Tuesday, March 27, 2007

தலைநகரில் தமிழச்சிகள்




தலைப்பு உதவி யாருன்னு தெரியுமா?

நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 7)

இன்னிக்குக் காலையில் புறப்படுமுன்பே வலைப்பதிவாளர் ஒருவரை இங்கே கோயிலில் சந்திக்கற ஏற்பாடு இருந்துச்சு.அவுங்களுக்காகக் காத்துக்கிட்டு இருந்தப்ப நேத்து சந்திச்ச 'அண்ணாத்தை'யை நினைச்சுக்கிட்டேன். என்னவிட ஒரே ஒரு மாசம்தான் பெரியவர், பிறந்த தேதியை வச்சுப் பார்த்தா! எங்களைப் பார்த்ததும் தன்னுடைய சைக்கிளைத் தள்ளிக்கிட்டு வந்துஓட்டிக் காமிச்சார். சக்கரம் மட்டும் மூணு இருந்துச்சு. அவரோட அம்மாவை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அவுங்க இப்பத்தான் சமீபத்துலே கெஸட்டுலெ கொடுக்காமலேயே பேரை மாத்தி வச்சுக்கிட்ட லட்சுமி என்ற முத்துலெட்சுமி.

அக்ஷர்தாமுலே இருந்து வீடு பக்கம்தான்னு சொல்லி இருந்தாங்க. வீட்டைக் கண்டு பிடிக்க ஒரு நாலஞ்சுதரம் மட்டுமே செல்லுலே கூப்புட்டேன். சுத்திமுத்திப் போனப்ப நல்லகாலம் வீட்டுவாசலில் காத்துக்கிட்டு இருந்தாங்க. மாடியிலே வீடு.'அண்ணாத்தை'யுடைய அக்கா பள்ளிக்கூடத்துலே இருந்து வந்துட்டாங்க. எல்லாரும் ஜாலியாப் பேசிக்கிட்டு இருந்தோம்.இனிப்பும் காரமுமா தட்டு நிறைய வச்சுருந்தாங்க முத்துலெட்சுமி. பகல் சாப்பாடை வேற சாப்புடலை பாருங்க. அதான் கொஞ்சம் கா.மா.க.கொல்லையாப் போச்சுது.

நானோ காபி பைத்தியம். என்னடா...... இன்னும் காபி குடிக்கிறீங்களா?ன்னு கேக்கலையேன்னு நினைக்கிறப்பவே நான் நினைச்சதைக் கேட்டாங்க 'மகா'லெட்சுமி. நல்லா இருக்கட்டும். காபி போடறப்பவும் அவுங்களோட அடுக்களையில் நின்னு வாயாடிக்கிட்டே(யாருக்கு என்ன பிடிக்கும்னு அப்பத் தெரியாது பாருங்க,அதான்!!) இருந்தேன். இந்த வலை உலக நட்புலே நம்ம தருமி சொல்றது போல ஒரு கெமிஸ்ட்ரி இருக்கத்தான் செய்யுது.இவுங்க வீட்டுலே ஒரு மொட்டை மாடி இருக்குங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. தமிழ்மணம், பதிவுகள்ன்னு என்னென்னமோவிஷயங்கள் எல்லாம் அலசி ஆராய்ஞ்சோம். அவுங்க வீட்டாண்டை ஒரு அருமையான குருவாயூரப்பன்(?) கோயில் இருக்கு. வீட்டைத்தேடி அலைஞ்சப்பக் கண்ணுலே மாட்டுச்சு. இன்னொரு ஒரு குகைக்கோயில்(அமர்நாத் கோயில்?)போல ஒண்ணும்இருக்காம். எல்லாமே சாயங்காலம் அஞ்சரைக்குத்தான் திறப்பாங்களாம். ஹூம்....... கொடுத்து வச்சுருக்கான்னு தெரியலை(-:

'அண்ணாத்தை'யோட அக்கா அலங்காரமா பளிச்சுன்னு உடுத்திக்கிட்டு இருந்தாங்க. பக்கத்துலே எங்கியோ போகணுமாம். போறதுக்குள்ளே நான் வந்துருவேனான்னு கொஞ்சம் பதட்டமா இருந்தாங்களாம். நமக்குக்கூடக் காத்திருக்கும் அன்பா? ரொம்ப ஃபீலிங்காப் போச்சு எனக்கு.

