீனிக்கு தலக்கட்டு இஸ்தே இதி, தானிக்கு தலக்கட்டு இஸ்தே அதின்னு சுவாரசியமில்லாம ,எழுந்து போக சாக்குக் கிடைக்குமான்னு இருந்ததை நினைச்சு இப்போத் தலைதலையா நான் அடிச்சுக்க வேண்டியதாப் போச்சு. சரி. நம்ம கதைக்கு வருவோம்.....

பக்கத்துலே இருந்த பெண்ணிடம் கேட்டால். 'ஸ்ரீ க்ஷேத்ரம் கத்ரி' எழுதி இருக்காம். அட! இம்புட்டுதானா? படிகளை நோக்கி அடிகளை எடுத்து வச்சால், கோபாலைக் காணோம். இந்தப்பக்கம் இருக்கும் சரிவா மேலே போகும் வழியில் போய்க்கிட்டு இருக்கார். என்ன எழுதி இருக்குன்னு நான் பார்க்கும்போதே ஆள் 'எஸ்' ஆகிருவார். அங்கே நல்ல கூட்டமா ஜனங்கள் இங்கிட்டும் அங்கிட்டுமா போய்க்கிட்டு இருக்காங்க. செருப்புக்கூட்டம் தரையில். நாங்களும் செருப்பை விட்டுட்டு வளாகத்துலே நடந்தோம். சதுரமான கட்டிடமா ஓடு போட்டு இருக்கு நடுவிலே. மூடி இருக்கு வாசல். . இடப்பக்கமா ஒரு சந்நிதி. மஹாகணபதி. அடுத்துக் கொஞ்சம் உள்ளடங்கிய சந்நிதியில் பத்ரகாளி.
மெயின் கோவிலில் இருக்கும் மஞ்சுநாதரைப் பார்க்கலாமுன்னா கோவில் வாசல் எங்கே? வலமாவே போயிட்டு இருந்தப்ப ஒரு குன்றை வெட்டி அமைச்சமாதிரி உசரத்துலே ஏதோ சந்நிதி. ஆட்கள் நடமாட்டம் வேற இருக்கு. அந்தபகுதிபோய் வலம் திரும்புனா இடப்பக்கம் படிகள் உசரமா ஏறிப்போகுது. வலப்பக்கம் கோவில் வாசல். கன்ஃப்யூஷனில் சரியா ஒன்னும் பார்க்கலை. இங்கேதான் பஞ்சபாண்டவர் குகை ஒன்னு இருக்காம். பகல்நேரத்தில் வந்து நிதானமாப் பார்க்க வேண்டிய இடம். இப்படி ராத்திரியில் அவதி அவதின்னு ஓடறோம். மூலவரை மட்டும் சேவிச்சுக்கிட்டு, கோவில் தலவரலாறு ஒன்னு வாங்கிக்கிட்டுக் கிளம்ப வேண்டியதாப் போச்சு. நல்ல முறுக்கு மீசையோடு இருக்கார் சிவன். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு தினுசில் மீசை. தொங்கு, முறுக்கு, கட்டுன்னு.
கோகிக்கான கோவிலுக்குப் போக நேரம் இருக்கான்னு தெரியலையேன்னால் போயிடலாம் இப்பவேன்னு சந்து பொந்து மாதிரி இருந்த தெருக்களில் சடார் சடார்ன்னு புகுந்து 23 கிலோ மீட்டர் பயணம் செஞ்சு கோவில் தோரண வாசலில் விட்டப்ப மணி எட்டரைக்கு அஞ்சு நிமிசம் பாக்கி.
அச்சச்சோ..... இம்மாந்தூரம் வந்தும்..... அஞ்சாறு படிகள் இருக்குன்னு ஏறிப்போனா ரெண்டு பக்கமும் ரேம்ப் மாதிரி ஒன்னு போகுது. நமக்கு முன்னே ஒரு பத்துப்பேர் ஏறிக்கிட்டு இருக்காங்க. நல்லவேளை படிகள் இல்லைன்னு நினைச்சு விநாடி நேரமாகலை, போய்ச்சேர்ந்த நிலையில் ரெண்டுபக்கமும் அரண்மனை செட் போல படிகள். விறுவிறுன்னு ஏறிப்போறோம். எட்டரைக்குக் கோவில் மூடிருவாங்களாமே. கூட்டத்தைத் தாண்டி ஓட முடியலை. அடுத்த நிலைக்கு வந்ததும் எதிர்ப்பக்கமிருந்த படிகளில் ஏறிப்போறோம். அடுத்து அடுத்துன்னு நிலைகள் வந்துக்கிட்டே இருக்கு. எனக்குக் கடுமையா நெஞ்சுகிடந்து அடிக்குது.' பொட்'னு போயிருவேனோன்னு இருக்கு. போனா நல்லதுதான். எனக்கு முன்னால் ஒரு ஏழெட்டு படிகடந்து கோபால் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டே ஓட்டமும் நடையுமா ஏறிக்கிட்டு இருக்கார். நீங்க போங்கன்னு கைச்சாடையில் சொல்லிட்டு நின்னேன். 'கோகி, அம்மா உன்னைப்பார்க்க முடியாது போல. ஆனா அங்கெ நீ இருக்குமிடத்துக்கு வர்றேன் என் செல்லமே'ன்னு மனசுலே ஓடுது. காலெல்லாம் குழைஞ்சு ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியாமக் கனக்குது.

