Tuesday, June 20, 2006

ஆ.............விரல்!!! 9 & 10

ஆ.............விரல்!!! 9 அழைப்பு வந்தது.



எட்டுமணிக்கு திடீரென்று ஒரு டாக்டர் வந்து, இப்போது தியேட்டர் ரெடி. இவரைக் கொண்டு போகலாம் என்று சொல்லும்போதே,மருத்துவமனைப் பணியாளர் ஒருவர் வந்து கட்டிலோடு இவரைக் கொண்டு போனார். நானும் கூடவே போனேன். அங்கேயும் வெளியிலேயே சில பரிசோதனைகளைச் செய்துவிட்டு இவரை உள்ளே 'உருட்டிக் கொண்டு' போய்விட்டார்கள். ஒரு முக்கால்மணி நேரம் ஆகும். நீங்கள் இங்கே அமர்ந்து கொள்ளலாம். காஃபி, டீ எல்லாம் இருக்கின்றது. கொஞ்சம் ஓய்வாக இருங்கள். கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார்கள். 'மகளுக்கு இந்த விவரம் தெரியாதே, அவள் வந்து தேடுவாளே ' என்றுநினைத்து நான் மறுபடி இவர் இருந்த வார்டுக்கே வந்து கொஞ்சநேரம் காத்திருந்தேன். அதற்குள் மகளும் வந்துவிட்டாள்.அவளுக்கு விவரம் தெரிவித்து, நாங்கள் இருவருமாக அறுவை சிகிச்சை நடக்கும் இடத்திற்கு மறுபடி வந்து காத்திருந்தோம்.



முக்கால் மணியாகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. மனதுக்குள் கொஞ்சம் கலவரமாக இருந்தது. இன்னும் அரைமணிநேரம் சென்றபின் மருத்துவர் வெளியேவந்தார். சிகிச்சை முடிந்துவிட்டது. மறுபடி அவரை வார்டுக்குக் கொண்டு போகலாம் என்றார். கையில் ஒரு பெரிய கட்டுடன் சிரித்த முகத்தோடு வெளிவந்தவரைப் பார்த்து மனம் கொஞ்சம் நிம்மதி ஆனது.


'எப்போது வீட்டிற்கு அனுப்புவீர்கள் என்று கேட்டபோது, 'இப்போதே போகலாம். அதற்குமுன் நீங்கள் பழைய வார்டுக்குப்போய் அங்கே சில சாங்கியங்களை முடித்துக் கொண்டு, அங்கே கிடைக்கும் மருந்துச் சீட்டு வாங்கிக்கொண்டு போகலாம் 'என்று பதில் வந்தது.


கட்டிலோடு அவரைத் தள்ளிக் கொண்டே லிஃப்டில் ஏறி நான்காம் மாடிக்கு வந்தோம். மேலும் ஒரு முக்கால்மணிநேரம் போனது. ஒருவழியாக மருந்துச் சீட்டு கிடைத்ததும், ட்ரெஸ்ஸிங் மாற்றுவதற்கான அடுத்த அப்பாய்ண்ட்மெண்ட்க்கு நாளும் நேரமும் குறித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அப்போது நேரம் கிட்டத்தட்ட இரவு 11 மணி.


வீட்டுக்குள் நுழைந்ததும்தான் காலையில் இருந்து காலியான வயிற்றின் கூப்பாடு கேட்கிறது. இவருக்கும் பயங்கரப்பசி. டென்ஷன் குறைந்ததும் மனசு வழக்கமானவைகளை நினைக்க ஆரம்பிக்கிறதோ? ஆறி அவலாகப்போயிருந்த சாப்பாட்டைச் சுடவைத்து சாப்பிட்டு முடித்தோம். அடுத்த இரண்டு நாட்கள் இவர் வேலைக்குப் போகவில்லை. ஆனாலும் ஃபோன் வழியாகவே அங்கே செய்ய வேண்டிய வேலைகளுக்கு அவரின் உதவியாளர்களுக்குக் குறிப்புகள் கொடுத்துக்கொண்டே இருந்தார். ஒரு நாள் கூட ஆஃபீஸை தரிசிக்காமல் இருக்க இவரால் முடியாது.மூன்று வாரங்கள் வரை ஓய்வெடுக்கலாம் என்று சொன்னாலும், கேட்டால்தானே?


