Thursday, June 10, 2010

எட்டடியாமே!!!!!!!!

பக்தவத்ஸலா...பரமானந்தான்னு பாடலாமுன்னா தொண்டை சரி இல்லீங்க. இவனைப்பார்ப்பதைவிட அவனை அதான் அந்த 'எட்டடிக்காரனை'ப் பார்க்கணுமுன்னுதான் மனசுலே ஒரே ஆவல். விவரம் சொன்ன தோழியைக் கூப்பிட்டு. போலாமா?'ன்னால் அவுங்களுக்கு வரமுடியாதாம். வேறொரு எங்கேஜ்மெண்ட். திடீர்ன்னு ப்ரோக்ராம் போட்டால்தான் வேலையே நடக்குது நமக்கு.

திருநின்ற ஊருக்குப் போகலாமுன்னா ட்ரைவர் முழிக்கிறார். தின்னனூர் போலாமான்னதுக்கு 'ஓ' ன்னு ஜோராத் தலை ஆட்டிக்கிட்டே எங்கே இருக்குன்னு சொல்லுங்க, போயிறலாமுன்னார். நாம்தான் முன் ஜாக்கிரதை முத்தண்ணியாச்சே. கூகுளாரிடம் கேட்டு விவரம் வாங்கி வச்சுருந்தேன். 'மவுண்ட் பூனமல்லி ஹைரோடுலே போ'ன்னு சொல்லி இருந்தாங்க. அதேபடிக்குப்போய் திருமழிசை தாண்டிப்போகும்போது ஒரு கோவில்வளாகத்துக்குள்ளே 'வால்' மட்டும் தெரியுதேன்னு பார்த்துவச்சுக்கிட்டேன். வரும்போது என்னன்னு பார்க்கணும்.

ஒரு இடத்தில் மட்டும் வழி தவறி ( ரைட் எடுக்காம விட்டுட்டார்னு வழியில் விசாரிச்சப்போத் தெரிஞ்சது)சரியான வழிக்குத் திரும்பிப்போகும்போது ....'அட! நாத்து நடறாங்க! இன்னும் கிராமம் இருக்கா? சென்னையில் இருந்து வெறும் முப்பத்திஆறே கிலோமீட்டர் தூரம்தான்! ஊருக்குள்ளே நுழைஞ்சோம். கொஞ்சதூரத்தில் வலப்பக்கம் திரும்பணும். கோவில் மதில் சுவர் 'கண்ணிலே' விழுந்தது.அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் கோவில். வளாகத்துக்குள்ளே நுழைஞ்சோம். கல்மண்டபம் ஒன்னு கோபுரவாசலுக்கு முன்னால். காலை ஒம்பதேகால் மணிக்கு நண்பரும் நண்பருமா ஆழ்ந்த உறக்கம். துளசி மாலை கட்டிக் கொண்டிருக்கும் சில 'பூக்காரிகள்'.

அஞ்சு நிலைக்கோபுரம் பளிச்சுன்னு ஆஃப் ஒயிட்டில் நிக்கும் கோபுரவாசல் கடந்து உள்ளே போனால் 'பளிச்'க்கு விவரம் கிடைச்சது. ப்ரம்மோத்ஸவம் முடிஞ்சு இன்னும் ஒரு வாரம்கூட ஆகலை. கோவிலின் சிறப்புகளைக் கல்லில் பொறிச்சு வச்சுருக்காங்க. ஒரு பக்கமாக சாய்ச்சு வச்சுருக்கும் கோவில் குடைகளைப் பார்த்தால் மனசுக்கு இதமா இருந்துச்சு.