ஒரு நிமிஷம்தான். (ஆனா ரொம்ப நேரம் நின்னாப்லெ இருந்துச்சு) சுதாரிச்சுக்கிட்டு மெள்ள நிதானமா ஏறினேன். படிகள் முடிஞ்ச இடம் ஒரு மொட்டை மாடி. கண் எதிரில் கொட்டாய் மாதிரி போட்டு அந்தப்பக்கம் கட்டிடம். நடுவில் வாசலோடு அகலமான கட்டடம். கீழே நிலத்தில் இருக்கமோன்னு பிரமிப்பு. வாசலைத் தாண்டுனால் அகலமான திண்ணைகள். ஜொலிக்கும் விளக்கு இருக்கும் கருவறையில் வெறும் பூக்களா இருக்கு. விட்டேனா பார்ன்னு நெஞ்சுக்குள்ளே, ஓங்கி ஓங்கி பேரிகை அடிக்குது. மூச்சு வாங்க..... அப்படியே திண்ணையைப் பிடிச்சுக்கிட்டு நின்னேன்.





உற்றுப்பார்த்தால் கண்ணைத் திறந்துக்கிட்டுக் கிருஷ்ணன் புன்முறுவலோடு(?) நிக்கறான். வழக்கம்போல் வெள்ளிதகடு வேய்ந்த நிலைவாசப்படிகளும் உட்புறச் சுவர்களும்.. கோவிலை வலம்வந்தாத் தான் தெரியுது அதோட பிரமாண்டம். ஹப்பா...... எத்தனை பெரிய மொட்டை மாடி!

ராத்திரி நடை அடைக்குமுன் செய்யும் அர்த்தஜாம பூஜை ஆரம்பமாச்சு. பட்டர் உள்ளே போய் கதவைச் சாத்திக்கிட்டார். ஹனுமன், கருடன், சங்கு சக்கரம், தாமரைன்னுஅழகான செதுக்குச் சிற்பவேலைப்பாடுள்ள சின்னக் கதவு. இங்கெல்லாம் வாசல் கதவு உயரக்குறைவா இருக்கு. கட்டாயமா உடம்பை அரை உடம்பா மடிச்சுக் குனிஞ்சுதான் போகணும். பூஜைமணி ஒலிக்கக் கதவைத் திறந்ததும் அடுக்கு தீப ஆரத்தி. ஜிலுஜிலுன்னு நிக்கறான். பட்டர் உட்கார்ந்த நிலையில் ஆரத்தி எடுக்கறார். நின்னால் தலை முட்டும் அபாயம் இருக்கே! அப்புறம் வேற ரெண்டுவகை தீப ஆரத்தி முடிஞ்சது. அதைக் கொண்டுவந்து வெளியில் ஒரு பக்கமா வச்சுட்டார். நாமே கண்ணில் தொட்டு ஒத்திக்கணும்.