இதற்கிடையில் விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட நண்பர்களின் வருகையால் வீட்டில் எப்போதும் யாராவது இருந்துகொண்டே இருந்தார்கள்.


வேலைக்குப் போக ஆரம்பித்ததும், வழக்கமில்லாத வழக்கமாக பகலுணவு கையோடு கொண்டு போவதாகச் சொன்னார்.இல்லையெனில், எனக்குத்தான் கஷ்டமாம்.நாந்தானே இவரை வீட்டுக்குக் கூட்டிவந்து மறுபடி கொண்டுபோய் விடவேண்டும்.நம்ம ஊர்போல இங்கே சோறு கொண்டு போய் சாப்பிட முடியாதாம். ஊரோடு ஒத்து வாழணுமாமே! 'சாண்ட்விச்'களைக்கொண்டு போவதாகச் சொன்னார். நம் வீட்டருகில் உள்ள சூப்பர் மார்கெட்டில் இருந்து 'சிக்கன் ஸ்லைஸஸ்' வாங்கிவந்து சாண்ட்விச் தயாரித்துக் கொடுத்தேன்.
தினமும் ஆண்ட்டிபயாடிக், பெயின் கில்லர்ஸ் என்று சிலவகை மருந்துகளும் எடுத்துக் கொண்டிருந்தார். எல்லாம் ஆஸ்பத்திரியில் எழுதிக் கொடுத்தவைதான்.


மறுநாளே இவருக்கு வயிற்று அசுகம் வந்தது. கழிவறைக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். எனக்குச் சந்தேகம் என்னவோ அந்த 'சிக்கன் ஸ்லைஸஸ்' மீதுதான். ஆனால் ஊர் ஜனங்கள் அதைத்தான் வாங்கித் தின்னுகிறார்கள்.இவருக்கு மட்டுமா ஃபுட் பாய்ஸனிங் வரும்? அந்தக் கடையில் விசாரித்த போது, இதுவரை புகார் ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள். இதனிடையில் என் இந்தியத் தோழி ஒருவர்( மருத்துவர்) வீட்டிற்கு வந்திருந்தவர், இவருக்கு எழுதித்தந்த மருந்துகளைப் பார்த்துவிட்டு, இந்த ஆண்ட்டிபயாடிக் நல்லதில்லையே. அதனால் இப்படி வரச் சான்ஸ் இருக்கிறது. எதற்கும் உங்களுடைய குடும்ப (?)டாக்டரைப் பார்க்கலாம் என்று சொன்னார்கள்.




ஆ.............விரல்!!! 10 குடும்ப மருத்துவர்.
----------------------



இங்கே உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு மருத்துவரிடம் பதிந்து வைத்திருப்பது முக்கியம். விசேஷ மருத்துவரைப் பார்க்கணும் என்றாலும் இவர்கள் பரிந்துரைக்க வேணும். அதேபோல் அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போனாலும் நம்முடைய மருத்துவக் குறிப்புகளை ஒரு பிரதி இவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆஸ்பத்திரியில் முதலில் கேட்கும் கேள்வியே உங்க மருத்துவர் ( GP) யார்? என்பதே.


இங்கே சில மருத்துவர்கள் சேர்ந்து ஒவ்வொரு க்ளீனிக்-இல் வேலை செய்கிறார்கள். அங்கே இரண்டு நர்ஸ்களும் இருப்பார்கள். நாம் ஒவ்வொருமுறை போகும் போதும் வெவ்வேறு மருத்துவர்கள் இருப்பதன் காரணம் முதலில் எனக்குப் புரிபடவில்லை. பின்னர் நான் சென்ற முறை பார்த்த மருத்துவரின் பெயரைச் சொல்லி அவர்களைப் பார்க்க வேண்டும் என்றதற்கு, அவர்கள் இன்னின்ன கிழமைகளில் மட்டுமே வருவார்கள் என்று சொன்னார்கள். அதன் பிறகு நானும்ஒரே மருத்துவராக இருந்தால் நல்லதுதானே, (புதுப்புது ஆட்கள் என்றால் நம் 'சரித்திரம்' திரும்பத் திரும்பச் சொல்லவேணுமே) என்று நினைத்து, அவர்கள் வரும் நாட்களில் மட்டுமே அப்பாயிண்ட்மெண்ட் எடுக்க ஆரம்பித்தேன்.



