Monday, June 09, 2025

திருக்கருகாவூர் (2025 இந்தியப்பயணம் பகுதி 30 )

இன்றைய நாள் இப்படி நீண்டுபோகுமுன்னு தோணவே இல்லை.  போன பயணத்தில் தென்தமிழகம் வந்துபோக வாய்ப்பில்லாமல் போனதால்......  இந்தப் பயணத்தில் கட்டாயம் போகவேண்டிய கோவிலுக்குக் காலை ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும் கிளம்பிட்டோம். எல்லாம் நன்றி சொல்லவேண்டியதற்கே !  சொந்தப் பிரார்த்தனை. 
ஒரு இருபது கிமீ தூரம்தான்.  நேத்து தஞ்சையிலிருந்து  கும்மோணம் வந்தோமே அதே தேசிய நெடுஞ்சாலையில்தான்,   தஞ்சை நோக்கிப் போறோம். புளியமங்கலம் வந்ததும் இடப்பக்கம் திரும்பி நேராப் போகணும். 
 மொத்தத்தில்  ரயாஸில் இருந்து கிளம்பிய அரைமணியில் போயிருந்தோம். 
போனமுறை பார்த்த இடம் மாதிரித் தெரியலை.  ஆச்சே,  அஞ்சு வருசம்.  மாறாமல் இருந்தால்தான் ஆச்சரியம் !
குளம் பார்த்ததும்தான்  அதே இடமுன்னு மனசுக்கு நிம்மதியாச்சு. 

கண்பார்வையில் படாத ராஜகோபுரத்தை  (! )கடந்து  வாசல் உள்ளே போறோம். நேரெதிரா மூலவர் சந்நிதி. நல்ல பெரிய கோவில்தான் !  ஆனால்  எனக்கு முதலில் அம்மாவை தரிசிக்கணும்.  முன் மண்டபத்துக்கு வலப்பக்கம் தனிக்கோவில் போலவே இருக்கும் சந்நிதியில் அம்பாள் !  ஸ்ரீ கர்ப ரக்ஷகாம்பிகை என்னும் கருக்காத்த அம்பாள் . 





உள்ளே நுழையும்போதே  பூக்களால் அலங்கரித்தத் தங்கத்தொட்டில் (வெள்ளியும் தங்கமுமாய் டிஸைன்  செஞ்சது) கண்ணில் பட்டது.  அம்பாளை முதலில் கும்பிட்டுக்கலாமுன்னு போயிட்டோம்.  சந்நிதியில் நல்ல கூட்டம். ஆனாலும் நல்ல தரிசனம் கிடைச்சது.  மனம் நிறைந்த நன்றியைச் சொல்லிக்கிட்டேன்.   உள்ளே படம் எடுக்கத்தடை என்பதால் .....செல் என் பையில்.  கூட்டத்துலே ஒருத்தர் கருவறையை நோக்கி செல்ஃபோனை காமிச்சுக்கிட்டு இருந்தார். 

கருவறை மண்டபம் கடந்து வெளியே வந்ததும், அந்த நபர் நம்ம பக்கம் வந்ததால், நிறுத்தி, படம் எடுக்கத்தடை இருக்கேன்னதுக்கு,  நான் படம் எடுக்கலைங்க. ஊர்லே இருக்கும் மனைவிக்கு சாமியை லைவா காமிச்சேன்னார் ! ஙே............

அலங்கரிச்சத் தொட்டிலைத் தேடினால்,  காணோம்.  அங்கே ஒரு ஆறேழுமாசக் கைக்குழந்தையுடன் ஒரு சின்னக்குடும்பம் உக்கார்ந்துருந்தாங்க.  நேர்த்திக்கடன் செலுத்த வந்துருக்காங்களாம்.  தொட்டிலுக்காக வெயிட்டிங். 

 தொட்டில் எங்கே போச்சு ?  தெரியலைங்க. கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிட்டுக்  கோவில் பணியாளர் கொண்டுபோனார்.  சரின்னு நாமும் கொஞ்சநேரம் காத்திருந்தோம்.  குழந்தையைத் தொட்டிலில் இட்டதும் பார்த்துப் படம் எடுக்கணும்.  ஊழியர் வர்ற வழியைக் காணோம். 
 கம்பித்தடுப்புக்குள் ஒரு வெள்ளித் தொட்டில்  இருந்தது.  கோவிலில் நேர்த்திக்கடனுக்கு நிறைய தொட்டில் வச்சுருப்பாங்க போல ! 
 நாங்கள் சந்நிதியை வலம் வரப்போனோம்.  வலம் முடிச்சு உள்ளே வரும் வாசலாண்டை ஒரு மரத்தொட்டில் இருந்தது.  குடும்பம் உள்ளே இன்னும் காத்திருப்பில் என்றதால் நாம் அங்கிருந்து கிளம்பி மூலவர் முல்லைவனநாதரை தரிசனம் செய்யப்போனோம்.  சிவனேன்னு இருக்கார். கூட்டமெல்லாம் அங்கே  அம்மாவின் சந்நிதியில்தான் ! மூலவர் ஸ்வயம்பு ! மேற்பகுதி புற்றுமண்ணாம் !  
மூலவருக்கு முன் மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம் அடுத்து நந்தி ! அதுவும் ரெட்டை நந்தி ! உளிபடாத விடங்கமூர்த்தமாம் !  அப்போ இவுங்களும் ஸ்வயம்புதான் இல்லே ?   