திண்ணையின் ஒரு ஓரத்தில் பிரசாதங்களை வச்சுக்கிட்டு உட்கார்ந்ததும் ஜனங்கள் சொல்லிவச்சதுபோல வரிசையில் நின்னு வாங்கிக்கிட்டாங்க. எங்களிடம் (மட்டும்) எந்த ஊர்ன்னு விசாரிச்சார். சென்னைன்னதும் தனியா ஒரு பாத்திரத்தில் பாக்கெட் போட்டு வச்சுருந்த பிரசாதம், சந்தனம்,பூ எல்லாம் ஒரு தட்டில் வச்சு எனக்குக் கொடுத்தார். (கன்னடக்காரன் அடிக்கிறான்ப்பா ன்னு கேட்டது நினைவுக்கு வந்துச்சு)
வெளியில் தீபஸ்தம்பம் முன்னே ஒருத்தர், வெளிவரும் பக்தர்களுக்கு பிரசாதத்தை அள்ளி அள்ளிக் கைகளில் நிரப்பிக்கிட்டு இருந்தார். கிருஷ்ணனின் ஃபேவரிட் ஆன அவல், பொரி, தேங்காய், சக்கரை, தேன் கலந்து வச்சது. தின்னு முடிச்சதும் கை கழுவிக்கப் படிகளுக்குப் பக்கத்தில் ரெண்டு சைடிலும் வாஷ் பேஸின் வச்சுருக்காங்க. கோவில் மேனேஜரிடம் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம். கோவில் பற்றிய விவரங்கள் அடங்கிய ப்ரோஷர் ஒன்னு கொடுத்தார். எல்லாம் கன்னடத்தில். ஆனால் படங்கள் இருக்கேன்னு வாங்கிக்கிட்டேன். எப்படியும் எழுத்துக்கூட்டிப் படிச்சுட்டு ஒரு ஏழெட்டுவருசத்தில் உங்களுக்கும் சொல்லணும்:-)

கோவிலுக்கு வயசு மூணு. ஒன்னரை ஏக்கர் நிலத்துலே பரந்துவிரிஞ்சு இருக்கு. அஞ்சு நிலைகள் உள்ள இதைக் கட்ட வெறும் ஒன்னேகால் வருசம்தான் ஆச்சாம். மொத்தம் 108 படிகள் ( ஆஹா.... அதான் என்னை உண்டு இல்லைன்னு ஆக்கியிருக்கு) நம்ம கோகி வெப்ஸைட் வச்சுருக்கார்.

இறங்கும்போது ரொம்ப நிதானமா வந்தேன். ஒவ்வொரு தளத்திலும் ப்ரமாண்டமான ஹால்கள் இருக்கு. வீட்டு விசேஷங்களுக்கு வாடகைக்கு எடுத்துக்கலாம். மறுநாள் நடக்கப்போகும் ஒரு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு அந்தக் குடும்பத்தினர் காய்கறிகளைக் கொண்டுவந்து வச்சுக்கிட்டு இருந்தாங்க.
இந்த கலாட்டாவில் படம் எடுக்க மறந்துட்டுக் கீழே வந்ததும் ஒரு படம் க்ளிக்கினேன். மணி ஒம்போதரை. அறைக்கு வந்து மேங்களூர் ஸ்பெஷல் சாப்பாடு வரவழைச்சோம். போளி, நீர் தோசை, கடுபு, சன்னாஸ்,அப்புறம் இட்லி மாதிரி ஒன்னு, பெயர் தெரியாத ஒன்னு (ஓலையை வட்டமாச் சுத்தி அதுக்கு நடுவில் மாவு ஊத்தி நீராவியில் வேகவச்சுருக்காங்க) இப்படிப் புதுசு புதுசா பெயர்கள்.



35 comments:

  1. அந்த ஐட்டத்துக்கு பேரு Hittu அல்லது Khotte என்னு நினைக்கிறேன்..

    சூப்பரா இருக்கு கோயில். 108 ஏறி போயிட்டீங்களா, ஸ்லிம்ரனா இனிமே? :))

    ReplyDelete
  2. ஆஹ்.. ஆனா கடுபுங்கறதும் ஹிட்டு தானே?! அப்போ இது என்ன "பத்ரோடே"ஆ? அது பொரிகன்னா செய்வாங்க?! கடவுளே மண்டை வெடிக்குதே!

