' கோமள்' என்று காதில் சொன்னதும் சிரித்தது குழந்தை. எல்லாரையும் மனம் பதைபதைக்க வைத்துவிட்டாள் இந்தச் சின்னக்குட்டி. லலிதாவுக்கே நம்பிக்கையில்லை, இந்த முறை எல்லாம் முடிந்தது என்று நினைத்தாளாம்.
தீபக் பரவாயில்லை. கஸ்தூரியிடம் வளர்வான். ஆனந்த் தான் பாவம். ஆனாலும் பாட்டியின் செல்லமாச்சே.' நல்லவேளை !!!அவள் கற்பனைகள் எல்லாம் நொறுங்கியது.
தீபக் பரவாயில்லை. கஸ்தூரியிடம் வளர்வான். ஆனந்த் தான் பாவம். ஆனாலும் பாட்டியின் செல்லமாச்சே.' நல்லவேளை !!!அவள் கற்பனைகள் எல்லாம் நொறுங்கியது.
அம்மாவின் பெயரை வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்று சிரித்தாள் கஸ்தூரி. கோமளவல்லிதான் இப்ப 'இங்கே' வந்து பிறந்துவிட்டாளாம்!
'அப்போ நம்ம குழந்தைக்கு அப்பா பெயரா? ' அப்பாவியாகக் கேட்டான் ஆகாஷ். 'அய்யோ வேண்டவே வேண்டாம். அப்பா..............' பதறினாள் கஸ்தூரி.
'சட் சட்' என்று நொடியில் மாறும் அவள் முகபாவம் ஆகாஷுக்கு எப்போதும் வியப்புதான்...
எத்தனை களங்கமில்லாத வெள்ளை மனசு. இவளுக்கு நல்ல காலம் வரட்டும் என்று மனதில் வாழ்த்தினார் மா ஜி.
* * * *
"வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு."
பிதா ஜி சொல்லிக்கொண்டு வந்தார், ஹரியும் அவருமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில்.
"அதுதான் என்ன செய்வதென்றே தெரியவில்லை பிதா ஜி. கனகாவின் பிடிவாதம் கொஞ்சமும் குறையவில்லை. தூக்கத்தில் கூட ஊருக்குப் போகணும் என்று புலம்பல். எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கிறது. அவர்கள் வீட்டில் இருந்து யாராவது வந்து கூட்டிப்போனால் நல்லது. என்னால் கண்டிப்பாகப் போகவே முடியாது. அதுவும் உங்களை இந்த நிலமையில்.........."
'அதான் சொல்கிறேன், வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு'. இடைமறித்தார்.
" இதோபார் ஹரி. அப்பா சொன்னதையெல்லாம் புரிந்துகொண்டாயா? எல்லாம் நடக்கும்விதமாக நடக்கும். நம் கையிலா இருக்கிறது? நீயே கனகாவைக் கூட்டிக்கொண்டு ஊருக்குப்போய் வா. ஆமாம். இப்போது நீ மட்டுமா? உன்னை நம்பி இரண்டு உயிர்கள்..... "
"இல்லை மா ஜி. அது வந்து........."
"ஊஹூம்... ஒன்றும் பேசாதே. அவள் மனசு ரொம்ப பலஹீனப்பட்டு இருக்கிறது. அவளிஷ்டம்போல் விட்டுப் பிடிக்கவேண்டும்தான். எங்களைப்பற்றிக் கவலைப்படாதே.....அதெல்லாம் கஸ்தூரியும் ஆகாஷும் இருக்கிறார்கள். நீங்கள் திரும்பிவரும்வரை அவர்கள் இங்கேயே இருந்துகொள்ளட்டும் என்று ஆகாஷின் அம்மா சொல்கிறார். "
பிரேந்திரரின் வியாபாரம் நல்லபடியாக நடக்கிறதாம். அவனுக்கும் அவ்வளவாக ஓடியாட வேண்டாமாம். அவனே அப்பாவைத் தேவைப்படும்போது மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன் என்கிறான். அதான் .பட்பட்' இருக்கிறதே...