பஞ்ச ஆரண்ய க்ஷேத்ரங்களில் இந்த முல்லைவனமும் ஒன்னு !  மற்ற நான்கும் ?  
2 அவளிவணல்லூர் - பாதிரிவனம்,
3. அரதைப்பெரும்பாழி - வன்னிவனம், 
4. இரும்பூளை - பூளைவனம், 
5. கொள்ளம்புதூர் - வில்வவனம் 

ஒரே நாளில் இந்த அஞ்சு வனங்களையும்  வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் னு தரிசிக்கணுமாம்.   இந்தக் கணக்கில் இது  வைகறையில் என்பதால் கோவிலைக் காலையில் அஞ்சரைக்குத் திறந்துடறாங்க. பாடல் பெற்ற  ஸ்தலம் என்பது கூடுதல் விசேஷம்.
 'நால்வருக்கு'த் தனியாக ஒரு சந்நிதி பிரகாரத்தில் இருக்கு. அதன் பக்கத்திலேயே சந்தனாச்சாரியார்னு ஒரு சந்நிதி !  
கோவில் த்வாரபாலகர்களா இங்கே புள்ளையாரும் முருகனும்தான். த்வாரவிநாயகர் & த்வாரஸ்கந்தர் !

கோவில் தீர்த்ததுக்கு க்ஷீரகுண்டம்னு பெயர். பால் குளம் ! காமதேனு, தன் கால்குளம்பால் நிலத்தைக்கீறி உண்டாக்கிய பாற்குளம். 
கோவில் வரலாறு, கதைகள் விவரங்கள் எல்லாம் நம்ம பழைய பதிவில் விஸ்தாரமாப் படங்களுடன் இருக்கு. ஒரு நடை எட்டிப்பார்த்தால் மகிழ்வேன். சுட்டி இதோ !

https://thulasidhalam.blogspot.com/2020/03/2020-27.html

ஒரு முக்கிய தகவல் போட்டு வச்சுருக்கு கோவில் நிர்வாகம். உண்மையில் அருமையான ஏற்பாடு !  (எல்லா ஊரும் காஞ்சிபுரமா என்ன ..... கோவில் மூடிய நேரம் புடவைக்கடைக்குள் போக ! )
அப்படி ஒரேடியா நிர்வாகத்தை மெச்சமுடியாமல் என் மனசில் ஒரு சின்ன உறுத்தல். 

நம்ம பிரார்த்தனை நிறைவேறியதும்,  கோவிலுக்கு ஒரு தொகையை அனுப்பினோம்.  அங்கிருந்து  'உள்நாட்டு விலாசம் சொல்லுங்க. ப்ரஸாதம் அனுப்புவோம்'னு பதில். உடனே  குடும்ப அங்கத்தின் விலாசத்தை அனுப்பிட்டு,  குடும்ப அங்கத்துக்கும் விவரம் தெரிவிச்சோம்.  ஆச்சு இப்போ குழந்தைக்கு ரெண்டேகால் வயசு. இன்னும் ப்ரஸாதம் வந்தபாட்டைக் காணோம் !!!!!

கோவிலுக்குள் வந்த ஒரு மணி நேரத்தில் தரிசனங்கள் முடிஞ்சதுன்னு திரும்பிப்போறோம்.  இன்றும் நேத்தும் வந்த  அதே  தேசிய நெடுஞ்சாலைதானே!  நேத்தே பார்த்த போர்டு  கண்ணில் பட்டது......   (ஐயோ.... இந்த சினிமாத்தொல்லை தாங்கலை.......) 
வாங்க ஊருக்குள் போயிட்டே போகலாம் !

தொடரும்..... :-)

6 comments:

  1. முல்லைவனநாதசுவாமி கர்ப்பரட்சாம்பிகை கோவில் தரிசித்துக் கொண்டோம்.

    வெள்ளித்தொட்டில், மரத்தொட்டில் என நேர்த்திக் கடனுக்காக அழகழகான தொட்டில்கள்.

    ReplyDelete
  2. வாங்க மாதேவி,

    வெவ்வெற வகைக் கட்டணம்னு நினைக்கிறேன் தொட்டில் வகைகளுக்கு !
    அவரவர் வசதிக்கேற்றமாதிரி நேர்த்திக்கடன் செலுத்திக்கலாம். நல்லதே !

    ReplyDelete
  3. இந்தப்பதிவில் என்ன..கோபால் சாரின் போட்டோக்கள் பலவற்றைப் பதிவு செய்திருக்கிறீர்கள், உங்கள் போட்டோவைக் காணோம்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத்தமிழன்,

      அடடா.... கோபாலின் ஒரே படம் ரெண்டுமுறை போட்டுருக்கேன் என்பதை உங்க பின்னூட்டம் பார்த்துத்தான் கவனிச்சேன். நன்றி.
      அவர் கையில் செல்ஃபோன் இருந்தாலுமே .... அது ச்சும்மாத்தான் இருக்கும். படம் எடுக்க மெனெக்கெடாது.

      Delete
  4. திருக்கருகாவூர் சென்றதில்லை.  படங்கள் அருமை.  புகைப்படங்களில் ஸாரின் போஸ் ஒரே மாதிரி இருக்கிறது!

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம்,
    ஸாருக்கு எப்பவும் ஒரே போஸ்தான். போஸ் கொடுக்கத்தெரியாது. இந்த அழகில் நான் ஒரே படத்தை வேற ரெண்டுமுறை போட்டுவச்சுருக்கேன்.

    ReplyDelete