    ReplyDelete
  3. வாங்க பொற்கொடி.

    எதுக்கு இப்படி கடு(ப்)பாகிட்டீங்க????

    நிதானமா யோசிச்சுச் சொல்லுங்க.

    நாங்க வெயிட்டீஸ்:-)))))

    ReplyDelete
  4. ஆகா டீச்சர் நான் இங்கன டேரா போட்டியிருந்தால், நீங்க என் பதிவுகளில் இருக்கின்றீர்கள். விட்ட எல்லாப் பதிவுகளையும் படித்து ஆகிவிட்டது. நல்லா இருக்கு. நல்லா ஊர் சுத்தி தரிசிக்க வைத்தது இல்லாமல், கடைசியா விருந்து போட்டு முடித்து விட்டீர்கள். நல்ல படங்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  5. //கோகி, அம்மா உன்னைப்பார்க்க முடியாது போல. ஆனா அங்கெ நீ இருக்குமிடத்துக்கு வர்றேன் என் செல்லமே'ன்னு மனசுலே ஓடுது. காலெல்லாம் குழைஞ்சு ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியாமக் கனக்குது.

    உற்றுப்பார்த்தால் கண்ணைத் திறந்துக்கிட்டுக் கிருஷ்ணன் புன்முறுவலோடு(?) நிக்கறான்//



    உங்களது அனுபவம் எனக்கு பாவுன்னி கடப்பா என்ற கடப்பா அருகில் இருக்கும் க்ஷேத்திரத்தை நினைவு படுத்துகிறது.

    பாவுன்னி எனும் பக்தர் அந்தக்காலத்தில் ( ஏழு நூற்றாண்டுகட்கு முன்னாடியாம்) திருப்பதிக்குச் செல்லவேண்டும் என நடக்க ஆரம்பித்தாராம். அவர் ஏழை. வாகன வசதி துளசி கோபால் அவங்களுக்கு பெருமாள் கொடுத்திருக்காப்போல‌
    அவருக்கு கொடுக்கவில்லை. நடந்து நடந்து சோர்வாகிப்போனார். பசி, தாகம் மறந்தும் போய், பெருமாள் ஒன்றே தன்
    கவனத்தில் கொண்டு தவழ ஆரம்பித்தாராம். பின் நீந்துவது போலச் சென்றாராம். ஒரு அர்த்த ராத்திரியில் மயக்கம் வந்து அங்கேயே படுத்துவிட்டாராம். ( பாவுன்னி எனும் இடத்தில் )

    பெருமாள் ( சாக்ஷாத் திருப்பதி வெங்கடாசலபதி ) கனவில் வந்து , நீ வரவேண்டாம். நானே உனக்கு இங்கே வந்து
    தரிசனம் தருகிறேன் என்றாராம்.

    காலையில் கண் விழித்த பாவுன்னிக்கு கனவு நினைவு வந்தது. முதலில் இது கனவு என்று நினைத்து மேலும் தனது
    யாத்திரையை துவங்கினார்.

    ஆனால் என்ன ஆச்சரியம். !!

    திருப்பதி பாலாஜி கோவில் கண்முன்னே நிற்கிறது. கோவிந்தா கோவிந்தா என கண்ணீர் மல்க அந்த திருப்பதி
    மலை வாசனை அங்கிருந்தே வாழ் நாள் முழுவதும் தரிசித்து வந்தாராம்.

    இந்தக் கோவில் அப்படியே திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போலவே சகல அமைப்பிலும் இருக்கிறது. இங்கு வந்தவர்கள் திருப்பதிக்குச் சென்ற புண்ணியம் கிடைக்கும் என்றும்

    இங்கு வருபவர்கள் எல்லோரும் நிச்சயம் ஒரு நாள் திருப்பதிக்குச் சென்று பாலாஜியை தரிசனம் செய்வார்கள்
    என்றும் தல புராணம் சொல்கிறது.

