Wednesday, August 16, 2006

நானா.........என்னையா?



இங்கே பாரு கண்ணா, அம்மா உன்னை இன்னிக்குக் கட்டிப்போடப் போறேன்.


ஏம்மா? நானென்ன செஞ்சேன்? நான் நல்ல பிள்ளைதானேம்மா.

ஆமாண்டாச் செல்லம். ஆனா ஊர் முழுசும் உம் மேலே குற்றஞ் சொல்லுதே,நீ எல்லார் வீட்டிலேயும் போய் வெண்ணெய் திருடித் திங்கறேன்னு.


ஏம்மா.... நான் ச்சின்னப் பையந்தானே? நீங்கெல்லாம் வெண்ணெயை உறிமேலே எடுத்து வச்சுடறீங்களே. அது எனக்கு எப்படிம்மா எட்டும்? நான் உன் இடுப்பு உயரம்கூட இல்லையேம்மா?


நீதான் ஊர்ப்புள்ளைங்க அத்தனைபேரையும் கூட்டிக்கிட்டுப் போய் அழிச்சாட்டியம் செய்யறேன்னு அந்தப் புள்ளைகளொட அம்மாக்களும் தினமும் வந்து வீட்டுவாசலில் நின்னு கத்திட்டுப் போறதைப் பார்க்கலையா நீ?



அதுக்கெல்லாம் எனக்கு நேரம் ஏதும்மா? காலையிலே இருந்து சாயந்திரம் வரைக்கும் இந்த மாடுகளையெல்லாம் மேய்ச்சுட்டு வர்றப்பயே எனக்குக் களைப்பாப் போயிருது. வீட்டுக்கு எப்படாப் போவோம்,கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாமுன்னு இருக்கேம்மா.


அப்ப நீ வெண்ணையைத் திங்கவே இல்லையா?


ஊஹூம்........... இல்லைம்மா.


ஓஹோ ......... அப்படியா? அப்ப உன் கன்னத்துலே ஈஷியிருக்கே வெள்ளையா அது என்னவாம்?


பாலகிருஷ்ணனின் கதைகளைக் கேக்கறப்ப நமக்கே மனசெல்லாம் சந்தோஷம் வந்து நிறைஞ்சிரும்.எத்தனைமுறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத சம்பவங்கள்.


அனூப் ஜலோதான்னு ஒரு புகழ்பெற்ற பாடகர் இருக்காரே, அவரோட பாட்டு ஒண்ணு இந்த பாலகிருஷ்ணனின் வெண்ணைய் சம்பவத்தைச் சொல்லும். ' மே நஹீன் மாக்கன் காயோ' இதுக்கு 'நான் வெண்ணெய் தின்னவே இல்லை'ன்னு அர்த்தம். கேக்கக்கேக்கத் தெவிட்டாத பாடல்.


கண்ணன் குழந்தைகளின் கடவுள். குறும்பு நிறைஞ்ச அந்தக் குழந்தைப் பருவத்தை மீண்டும் அனுபவிக்க நமக்கெல்லாம் ஒரு வாய்ப்புக் கிடைச்சால் எவ்வளோ ஜோரா இருக்கும்?நடக்கிற காரியமா.........ஹூம். ஆனா, மானசீகமா அனுபவிச்சுப் பார்க்கலாம்தானே?


இன்னிக்குக் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி. எல்லோரும் கள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளத்தோடு ஒருநாள் இருந்து பார்க்கலாமா?


அனைவருக்கும் பண்டிகைக் கால வாழ்த்து(க்)கள்.

39 comments:

  1. என்ன தவம் செய்தனை! யசோதா!
    என்ன தவம் செய்தனை!

    இப்போது தான் என் மகளுடன் சேர்ந்து கீஷ்டுபாப்பாவின் ஹாப்பி பேர்த் டேவை சுண்டலுடன் கொண்டாடி முடித்தோம். (பாபா... கீஷ்டுபாப்பாவுக்கு கேக் வேணாமா? இல்லைம்மா. கீஷ்டுபாப்பாவுக்கு எக் பிடிக்காது; கேக்குல எக் இருக்குல்ல அதனால சுண்டல் தான் பிடிக்கும் கீஷ்டுபாப்பாவுக்கு. எனக்கும் பாபாவுக்கும் அம்பாவுக்கும் எக் பிடிக்கும்; கேக் பிடிக்கும். இல்லியா பாபா. ஆமாம்மா. - எனக்கும் என் மகளுக்கும் சௌராஷ்ட்ரத்தில் நடந்த உரையாடலை முடிந்த வரை மொழிபெயர்க்காமல் கொடுத்திருக்கிறேன்). :-)

    அருமையாக மிக அழகான படம் அக்கா. கண்ணனின் பாவம் அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  2. குமரன் தம்பி,

    சுண்டல் மட்டும்தானா? வடை இல்லையா? :-))))

    கண்ணன் குழந்தைக் கடவுள். அதனால்தான் எல்லோருக்கும் பிடிக்குது.

