நவராத்திரி சீஸன். குறளகத்தில் பொம்மைக்கொலு ரொம்ப நல்லா இருக்குன்னுன்னு, நானும் என் அறைத்தோழியும் சாயங்காலம் போய்ப் பார்த்துட்டு, அப்படியே ஹோட்டல், ஷாப்பிங்ன்னு சுத்தியடிச்சுட்டு ஒம்போது மணி இருக்கும்போது விடுதிக்கு வந்தோம். வந்து ஒரு அரைமணி நேரம் கழிச்சு, வார்டன் கூப்புடறாங்கன்னு போனா, அந்தம்மா எங்க மாமா பேரைச் சொல்லி, அவரை உனக்குத் தெரியுமான்னு கேட்டாங்க. அடடா....வந்துட்டுப் போயிருக்கார் போல! எங்க மாமாதான்னதும், ஒரு தந்தியை எடுத்துக் கொடுத்தாங்க. ' ஃபாதர் எக்ஸ்பையர்டு. ஸ்டார்ட் இம்மீடியெட்லி'
எப்ப வந்துச்சுன்னா, சாயங்காலம் நாங்க கிளம்பிப்போன கொஞ்ச நேரத்துலே வந்துருக்கு. "நாங்க திரும்பிவந்து இவ்வளோ நேரமாச்சே, உங்க அறையைத் தாண்டித்தானே போனோம். நீங்களும் பார்த்துக்கிட்டுத்தானே இருந்தீங்க. அப்பவே சொல்லக்கூடாதா?"
" சொன்னா உனக்கு ஷாக் ஆயிருமேன்னுதான் உடனே சொல்லலை. வண்டி எப்ப இருக்குமுன்னு தெரியுமா? "
"ரயில் இந்நேரம் போயிருக்கும் பஸ் இருக்கான்னு தெரியலை."
இங்கே அங்கேன்னு போன்லே விசாரிச்சுத், தனியார் பஸ் கிடைக்குமுன்னு தெரிஞ்சு, டாக்ஸி பிடிச்சு எக்மோர்வரை வந்து ஏத்திவிட்டாங்க என் அறைத்தோழியும் வார்டனும். என்ன, எப்படின்னு ஒன்னும் விவரம் தெரியாமக் குழப்பமா வண்டியிலே போய்க்கிட்டு இருக்கேன். அப்பத்தான் நினைவுக்கு வருது, சித்தப்பாச்சித்திக்குத் தெரியுமா..... சொல்லாமக் கிளம்பிட்டேனேன்னு. எங்கேன்னு போய்ச் சொல்றது? இருந்த அவசரத்துலே, மாத்திக்கட்ட ஒரு புடவை, பை ன்னு ஒன்னுமே எடுக்காம, வெறும் கைப்பையோட போய்க்கிட்டு இருக்கேன். காலையில் ஆறரைக்குப் போய்ச் சேர்ந்துச்சு பஸ். அங்கே இருந்து இன்னொரு வண்டி புடிச்சு பைபாஸ் ரோடுலே இறங்குனப்ப ஒம்போதேமுக்கால். வீட்டுக்குப் போனா .......
சாகறதுக்குன்னே ஒவ்வொருத்தரா இங்கே வர்றீங்களா''ன்னு அக்கா அழறாங்க. நல்லாத் தூங்குற மாதிரியே அப்பா. புள்ளைங்க எங்கேன்னு கண்ணைச் சுழட்டிப் பார்த்தால்......பெரியவ மட்டும் உள்ளே வந்து அம்மாகிட்டே உக்காந்தாள். மாமா, வெளியே இருந்து, இங்கே வான்னு கூப்புட்டாரேன்னு போனால்..... 'அண்ணன் கிளம்பிருச்சா'ன்றார். யாருக்குத் தெரியும்?