இன்னொரு வேலை இருக்குன்றதாலே அதிக நேரம் தங்க முடியாமப்போச்சு. சாப்புடாமக் கிளம்பறோமுன்னு அவுங்களுக்கும் ஒரு மனத்தாங்கல் இருந்துச்சு. 'அண்ணாத்தை'வேற இப்பத்தான் கொஞ்சம் நெருக்கம் காமிக்கறார். அவரை 'ஏமாத்திட்டு' புறப்பட்டோம்.

திடீர்னு செல்லு கூப்புட்டு என் யோசனையைக் கலைச்சது.

"எங்கே இருக்கீங்க?"

" கண்ணுமுன்னாலே"

யாராவது பார்த்தாக்கூட எதோ 'ஒட்டிப் பிறந்த ரெட்டைப்பிறவி'ங்க பேசுதுங்கன்னு நினைச்சுக்குவாங்க. புது ஆளைப்பாக்குற த்ரில் மிஸ்ஸிங். நொய்டா நாதாரிகளைப் பத்தி எழுதுன மங்கை. பேசிக்கிட்டேப் படியேறி மேலே கோவிலுக்குப் போனோம். சந்நிதி பூட்டி இருந்துச்சு. கல்கருடனைப் பார்த்துக்கிட்டே பேசறோம் பேசறோம் பேசிக்கிட்டே இருக்கோம்.அவுங்க 'பணி' சம்பந்தப்பட்ட விவரங்கள் ரொம்ப சுவாரசியம். சரி........ பேசாம C.P..க்கே போயிரலாமுன்னு சொன்னாங்க.

படி இறங்கிவந்து ஆட்டோ எடுத்தோம். அவர் கேட்டது 70. எங்க பேரம் 60. படிஞ்சது. 'அடப் பாவி க்யான்சிங் இப்படி 350 உருவிட்டியே'! வாழையிலையில் சாப்புடலாமான்னு கேட்டாங்க. ஃபூ.பெரிய விஷயமா? ச்சலோ பனானா லீஃப்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்னத்தைத் தின்னோமுன்றது உண்மைக்குமே நினைவில்லை. அதென்ன அப்படி ஒரு பேச்சு? :-))))

கன்னாட் ப்ளேஸ் வழக்கமான கலகலப்புடன் நெரிசலா இருந்துச்சு. இந்த இடத்துக்கு 'ராஜீவ் காந்தி சவுக்'ன்னு பெயர்மாற்றம் இருந்தாலும் இப்பவும் இது எல்லாருக்கும் கன்னாட் ப்ளேஸ்தான். ச்செல்லமாச் சுருக்கி சி.ப்பி.!

பாபா கரக் சிங் ரோடுலே ( பயந்துட்டீங்களா? அட! இது நம்ம பழைய இர்வின் ரோடுதாங்க) இருக்கற ஸ்டேட் எம்போரியத்துக்கு வந்தோம். இந்தியாவுலே இருக்கற மொத்த மாநிலங்களோட கைவினைப் பொருட்களை ஒரே இடத்தில் கொண்டு வந்து வச்சுட்டாங்க.அள்ளிக்கிட்டுப் போகலாமுன்னு நினைக்காதீங்க. எல்லாமே கிள்ளிக்கிட்டுத்தான் போகணும். யானை விலை!!!!!ஒவ்வொரு மாநிலமா புகுந்து புறப்பட்டோம். மங்கை, நிஜமாவே யானைகள் வாங்குனாங்க! நம்ம ஷேர் வருமுன்னு நானும் பொறுமை காத்தேன்:-)))) சில 'மாநிலங்களை' பகல் சாப்பாட்டுக்காக மூடிட்டாங்க. இதுக்கெல்லாம் பயந்தாஆகுமா? அங்கே இருக்கற கட்டை(குட்டி)ச்சுவர் வேற எதுக்கு? அங்கே உக்கார்ந்து(ம்) பேசுனோம்.