    முகபாவம் மனசுலே அப்படியே இடம் பிடிச்சிதனால் சமீபத்துலே வாங்கிவந்த படம்.

    மகளுக்கு எங்கள் ஆசிகள்.

    ReplyDelete
  3. தெவிட்டாதது தான்.
    ஆனா எங்கங்க சீடை முருக்கெல்லாம்?
    ஒரு படத்தையாவது பார்த்து தேத்திக்கலாமுனு பார்த்தேன்.
    எங்க வீட்டு அம்மணி எடுத்த படம் எந்த வட்டில் கிடக்கோ??
    I don't Know why it shows as square boxes here.Its happening only in your command box.Pl check.
    I am not sure is it your side or mine.

    ReplyDelete
  4. வெண்ணை உண்ட கண்ணன் அன்று
    அன்னை அவளிடம் "இல்லை" என்றான்!

    "உன்னை நம்பி ஊழியம் இல்லை
    என்னை ஏமாற்றும் திறனும் வேண்டா
    எங்கே உந்தன் வாயைக் கொஞ்சம்
    நன்கே சற்று விரித்துக் காட்டென
    அன்னையவளும் அதட்டும் வேளையில்,

    "இன்னே பிறவும் உலகம் காண் பார்!" என
    கண்ணன் அவனும் அகல விரித்தான்!
    அன்னே! அத்தனை உலகும் தெரிந்தம்மா!

    என்னே! இவன் புகழ்! என்னே! இவன் புகழெனவே
    அன்னையும் மகிழ்ந்து போற்றி வணங்கினாள்!

    பின்னே அவன் பெயர் சொல்லியே நாமும்
    மன்னுபிறவியும் தொலைத்திடுவோமே!

    கண்ணன் அவன் புகழ் சொல்லவும் போமோ!
    கண்ணன் என்றும் நம்மைக் காப்பான்!

    ReplyDelete
  5. சரியாகிவிட்டது
    ஏதோ எழுத்துரு பிரச்சனை.

    ReplyDelete
  6. வாங்க குமார்.

    சீடை முறுக்கெல்லாம் போன வருசத்தோட நிறுத்திக்கணுமுன்னு
    'கண்ணன்' உத்தரவாயிருக்கு.

    சுண்டலும் அவலும் பழங்களும் தயிரும்தான் நிவேதனம்.

    ReplyDelete
  7. SK,

    வாங்க வங்க. நலமா?
    கவிதை அழகா இருக்கு.

    மனசுக்கு ரொம்ப சந்தோஷம்.

    சாயுங்காலம் கோவிலுக்குப் போகணும். நல்ல கொண்டாட்டம் இருக்கு.

    ReplyDelete
  8. அழகான படம்.அருமையான தேர்வு.

    துளசி அம்மாவிற்கும்,குடும்பத்தாருக்கும்
    மற்றும் வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாங்க துபாய் ராஜா.

    //அழகான படம்...//

    ஆமாம்,இல்லே? ச்செல்லம்போல இருக்கு.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  10. அம்மா படம் அருமை.
    நீங்கள் சொன்ன பாடல் பலமுறை கேட்டுள்ளேன்.
    கிருஷ்னண ஜெயந்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. "கண்ணன் வந்தான் - மாயக்
    கண்ணன் வந்தான்....."

    ReplyDelete
  12. துளசி அக்காவிற்க்கும்,குடும்பத்தாருக்கும்
    மற்றும் வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  13. அவன் திருட்டுத்தனமாக முழிக்கிறான் வெண்ணைத்திருடன் சேலை திருடன்,
    இதில் எழுதலாம் என நிணைத்தேன் சிறு பதிவே போட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  14. குருவாயூருக்கு வாருங்கள்
    ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
    ஒரு வாய்ச் சோறு ஊட்டும் தாய் முன்
    உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்

    கோபியரே கோபியரே
    கொஞ்சும் இளம் வஞ்சியரே
    கோவிந்தன் பேரைச் சொல்லி
    கும்மி கொட்டி ஆடுங்களேன்
    வேங்கடத்து மலைதனிலே
    வெண்முகிலாய் மாறுங்களேன்
    ஸ்ரீரங்கக் காவிரியில்
    சேலாட்டம் ஆடுங்களேன்

    ReplyDelete
  15. இவன் பெயரைச் சொனால் பசு பால் அதிகமாக கொடுக்குமாமே அதான் இவன் வெண்ணை திருடுகிறானோ?

