Sunday, April 23, 2006

ஆடிய ஆட்டமென்ன?

போனவாரம் இது நடந்துச்சு. அப்ப இருந்து எழுதலாமா, வேணாமான்னு ஒரு யோசனை.


ஆரம்பகாலக் கட்டமுன்னு சொல்லப்போனா ஒரு ரெண்டு வருசத்துக்கதை. நம்ம வலைஞர்கள்நிறைய(!)பேர் அவுங்க இருக்கற இடங்களிலே,'இந்தியன் எம்பஸி'க்கு எதாவது வேலையாப் போயிட்டு அங்கே நடக்குறதை யெல்லாம்,சிரிக்க சிந்திக்கன்னு எழுதுனதைப் படிச்சிருக்கேன். அப்ப, நான் நினைச்சுக்கறது என்னன்னா, நல்லவேளை, இங்கே நியூஸியிலே இன்னும் அந்த அளவுக்கு வரலை. பரவாயில்லாம ஒரு ஒழுங்குமுறையிலேதான் நடந்துக்கிட்டு வருது'ன்னு. அதுக்கும் வச்சாருப்பா ஆப்பு!



நாங்க இங்கே வர்றதுக்கு முன்னாலெ ஃபிஜித் தீவுகளில் இருந்துருக்கோம். அங்கேதான், என் வாழ்க்கையிலே மொதமொதலா ஒரு இந்திய ஹைகமிஷனரைப் பார்த்தேன். பெரிய இடமாச்சேன்னு ஒரு பயம் இருந்துச்சுதான்.ஆனா நல்ல நட்பு உணர்வு கொண்ட குடும்பம். பந்தா இல்லாத வாழ்க்கை. நமக்கும் 'சட்'னு குளிர் விட்டுப் போச்சு.ஒருவேளை, அது ரொம்பச் சின்ன நாடு. NRI கணக்குலே பார்த்தா ரொம்பக் குறைவான ஆட்கள். அதனாலேகூடஅப்படி ஒரு ஒட்டுதல் வந்திருக்கலாம்.


இங்கே நியூஸிக்கு வந்த புதுசு. இந்தியர்கள் இருக்காங்க. ஆனா அதுலே கிட்டத்தட்ட 90 சதவீதம் குஜராத்தியர்கள்.எல்லாம் இடிஅமீன் காலத்துலே உகாண்டாலே இருந்து பிரிட்டன் போய், அங்கிருந்து இங்கே குடியேறியவங்க. அந்தக் காலக்கட்டத்துலே இங்கே குடியேறும் சட்டதிட்டங்கள் எல்லாம் கொஞ்சம் வேற மாதிரி இருந்துச்சு. இங்கிலாந்துஆட்கள் மட்டுமே வரமுடிஞ்ச காலம். அப்புறம் அக்கம்பக்கத்துத் தீவுகளான சமோவா, ஃபிஜித்தீவுன்னு கொஞ்சம் மக்கள் வந்து இங்கே சில மாசங்கள் வேலை செஞ்சுட்டுத் திரும்பப்போறது வழக்கமா இருந்துச்சு. மாணவர்களும் மேற்படிப்பை முன்னிட்டு சில வருசங்கள் தங்கிப் படிச்சுட்டுத் திரும்ப அவுங்க நாட்டுக்குப் போய்க்கிட்டு இருந்தாங்க.மாணவர்களா வந்தாங்கன்னா, கூடவே மனைவி,பிள்ளைகளைக் கொண்டுவரலாமுன்னும் ஒரு வசதி இருந்துச்சு.