சுரங்கப்பாதையைக் கடந்து எதிர்ப்புறம் வந்தா அங்கே ரெண்டு கோயில்கள். ஹனுமார் கோயில் உள்ளே நுழைஞ்சோம். சாமி சுயம்புதானாம். கட்டிடம் மகாராஜா ஜெய் சிங் காலத்துலே(1730களில்) கட்டித் தந்ததாம். அவர்தாங்க ஜந்தர் மந்தர் கட்டுனவர். அவருக்கு வான ஆராய்ச்சி பிடிச்ச விஷயமாம். அங்கே ஜந்தர்மந்தரில் சூரியக் கடிகாரமெல்லாம் கட்டி வச்சுருக்கார். இந்த முறை அங்கே நான் போகலை. முந்தி ஒருக்காப் பார்த்தது. கோயிலில் ஒரு பஜனை கோஷ்டி அருமையாப் பாடிக்கிட்டு இருந்தாங்க. ஜமுக்காளம் எல்லாம் போட்டு, எதோ கல்யாண வீடு மாதிரி இருக்கு அந்தப் பெரிய ஹால். வலது பக்கம் 'டபுள் த லைஃப் சைஸு'லே ஒரு அம்மன் சிலை. ஜிகுஜிகுன்னு ஜிகினாப்புடவை.இந்தப் பக்கம் மாருதி. சின்னதா மூணாத் தடுக்கப்பட்ட மேடை. அதுலே வலது கைப்பக்கம் வடக்கத்து ஸ்டைலில்ஆரஞ்சு நிற ஹனுமார். எட்டிப் பார்த்துக் கன்னத்துலே போட்டுக்கிட்டோம். கோயிலைச் சுத்தி வந்தா ஒரு இடத்துலே பெரிய சிவன். லிங்க ரூபம். ஆளாளுக்கு அபிஷேகமுன்னு பால், தண்ணின்னு ஊத்தறாங்க.


இந்தக் கோயிலுக்குப் பக்கத்துலே தென்னாட்டுப் பாணியில் 'நம்ம' கோயில். ராக்ஷஸக் கடாய்லே எண்ணெய்க் கொப்பரைக் கொதிக்குது வாசலில். 'அந்நியன்' வந்துட்டானோன்னு சுத்திமுத்திப் பார்த்தேன். சனி பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபமாம்! ஆமாம். ஒரு ஓரமா ராக்ஷஸ திரி எரியுதே!
பிள்ளையார் கோயில். உள்ளே நமக்குப் பரிச்சயமான அய்யப்பன், மதுரை மீனாக்ஷி,முருகன், ஆஞ்சநேயர் எல்லாம் இருக்காங்க. சின்னக் கட்டிடம்தான். ஆனா இந்த காம்பவுண்டுலே தனியா ஒரு சிவ(ர்)ன் கோவில்கொண்டு இருக்கார். அதே அபிஷேகம் இங்கேயும் நடக்குது. நல்லாத் தரையோடு பதிந்த லிங்கம்.வெளியே இன்னொரு மரத்தடிக்குப் பக்கம் ஸ்ரீ ராமர், தன்னுடைய கூட்டத்தோடு பளிங்குலே பளிச். முந்தி எப்பவோ பார்த்த ஒரு டி.வி. சீரியலில் குடும்பம் முழுசும் ஒரே டிசைன் துணியில் உடுத்தி இருப்பாங்க. அது ஞாபகம் வந்தது. ஸ்ரீராமர் & கோ சிகப்புலே ஜிகுனா வச்ச துணியில் அலங்காரம். ஆஞ்சநேயர் முகம் அருமை. அப்படியே கபுக்ன்னு இடுப்புலே தூக்கி வச்சுக்கிட்டு நழுவிறலாமான்னு ஒரு நிமிஷம் யோசிக்க வச்சது.


ரெண்டு கோயிலுக்கும் சேர்த்து அமைஞ்ச காலி மைதானத்துலே மருதாணி போட்டுவிடறதுலே இருந்து, பழைய காசுகள்(??)விக்கறதுவரை விதவிதமான வியாபாரம். பழைய காசுன்னதும் நப்பாசை. கவனிச்சுப் பார்த்தால் சொந்தமா மிண்ட் வச்சு உண்டாக்குனது(-: நேரமாச்சுன்னு மங்கை கிளம்புனாங்க. லெட்சுமியும் கூட இருந்தாங்கன்னா மஜாவா இருந்துருக்குமுன்னு நினைச்சேன். ஆனா பொண்ணுபள்ளிக்கூடம் போகணுமே! ( அப்புறம் லெட்சுமியோட போன் பேசுனப்ப சொன்னாங்க, அன்னிக்குப் பள்ளிக்கூடம் லீவாம். அடடா..... தெரியாமப்போச்சே(-: அண்ணாத்தைக்கூட சுத்துற ச்சான்ஸை மிஸ் பண்ணிட்டேனே(-: இன்னும் மங்கையும் லெட்சுமியைச் சந்திக்கலைன்னு சொன்னாங்க. ஒரு பேரணியோடு மாநாடு நடத்தி இருக்கலாம்!))