முகமாவது கழுவலாமுன்னு கிணத்தடிக்குப் போனால்..... மதீனாக்கா என் கையைப் புடிச்சு அவுங்க வீட்டுக்கு இழுத்துக்கிட்டுப் போனாங்க. எப்பக் கிளம்புனேன்னு கேட்டு சூடா ஒரு டீ போட்டுக் கொடுத்தாங்க. இருந்த தலைவலி, கண் எரிச்சலுக்கு இதமா இருந்துச்சு. மதீனாக்கா மகன் ஓடிப்போய் தலைவலி மாத்திரை வாங்கியாந்து கொடுத்தான். திரும்ப வந்து அக்கா பக்கத்துலே உக்காந்துக்கிட்டேன். சித்திதான் பழைய திண்ணையில் சாஞ்சு உக்காந்துருந்தாங்க. உடம்பு சரியில்லையாம் . வயசாகுதுல்லே.....
அப்பா எப்படிப் போனாருன்னு அவுங்க சொன்னதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. நேத்துக் காலையில் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்குமுன்னு ஆப்பம் தேங்காய்ப்பால் செஞ்சு கொடுத்துருக்கு அக்கா. அவர் காலை ஆகாரத்தை முடிச்சுக்கிட்டுக் கடைவீதிவரை போயிட்டு வந்துருக்கார். (எல்லாம் சிகெரெட் வாங்கத்தான்) புதுவீட்டுலே தெருவைப் பார்த்து இருக்கும் அறையில்தான் அப்பாவுக்கு ஜன்னல்கிட்டே கட்டில். (ஜன்னலில் கை நீட்டிச் சிகெரெட் சாம்பலைத் தட்டறதுக்கு தோதா இருக்குமே) அப்பாவுக்குப் படிக்கும் பழக்கம் இருக்கு. மாமாதான் பள்ளிக்கூட நூலகத்தில் இருந்து புத்தகங்கள் நிறையக் கொண்டுவந்து கொடுப்பாராம். இப்ப மாமாதான் தலைமை ஆசிரியர். இவர் படிச்சுக்கிட்டே இருந்து அப்படியே தூங்கிட்டார். .
மத்தியானம் சாப்பாட்டுக்கு மாமா வந்துருக்கார். எப்பவும் மாமனாரும் மருமகனுமா ஒன்னா உக்காந்து சாப்புடுவாங்களாம். இன்னிக்கு மாமா வரும்போதே கொஞ்சம் நேரமாயிருச்சாம். பள்ளிக்கூடத்துலே ஒரு அவசர மீட்டிங். சீக்கிரம் சாப்புட்டுட்டு ஓடணுமுன்னு வந்துருக்கார். அப்பா அறையிலே எட்டிப் பார்த்தப்ப அவர் தூங்கறதைக் கவனிச்சுட்டு, இவர் மட்டும் தனியா உக்காந்து சாப்புட்டுட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பி இருக்கார். மணி ரெண்டு ஆகுதே. எழுப்பிச் சாப்புடச் சொல்லலாமுன்னு எட்டிப் பார்த்தப்ப அதே நிலையில் அப்பா. கண்ணுலே கண்ணாடி போட்டது போட்டபடி. புத்தகம் மார்மேலே விரிச்சபடிக் கிடந்துருக்கு இவர் போய், தொட்டு எழுப்புனா..... உடம்பு கொஞ்சம் சில்லுன்னு இருந்துருக்கு. உலுக்கிப் பார்த்துருக்கார். மூக்குக்கிட்டே கைவைச்சுப் பார்த்தா......ஊஹூம்........
அப்புறம் டாக்டருக்கு ஆள் அனுப்பி அவர்வந்து பார்த்து...... எல்லாம் முடிஞ்சுபோச்சு. புண்ணியவான், உறக்கத்துலேயே போயிட்டார்னு சொன்னாராம். எனக்கும் அண்ணனுக்கும் தந்தி கொடுத்துருக்கார். போனுலே கூப்புட்டுச் சொல்லி இருக்கலாமுல்லே?