    ReplyDelete
  16. /./
    எல்லோரும் கள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளத்தோடு ஒருநாள் இருந்து பார்க்கலாமா?
    /./

    கஷ்டம் தான் முயற்சி பண்னுகிறேன்..

    (இன்னைக்கி மட்டும்தான்.)

    ReplyDelete
  17. சிவமுருகன்,

    அருமையான பாட்டு. எனக்கும் ரொம்பப் பிடிச்சது.
    வாழ்த்துகளுக்கு நன்றி. டெல்லியில் கொண்டாட்டம் எப்படி?

    ReplyDelete
  18. சிஜி,

    'கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
    கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல'

    ReplyDelete
  19. வாங்க சரவணன்.

    வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. ராகவன்,

    கண்ணன்னு சொன்னதும் எப்படி கவிதை வருது பாருங்களேன்:-)

    ReplyDelete
  21. என்னார்,

    நேத்து நம்ம கோவிலில் பசங்க இதே பாட்டுக்கு நடனம் ஆடுனாங்க.
    'கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் பெயரைச் சொன்னால்
    நாலு படி பால் கறக்குது.....'

    ReplyDelete
  22. மிமி,

    ஒரு நாள்ன்னா ஒருநாள். இருந்து பார்த்தீங்களா?

    ReplyDelete
  23. வாங்க ஊர்சுற்றி.

    நாட்டு நடப்பெல்லாம் எழுதுங்களேன்.
    பதிவைச் சீக்கிரமாப் போடுங்க. நாளைக்குத்தான் ரோஹிணி.

    ReplyDelete
  24. //சிவமுருகன்,

    அருமையான பாட்டு. எனக்கும் ரொம்பப் பிடிச்சது.
    வாழ்த்துகளுக்கு நன்றி. டெல்லியில் கொண்டாட்டம் எப்படி?//

    தில்லி... எங்களை சொல்லி அடித்தது.

    3 நாட்களாக கோவிலுக்கு போனவர்களை ஏதோ குற்றம் செய்தவனை போல் துருவி, துருவி சோதனை செய்தனர். கலி முத்திடுத்து.

    சரி, சரி, இன்னும் கொஞ்ச நாள் பல்ல கடிச்சிகிட்டு இருந்துவிட்டேன்.

    என்ன பன்றது நம்ம கண்ணன் ஆச்சே.

    ReplyDelete
  25. சிவமுருகன்,

    அடடா....... தீவிரவாதம் எவ்வளோ தூரம்
    நம்மைக் கொண்டு போயிருக்கு பாருங்க.

    நல்லவேளையா அபத்தம் ஒண்ணும் நடக்கலை.
    அதுவரைக்கும் சந்தோஷம்தான்.

    ReplyDelete
  26. துளசி மேடம்,

    நான் நேற்றே உங்களுடைய பதிவே பார்க்கவில்லை. மிக அருமையாக இருக்கின்றன விளையாட்டு கண்ணனின் படமும் உங்களின் அழகான வசனங்களும்...

    நன்றி

    ReplyDelete
  27. //நல்லவேளையா அபத்தம் ஒண்ணும் நடக்கலை.
    அதுவரைக்கும் சந்தோஷம்தான். //

    நடந்து விட்டதே :( மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் ISKCON கோலாகலத்தில் நேற்று கைகுண்டு வீசி 5 பேர் மரணம், 50 பேர் காயம்.

    ReplyDelete
  28. வாங்க ராம்.

    பிரிவாற்றாமையிலே மூழ்கி இருந்ததாலே நேத்து நேரம்
    கிடைச்சிருக்காது தானே?:-)

    நம்ம வசனங்கள் இல்லையே இது. பாட்டில் வந்ததைக்
    கொஞ்சம் தமிழ்ப் 'படுத்தி' இருக்கேன்.
    அவ்வளோதான்.......

    ReplyDelete
  29. ஆமாங்க மணியன்.

    சிவமுருகனுக்குப் பதில் சொல்லிட்டு' சமாச்சார்' போனா அங்கே இந்த இடி.
    அடக்கடவுளே.......

    ReplyDelete
  30. //வாங்க ராம்.