    என்னை அழைத்துக்கொண்டு போனவரிடம் சொன்னேன். ஸார் ! இதுவரை நான் திருப்பதிக்கு போனதில்லை.
    இப்பொழுதைக்கு போகும் எண்ணமும் இல்லை. நானாவது திருப்பதிக்கு போகவாவது என்று எனது
    சொன்னேன்.

    நானும் உங்கள் போன பதிவில் சொன்னது போல ஏதோ ஒரு கதை என்று தான் முதற்கண் நினைத்தேன். அடுத்த நாள் காலை வரை.

    கடப்பா அலுவலகத்தில் ( எனக்கு ( 1984 )அப்பொழுது ஆடிட் விஜிலென்ஸ் வேலை ) மறு நாள் எனக்கு ஒரு டெலி ப்ரின்டர்
    செய்தி வந்தது . (அந்தக்காலத்தில் ஃபாக்ஸ் கிடையாது. ஃபோன் கூட எஸ்.டி.டி போட்டு மணிக்கணக்காக காத்து இருக்கவேண்டும்.) உடனே அடுத்த நாள் திருப்பதி யில் இருக்கும் அலுவலகத்திற்கு செல்லவேண்டும் என்று.

    காலை பாம்பே மெயில் பிடித்து ஒரு வழியாக திருமலா ஸ்டேஷன் வந்தேன். அங்கு வந்த திருப்பதி யின் எங்கள்
    அலுவலக மேலாளர் , எனது அலுவலக வேலை முடிந்தவுடன் ) திருப்பதி பெருமாளை தரிசிப்போம் வாருங்கள் என்று
    என்று அழைத்துப்போனார். அவர் ஒரு வி.வி. ஐ.பி. பாஸ் வைத்திருந்தார். அதன் உதவியுடன் எந்த க்யூவிலேயும்
    நிற்காமல, நேரடியாக பெருமாள் சன்னதிக்கே என்னைச் சேர்ப்பித்தார்.

    ஆஹா !! பெருமாளே ! கோவிந்தா !! கோவிந்தா !!

    கண்ணீர் என் கண்களை முற்றிலும் மறைத்தன. உணர்ச்சியில் நான் அழுதேன்.

    பெருமாளே !! என்னே உன் கருணை !! உன்னை நான் சந்தேகப்பட்டேனே உனது ஆசி இவ்வளவா !! எனக்கா !!! என மெய் மறந்தேன். யாரோ கை நிறைய பொங்கல் தந்தார்கள்.
    இருகைகளிலும் வாங்கி உண்டேன்.

    அவனருளாலே அவன் தாள் வணங்கி எனும் தேவாரப்பாடலின் பொருள் புரிந்தது.

    துளசியும் கோபாலும் நிச்சயம் த்வாரகைக்குச் சென்று அந்த கண்ணனை தரிசிப்பார்கள்.

    சுப்பு தாத்தா
    ( தாத்தா தான். வயது 70 ஐ நெருங்குகிறது.
    இந்த வயதில் உங்கள் பதிவுகள் தான் எனது பாலைவனத்தில் ஒரு நீர் வளாகம் போல் இருக்கிறது.

    ReplyDelete
  6. கோகி அழகா சிரிச்சிக்கிட்டு இருக்கான்.கொள்ளை அழகு.இவ்வளவு படி ஏறினதுக்கு கண்டிப்பா மூட்டுவலி வந்திருக்கணுமே..

    அப்புறம்.. தட்டை பெரூசாக்கிப்பாத்துட்டேன்.மங்களூர் போளியை காணலை..காணலை :-(

    ReplyDelete
  7. வாங்க பித்தனின் வாக்கு.

    நான் எ(அ)ங்கே போய்...... தேடிக்கிட்டு இருந்தேனே உங்களோடு:-))))

    போளிக்கு ஒரு சின்னக் கிண்ணத்துலே நெய் வச்சுருந்தாங்க!

    ReplyDelete
  8. வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

    என் மகளுக்குத்தான் நீங்க தாத்தா:-)

    அது என்னமோ ரொம்பச் சரி. ஒவ்வொருமுறை திருப்பதி போகும்போதும் 'அவனை' நல்லாப் பார்க்கணும், மனசுலே இருப்பதைப் பற்றிக் கேட்கணும் இப்படியெல்லாம் திட்டம். அங்கே படியில் போய் நின்னதும் கண்ணுலே அடக்கமுடியாம மாலைமாலையா கண்ணீர் பெருக, வரும் தேம்பலை அடக்கி வைக்கறதுக்குள்ளே போதும் போதுமுன்னு ஆகிருது. இந்த கலாட்டாவுலே கேக்க நினைச்சதெல்லாம் காணாமப்போயிரும்.