சனிக்கிழமை. பள்ளிக்கூடம் லீவுன்றதாலே வாத்தியாருங்க எல்லாம் வந்து அங்கங்கே சின்னக் கூட்டமா நின்னு பேசிக்கிட்டு இருக்காங்க. அன்னு அண்ணன் வீட்டுலே சாப்பாட்டுக்கு என்னவோ ஏற்பாடு. புள்ளைங்களை அங்கே கூட்டிட்டுப்போய் சாப்புடவச்சாங்க. நேத்துச் சாயுங்காலத்துலே இருந்து அதுங்களும் பட்டினி.
இங்கே நேரமாகிட்டுப் போகுது. நாலுமணிக்கு எடுத்துறலாமுன்னு பேச்சு. அண்ணன் இன்னும் வரலை. போன் போட்டுச் சொல்லுங்கன்னா.... தபால் ஆபீஸ்க்கு அனுப்புன ஆள், அங்கே போன் ரிப்பேர். லைன் கிடைக்கலைன்னு வந்துட்டார். இந்தப் பக்க அறையிலே இருந்து அத்தையம்மா எந்திருச்சு வந்தாங்க. தளர்ச்சி இருந்தாலும், பார்வை கூர்மையா முந்திமாதிரியே இருக்கு. என்னைப் பார்த்து, வான்னு தலையை அசைச்சுட்டு, விடுவிடுன்னு நடந்து வெளியே போய் மாமாவைக் கூப்புட்டாங்க. நானும் எழுந்து போனேன்.
'தாய்க்குத்தான் தலைப்புள்ளை. தகப்பனுக்குக் கடைசிப் புள்ளை செய்யலாம். அதான் இவ வந்துருக்காளே. இவளை வச்சுச் சாங்கியம் இங்கே செஞ்சுட்டுக் கொள்ளியை நீயே வச்சுரு'ன்னாங்க. நாங்க பேசறதைப் பார்த்துட்டு அக்காவும் மெதுவா எழுந்து வந்துச்சு. அண்ணன் வரலைன்னதும் அதுக்கும் சேர்த்துக் கொஞ்சம் கண்ணீர் விட்டுட்டு, 'செய்யறதைச் செய்யுங்க'ன்னுட்டு வீட்டுக்குள்ளே போய் அப்பா தலைமாட்டுலே உக்காந்துக்கிச்சு.
மூணாகப்போகுது. நீ கிணத்தாண்டை போய் நில்லு. ரெண்டு வாளி சேந்தி ஊத்தறேன்னு அத்தையம்மா சொன்னதும் நான் கிணத்தாண்டை போறதுக்குத் திரும்பறேன்.......சின்னதா ஒரு பையைக் கையில் புடிச்சுக்கிட்டு அண்ணன்.
அப்பாடான்னு எனக்கு நிம்மதி. இவ எப்ப வந்தான்னு என்னைப் பார்த்து மொறைச்சதோ? அண்ணனைப் பார்த்துட்டு அக்கா, தலையில் அடிச்சுக்கிட்டு ஒரே அழுகை. பசங்க எல்லாம் பயந்துபோய் நின்னுக்கிட்டு வேடிக்கை பார்க்குதுங்க.
மளமளன்னு காரியங்கள் நடக்க ஆரம்பிச்சு, நாலரைக்கு எடுத்துட்டாங்க. வீட்டைக் கழுவித்தள்ள ஆரம்பிச்சதும், நானும் அக்காவுமா இந்தப் பக்கம்
திண்ணைக்கு வந்துட்டோம். என் கையைப் புடிச்சுக்கிட்டு கொஞ்சநேரம் சும்மா ஒன்னும் பேசாம இருந்துட்டு, 'நீ என்னத்துக்கு இப்படி அண்ணன் பேச்சை மீறி என்னென்னவோ செய்றே? என்னத்துக்குக் கண்காணாம இருந்தவரைப்போய் கூட்டிக்கிட்டு வந்தே? இப்பப் பாரு, இங்கே வந்து செத்துட்டார். இருக்கறது போதாதுன்னு இன்னும் பேச்சுக் கேக்கணுமுன்னு எனக்கு விதி. எல்லாம் உன்னாலவந்த வினை. சும்மா இருக்கமாட்டேங்கறே.... உன்னைவச்சுக்கிட்டுப் பட்டதெல்லாம் போதும். இன்னும் என்னென்ன செஞ்சு எங்களைக் கொல்லப்போறயோ?'