நானாச்சும் வலையிலே எல்லாரையும் தம்பின்னுக்கிட்டு இருக்கேன். மங்கை என்னடான்னா பூரா டெல்லியையே 'பையா'ன்னு கூப்புட்டுக்கிட்டு இருக்காங்க! இது ஹிந்தி பையா:-))))

இப்படியாகத் தலைநகரில் தமிழச்சிகளின் மாநாடு நடந்து முடிஞ்சது. தலைப்புனதுக்கு மங்கைக்கு நன்றி.

பி.கு: கலெக்ஷனுக்கு ஒரு தீம் வச்சுக்கறது நல்லது. எல்லாம் 'பிறருக்கு உதவியா' இருக்கும் என்ற நல்ல எண்ணம்தான்:-)))
முன் அனுமதி இல்லாம 'அண்ணாத்தை' படம் போட்டுருக்கேன். ஒரு உரிமையோடுதான்..........பரவாயில்லைதானே?

28 comments:

  1. அங்கு கோயில்ல புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறாங்களா? பரவாயில்லையே.
    டில்லியை ஒரு சுற்று சுற்றி வந்த மாதிரி இருந்தது.

    ReplyDelete
  2. வாங்க காட்டாறு.

    என்னங்க இன்னிக்கு வெள்ளம் நம்ம பக்கம் பாஞ்சிருக்கு!!!!!

    உங்க 'தாரா'வெல்லாம் பார்த்தேங்க. உடனே அங்கேயே சொல்லி இருக்கணும் இல்லே?
    ஆனா.மறக்கலை. 'இதா இவிட வரே' போய் வரலாமுன்னுதான்...........

    புரிஞ்சுதுங்களா? :-)))))

    இங்கே எங்கூர்லே கூட மூலவரைப் படம் எடுக்கலாம்.

    ReplyDelete
  3. துளசி
    தலைப்பைப் பார்த்த உடனே எந்த தலைநகர்? யார் தமிழிச்சிகள்? என்று.:-))
    டில்லியை ஒரு வட்டம் போட்டிடீங்கபோலிருக்கே!
    //இது ஹிந்தி பையா:-))))//
    அருமை! சோதரனாத் தானே!

    ReplyDelete
  4. பதிவு பாத்திரக் கடையிலே "துளசி" புகுந்தாப்ல இருக்கும்னு நினைச்சேன்...மூணு பேர் கூடியிருக்கீங்களே!

    ReplyDelete
  5. வாங்க செல்லி.

    'பைய'னை ச்சிக்கெனப் பிடிச்சிட்டீங்க:-))))

    ReplyDelete
  6. வாங்க சிஜி.

    தீம் வச்சுக்கிட்டா எப்படியெல்லாம் பயன்படுது பாருங்க:-)))

    ReplyDelete
  7. சிறப்பு அட்டையை பயண்படுத்துவர்களில் இன்னொருவரும் சேர்ந்திருக்கார்
    1.இ.கொத்தனார்
    2.நீங்க தான்
    3.VSK
    4.சிவஞானம் ஜி.:-))
    கோயிலுக்கு நடுவில் திருமதி.லட்சுமி வீட்டுக்கு போய் வந்துவிட்டீர்களா?

    ReplyDelete
  8. ஆமாங்க, அக்ஷருக்கும் கல்காவுக்கும் நடுவிலே (முத்து)லெட்சுமியைப் பார்த்தேன்:-)

    ReplyDelete
  9. உங்களுக்கு உலகம் சுற்றும் வாலிபி(!)ன்னு ஒரு பட்டம் குடுத்துரலாம் போலருக்கு.. அசத்துறீங்க:)

    ReplyDelete
  10. உங்க அண்ணன் படம் போட
    உரிமை இல்லையா என்ன ?
    நியூசில இருந்து வந்து இந்தா பக்கத்துல இருக்க மங்கையைப்
    போன்ற அருமையான தோழியை
    அறிமுகப்படுத்திய துளசிக்கு
    கோடி நன்றிகள்.
    [குகைக்கோயில் அமர் நாத் போல இல்லை...வைஷ்ணவ் தேவி குகைக்கோயில் போல.]அடுத்த தடவை வரும்போது காமிக்கறேன்.