    ஒரு நாள் அகஸ்மாத்தா அடையார் அனந்த பத்மநாபனைச் சேவிக்கப்போனால், தேரில் இருந்து இறங்கி அப்படியே ஜொலிச்சுக்கிட்டு நிக்கறான். எனக்கா.....எனக்கா ....எனக்கான்னு பயங்கர கரைச்சல் கேட்டோ. பாவம் கோபால். கர்சீஃப் கொடுப்பதே வேலை.


    குஜராத் பயணத்தொடர் பார்க்கலையா? பூலோகத் துவாரகை போய் வந்தாச்சு.

    ReplyDelete
  9. வாங்க அமைதிச்சாரல்.

    ஆஹா... அது தனித்தட்டு.

    படம் சேர்த்தாச்சு இப்போ. பார்த்து மகிழலாம்:-)

    ReplyDelete
  10. அம்மா உங்களுக்கு ஒரு விருது கொடுத்து உள்ளேன் வந்து பெற்று கொள்ளவும்

    http://lksthoughts.blogspot.com/2010/04/blog-post_09.html

    ReplyDelete
  11. தலைப்புல இருந்து என்ன சொல்ல வர்ரீங்க.. பாவம் சார்! நல்லது செய்யப்போனா ...............

    கோயில் ரொம்ப அழகு துளசி..

    ReplyDelete
  12. விருட்சம் ஆஜர்

    ReplyDelete
  13. இப்படி ஒரு ரிஸ்க் தேவையா? முடிந்த வரை முயலவும் முடியாத பட்சத்தில் டப் என்று நிறுத்திவிடுங்கள்.
    கோகி என்றதும் உங்கள் கோகி தான் ஞாபகம் வந்தது.எலிக்கு தான் கோவில் இருக்கு பூனைக்குமா? என்று கடைசிவரை தேடினேன்.

    ReplyDelete
  14. அற்புதம். அற்புதம். கண்களை குளிர வச்சிடீங்க!
    மிக்க நன்றி!

    ReplyDelete
  15. //நீர் தோசை,//

    புதுசா இருக்கே? எப்படி பண்றது?

    ReplyDelete
  16. kovil super,saappadu arumai

    ReplyDelete
  17. 108 படிகள் ஏறிச் சென்று தர்சனம் செய்து எங்களையும் தர்சிக்க வைத்த உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  18. Pathrode endral seppangilangai nattal periya ilai mulaikkum. Thengai,puli, milagai pottu masala araithu andha ilaiyil thadavi roll pola urutti idli vega vaikirar pola vega vaithu,pinbu cut seidhu serve seiyavendum.

    ReplyDelete
  19. அம்மா வணக்கம்....பக்தி பரவசத்துல நானும் முங்கிட்டேன்..

    ReplyDelete
  20. ம்ம்...படிக்கும் போதே மூச்சு வாங்குது...கோவில் எல்லாம் நல்ல அழகு ;)

    ReplyDelete
  21. வாங்க எல் கே.

    விருதா? எனக்கா?

    மகிழ்ச்சியாத்தான் இருக்கு!

    நன்றிப்பா.

    ReplyDelete
  22. வாங்க கயலு.

    தலைப்பு.... சொல்வது ரொம்பவே உண்மை. 'வாராய் நீ வாராய்'ன்னு கோபால் முன்னால் விடுவிடுன்னு போய்க்கிட்டு இருந்தாரேப்பா:-)))))

    ReplyDelete
  23. வாங்க விருட்சம்.

    கடைசி பெஞ்ச்?

    ReplyDelete
  24. எல் கே,


    neer dosa ன்னு கூகுளிச்சுப் பாருங்க.

    எக்கசக்கமா இருக்கு படங்களுடன்.

    அரிசி ஊறவச்சு அரைச்சு செய்வதாம்.