    பிரிவாற்றாமையிலே மூழ்கி இருந்ததாலே நேத்து நேரம்
    கிடைச்சிருக்காது தானே?:-)//

    என்னா மேடம் இப்படி ஓட்டறீங்க என்னை... திருப்பதி+மதுரைக்கு போயிட்டு நேத்து மதியத்தான் வந்தேன். என்னோட பதிவில நிறைய ஒற்றுபிழைகள் இருந்ததா எஸ்கே சார் சொன்னார். கிடைச்ச கொஞ்சநேரத்திலே அதிலேதான் இருந்தேன்.

    //நம்ம வசனங்கள் இல்லையே இது. பாட்டில் வந்ததைக்
    கொஞ்சம் தமிழ்ப் 'படுத்தி' இருக்கேன்.
    அவ்வளோதான்....... //

    இருந்தாலும் உங்க பாணி நல்லா இருக்கு மேடம்.

    ReplyDelete
  31. ராம்,

    மதுரை & திருப்பதியா? அண்ணனும் தங்கச்சியும் எப்படி இருக்காங்க? நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களைத்தான்
    பார்க்கப் போயிருக்கீங்க. பேஷ் பேஷ்.
    என்னங்க நான் 'ஓட்டு'னேன்னு சொல்லிட்டீங்க. அதெல்லாம் இல்லாட்டா வாழ்க்கை போரடிச்சுறாது?:-))))

    ReplyDelete
  32. திருப்பதியிலே போய் மொட்டை எடுத்துட்டு, பெருமாளை தரிசனம் பண்ணிட்டு மதுரையில எங்க வீட்டுக்கு போயிட்டு வந்தேன்.

    ஆனா மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு போகலை.... :-(((

    ReplyDelete
  33. துளசியக்கா!
    வெண்ணெய்க் கண்ணனுக்கு பிறந்த நாளா? இனிய பிறந்த நாள் வாழ்த்து கண்ணனுக்கு!
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  34. ராம்,

    'மீனா'வைப் பார்க்கலையா? பரவாயில்லை. உள்ளூர் கோயிலுக்குப் போகத்தான்
    எப்பவும் சமயம் வாய்க்காது(-:

    மொட்டையுடன் உள்ள படத்தைப் போடுங்க.

    ReplyDelete
  35. வாங்க யோகன்.

    இன்னிக்குத்தான் ரோகிணி நட்சத்திரம். எப்பவும் அஷ்டமி & ரோகிணி சேர்ந்தோ அல்லது
    பக்கம்பக்கமாக அடுத்த நாளோ வரும். இந்த வருஷம் என்னவோ இன்னிக்கு வருது.
    அதுவும் நல்லதுக்குத்தான். என் மகள் இன்னிக்கு வருவாள். பிரசாதங்கள் செஞ்சு வச்சால்
    சாப்பிட ஆள் வேணுமா இல்லையா? இன்னிக்குத்தான் அப்பம் செய்யப்போறேன்.
    உங்களுக்கும் நல் வாழ்த்து(க்)கள்

    ReplyDelete
  36. துளசி,உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்தது. நேற்று நம்ம இளவரசிக்கு
    30 டய்ச் வயசு பூர்த்தி,அதனால் கிளி வாங்க அலைந்தேன்.
    இன்று எங்க வீட்டுகுட்டிக்கு பிறந்த நாள்.சின்னவனுக்கு.
    அதனாலே புத்தகம் வாஙவும் ஊர்ரு சுத்தினேன்.
    உங்களுக்கு உடனே பின்னூட்டம் போட முடியவில்லை.
    அம்மாடி, படத்திலேயெ கண்ணன் மயக்கறானே. நேரில என்ன பாடு படுத்தி இருப்பான்.
    அழகன்,அமுதா ஹாப்பி பர்த் டே.

    ReplyDelete
  37. வாங்க வல்லி.

    அழகன் அருமை. பார்த்தவுடனே மனம் பரபரன்னு ஆயிருச்சு. வாங்கியே ஆகணுமுன்னு இங்கே கொண்டு வந்துட்டேன்.

    ஐயா இப்ப நியூஸி கோகுலத்தில்.
    வெண்ணெய்க்கு மெனெக்கெடவேணாம். ஃப்ரிட்ஜ்லே வாங்கி வச்சாச்சு:-)))))

    ReplyDelete
  38. //மொட்டையுடன் உள்ள படத்தைப் போடுங்க. //

    வேணாம் மேடம், இணையத்திலே நிறைய பூச்சாண்டி படங்கள் கிடைக்கிறது..... எதுக்கு இன்னொன்னு...? :-)))))))

    ReplyDelete
  39. ராம்,

    நீங்க சொல்றதும் நியாயமாத்தான் இருக்கு:-)))))))))

    ReplyDelete