    ReplyDelete
  11. ஹை..பதிவு போட்டாச்சா...

    டாக்கிங், டாக்கிங் பதிவு போட்ட கையோட உங்களை பார்க்க வந்தனா.. அந்த எஃபெக்ட்...:-))

    அதுவும் லீவ் போடாம கட் அடிச்சுட்டு சுத்தற சுகலே தனி..

    //ஒரு கெமிஸ்ட்ரி இருக்கத்தான் செய்யுது//

    லட்சுமி, துளசி..ரெண்டு பேருக்கும் நன்றி..

    ReplyDelete
  12. துளசியக்கா!
    ஒங்க அண்ணாச்சி ரொம்ம Handsome இருக்கிறார். அங்குள்ள கோவில் சிலைகள் வெண்பளிங்கு நிறத்தில் இருப்பதற்கு; எதாவது விசேட காரணம் உண்டா??
    டெல்லியில் தென்னிந்தியக் கட்டிடக் கலையுடன் கோவிலுண்டா??

    ReplyDelete
  13. நான் கூட அந்த டெல்லி டாக்ஸிங்களுக்கு நிறையா தண்டம் அழுது இருக்கேன். ரொம்ப ஏமாத்து ஊருங்க. அதுவும் அந்த ஊர் பிடிக்காம போனதுக்கு ஒரு காரணம்.

    அந்த கலங்கல ஒரு படம் போட்டு இருக்கீங்களே. அது என்ன?

    குமார், என்ன சொல்லறீங்க? புரியலையே.

    ReplyDelete
  14. சொல்லியிருந்தீகன்னா சந்தோஷப் பட்டுருப்பேன்ல.... சரி அதனால என்ன.. இப்போ சந்தோஷம் தான். நீங்க சொன்ன எல்லாம் புரிஞ்சுது..... (ஏய்......... அங்க ஙாஙாஙாஙாஙாஙான்னு தலய சொறியிறது யாரு.... காட்டாறு தாங்கோவ்)

    ReplyDelete
  15. குருவாயூரப்பனுக்கு ஏன் கொக்கி?

    ReplyDelete
  16. Hello!
    This work is very good. Thank you
    Have a good week

    ReplyDelete
  17. வாங்க முத்துலெட்சுமி.

    கோடி நன்றிகள் எல்லாம் இருக்கட்டும். வந்து வாங்கிக்கறேன்:-))))

    ReplyDelete
  18. வாங்க மங்கை.

    //அதுவும் லீவ் போடாம கட் அடிச்சுட்டு சுத்தற சுகலே தனி..//

    அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்க. யாராவது போட்டுக் கொடுத்துறப்போறாங்க:-)

    ReplyDelete
  19. வாங்க யோகன்.

    //ஒங்க அண்ணாச்சி ரொம்ம Handsome இருக்கிறார். //

    இருக்கமாட்டாரா பின்னே? அழகு நம்ம குடும்ப சொத்தாச்சுங்களே!

    //அங்குள்ள கோவில் சிலைகள் வெண்பளிங்கு
    நிறத்தில் இருப்பதற்கு; எதாவது விசேட காரணம் உண்டா??//

    இந்தக் கல்தான் இங்கே பரவலாக் கிடைக்குதோ என்னவோ? இல்லாட்டி,
    வடக்கத்து ஆளுங்க நம்மைவிட( தென் இந்தியரைவிட) கொஞ்சம் நிறம் தூக்கல்தானே?
    அதோட எஃபெக்ட்?

    அது போட்டும், 'கறுப்புத்தான் நமக்குப் பிடிச்ச கலரு? ' இல்லியா?


    //டெல்லியில் தென்னிந்தியக் கட்டிடக் கலையுடன் கோவிலுண்டா??//

    ஏன் இல்லாம? பொறுங்க, பதிவு வந்துக்கிட்டு இருக்கு.

    ReplyDelete
  20. வாங்க கொத்ஸ்.