இங்கே வேலை கிடைச்சா, அதன்காரணமா குடியேற்ற உரிமை வாங்கிக்கிட்டுக் குடும்பத்தோட வந்தவங்களும் உண்டு.இந்தியாவோட இருந்த வியாபாரமும் அவ்வளவா இல்லாத காலம்தான் அது. அப்ப இங்கே இருந்த நம்ம இந்திய ஹைகமிஷனுக்கு அவ்வளவா வேலைப்பளு இல்லைதான். டூரிஸ்ட்டுங்களுக்கு விஸா கொடுக்கறதும், நல்லெண்ணத் தூதுவர்ற அதிகாரிகளையும், அமைச்சர்களையும் வரவேற்கறதும் முக்கிய வேலையா இருந்திருக்கு.


இங்கே லேபர் பார்ட்டியும் நேஷனல் பார்ட்டியும் மாறிமாறி ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்தப்பக் கொஞ்சம் கொஞ்சமா இந்தக்குடியேத்த சட்டமெல்லாம் மாறி, பாயிண்ட் சிஸ்டமுன்னு ஒண்ணு கொண்டு வந்தாங்க. படிப்பு, வயசு, அனுபவம் இப்படி ஒவ்வொண்ணும் கொஞ்சம் மார்க் போட்டு குறைஞ்சது ..... மார்க்/பாயிண்ட்ஸ் இருந்தா இங்கே வந்து குடியேறிக்கலாம்.
அந்த சமயத்துலே பல நாடுகளில் இருந்தும் மக்கள் வரத்தொடங்குனாங்க. இந்தியாவிலிருந்தும் வந்தாங்க. இங்கே இந்தியர்ங்க வந்தவுடனே அவுங்க தொடர்புள்ள சாப்பாட்டுச் சாமான்கள், நகை நட்டு, பண்டபாத்திரம்னு வியாபாரமும்பெருகத் தொடங்குச்சுங்க. இப்ப நம்ம ஹைகமிஷனுக்கு வேலை கூடிக்கிட்டே வந்துச்சு. புதுசுபுதுசா ஆளுங்களும்இந்தியாவுக்கு சுற்றுலா போறது, வியாபார நிமித்தமாப் போறதுன்னு ஆச்சுங்களா, அப்ப அவுங்களுக்கு விஸா கொடுக்கறதும்கூடிக்கிட்டே வந்துச்சுங்க.


அப்புறம் இந்திய சினிமாக்களுக்குப் பாட்டுக் காட்சிங்க எடுக்கறதுன்னு வந்து போனாங்க பாருங்க,அப்ப இங்கத்து ஜனங்களுக்கும் இந்தியாவைப் பத்தி ஒரு ஆர்வம் உண்டாச்சுங்க. மான்சூன் வெட்டிங், ப்ரைட்& ப்ரிஜுடிஸ் ன்னுஇண்டியனைஸ்டு வெள்ளைக்காரப் படங்கள் இங்கே தியேட்டரில் சக்கைப்போடு போட்டுச்சுங்க. 'பாலிவுட்'ன்றவார்த்தையை வெள்ளக்காரங்க கத்துக்கிட்டாங்கன்னா பாருங்களேன்.



மூணு நாலு வருசத்துக்கு ஒருதடவைன்னு புதுப்புது ஹைகமிஷனருங்களும் வந்து போய்க்கிட்டு நல்லா 'ஜேஜே'ன்னுதாங்கஇருந்துச்சு. இப்ப ஒரு மூணு வருசத்துக்கு முன்னாலே இருந்த ஹைகமிஷனரும் நம்ம ஊருக்கு வந்துட்டு, நம்மமக்களையெல்லாம் கண்டுக்கிட்டுத்தாங்க போனார். எல்லாம் இப்படி நல்லபடியாப் போனதுக்குக் கண்ணு வுழுந்துருச்சுங்க.


புது ஹைகமிஷனர் வந்தார். விஸா கொடுக்கறதுலே தாமதம், அங்கே கமிஷன்லே வேலை செய்யறவங்க ரொம்பகெடுபிடி காட்டறது, ஃபோன் செஞ்சு விவரம் கேக்கறவங்களை மிரட்டுறது, இன்னும் என்னென்ன விதத்துலே மக்களைக்கேவலப்படுத்த முடியுமோ அத்தனையையும் கர்ம சிரத்தையாச் செஞ்சாங்க.