அக்கா முகமெல்லாம் எப்படியோ கருத்துப்போய், தலையெல்லாம் கலைஞ்சு, கண்ணெல்லாம் சிவந்து பார்க்க நல்லாவே இல்லை. பாவம். நேத்து இருந்து ஒன்னும் சாப்புட்டும் இருக்காது. தூக்கமும் இருந்துருக்காது. பாவம், இல்லே?
'பிள்ளை கையாலே கொள்ளீ வாங்கிக்க அவருக்கு நல்ல விதி இருந்துதானே இத்தனை வருசம் இல்லாம இப்பத் திடீர்னு வந்துசேர்ந்தார். அதுவும் எப்பேர்ப்பட்ட சாவு. கொடுத்துவச்சுருக்கணும்' னு சித்தி சொன்னாங்க.
'யார்கிட்டே அக்கா பேச்சுக் கேக்கும்? மாமியார் கிட்டேயா இல்லை மாமாகிட்டேயா?' அத்தையம்மா மட்டும் கிணத்தடியில் துவைக்கும் கல்லுமேலே உக்கார்ந்துக்கிட்டு எல்லாரையும் குளிக்க விரட்டிக்கிட்டு இருந்தாங்க. பெரிய அண்டாவுலே தண்ணி சேந்தி ஊத்திக்கிட்டு இருந்தாங்க ஒரு அம்மா. யாருன்னு எனக்குத் தெரியலை. புள்ளைங்க எல்லாம் சொம்புலே மொண்டு தலையிலே ஊத்திக்கிட்டு ஓடுச்சுங்க.
இதுக்குள்ளே ஆம்பளைங்க கூட்டம் திரும்பி வந்துட்டாங்க. அண்ணன் விடுவிடுன்னு கிணத்துக்கிட்டே போய் தானே நாலுவாளி தண்ணீர் சேந்தித் தலையில் ஊத்திக்கிச்சு. பையைக் கொண்டான்னதும் ராணி ஓடிப்போய்க் கொண்டுவந்து கொடுத்தாள்.
மாமாவைப் பார்த்ததும் அத்தையம்மா எழுந்து வந்தாங்க. 'இப்பவே திரும்பிப் போகறேன்றான்'னார். அதெப்படி? காரியம் முடியும்வரை இருக்கணுமுன்னாங்க அவுங்க. வந்தே இருக்கமாட்டேன். வரவே பிடிக்கலை. சித்தி வற்புத்தியதாலே வந்தேன். இவருக்கு இவ்வளோ செஞ்சதே அதிகம். என்னை வேற எதுக்கும் எதிர்பார்க்காதீங்க'ன்னு சொல்லிட்டாராம் அண்ணன்.
இதுக்குள்ளே அண்ணன் உடுப்பு மாத்திக்கிட்டு வந்தவர், அக்காகிட்டே வந்து போயிட்டுவரேன்னு சொல்லிட்டு நடந்தார். சாவு வீட்டுலேச் சொல்லிட்டுப் போகக்கூடாதுன்னாங்க அத்தையம்மா. தலையைத் திருப்பிப் பார்த்து 'தெரியும்'னு சொல்லிட்டு அண்ணன் போயிட்டார்.
அண்ணன் அங்கிருந்த மூணு மணி நேரத்துலே என்னை ஏறிட்டுக்கூடப் பார்க்கலை.