வலம் வரும் வழி முழுக்க நூற்றியெட்டு திவ்யதேசங்களில் அருள்பாலிக்கும் பெருமாளின் விவரங்கள் பெயர்கள் அடங்கிய போஸ்டர்கள். உபயதாரர்களின் பெயர் அரைவாசி அடைச்சிருந்தாலும் மீதி இடம் பளிச்சுன்னுதான் இருக்கு. இந்தக் கோவிலும் அந்த 108 இல் ஒன்னு. அங்கங்கே நம்ம யானைச்சிற்பங்களும், யானை வாகனங்களும். ஐராவதம்கூட இருக்கு!!!!
திருமங்கை ஆழ்வார், ராமானுஜர், ஆதி சேஷன், சமுத்திர ராஜன், தியாகப்பிரம்மம், ராகவேந்திரர் இப்படி பெரியவர்கள் வந்து தரிசிச்ச கோவில்.
தொட்டில் போன்ற ஒரு மர அமைப்பில் செதுக்குச்சிற்பங்கள் சூப்பர். ரெண்டு பக்கம் இருக்கும் பெரிய இரும்பு வளையங்களைப் பார்த்தால் இது நிஜமாவே தொட்டில்தான் போல! பின்னால் பசுமாடு நிக்க குழலூதும் வேணுகோபாலனின் சிற்பம் அழகோ அழகு. பிரகாரத்தின் இடது மூலையில் தாயார் சந்நிதி. 'என்னைப் பெத்த அம்மா' ன்னு என்னமாப் பெயர் வச்சுருக்காங்க பாருங்களேன்.
ரங்ஸ்க்கும் தங்க்ஸ்க்கும் சின்னச் சண்டை. புருசன் என்னதான் பரந்தாமனா இருந்தாலும் குடும்பமுன்னா சண்டை சச்சரவு வராமலா இருக்கும்? கோச்சுக்கிட்டு தாய்வீட்டுக்கு வந்துட்டாங்க மகாலட்சுமி. அவுங்க வந்து நின்ன ஊர் என்பதால்தான் ஊருக்கே திரு(வந்து)நின்ற ஊர்ன்னு பெயர். சொல்லிச்சொல்லிப்பாருங்க...... அதே அதே....தின்னனூர்ன்னு வழக்கில் வந்துச்சு. ரொம்பநாள் இப்படி இருந்து அப்புறமா அரசு ரெக்கார்ட்களில் திரு நின்ற ஊர்ன்னு மாத்தி இருக்காங்க. ஆனாலும் பெரும்பாலான பழைய தலைமுறை மக்களுக்கு இன்னும் இது தின்னனூர்தான்.

சமுத்திர ராஜன் மகளாச்சே மகாலட்சுமி. பாற்கடலைக் கடைஞ்சப்பத்தானே இவுங்க அதுலே இருந்து வெளிவந்தாங்க. பொண்ணு இப்படிக் கோச்சுட்டுவந்தா எந்தத்தாய்தகப்பனுக்குத்தான் பொறுக்கும்? நம்மூடுகளிலும் கோச்சுக்கிட்டு பிடிவாதம் பிடிக்கும் புள்ளைகளை 'என்னைப்பெத்த ராசா, வாய்யா,,வந்து சோறு துன்னு'ன்னு கூப்புடறதுண்டா இல்லையா? 'எங்கம்மா இல்லே.... என் தங்கம் இல்லே.... என்னைப்பெத்த ராசாத்தி வாம்மா'ன்னு கொஞ்சிக் கெஞ்சிக் கூப்புடுவோமில்லே? அதேதான்......

'என்னைப்பெத்த தாயாரே, நன்னு கன்ன தல்லி (தெலுங்குலே) கோவிச்சுக்கிட்டு இங்கே ஏம்மா நிக்கறே? வாம்மா ஸ்ரீ வைகுண்டம் போகலாம். அதுதான் உனக்கு வீடு'ன்னு கெஞ்சிக்கூப்புடறார் அவளைப் 'பெத்த' அப்பா. 'மாட்டேன். போ. இனிமே இங்கேதான் நிக்கப்போறென்......' அசைஞ்சு கொடுக்காத மகளை என்ன செய்யலாமுன்னு தெரியாம மாப்பிள்ளையைப் பார்க்க ஓடுறார். 'த... பாருங்க மாப்பிளே. நீங்களே வந்து கூப்புட்டாத்தான் வருவா போல இருக்கு. எனக்காகவாவது உடனே நீங்க கையோடு வரணும். உங்களைப் பார்த்தாக் கோவம் அடங்கிரும்'னு கெஞ்ச (பாவம், பொண்ணைப் பெத்தவன் வாழ்நாளெல்லாம் கெஞ்சு கெஞ்சுன்னு கெஞ்சிக்கிட்டே இருக்கணும் போல!) பக்தனுக்காக மனம் இரங்கி பெருமாளே வைகுண்டத்துலே இருந்து இறங்கி வந்தார். அவர் கிளம்புனதும் அவருடைய படுக்கையும் கூடவே கிளம்பி வருது. ஆதிசேஷன் நினைச்சுருப்பார் அவர் இங்கே படுக்கை போடப்போறாருன்னு. இப்படியாக எல்லாரும் வந்து, தாயாரைச் சமாதானமாக்கிட்டாங்க. ஆனாலும் பக்தர்களுக்கு இங்கேயும் இருந்து காட்சி கொடுக்கணும் என்ற நியமப்படி அருள்பாலிக்கிறாங்க.