ஒரு பள்ளிக்கூடத்துலே 30 பசங்க இந்தியாவுக்கு சுற்றுலா & சமூகசேவை விஷயமா போறதுக்கு விஸா கேட்டுருந்தாங்க.இதோ அதோன்னு இழுத்தடிச்சுட்டாங்க. அதுவும் விண்ணப்பம் கொடுத்து ஒரு வாரம்,இல்லே கூடிப்போனா ரெண்டு வாரத்துலேவழக்கமாக் கொடுத்துக்கிட்டு இருந்த அனுமதிங்களையெல்லாம் எவ்வளோநாள் இழுத்தடிச்சாங்கன்னா, ஆறு மாசம்! இப்ப விஸா வந்திருக்கு ஒரு பதிமூணு பேருக்கு மட்டும்.அதுக்குள்ளே அந்தப் பசங்க பள்ளிப்படிப்பை முடிச்சுட்டு யூனிவர்சிட்டி போயிருச்சுங்க.


ஒரு பெரிய வியாபாரத்துலே இருந்தவருக்கு விஸா தரலை. அவரை ஒரு தீவிரவாதின்னு இவுங்களே முடிவுசெஞ்சுட்டாங்களாம். இவ்வளோ ஏன், எங்க வீட்டுக்காரரோட முதலாளிக்கு விஸா அனுமதிக்கு பாஸ்போர்ட்டை அனுப்பிட்டுக் காத்திருந்தாங்க பாருங்க, அப்படி ஒரு காத்திருப்பு. பயணத்துக்கான நாளோ வந்துருச்சு. மறுநாள் கிளம்பணும். மொதநாள் வரை ஒண்ணும் நடக்கலை. ஃபோன் போட்டுக் கேட்டதுக்கு அப்படி ஒரு அவமரியாதையான பதில். கூட நம்ம இவரும் போறார். ஆனா நாங்க யார் செஞ்ச புண்ணியமோ, மூணு வருசத்துக்கு முன்னாலே அனுமதி எடுத்தப்ப 5 வருசத்துக்குச் சேர்த்து எடுத்துருந்தோம். முதலாளியோட பாஸ்போர்ட்டெல்லாம் மறுநாள் காலையிலே 10க்கு வந்து, 1 மணிக்குக் கிளம்பிப் போனார். இப்படி வியாபார நிமித்தமாப் போறவங்களுக்கு எதிராஅவுங்களுக்கு ஏன் அப்படி ஒரு ஆத்திரமுன்னு தெரியலை. இதனாலே ரெண்டு நாட்டுக்கும் எவ்வளோ நஷ்டமுன்னுசொல்றீங்க? அனுமதிக்கு ஸ்டாம்பு அடிக்கறதும் அவுங்க இஷ்டப்பட்டாதான். என்ன ஆச்சுன்னு நடுவிலே கேட்டோமுன்னா தொலைஞ்சோம். காதை நிறைச்சிருவாங்க.


எல்லாரும் அவுங்க பட்ட அவமானம்/கஷ்டங்கள் எல்லாம் வெளியே அவ்வளவாச் சொல்லாம இருந்த நிலையிலே இந்தப் பள்ளிக்கூடப்பசங்களைப் பத்தின விஷயம் லோகல் பேப்பருலே வெளி ஆயிருச்சு. அதுக்கப்புறம் மத்தவங்கஎல்லாம் அவுங்க அனுபவங்களைச் சொல்லப்போய் இது ரொம்ப நாள் நடக்குதுன்னு புரிஞ்சது.