பிரேந்தர் 'பட்பட்' வாங்கியது முதல் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். அவன் வேலையில் இருந்து வந்ததும் இரவு எத்தனை நேரமானாலும் கூட அதில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தால்தான் தீபக்கும் ஆனந்தும் தூங்குவார்கள். இந்த 'பட்பட்' ஆனந்த் வைத்த பெயர்தான், அப்பாவின் மோட்டார் சைக்கிளுக்கு.
'ரெண்டு மருமகன்களும் தாங்கும்போது எனெக்கென்ன மனக்கவலை' என்று உரக்கச் சிரித்தார் பிதாஜி.
சட்டென்று மா ஜியின் மனம் பிஜ்யாவிடம் போனது. ஹூம்....மூன்று மருமகன்கள் தாங்குகிறார்கள் என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லை.
பாவம் பிஜ்யா எப்படி இருக்கிறாளோ? ஹரி போய்வந்தும் ஏழெட்டு மாசம் ஆகிறதே. அவன் ஊருக்குப் போவதற்குள் ஒரு முறை பிஜ்யாவைப் பார்த்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும்................
பாவம் பிஜ்யா எப்படி இருக்கிறாளோ? ஹரி போய்வந்தும் ஏழெட்டு மாசம் ஆகிறதே. அவன் ஊருக்குப் போவதற்குள் ஒரு முறை பிஜ்யாவைப் பார்த்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும்................
நினைத்தவுடன் கிளம்ப முடியுமா விவசாயி? ஒவ்வொன்றாக குறுக்கீடுகள் வந்து கொண்டிருந்தன.
ஊருக்குப்போகப் போகின்றோம் என்ற எண்ணமே ஆனந்தமாக இருந்தது கனகாவுக்கு. பிள்ளைத்தாய்ச்சி என்று பார்த்துப்பார்த்து உதவி செய்தாள் கஸ்தூரி.
'ஒரு பத்துநாள் போதும்தானே?' யதார்த்தமாகக் கேட்டான் ஹரி. 'அதெப்படி? குழந்தை பிறக்கும்வரை இருக்க மாட்டீர்களா?' என்றாள் கனகா. இது ஏதடா வம்பாய்ப் போச்சு.....அதற்குத்தான் நிறைய நாட்கள் இருக்கிறதே......
மா ஜியுடன் ஆலோசித்தபோது, 'அவள் சொல்வதற்கு சரி என்று சொல். அப்புறம் பார்க்கலாம். அங்கே போனவுடன் தாய்தகப்பனைப் பார்த்தவுடன் எண்ணம் மாறிவிடும். பத்து நாட்கள் எல்லாம் போதாதுதான்.'அவ்வளவு தூரம் போய் அவளை விட்டுவிட்டு உடனே வர முடியுமா? ஒரு மாதம்வரை இருந்துவிட்டு வாயேன். உனக்கும்தான் இங்கே ஓய்வே கிடைப்பதில்லை' என்றார்.
"உங்களுக்குப் புரியாது மா ஜி. அங்கே நான் எங்கே போயிருப்பேன்? அப்பாவும் ஊரில் இருப்பதே இல்லை. இருந்தாலும் அவருடைய இடம் என்று ஒன்றுமில்லாமல் இங்கே அங்கே என்று சுற்றிக்கொண்டிருப்பார். உறவினர்கள் வீட்டில் போய் இருப்பதும் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. கனகா வீட்டின் கதையே வேற. ஒன்றும் செய்யாமல் அங்கே அடைபட்டு இருக்கவும் முடிவதில்லை. எனக்கு இங்கே, இந்த வீட்டைவிட்டால் வேறு எங்கும் என்னால் இயல்பாக இருக்க முடிவதில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகத் திரும்புவேன்."
இதோ அதோ என்று சிலமாதங்கள் ஓடிவிட்டன. ஏழாம் மாதம் முடிவதற்குள்ளாவது கிளம்ப வேண்டும் என்று லலிதா சொல்லிக்கொண்டிருந்தாள். நெடும்தூரம் பயணம் அல்லவா? நாளை மறுநாள் நல்லநாளாம். மூட்டைக்கட்டும் வேலை ஆரம்பமானது. கஸ்தூரிதான் சின்னச்சின்ன அன்பளிப்புகளைக் கொண்டுவந்தவண்ணம் இருந்தாள்.