தாயார் சந்நிதியின் மண்டபத்தில் ஒரு துலாபாரம் வச்சுருக்காங்க. சட்னு பார்த்தால் விறகுக்கடை நினைவுக்கு வருது. தாயாரைச் சேவிச்சுக்கிட்டு வலம்வந்து சேனை முதலியாரையும் கண்டுக்கிட்டு மூலவரை தரிசிக்கப்போனோம். பக்தவத்சலப்பெருமாள் ஜம்முன்னு நின்ற கோலத்தில். நெடுநெடு நின்ற மால், கொஞ்சம் உசரம் கூடுதலோன்னு ஒரு தோணல். உத்ஸவருக்கு பத்தராவிப் பெருமாள்ன்னு பெயராம். சடாரியும் தீர்த்தமும் கிடைச்சது. அங்கிருந்த பட்டரிடம் ராமர் சந்நிதியைத் திறக்கணுமுன்னு கோரிக்கை வச்சோம். (தோழி சொன்னாங்க. எப்பவும் பூட்டியே இருக்கும். தரிசனம் செய்யணுமுன்னு சொன்னால் பட்டர் சாவி கொண்டுவந்து திறப்பார்) 'இப்பத்தான் நிவேத்யம் காமிக்கப் பட்டர் போயிருக்கார். சீக்கிரமாப் போங்கோ. அங்கே போயிட்டு வந்து இங்கே நிதானமாச் சேவிக்கலாம். இப்படியே லெஃப்ட்லே போங்கோ. கார் இருக்கா?' ன்னார். 'இருக்கு'ன்னுட்டு அடிச்சுப்புடிச்சுக் கிளம்பினோம். எவ்வளவு தூரமோ என்னவோன்னு பதைச்சேன். இடதுபக்கம்தான் நாம் இங்கே கோவிலுக்குத் திரும்பின வழி. அதுலேயே போய் குறுக்கிடும் ரோடில் திரும்பாம நேராப் போகனும். கண்ணெதிரே ஏரிகாத்தராமர் கோவில். கூடிவந்தால் இந்தக் கோவிலுக்கும் அந்தக் கோவிலுக்கும் ஒரு 400 மீட்டர் தூரம் இருக்கலாம்.
பார்த்தவுடனே தெரிஞ்சது ரொம்பவே பழைய கோவிலுன்னு. இடப்பக்கம் ஒரு பதினாறு கால் கல்மண்டபம். அங்கே பிரம்மோத்ஸவம் நடந்தப்ப, இங்கேயும் கொஞ்சம் பராமரிப்பு செஞ்சிருக்கலாம். ஆனால்........ விட்டுட்டாங்க. சின்ன மதில் சுவரைக் கடந்தால் கோவில். சந்நிதிக்கு முன்னால் ஆஞ்சநேயர். பசேல்னு வாடாத துளசி மாலையுடன் கம்பிக்கதவுக்குள் இருந்தார் நேயுடு .
கோவிலுக்குள் நுழைஞ்சால் ஆஜானுபாகுவா மூலவர் எட்டடி உசரம். லக்ஷ்மணனுடனும் சீதா பிராட்டியாருடனும் கம்பீரமா நிக்கறார். கையில் கோதண்டம் ஒரு வளைவுமில்லாமல் குச்சிபோல நேரா இருந்துச்சு. எப்படித்தான் வளைப்பாரோன்னு என் கவலை. இவருக்கு தனியா ஆர்டர் கொடுத்துதான் வேட்டி நெய்யணுமாம். சாதாரண அளவு வாங்குனா அது இடுப்புத் துண்டுதான். வெளிச்சம் குறைஞ்ச ட்யூப்லைட்டில் சாந்தமான முகம் அழகாத் தெரிஞ்சது. இப்படி உள்ளே பூட்டியே வச்சால் இவருக்கு போரடிக்காதா?
வெளியே வந்து அவர் காத்த ஏரியைத் தேடினேன். ஆக்ரமிப்புக்கு ஆளாகி சின்னதாத் தண்ணீர் தேங்கின குட்டையா அது கிடக்கு. ஹூம்......