அதுக்கப்புறம்தான் இந்தவிஷயத்தைப் பத்தி இந்திய அரசாங்கத்துக்குச் செய்தி போயிருக்கு. அவுங்களும் வழக்கம்போல ஆறப்போடாம,அபூர்வமா உடனே இந்த விஷயத்தைக் கையிலெடுத்து இப்ப இருக்கறவரை 'டிஸ்மிஸ்' செஞ்சுட்டாங்க. 'உடனே திரும்பஇந்தியாவுக்கு வா'ன்னும் சொல்லியாச்சு.


இப்ப இந்த வேலை நீக்கப்பட்ட ஹைகமிஷனர், 'நான் திரும்பிப்போக மாட்டேன். அங்கே போனா என் உயிருக்கு ஆபத்து.இங்கேயே அடைக்கலம் கொடுங்க'ன்னு கேட்டுக்கிட்டு வூட்டுக்குள்ளேயே ஒளிஞ்சிருக்கார். டிவிக்காரங்க விஷயம்விசாரிக்கப்போனாக்கூட வெளியே வரமாட்டேன்னு ஜன்னல்திரையை எல்லாம் மூடறார். அதையும் டிவியிலேதான் பார்த்தோமுங்க.


இது ரெண்டு அரசாங்கம் சம்பந்தப்பட்டதுன்றதாலே வீடுபுகுந்து அவரைத் தூக்கமுடியாது. என்ன இருந்தாலும் இங்கத்துப்போலீஸும் ரொம்ப 'ஸாஃப்ட்'தான். ஒரு அதி முக்கியமான பிரிவைத்தவிர மத்த போலீஸ்காரங்ககிட்டே துப்பாக்கி,கம்பு இப்படி ஒண்ணும் கிடையாதுங்க. அதிலும் நம்ம இந்திய சினிமாப் போலீஸைப் பார்த்துட்டு இவுங்களைப் பார்த்தா இவுங்கெல்லாம், 'ஹூம் ஒண்ணும் வேலைக்காகாது'ன்னு தோணிப்போகும்.


அம்மா, (எங்களுக்கும் அம்மா இருக்காங்கல்லே!) டிவிலே வந்து சொல்லிட்டாங்க, சட்டப்படி என்ன நடவடிக்கையோ அதைச் செய்வோம். இவருக்காக தனிப்பட்ட முறையிலே ஒண்ணும் செய்ய முடியாது. எல்லாரும் ஒண்ணுதான்'ன்னுசொல்லிட்டாங்க.


ஆனா ஒண்ணுங்க. இதைப் பத்தித்தெரிஞ்சபிறகு, மத்த நாடுகளிலே இருக்கற ஹைகமிஷன் கொஞ்சமாவது சுதாரிச்சிக்கும். இல்லீங்களா?

இப்பத்தைக்கு இவ்ளோதான். இதைப்பத்தி இன்னும் விவரம் வந்துச்சுன்னா அப்பச் சொல்றேன்.


பி.கு: நம்ம வாசகநண்பர் ஒருவர் இதைக் குறிச்சுத் தெரிஞ்சுக்கணுமுன்னு கேட்டார். அவரோட தனிமயில் ஐடிகிடைக்கலை. அவர் இதைப் படிப்பார் என்று நம்புவோமாக.

28 comments:

  1. நல்ல பதிவு... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Thulasi , just imagine these peoples' plight if the roles are reversed. I would love to see them beg for getting out of the situation. It is sad only our people behave this way. we never have problems facing the other countries' visa interviews.Even if we did we can console ' pona poittu porathu.there is always next time." but as you say this definetly does not help both countries economies.

    ReplyDelete
  3. சம்பந்தப்பட்ட ஹைகமிஷனரின் புகைப்படம் இருந்தால் போடவும், பெயரை முக்கியமாக எழுதவும்.

    இந்தியாவில் என்ன கஷ்டமாம் அந்த மனிதருக்கு? இங்கு என்ன கெடுபிடி ஆட்சியா நடக்கிறது? நம் நாட்டின் பெயரை ரிப்பேராக்க இப்படியும் சில ஜன்மங்கள்..