    ReplyDelete
  25. வாங்க குமார்.

    கோவில் மூடும் நேரம் போனதால் பரபரப்பா ஓடுனது என்னவோ நிஜம். கோவிலில் வேலை நேரம் எட்டரைன்னு வெளியில் தகவல் பலகை இருந்துச்சு.

    பூஜை முடிய ஒம்போதரை ஆகுமுன்னு தெரியாது. நிதானமா ஏறி இருந்தால் கஷ்டம் தெரிஞ்சுருக்காது.

    மனசின் வேகத்துக்கு உடம்பு ஒத்துழைக்கலைன்ற கட்டத்துக்கு வந்துருக்கேன்.

    ReplyDelete
  26. வாங்க ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோவில்.

    கோவிலே கோவிலைப் பார்க்க வந்துருக்கே!!!!!!!!

    ஆமாம். அது என்னங்க இப்படி ஒரு பெயர்?????

    ReplyDelete
  27. வாங்க சுமதி.

    அழகான கோவில். அருமையான வசதிகளோடு நல்லா இருக்கு.

    சாப்பாட்டில் குடிக்க இளநீர்கூட இருந்துச்சுங்க.

    ReplyDelete
  28. வாங்க மாதேவி.

    ஊம்.ஆங்..ன்னு முனகாமல் சாமி பெயரைச் சொல்லிக்கிட்டு ஏறி இருந்தா 108 தடவை ஜெபிச்ச புண்ணியமாவது கிடைச்சுருக்கும்:-)))))

    ReplyDelete
  29. வாங்க சுரேஷ்.

    இந்த சேப்பங்கிழங்கு இலையில் பருப்பு, மிளகாய் உப்பு எல்லாம் சேர்த்து அரைச்ச கலவையை தடவி சுருட்டி உருளையாச் செய்து நீராவியில் வேகவச்சு அதைத் துண்டுகளா ஸ்லைஸ் செய்ஞ்சு தவாவில் போட்டு வறுத்து எடுப்பாங்க. இது ஃபிஜியில் கொண்டாடும் பண்டிகைகள் எல்லாத்துக்கும் காமன் ஐட்டம்.

    பத்ரான்னே இதுக்குப் பெயர். இப்ப டின்களில் நியூஸியில் கூடக் கிடைக்குது.

    ReplyDelete
  30. வாங்க ஜெரி ஈசானந்தன்.

    இது முதல் நாள்தான். இன்னும் நாலு இருக்கு. கூடவே வந்து இன்னும் பக்தியில் மூழ்கணும் நீங்க!

    ReplyDelete
  31. வாங்க கோபி.

    அழகு அழகு அழகு.

    நன்றி. இனி நிதானமாப் படிக்கலாம்:-))))

    ReplyDelete
  32. வணக்கம், துளசி டீச்சர்

    உங்கள் பழய பதிவுகளை படித்து வருகிறேன் அனைத்தும் அருமை.
    கும்பகோணம் பதிவு படித்தவுடன் எனக்கு கும்பகோணம் சென்று வருவது போல் உள்ளது. அருமை
    எனது சொந்த ஊர் கும்பகோணம்.நான் தற்போது டெக்சாச் உள்ளேன்.(இது எனது முதல்
    தமிழ் பின்னுட்டம் தவறு இருந்தால்
    மன்னிக்கவும்)

    ReplyDelete
  33. Tulasi teacher said...
    ஆமாம். அது என்னங்க இப்படி ஒரு பெயர்?????

    அம்மனுக்காகவே ஆரம்பிக்க பட்ட தளம் . so ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் பெயர் மற்றும் படம்.
    மிக்க நன்றீங்க!

    ReplyDelete
  34. வாங்க சுமதி.

    வெல்கம். முதல் வரவா!!!! நலமா?

    ஆதரவுக்கு நன்றி.

    அஞ்சரை வருஷப்பதிவுகள் கிடங்கில் இருக்கு. நிதானமாப் படிங்க. அப்பப்ப ஒரு பின்னூட்டம் தட்டி விடுங்க.

    ReplyDelete
  35. ஆஹா.... விளக்கத்துக்கு நன்றிங்க ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோவில்!

    ReplyDelete