திரும்ப இங்கே பக்தவத்சலனிடம் வந்தோம். சந்நிதியில் பிரஸாத விநியோகம் நடக்குது. சீக்கிரம் போய் வாங்கிக்குங்கோன்னு விரட்டுனார் ஒரு பட்டர். உள்ளே போய் கூட்டத்தில் இடிபடாமல் ஓரமா நின்னோம். நம்மையும் இந்தப் பக்கமா வாங்கோன்னு கூப்பிட்டுக் கைநிறைய ததியன்னம் கொடுத்தார் பட்டர். கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது.


பதிவின் நீளம் கருதி பாக்கி நாளைக்கு:-)

35 comments:

  1. தரிசனம் செஞ்சு பிரசாதமும் வாங்கிக்கிட்டேன். அங்கங்கே ஊசியும் நல்லாருக்கு :-))))

    ReplyDelete
  2. (பாவம், பொண்ணைப் பெத்தவன் வாழ்நாளெல்லாம் கெஞ்சு கெஞ்சுன்னு கெஞ்சிக்கிட்டே இருக்கணும் போல!)

    இது மிகவும் நிதர்சனமான, நாங்களெல்லாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் உண்மை :(

    அந்தப் பிரசாதத்தையும் ஒரு படம் போட்டிருந்தால் நாங்களெல்லாம் கண்ணாலேயே சாப்பிட்டிருப்போமே?

    ReplyDelete
  3. ((எனக்காகவாவது உடனே நீங்க 2 கையோடு வரணும்))

    இங்கே பெருமாளுக்கு 2 கரங்கள் மட்டும்தானோ?

    ReplyDelete
  4. வாங்க அமைதிச்சாரல்.

    ஊசி இல்லாம வேலை நடக்காது. விஷ ஊசி இல்லாதவரை சரி. நாக்கு முழுக்க ஊசின்னுவார் உங்க அண்ணன்:-))))

    ReplyDelete
  5. வாங்க பிரகாசம்.

    நாங்களும் கெஞ்சவேண்டிய கூட்டத்தில்தான் இருக்கோம். ஆனால் இருக்குமிடம் வேற என்பதால் .......
    தப்பிக்கச் சான்ஸ் இருக்கு!

    ரெண்டு பேரும் இருகரமேந்தி பிரசாதம் வாங்குனதில் படமெடுக்கக் கை இல்லாமப்போச்சு.

    அதுக்குதான் பெருமாளுக்கும் கை ரெண்டாவே இருக்கட்டுமுன்னு விட்டுட்டேன்:-)))0

    ச்சும்மா..... வேர்டு பேடில் எழுதும்போது எத்தனை பக்கமுன்னு கணக்குக்காக 1,2 ன்னு போடுவேன்.
    பப்ளிஷ் செய்யும்போது எடுத்துருவேன். இன்னிக்கு விட்டுப்போச்சு. ( மூணு பேஜ் ஒரு இடுகைக்கு என்றது என் கணக்கு)

    ஆனா என்ன ஒரு மந்திரஜாலம் பாருங்களேன். இப்ப அந்த 2 காணோம். பெருமாளே தூக்கிட்டான்:-)))))))



    ஊன்றி வாசிக்கிறீர்கள் என்பதை நம்பிட்டேன். கவனிச்சதுக்கு நன்றி.