இந்த க்ளீனிக்கில் முதல்முதலாக ( 19 வருடங்களுக்கு முன்) நான் சேர்ந்ததும் ஞாபகம் வருகிறது. அப்போதெல்லாம் இங்கே அவ்வளவாக வேற்று இனத்தவர்கள் இல்லை. நாங்கள் அப்போதுதான் இந்தப்பகுதியில் வீடு வாங்கிக் குடிபுகுந்திருந்தோம்.அப்போது பனிகாலம் வேறு. வீடு மாறும் அலைச்சலில் கொஞ்சம் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. நம் வீட்டுக்கு எதிர்வரிசையில் இருந்த ஒரு க்ளீனிக்கில் சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.


வரவேற்பில் இருந்த பெண்மணி, என்ன ஏற இறங்கப் பார்த்துவிட்டு, நாங்கள் புது நோயாளிகளை இங்கே பார்ப்பதில்லை என்றார். எனக்கோ ஜூரம் காய்ந்து கொண்டிருக்கிறது.


" நான் இங்கே இந்தப் பகுதியில்தான் வசிக்கிறேன். இதுதான் எனக்கருகாமையில் இருக்கும் மருத்துவமனை. வேறுஇடம் போக என்னால் முடியாது"


" ஓ..... அப்படியானால் டாக்டர் உங்களை நாளைக்குப் பார்ப்பார்"


" அதெப்படி? எனக்கு இப்போதுதான் உடல்நிலை சரியில்லை. நாளைவரை காத்திருக்க முடியாது.எனக்கு இன்றைக்கே டாக்டரைப் பார்க்க வேண்டும்"


" ம்ம்....இரண்டு மணி நேரம் கழித்துத்தான் பார்க்க முடியும். மீண்டும் இங்கே உங்களால் வர முடியுமா?"'


" ஏன் முடியாது? இதோ இந்தத் தெருவைக் கடந்து எதிர் வரிசைக்குப் போனால் என் வீடு. ஒரு நிமிட நடைதான்"


"இங்கே நீங்கள் 32 டாலர்கள் அடைக்கவேண்டும். தெரியுமா?"


" ஏன் தெரியாது? அதான் அங்கே எழுதி வைத்திருக்கின்றீர்களே"


" உங்களால் அவ்வளவு காசு தரமுடியுமா? நீங்கள் வேலை செய்கிறீர்களா?"


"நான் வேலை செய்யவில்லைதான். ஆனால் என் கணவர் வேலைசெய்கிறார்."


"ஓ....சரி. .....இந்த நேரத்திற்கு உங்களை மருத்துவர் பார்ப்பார்"


இதுவும் ஒருவகை இனத் துவேஷமோ என்றுதான் பட்டது. ஆனால் அப்போது நான் இருந்த நிலைமையில் ஒரு டாக்டரைப் பார்த்து மருந்து வாங்க வேண்டியது ரொம்ப முக்கியம். இதே நம் ஊராக இருந்தால் மருந்துக்கடையில் போய் விஷயத்தைச் சொல்லி தாற்காலிகமாகவேனும் சில மாத்திரைகள் வாங்கிக் கொள்ளலாம். அதுவும், ஆண்ட்டிபயாடிக் பேர் தெரிந்திருந்தால் அதையே கூட வாங்கிவிடலாம். இதுசரியான முறை இல்லை என்றாலும் ஒரு அவசர ஆபத்துக்கு இப்படித்தான் நடக்கிறது.


அப்புறம் அவர்கள் சொன்ன நேரத்துக்குப் போய் என் பெயரைப் பதிவு செய்யும்போதுதான் முழு விவரமும் கிடைத்தது. அந்த க்ளினிக்கின் வரலாற்றில் அங்கே பதிவு செய்து கொண்ட முதல் வேற்று இனத்தவர் நாந்தான்! இதுவரை வெள்ளையர்களுக்கு மட்டுமே சிகிச்சை செய்திருக்கிறார்கள். அவர்கள் நிறத்தைப் பார்த்து மற்றவர்களுக்குப் பயம் என்றால், நம் நிறத்தைப் பார்த்து அவர்களுக்கும் உள்ளுக்குள் ஒரு பயம்.