அக்காவைக் குளிக்கச் சொல்லிச் சித்தி கூட்டிட்டுப் போனாங்க. சின்னத் தள்ளாட்டத்தோட அக்கா, குளியலறைக்குள்ளே நுழையறதைப் பார்த்தப்ப எனக்கு மனசு என்னவோ போல வெறுமையா இருந்துச்சு. சாவு வீட்டுலேதான் சொல்லிட்டுப் போக வேணாமேன்னு ..................... நானும் கிளம்பிட்டேன்.
இதுதான் அக்காவை நான் கடைசியாப் பார்த்தது.
இனி தொடராது.............என் உரை:வர்ற வழியில் எல்லாம் என்னாலேதான் எல்லாருக்கும் தொந்திரவு. நான் பிறந்தே இருக்க வேணாம் அழுகையா வந்துச்சு. பஸ்ஸுலே ஏறிக் கொஞ்ச நேரம் ஆனபிறகுதான் முன்னாலே ட்ரைவருக்கு இடதுபக்கம் இருக்கும் ஸீட்டுலே, அண்ணன் தலையை ஜன்னல் கம்பியிலே சாய்ச்சுக்கிட்டுக் கண்ணை மூடி உக்கார்ந்து இருந்ததைக் கவனிச்சேன். சே..... தெரிஞ்சுருந்தா வேற வண்டியில் ஏறி இருக்கலாம்.
கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் பாராமல் வேற பக்கம் வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்தேன். என்னையும் மீறி அப்பப்பக் கண்ணு அங்கே போய்க்கிட்டு இருந்துச்சு. இன்னும் அதே தூக்கம்? எனக்குத்தான் துக்கமாத் தொண்டை அடைப்பு. சின்னப் புள்ளையா இருந்தப்ப எவ்வளவு அன்பா சிநேகமா இருந்தோம். அதெல்லாம் எங்கே போச்சு? 'தான் ஆடாட்டாலும் தன் சதை ஆடும்' னு ரத்த உறவுகளுக்குப் பழமொழியெல்லாம் சொல்லிவச்சுருக்கே அதெல்லாம் நெசந்தானா? உறவு, பாசம், சொந்தம் இப்படியான சொற்களுக்கெல்லாம் பொருளே இல்லாத ஒரு பெருவெளியில் நான் அப்படியே மிதந்து போறேனோ?
மெட்ராஸுக்கு ரயில் புடிக்க ஸ்டேஷனுக்குள்ளே போனப்பவும் அண்ணன் டிக்கெட்டு கவுண்ட்டர்கிட்டே நின்னுகிட்டு இருந்தார். அதே ரயிலுக்குத்தானே நானும் போகணும். அவர் நகர்ந்து போகட்டுமுன்னு இருந்துட்டு நானும் போய் டிக்கெட்டு வாங்கிக்கிட்டு வண்டி வந்ததும் லேடீஸ் பெட்டியிலே ஏறிட்டேன். அதுக்குப்பிறகு அவரையும் நான் பார்க்கவே இல்லை.
உண்மைக்கதைகளை எழுதும்போது மகிழ்ச்சியான முடிவுகள் பெரும்பாலும் வர்றதில்லை. இந்த முடிவு பிடிக்காதவங்களுக்காக ஒரு
கற்பனை முடிவையும் வச்சுக்கலாமா?