    ReplyDelete
  6. ஒரே குழப்பம் போங்க.
    மதுராந்தகம் ஏறி காத்த ராமர் கோவிலுக்கு போயிருக்கேன். ராமர், சீதை கைத்தலம் பற்றி நிற்கும் கல்யாணக் கோலம். பக்கத்தில் தம்பி லச்சு. விபகண்ட முனிவருக்கு காட்சி கொடுக்கும் கோலம். ப்ளேஸ் என்ற அப்போதைய ஆங்கில கலக்டர் ராமர் ஏரி காத்ததை கண்ணால் கண்டு அந்த கோவில் ஜானகித் தாயார் சன்னதிக்கு திருப்பணி செய்து கொடுத்த நிகழ்ச்சிக்கான கல்வெட்டு அங்கே இருக்கு.
    கோவில் பின்னாலே ஒரு ஏரி இருக்கு. ஆனால் அந்த ஏரி இல்லை என்றும் ஏரிக்கு 2 கி.மீ செல்ல வேண்டும் என்றும் இப்போது தூர் வரப் படாமல் பயனற்று இருக்கு என்றும் அர்ச்சகர் சொன்னார்.

    ஆனால் அங்கே ஒரு கோவில் இருக்குனு சொல்லலையே. இந்த திருநின்ற ஊர் கோவில் தான் அந்தக் கோவிலா? தெரியலையே.
    உங்களுக்குத் தெரியுமா ?

    http://www.virutcham.com

    ReplyDelete
  7. வாங்க விருட்சம்.

    'அது , இது இல்லை'

    திருநின்ற ஊருக்கும் மதுராந்தகத்துக்கும் இடையே 89 கிலோமீட்டர் தூரம் இருக்கு.

    அங்கே அந்த ஏரியைக் காத்ததால் இங்கே இதையும் காக்கவேண்டியதாப் போயிருச்சு:-)))))

    ஒரே பெயரில் பல கோவில்களும், ஒரே பெயரில் பல மூலவர்களும் இருப்பது உண்டு.
    அப்படி ஒன்னு இது.

    ReplyDelete
  8. நல்ல படங்கள் டீச்சர்.

    ReplyDelete
  9. ப்ரஸண்ட் டீச்சர்

    ReplyDelete
  10. கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது.

    நிதர்சனமான வார்த்தைகள்.

    ஆனால் உணர்வதற்கு நமக்கு உணர்த்துவதற்கு உண்டான காலம் தான் அதிகமாக இருக்கிறது.

    ReplyDelete
  11. சென்னையில் இருக்கும் எனக்கு நூசியில் ் இருக்கும் நீங்கள் தான் தகவல் கொடுக்க வேண்டி இருக்கு பாருங்க.
    ஒன்னு புரியுது. இரண்டு ஏரியும் இன்னிக்கு கவனிப்பாரற்று கிடக்கு.

    ReplyDelete
  12. கோயில் மண்டபத்தில காத்தாட தூங்கற சுகம் இருக்கே. :)

    ReplyDelete
  13. எட்டடியாமே...படம் நாளைக்கா..!?

    ReplyDelete
  14. Teacher, did you also visit the Hrudhayaleeswarar temple at Thirunindravur. Its very near to the perumal temple. Manakkovil kattiya Poosalar sthalam adhu.

    ReplyDelete
  15. இடையிடையே அதிக படங்கள் பதிவை படிக்க ஒரு தடங்கலாக இருக்கிறது..

    ReplyDelete
  16. நல்லா இருக்கு டீச்சர் கோவில் நீங்கள் 108 கோவில்களும் பார்த்தாச்ச டீச்சர்.

    ReplyDelete
  17. வாங்க வித்யா.

    நன்றிப்பா.

    ReplyDelete
  18. வாங்க புதுகைத் தென்றல்.

    எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா வகுப்புலே காணோம்?

    ReplyDelete
  19. வாங்க ஜோதிஜி.

    உண்மை. இதுவுமே பிரபலமானது கூட......

    இப்படித்தான்:-)

    ReplyDelete
  20. விருட்சம்..


    'கவனிப்பாரற்று'..... நோ நோ....

    'கவனிச்சதால்'தான் இப்படிக் காணாமப்போயிருக்கு:(

    ReplyDelete
  21. வாங்க சின்ன அம்மிணி.

    அதெல்லாம் நமக்குப் பழங்காலமாப் போச்சுப்பா:(

    ReplyDelete
  22. வாங்க கோபி.

    உஷ்....... மூலவரைப் படம் எடுக்கக்கூடாதுன்னு ஒரு நியதி இருக்கேப்பா இந்தியாவில்.