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. ராம்ஸ் & மானு,

    வாங்க. வாங்க. வருகைக்கு நன்றிங்க.

    இப்படித்தாங்க சிலபேர் பேஜார் செஞ்சுடறாங்க.

    ReplyDelete
  5. டோண்டு,

    இது டிவிலே வந்துச்சு. அதோட இங்க கீழே கொடுத்துருக்கேன்.


    பாருங்க.

    ReplyDelete
  6. India voda maanam ippadiyellaam poganuma? thanks for the link.most modern media Thulasidhalam.appreciate it very much.

    ReplyDelete
  7. அபிராமம்,

    எழுதவச்சதுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  8. மானு,

    சீக்கிரம் இ கலப்பையை எடுத்து வந்து தமிழிலே உழுங்களேன்.

    'விளம்பரம்'நல்லாத்தான் இருக்கு. அதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

    ReplyDelete
  9. இப்படி எல்லாம் கூட நடக்குதாக்கா... அநியாயமா இருக்கே!!!

    ReplyDelete
  10. வாம்மா பொன்ஸ்.

    என்ன? இப்படிக்கூட நடக்குதாவா?

    உள் வலைக்கட்சியிலே ஓடியாடிக்கிட்டுத் திரிஞ்சா எப்படி?
    வ.வா.ச x ப.ம.கன்னு.......

    வெளியிலே இன்னும் அக்குருமம் எல்லாம் நடக்குதேம்மா....

    கண்ணைத் திறந்து பாரம்மா...

    ReplyDelete
  11. இந்திய பத்திரிகைகளிலும் இது பற்றி வந்திருந்ததே! டோண்டுவிற்காக சுட்டி

    ReplyDelete
  12. வாங்க மணியன்.

    சுட்டியை மாத்திக்கொடுத்துட்டீங்க போல இருக்கே.
    அதுலே 'துளசிதளம்' தான் வருது.

    ReplyDelete
  13. இது மாதிரி ஆளுங்களாலே தான் இந்தியாவோட மானம் போறது!

    ReplyDelete
  14. ஆமாங்க உதயகுமார். இப்படியும் 'சிலர்'

    ReplyDelete
  15. அசைக்க முடியாத ஆதாரங்களைப் போட்டு அசத்திட்டீங்க, திருமதி. கோபால்.

    படிக்கவே கஷ்டமா இருக்கு.

    எந்த ஊருக்குப் போனாலும் நம்ம ஆளுங்க ஏன் இப்படிப் பண்றாங்கன்னு புரிஞ்சுக்கவே முடியலை!

    திரு. ஹரிஷ் டோக்ரா விரைவில் வெளியேற என் பிரார்த்தனைகள்!

    ReplyDelete
  16. thanks for sharing this. Have linked it in desipundit.
    http://www.desipundit.com/2006/04/23/nzhighcommision/

    ReplyDelete
  17. என்னங்க எஸ்.கே,
    நல்லா இருக்கீங்களா?

    //திரு. ஹரிஷ் டோக்ரா விரைவில் வெளியேற
    என் பிரார்த்தனைகள்! //

    எங்கேங்க? அவர்தான் இன்னும் அரசாங்க வீட்டைக்கூடக் காலி செய்யமாட்டேன்னு
    இருக்காரே.

    பொதுவா இங்கே பி.ஆர். அப்ளை செய்யணுமுன்னா அவுங்கவுங்க நாட்டுலே இருந்துதான்
    செய்யணும். அதுக்காகத்தான் இங்கேயே எப்படியாவது இருக்கறதுக்காக 'அடைக்கலம்'
    கேக்கறார். இது எப்படி இருக்கு!

    ReplyDelete
  18. அடடா டுபுக்குவா வாங்க வாங்க.
    தேசிபண்டிட்லே போட்டாச்சா. தேங்க்ஸ்ங்க.