இன்னும் அதே வரவேற்புப் பெண்மணியும், மருத்துவரும்தான் நாங்கள் தொடந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள் கூட!


இவருக்கு இப்படியாக இருக்கிறதே என்று, கிளினிக்குக்கு ஃபோன் செய்து நம் டாக்டரைப் பார்க்க முடியுமா என்று கேட்டபோது, இன்று அவர் வரவில்லை என்றும், அவசரம் என்றால் வேறு ஒரு மருத்துவர் இருக்கிறார் அவரிடம் காட்டலாம் என்றும் சொன்னார்கள்.


இவரோ கழிவறைக்குப் போய்வந்து போய்வந்தே தளர்வடைந்துவிட்டார். இனியும் நீடிப்பது நல்லதல்ல என்றுஉடனே அங்கெ போனாம். அதுதான் ச்சும்மா ரோடைக் கடந்தால் போதுமே!


நாங்கள் பார்த்த மருத்துவரிடம், என் தோழியையும் அறிமுகப்படுத்தினேன். அவரும் மருத்துவர் என்பதை அறிந்ததும், ஒரு வினாடி வெள்ளைக்கார மருத்துவர் முகம் மாறியதுபோல இருந்தது. இவருடைய வயிற்றுப்போக்குக்குக் காரணம் எதோ வைரஸ் என்றும், இதற்கு மருந்து ஒன்றும் தேவையில்லை. தானே சில நாளில் சரியாகும் என்றும் சொன்னார். சில நாட்களா? இதே நிலையிலா?


அப்போது என் தோழி,'தயவு செய்து இவருடைய 'ஸ்டூல் சாம்பிளை லேபு'க்கு அனுப்பி டெஸ்ட் செய்தால் நல்லது' என்று கூறியது அவருக்கு அறவே பிடிக்கவில்லை. 'எனக்குத் தெரியாதா? இந்த இந்தியன் டாக்டர் என்ன சொல்வது?'என்ற பாவனை முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. நாம் இதற்கெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க முடியுமா? நமக்கு வேலை ஆக வேணாமா?


'அதற்கெல்லாம் தேவை இல்லை. நீங்கள் போகலாம்' என்று சொல்லி விட்டார்.


இன்னும் வரும்

28 comments:

  1. யேம்மா, நல்லவங்களே இல்லையோ, உங்க ஊரிலே. ரிஸ்க் எடுக்க அத்தனை பயமா?இந்த மாதிரி த்ரில்லர் நான் படிச்சு நாளாச்சு.
    டிஸ்சார்ஜ் ஹிச்டரியில் எழுதிக் கொடுக்கலியா. ரிஅக்ஷன் பத்தி?னாளைக்கு டிக்கட் கொடுக்கிறேன் பொயிட்டுவான்னு யாரொ சொன்னாங்க, நாந்தான்,நியூசீல நிலமை போராதுனு கான்சல் பண்ணிட்டேன்.:-))

    ReplyDelete
  2. டீச்சர்...வெள்ளக்காரங்க மட்டுமில்ல...நம்மளும் இந்த மாதிரி வேறுபாடு பாக்குறவங்கதான். வடக்கானக் கண்டா தெக்கானுக்கு ஆகாது. தமிழனக் கண்டா கன்னடனுக்கு ஆகாது. மலையாளியக் கண்டா தெலுங்குங்காரங்களு ஆகாது. தெலுங்கப் பாத்தா நமக்கு ஆகாது. ஒரிசாவுக்கு பெங்கால் ஆகாது. பெங்காலுக்கு டெல்லி ஆகாது. அட தமிழ்நாட்டுக்குள்ளயே வாங்களேன்........எத்தனையோ இருக்கு.

    கடைசீல வயித்துக் கோளாறு நின்னிருக்கனும். என்ன மருந்து கொடுத்தாங்களோ!

    ReplyDelete
  3. வல்லி,

    நல்லவங்க இல்லாம என்ன? ஒட்டு மொத்த ஊரேவா கெட்டது?

    எல்லாம் நம்ம நேரம். அதுக்கு என்ன செய்ய முடியும்?