* * * *
இடிபோல் வந்த சேதி கேட்டு போட்டது போட்டபடி கிளம்பி ஓடினார்கள் ஹரியும் ஆகாஷும் 'அடிப்பாவி' என்று கதறிக்கொண்டே இருந்தார் மா ஜி. கண்ணீருடன் லலிதாவும் கஸ்தூரியும். வெறித்தபார்வையுடன் செய்வதறியாது விக்கித்து உட்கார்ந்திருந்தார் பிதாஜி. வீட்டின் சூழ்நிலையும், சேதியின் பயங்கரமும்............... இதுவரை பார்க்காத நாத்தனாரை நினைத்து அழத்தான் முடிந்தது கனகாவால்.
வீட்டில் ஆட்கள் இருக்கும் அரவமே இல்லையே என்று பயந்தபடி வெளிப்புறக் கதவில் கை வைத்தான் ஹரி. அவ்வளவுதான் அடங்கிக் கிடந்த அலைஓசைபோல் இரைச்சல். ஆளாளுக்கு என்னமோ சொல்லிக் கத்தினார்கள்.
கோபத்தீ கொளுந்துவிட்டு எரிந்தது. சம்பந்தி சொன்னதைக் கேட்டு ஹரிக்கு நெஞ்சை அடைத்தது.
பிஜ்யா தற்கொலை செய்து கொண்டாளாம், மூன்று நாட்களுக்கு முன் பெய்த பேய்மழையில் நிறைந்திருந்த கிணற்றில் விழுந்து. மறுநாள் கிணற்றில் தண்ணீர் கொண்டுவரப்போன மூத்த மருமகள் அலறியடித்துகொண்டு ஓடிவந்து சொல்லி இருக்கிறாள்.
போலீஸ் அது இது என்று ஏகப்பட்ட அமர்க்களமாம். நியமங்கள் முடிந்தபின் அதிகநேரம் ஊறிவிட்ட நிலையில் அழுக ஆரம்பித்திருந்ததைச் சட்டுப்புட்டென்று எரித்தானதாம்.
அவள் கணவன் எங்கே இருந்தானாம்? வீட்டில்தானாம். ஆனால் அளவுக்கு மீறின குடிபோதையில்.
குடும்ப கௌரவம் கெட்டுப்போனது உன் தங்கையால்தான் என்று சம்பந்தியம்மா ஒரு பாட்டம் திட்டிவிட்டு ஓயும்வரை ஹரி மௌனமாக அழுத கண்ணுடன் நின்றிருக்கிறான். எல்லாவற்றுக்கும் சாட்சியாக நின்றிருந்த ஆகாஷ்தான் இனி இருந்து என்ன பயன்? கிளம்பலாம்'' என்று சொன்னானாம். கூடவே குழந்தை எங்கே என்று கேட்டிருக்கிறான்.
அதுவரை தன்னிலை மறந்த ஹரிக்கும் குழந்தையின் நினைவு வந்திருக்கிறது. துணியில் சுருட்டிய ஒரு சிசுவைக் கொண்டுவந்து நீட்டியிருக்கிறார்கள். அப்போதுதான் தெரியும் அவளுக்கு ரெண்டாவது குழந்தை பிறந்துள்ளது என்று. திகைத்து நின்றானாம். மூன்று வாரங்கள் ஆன பெண்குழந்தை. அச்சு அசலாக அம்மாவின் ஜாடை. பெரியவனுக்கு ஒன்னேகால் வயது. என்ன ஏது என்று அறியாத நிலையில் மலங்க மலங்க நின்றிருக்கிறான்.
'குழந்தைகளைக் கொண்டு போகவா?' என்று ஆகாஷ் கேட்டதற்கு, 'சனியன்களை என் கண் முன்னால் இனி கொண்டுவராதே. போய்த்தொலை' என்று கத்தினானாம் ஜீத்.