    ReplyDelete
  19. Hi Thulasi, e-kalappai is not working out.Have gone and tried in all sites.
    muyarchi mey varutha kooli tharum Illaya?
    so I shd get it done. Thank you for replying.

    ReplyDelete
  20. பேசாமல் லிங்கை ஒட்டி விடுகிறேன்
    http://www.dnaindia.com/report.asp?NewsID=1024258

    ReplyDelete
  21. ஆகா! இங்க பாருப்பா...ஊரு விட்டு ஊரு வந்து அட்டூழியம் பண்றாங்க....அக்குரமம் பிடிச்சவனுங்க....

    ReplyDelete
  22. ராகவன்,

    ம்ம்ம்ம்ம் பாருங்க, பாருங்க எப்படியெல்லாம் நடக்குன்னு.

    ReplyDelete
  23. அன்புள்ள துளசி கோபால்,
    உங்கள் கட்டுரையை முதன் முதலாக இப்போதுதான் படித்தேன்.
    ஏனெனில் நானே இந்த வலையூருக்குப் புதியவன்.
    மிகவும் பரிச்சயமானவர்களையெல்லாம் சுற்றி உட்காரவைத்துக் கொண்டு சுவாரசியமான கதை ஒன்றை சொல்லுவதைப் போன்ற உங்கள் Style எல்லோரையும் கவரும் என்பது என் கருத்து.
    சொல்லிய விஷயமும் பயனுள்ளதுதான்.
    பாராட்டுக்கள்.
    அன்புடன்,
    ஜவஹர்.

    ReplyDelete
  24. வாங்க ஜவஹர்,

    நான் ஒரு 'கதை சொல்லி' (அதாங்க story teller)தாங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
    நேரம் இருக்குறப்ப அப்படியே பின்னாலெ நம்ம கிட்டாங்கிப் பக்கம் போய்ப் பாருங்க.
    எதாவது நல்லதா(!) இருந்தாலும் இருக்கும். அது உங்க அதிர்ஷ்டத்தைப் பொறுத்து:-))))))

    வர்ற வாசகரை அப்படியே விட்டுற முடியுங்களா? அமுக்கிப் போட்டுறவேணாம்?

    ReplyDelete
  25. டோக்ரா "இந்தியாவுக்கு திருமப போனா உயிருக்கு ஆபத்துன்னு" சொல்றதுதான் உச்சகட்ட காமெடி. இவர கொல்ற அளவுக்கு அங்க வேலயத்து போயி எந்த பார்ட்டி அலையுதுன்னு தெரியல.

    நீண்ட நாடகளுக்கு பின் வந்ததுக்கு நன்றின்னு நீங்க மறுமொழி இடுவீங்க (தானே?) அதுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  26. //நீண்ட நாட்களுக்கு பின் வந்ததுக்கு நன்றின்னு நீங்க மறுமொழி இடுவீங்க (தானே?) அதுக்கு நன்றிங்க.//

    சுரேஷூ,
    எல்லாம் தமக்குத்தாமே திட்டமா?:-))))

    ReplyDelete
  27. அம்மான்னா, கொஞ்சம் ஸ்ஸ்ட்ட்ராங்கா கட்டண்ரைட்டா இருக்க வேணாமா? போலீஸ்தான் ஸாfடுன்னா, உங்க ஊர் அம்மாவுமா?சாந்த ஹை கமிஷனரை இங்க அனுப்பறது சரி, முதல்ல அம்மாவை இங்க வரச் சொல்லுங்க, நம்ம அம்மாகிட்ட கொஞ்சம் ட்ரெயினிங் எடுத்துகிட்டு போக!

    ReplyDelete
  28. வாங்க ஜெய.சந்திரசேகரன்.

    எங்க அம்மாவும் கொஞ்சம் tough தான். ஆனால் தேசமே ரொம்ப naive ஆச்சேங்களே.
    பேசாம நானே இங்கத்து 'அம்மா' ஆயிறலாமுன்னு இருக்கேன்:-)))

    ReplyDelete