    வரணுமுன்னு இருக்கறது வழியிலே நிக்காதாமே!

    ReplyDelete
  4. வாங்க ராகவன்,

    எல்லாத்துலேயும் இப்படி வேத்துமை பாராட்டிக்கிட்டேதான் 'ஒற்றுமை'யா இருக்கம், போங்க.

    ReplyDelete
  5. எவ்வளவு வேதனையான நிகழ்ச்சியை
    இவ்வளவு அனாயசமாக சிரிக்க சிரிக்க சொல்ல வெகு சிலரால்தான்முடியும்
    கடோசில ஒரு சஸ்பென்ஸ் உடையும்தானே?

    ReplyDelete
  6. சிஜி,

    //கடோசில ஒரு சஸ்பென்ஸ் உடையும்தானே?//

    சஸ்பென்ஸ் என்ன முட்டையா? உடையறதுக்கு....

    இங்கே ஏதுங்க சஸ்பென்ஸ்?

    ReplyDelete
  7. இது என்ன, ஒன்னு சரியானால் இன்னொரு தலைவலி (இல்லை வயிற்று வலி) :(

    ReplyDelete
  8. இருந்தாலும் அந்த ஊர் பய புள்ளக ஒவரா தான் பார்மால்டீஸ் பாக்குறாங்க....

    ReplyDelete
  9. என்னங்க இது, இதைத்தான் பட்ட புண்ணிலே படும்ன்னு சொல்லுவாங்களோ? சும்மா சொல்ல கூடாது ஒரு கலக்கறீங்க(எழுதறத சொன்னேன் ;))! நீங்க பாட்டுக்கு கோபால் வயிரு கலக்கறத சொல்லரேன்னு நெனச்சுக்க போறீங்க.... சூப்பருங்க! இனி டைட்டில "ஆ..........வயிரு!!!" மாத்தனும் போலயே.

    ReplyDelete
  10. நாகை சிவா,

    அப்படிப் பார்க்கலைன்னா அவுங்களுக்கு எதாவது ஆபத்து வந்துருச்சுன்னா....

    ReplyDelete
  11. ஜெயசங்கர்,

    இப்படி டைட்டிலை மாத்தணுமுன்னா
    'ஆ....... -----' ஒவ்வொரு ஐட்டமா
    மாத்தணுமே:-))))))
    அவ்வளோக்கு நடந்துருக்கேப்பா:-)

    ReplyDelete
  12. இருக்கு இருக்கு சஸ்பென்ஸிருக்கு...கடோசில சொல்வீங்கதானெ?

    ReplyDelete
  13. ஆமாம். இன்ஷுரன்ஸ் இல்லைன்னா உள்ளேயே போக முடியாது.எல்லாம் ஒரு பயம்தான்.நம்ம ஊரில ஏழைங்க பாடும், நெளிவு சுளிவு தெரியாத அசடுங்க பாடும்,அப்படித்தான் இருக்கு
    த்ரில்லர்னு சொன்னது சும்மா.பயங்கரமான ஒரு நிகழ்வை லேசாகச் சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  14. என்னது? டெஸ்ட் எல்லாம் வேண்டாமா? இங்க வெறும் தலைவலின்னு போனாக்கூட ஸ்கேன் அது இதுன்னு படுத்தி எடுப்பாங்க. நாளைக்கு சரியாப் பார்க்கலைன்னு நீங்க கேஸ் போடக்கூடாதே. அந்த பயம்தான்.

    ReplyDelete
  15. அதாங்க மணியன்,
    நமக்கு நேரம் சரி இல்லைன்னா ஒண்ணு மாத்தி ஒண்ணுதான்(-:

    ReplyDelete
  16. ஒரு மருத்துவரிடம் போய் மற்றொருவர் இப்படி செய்யுங்கள் என சொல்வது சரிதானா? அது மற்றவரின் ஈகோவைத் தாக்கத்தான் செய்யும். அதனை ஒரு நெளிவு சுளிவோடு சொல்லி இருக்காலாம் உங்கள் நண்பர்.

    ReplyDelete
  17. மானு,

    இங்கே சிஸ்டம் வேற மாதிரி. அரசாங்க ஆஸ்பத்திரியிலேயே வெயிட்டிங் லிஸ்ட்லே வச்சுருவாங்க.
    நம்ம நம்பர் வர்றப்போ சிகிச்சை. ஆனா இதெல்லாம் மேஜர் ஆப்பரேஷன்களுக்குத்தான்.