    டாக்ஸிக்கார் உங்களையும் பதம் பார்த்தாச்சா?

    அந்தக் 'கலங்கல்' கை ஆடுனதாலே( பக்திப் பரவசம்?) ஏற்பட்ட குழப்பம். மஞ்சள் மாலைக்குள்ளில் முகம்
    பார்க்க முடியலையா? (-:


    ஓவர் டு குமார்:-)

    ReplyDelete
  21. வாங்க சர்வேசா.

    'அம்மே நாராயணா'ன்னு கோவில் முகப்புலே எழுதி இருந்துச்சு. ஆனாலும்
    அங்கே ஒரு ஐய்யப்பன் கோவிலும் இருக்குன்னு கேள்விப்பட்டதாலே இது
    அதுவோ இல்லை எதுவோன்னு ஒரு ஐயம். அதான் கொக்கி:-)

    ReplyDelete
  22. david santos,

    Thanks.

    பாருங்க, நம்ம பதிவுக்கு போர்த்துக்கீசியருங்கல்லாம் வந்து போறதை:-)

    வாழ்க! தமிழின் புகழ் திக்கெட்டும் பரவுது:-))

    ReplyDelete
  23. வாங்க டிபிஆர்ஜோ.

    என்னத்தை உலகம் சுத்தறேன்? ச்சும்மா ஒரு வாரப் பயணத்தையெல்லாம் ஒரு
    முப்பது பதிவாப் போட்டுடறதுதான்:-))))

    ReplyDelete
  24. துளசி,
    கோவிலும் சந்திப்பும் சூப்பர்.பாவம் லட்சுமிக்குக் கையும் காலும் ஓடீருக்காது:-)
    அண்ணாத்தை ரொம்ப நல்லாவே போஸ் கொடுத்து இருக்காரு.
    சுறுசுறுப்பே உன் பெயர் துளசியா.செவ்வாய்க்கிழமை முருகனைப் பார்த்தாச்சு.
    துளசி உபயம்.:-)

    ReplyDelete
  25. வாங்க வல்லி.

    //செவ்வாய்க்கிழமை முருகனைப் பார்த்தாச்சு.
    துளசி உபயம்.:-) //

    புண்ணியத்தில் பாதியை உடனே அனுப்பி வைக்கணும்,ஆமா...:-)

    அண்ணாத்தை ரொம்ப 'க்யூட்' இல்லே? எல்லாம் குடும்ப சொத்து:-)))

    ReplyDelete
  26. //டெல்லியில் தென்னிந்தியக் கட்டிடக் கலையுடன் கோவிலுண்டா??//

    yes.
    list of south indian temples:
    * Malai Mandir--RK Puram
    * Sri Venkateshwara temple-RK Puram
    Ayyappan Temple----RK Puram
    * Kamakshi Amman Temple--Munirka (near Qutab Minar)
    * Vaishnava temple--Munirka
    Guruvayur temple--Mayur Vihar
    Ganesh Temple---Sarojini Nagar
    Ganesh temple--Mayur Vihar
    Rajarajeswari temple-- JanakPuri
    (*) -- these temples have a reasonable size Gopuram, Tamilnadu style. There could be some more, but the above mentioned were very popular.

    ReplyDelete
  27. இந்தக் கோவில் பளிங்கு சிலைகள் அழகு.... இந்தக் கோவில் பக்கதிலேயே ஒரு 500 மீட்டர் தொலைவில் இன்னுமொரு ஆஞ்சனேயர் கோவில் - இவங்க பாஷையில் ப்ராசீன் ஹனுமான் மந்திர்.. இருக்கு!

    பிள்ளையார் கோவில் தனியானது - தில்லியில் இருக்கும் தமிழ் கோவில்களில் மிகவும் பழமையானது!

    2007 - ல உங்களையெல்லாம் பாக்காமே உட்டுட்டேனே!

    ReplyDelete
  28. எப்போ சந்திக்கணுமுன்னு விதிச்சிருக்கோ அப்போதானே சந்திக்க முடியும் இல்லையா:-)))

    கோபால் ஆஃபீஸில் பிஸி. நான் தனியாதான் சுத்திக்கிட்டு இருந்தேன் அப்ப:-)))

    ஒரு ஏழெட்டு பதிவு தில்லிக்கே இருக்கு இதுலே.

    ReplyDelete