    ReplyDelete
  23. வாங்க ப்ரசன்னா.

    இல்லைப்பா. ஹ்ருதயாலீஸ்வரர் கோவிலுக்குப் போகக் கொடுத்து வைக்கலை. இன்னொருமுறை பார்க்கணும். ஊருக்குள்ளே போகாமல் திரும்பிட்டோம்:(

    ReplyDelete
  24. "தொட்டில் போன்ற ஒரு மர அமைப்பில் செதுக்குச்சிற்பங்கள் சூப்பர்"
    ஆமாம். ஊஞ்சல் திருவிழா செய்திருப்பார்கள் போலும்...

    "ஆஞ்சநேயர். பசேல்னு வாடாத துளசி மாலையுடன்"
    அழகு.

    ReplyDelete
  25. வாங்க குத்து.

    அடடா..... அப்டீங்கறீங்க?????

    படம் பார்த்துக் கதை சொல் வேணாமா?

    ReplyDelete
  26. வாங்க சுமதி.

    108 மா?

    ஊஹூம்..... அவ்வளோ பாக்கியம் செய்யலை.

    அதிலும் அந்த 108 வதுக்குப் போகக் காத்திருக்கணும்.

    பாற்கடல்தான் அது. பூலோகத்தில் 107தான்.

    ReplyDelete
  27. வாங்க சுமதி.

    108 மா?

    ஊஹூம்..... அவ்வளோ பாக்கியம் செய்யலை.

    அதிலும் அந்த 108 வதுக்குப் போகக் காத்திருக்கணும்.

    பாற்கடல்தான் அது. பூலோகத்தில் 107தான்.

    ReplyDelete
  28. வாங்க பொற்கொடி.

    வாழ்த்துகளுக்கு நன்றிப்பா

    ReplyDelete
  29. வாங்க மாதேவி.

    ஸ்வாமியின் உற்சவமூர்த்தங்களை வச்சுப் பிடிப்பிக்க வளையங்கள், கொக்கிகள் எல்லாம் அதுலே இருக்கு. விழாக்களில் பயன்படுத்துவாங்க போல. அதன் தலைமாட்டில் ரங்கவிமானம் போல டிசைன் செதுக்கி இருந்துச்சுப்பா. சூப்பர்!!!!

    ReplyDelete
  30. எட்டடி ராமரை வால்மீகி வர்ணிக்கும் போது,(சுந்தரகாண்டத்தில்)
    இப்படி ஒருவர் இருக்கமுடியுமான்னு நினைச்சுப்பேன். அப்புறமா லிஃப்கோ புத்தகம் மூலம் இவரைப் பற்றித் தெரிந்தது.
    நான் போன போதும் பத்துவருஷம் முன்னால் இதே கதையைச் சொன்னாங்க. இன்னமும் ராமர் வனவாசத்திலியே இருக்கிறார் போலிருக்கு:(

    ReplyDelete
  31. வாங்க வல்லி.

    பத்து என்னப்பா...... இன்னும் பத்து நூறு வருசமானாலும் மாறாது. இதென்ன சயிண்டிஃபிக் ஃபிக்ஷனா!!!!!

    ReplyDelete
  32. அச்சச்சோ நான் 108ம் பூலோகத்தில் என்று நினைத்து கொண்டிருக்கிறேன் நன்றி டீச்சர் தெளிவித்தமைக்கு.

    ReplyDelete
  33. Naan sonnathu raamar veshtiyaip paththi ma:)
    adhaiye kattikkittu irukkkssronnu santhekam.

    ReplyDelete
  34. வல்லி,

    புது வேட்டி எப்பவாவது கிடைக்குதாம்.

    ராமரை விடுங்க. நம்ம சீதா? ஒரே புடவைன்னா மகா மோசம் இல்லையா? நல்லவேளை அங்கே அவள் மட்டும்தான் பெண்.

    ஆண்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் பொண்கள்? நேத்துக் கட்டுனதை இன்னிக்கும் கட்ட முடியுமோ??????

    கண்கொத்திப்பாம்மாப் பார்க்கும் அக்கம்பக்கத்துக்கு என்ன பதில் சொல்வது:-))))))

    ReplyDelete