    ReplyDelete
  18. சிஜி,

    பார்க்கலாம் ,கடைசியிலே எதாவது சஸ்பென்ஸ் நிஜமாவே இருக்கான்னு:-)

    ReplyDelete
  19. கொத்ஸ்,

    இங்கேயும் ப்ளட் டெஸ்ட் எப்பவுமே இலவசம்தான்.மத்ததுக்கு அரசாங்க ஆஸ்பத்திரின்னா வெயிட்டிங் லிஸ்ட்..
    நமக்கு இன்ஷூரன்ஸ் இருக்கறதாலே
    எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் ப்ரைவேட்டா பார்த்துக்கலாம்.

    50 + வயசு லேடீஸ்க்கு மாம்மோக்ராம்
    இலவசம்.


    ரெண்டு இண்டியன் பொம்பளைங்களைப் பார்த்து அந்தம்மா பயந்துருச்சோ என்னவோ.
    இத்தனைக்கும் பொலைட்டாத்தான் சொன்னாங்க.

    ReplyDelete
  20. //ரெண்டு இண்டியன் பொம்பளைங்களைப் பார்த்து அந்தம்மா பயந்துருச்சோ என்னவோ.//

    அது சரிதான். வீட்டில் ஒண்ணைப் பார்த்தே நமக்கு இவ்வளவு பயம். :)

    ஹிஹி. இது நமக்குள்ளையே இருக்கட்டும். வீட்டுக்கு வந்தா சொல்லிறாதீங்க. ஹிஹி.

    ReplyDelete
  21. கொத்ஸ்,

    பாய்ண்ட்ஸ் நோட்டட்:-))

    ReplyDelete
  22. Hariharan,

    Thanks for the feedback.

    Health is a big problem everywhere nowadays.

    I heard many stories about Appollo too, as one of my friend had an operation
    there.

    Here also The Dental Clinics are real ripoff.

    We always make fun about this.

    சொத்தை எடுக்கணுமுன்னா சொத்தையே விக்கணும்:-))))

    But as you said we all value our health as wealth,isn't it?

    ReplyDelete
  23. //'எனக்குத் தெரியாதா? இந்த இந்தியன் டாக்டர் என்ன சொல்வது?'என்ற பாவனை முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. //

    அது எந்த டாக்டராக இருந்தாலும் அப்படித்தான் முதலில் முகம் மாறும்!

    இவன்[ள்] என்ன நமக்கு சொல்வது என்னும் ஒரு ஈகோ!

    இதில் இனம், ஜாதி எல்லாம் கிடையாது!

    :)))

    ReplyDelete
  24. இது போல் நிற வேற்றுமைகள் நிறைய இருக்கு.

    என்ன பண்றது, வீட்ட விட்டு வெளிய வாந்தாச்சு சகிச்சு தானே ஆகனும்.

    ReplyDelete
  25. SK,

    நீங்க சொன்னதுபோலத்தான் இருக்கணும். மருத்துவரே சொல்லிட்டதாலே அப்பீல் ஏது?

    ReplyDelete
  26. மனசு,

    வெளிப்படையாக் காமிக்கலைன்னாக்கூட உள்மனசுக்குள்ளெ புதைஞ்சு கிடக்குது பலருக்கும் என்றதும் காலப்போக்குலே தெரிஞ்சுக்கறதுதான்.

    ReplyDelete
  27. 'அதற்கெல்லாம் தேவை இல்லை. நீங்கள் போகலாம்' என்று சொல்லி விட்டார்.//

    பாத்தீங்களா..

    எதுலதான் ஈகோ பாக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம..

    மனுசங்க அவஸ்தை பட்டுக்கிட்டிருக்கற நேரத்துல கூட ...

    என்னத்த சொல்றது?

    ReplyDelete
  28. வாங்க டிபிஆர்ஜோ,

    அங்கே உங்களைக் காணாம மூணுநாளா ஜனம் அலைபாய்ஞ்சுக்கிட்டு இருக்கு.

    என்னத்தை ஈகோ? நம்ம நேரம்தான்....

    ReplyDelete