வயிறு நிறைந்ததும், மா ஜியின் மடியில் கண்மூடிப் படுத்திருந்தது அந்த இளந்தளிர். ஆகாஷின் தோளில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு பெரியவன். நேற்றுப் பார்த்ததில் இருந்து அப்படியே ஒட்டிக் கொண்டு விட்டான்.
"ஆமாம். குழந்தைகளின் பெயர்கள் என்னவாம்?"
மா ஜியின் கேள்விக்குப் பதில் தெரியாமல் விழித்தனர் மாமனும் சிற்றப்பனும். அங்கே இருந்த அமர்க்களத்தில் இதையெல்லாம் கேட்கத் தோணவே இல்லையே. சம்பந்தியம்மாவின் மிரட்டும் கண்களில் இருந்து தப்பினால் ஆயிற்று என்றுதானே ஓடிவந்தார்கள்.
'இப்படிக் கொடு' என்று குழந்தையைத் தன் கையில் ஏந்திய பிதா ஜி, ' எவ்வளவு அமைதியாகத் தூங்குகிறாள் பார். இவளுடைய அம்மாவின் ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கட்டும். இவளுக்கு ஷாந்தி என்றே பெயர் வைக்கலாம்' என்றபடி, 'கஸ்தூரி இங்கே வா' என்றழைத்தார்.
"இந்தா உன் குழந்தை"
துக்கம்தாங்க முடியாமல் வந்த பெரும் விம்மலோடு குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்ட மனைவியைப் பெருமிதத்தோடு பார்த்தான் ஆகாஷ்.
பெரியவன் கிருஷ்ண விக்கிரகம் மாதிரி இருக்கின்றானே. அவன் கிருஷ்ணனாக இருக்கட்டும். கிஷன். கிஷன். அங்கே விளையாடிக் கொண்டிருந்த லலிதாவின் குழந்தைகள் ஓடிவந்து நான் தீபக், நான் ஆனந்த்
இவன் கிஷன்'' என்று கைகொட்டி மகிழ்ந்தனர். குழந்தை உலகம்தான் எவ்வளவு ஆனந்தமானது.
இவ்வளவு அமர்க்களத்தையும் பார்த்து விதிர்விதிர்த்திருந்த கனகா, பயணத்தைக் கொஞ்சநாள் தள்ளிப்போடலாம் என்றுதான் சொன்னாள். ஆனால் ஹரிக்கு மன நிம்மதி?. பிஞ்சுகளின் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம், 'என்னைப் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டாய்' என்று விஜயா குற்றம் கூறிப் புலம்பியது மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
'இல்லை. நாம் முன்பு முடிவு செய்த நாளிலேயே கிளம்பலாம்' என்று சொல்லிவிட்டான்.
சாமான்களைச் சுமந்து கொண்டு இவர்களை வண்டியேற்றிவிட டவுன் வரை வந்த ஆகாஷிடம், 'மாஜி யையும் பிதாஜியையும் நன்றாகப் பார்த்துக்கொள். இனி அந்த வீட்டுக்கு மகனே நீதான். மருமகன் இல்லை' என்றான்.
பயணம் முழுவதும் எதேதோ யோசனையில் மூழ்கி இருந்தவன், திடுமென்று 'மத்ராஸில் ஒரு வேலை கிடைத்தால் பேசாமல் அங்கேயே இருந்துவிடலாம்' என்றதை நம்ப முடியாமல் 'நெஜமாவா சொல்றீங்க? வேலைக்கென்ன...எங்க அப்பாருகிட்டே சொன்னால் ஹார்பரில் வேலை கிடைச்சுட்டுப் போகுது' என்றாள் கனகா முகம் மலர..

இனி அவர்கள் வாழ்க்கைப் பயணம் எப்படியோ.................
அதெல்லாம் சமாளித்துக் கொள்வார்கள். நாம் நம்ம வேலைகளைப் பார்க்கலாம்.
************* ******************** *****************
பின்னுரையான என்னுரை:
உண்மைக்கும் சொன்னால் பின்னுரை வேணுமான்னே தெரியலை.
இது கதையோ, நாவலோ, நெடுங்கதையோ என்னவோ ஒன்று.