அழுவாச்சிக் காவியங்கள் பிடிக்காதவங்க...கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம். இதோ......இது உங்களுக்காகவே.அப்பாவின் எரியூட்டலுக்குப் பிறகு அண்ணனும் மாமாவும் சேர்ந்துவந்து திண்ணைகிட்டே நின்னாங்க. கோவமா இருந்த அண்ணனுக்கு மாமாவும் அக்காவும் சமாதானம் செஞ்சு, என்னையும் ரெண்டு திட்டுத் திட்டி அண்ணன்கூடச் சமாதானமாப் போகச் சொன்னாங்க. அன்னிக்கு மாலையே கிளம்பி நானும் அண்ணனுமா மெட்ராஸ் வந்தோம். வழியெல்லாம் சின்ன வயசுலே நானும் அண்ணனும் செஞ்ச குறும்புகளையெல்லாம் ஒவ்வொன்னா நினைச்சு நினைச்சுப் பேசிக்கிட்டு இருந்தோம். நடுவில் எதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்னப்ப, அண்ணன் போய் சாப்பிட என்னவோ வாங்கிவந்தார். இருந்த கொலைப்பசியில் என்னன்னு தெரியாமலேயே முழுங்கி வச்சேன். 24 மணி நேரம் ஆகி இருந்துச்சு நான் கடைசியாச் சாப்புட்டு. அண்ணனும் அதேதானாம்.
மறுநாள் காலையில் செண்ட்ரல் வந்து இறங்குனோம். வாராவாரம் வீட்டுக்கு வரணுமுன்னு கண்டிப்பாச் சொல்லிட்டுச் சிரிச்சார். நானும் வராம எங்கே போறதுன்னு முணுமுணுத்துட்டு விடுதிக்குப் பஸ் பிடிக்கப் போயிட்டேன். அவரும் பாட்டி வீட்டுக்குப் போகும் பாசெஞ்சர் வண்டிக்கு போயிருப்பார்,
வாராவாரம் ஞாயித்துக்கிழமை அண்ணனைப் பார்க்கப் போகும் வழக்கம் வந்துச்சு. சித்தியும் சொன்னாங்க அண்ணனுக்குக் கலியாணம் செஞ்சு வச்சுறலாமுன்னு. ஒரு நல்ல இடத்துலே பொண்ணு அமைஞ்சது. கலியாணம் ஜோரா நடந்துச்சு. அக்கா, மாமா குழந்தைங்க எல்லோரும் வந்துருந்தாங்க. பொண்ணு வீடு காஞ்சீபுரம். எங்களுக்கெல்லாம் நல்ல பட்டுப்புடவைகள் எடுத்துக் கொடுத்தார் அண்ணன். அதுக்குப்பிறகு அண்ணனுக்குன்னு தனியா வீடு வாடகைக்குப் பார்த்து அண்ணனும் அண்ணியும் புதுக்குடித்தனத்தை ஆரம்பிச்சாங்க.
அண்ணிக்கு என் மேலே உயிர். ரொம்ப நட்பாப் பழகுனாங்க. எனக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டாப் பொறுப்பு விட்டுச்சு அண்ணன் நினைச்சார். கோபாலுக்கும் எனக்கும் திருமணம் ரொம்ப விமரிசையா நடந்துச்சு. பெரியக்கா குடும்பம் முழுசும் அத்தையம்மா, சித்தி எல்லோரும் வந்துருந்தாங்க. சித்தப்பாச்சித்தியும் வரணுமுன்னு அண்ணன்கிட்டே தயங்கித் தயங்கிக் கேட்டதுக்கு , சரின்னு அண்ணன் தலையாட்டுனார். அண்ணி வந்தபிறகு அண்ணன் கொஞ்சம் மாறித்தான் இருக்கார். பழைய மென்மையான சுபாவம் வந்துருக்கு. அண்ணியும் இப்போ கர்ப்பமா இருக்காங்க.
பெண் குழந்தை பிறந்துச்சு அண்ணிக்கு. நாங்க எல்லாரும் காஞ்சீபுரம் போனோம். குழந்தை அச்சு அசல் எங்க அம்மாவைப்போலவே இருந்தாள்.
போதுமா? இப்படிச் சொல்லிக்கிட்டேப் போகலாம். எல்லை ஏது?அக்காவின் கூடவே வந்து வாசிச்சுப், பின்னூட்டி ஆதரவு கொடுத்த அன்புள்ளங்களுக்கு நன்றி.