வகைப்படுத்தலிலும் இது என்னன்னு தெரியாம ஒரு குழப்பம் எனக்கு இருந்ததால் அப்படியே பொதுவானவைன்னு போட்டு வச்சேன்.
நெடும் பயணமுன்னு வச்சால் ஹரி இதுவரை மூணோ நாலோ முறைதான் பயணப்பட்டான். அதனால்தான் இதை மூணு பகுதிகளில் முடிக்கப் பார்க்கிறேன் என்று சொல்லிவச்சேன்.
கதையை ஆரம்பிச்சு வச்சாமட்டும் போதும். அது தானே தன்னை எழுதிக்குமுன்னு முந்தி எப்பவோ படிச்ச ஞாபகம். அது நெசந்தான் போல. அப்படியே ஆச்சு.
பிதாஜி சொன்ன 'வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு' ஹரிக்கு மட்டுமில்லை நமக்குகூடத்தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க என்ன சொல்றிங்க?
கதையை எங்கியாவது முடிக்கணுமுன்னுதான் இங்கே முடிச்சேன். கதாபாத்திரங்கள் அவுங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை முழுசுமா வாழ்ந்து முடிக்கட்டும்.
முக்கிய சிலரின் வாழ்வு எப்படின்னு கொஞ்சூண்டு கோடி காட்டிறட்டா?
தேவா: எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் மத்ராஸ் வந்து மூத்த தம்பி வீட்டுத் திண்ணையில் மயங்கிக்கிடந்தார். மருத்துவமனையில் சேர்த்த மூன்றாம் நாள் போய்ச்சேர்ந்தார். கான்ஸர். அப்ப...தங்கம்? ம்ம்ம்ம்ம்ம். அப்படியெல்லாம் கிடைச்சுட்டா இப்ப இந்த விலை விக்குமா?
பிதா ஜி: சில வருடங்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சக்கரை வியாதியும் இரத்த அழுத்தமும். ஒரு நாள் தூக்கத்தில் மாரடைப்பு.
மா ஜி: பேரன் பேத்திகளுடன் நாட்களைச் செலவிடுகிறார். மகள் பொன்போலப் பார்த்துக் கொள்கிறாளாம்.
கஸ்தூரி: ஓட்டமும் துள்ளலும் வெகுவாகக் குறைந்துவிட்டது. ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாச்சே. (ஆமாம். இன்னொரு மா ஜி உருவாகின்றாள்)
ஆகாஷ்: ரெண்டு அன்னையருக்கு மகன்! ஓயாத உழைப்பால் பொருட்செல்வம் பலமடங்காகிவிட்டது. அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறானாம். அவனை உதாசீனப்படுத்திய பிஜ்யாவின் மக்களுக்குப் பாசமுள்ள தந்தை.
லலிதா & பிரேந்திரர் தம்பதிகளுக்கு நாலாவதாக இன்னொரு பெண். பெயர் சோனா. வியாபாரம் கொழிக்கிறதாம்.
ஹரி & கனகா தம்பதியருக்குப் பெண் குழந்தை. . பக்கத்தில் இட்டிலி விற்கும் ஆயா வீடு காலியானதும் அங்கே தொத்தாவின் சொற்படித் தனிக்குடித்தனம்.
ஹரி, அம்பத்தூரில் தன் உறவினர்கள் யாரையும் சென்று சந்திக்கவே இல்லை. எங்கே விஜயாவைப் பற்றிச் சொல்லவேண்டி இருக்குமோ என்ற பயம். அவர்களைப் பொறுத்தவரை அவனும் தங்கைகளும் பஞ்சாபில் இருக்கின்றார்கள்.
ஆமாம்.............. அவனுக்கு வேலை கிடைத்ததா?
கிடைக்காமல் என்ன? உழைப்புக்கு அஞ்சுபவனா அவன்? ஹார்பரில் கூலியாக மூட்டை தூக்குகின்றானாம்.
இதுவரை கூடவே பயணித்த வாசக நண்பர்களுக்கு நன்றி.
வணக்கம்.







