Wednesday, May 14, 2025

இதோ வந்தேன் ரங்கா........... (2025 இந்தியப்பயணம் பகுதி 20 )

புது பைபாஸ் ரோடுகள் வந்தாட்டுப் பயண நேரம் கொஞ்சம் குறைஞ்சுதான் இருக்கில்லே ? கொஞ்சம் நிதானமாகவே   வேலைகளை முடிச்சு,  குழந்தைக்கு மல்லிகை மாலை போட்டுக் கும்பிட்டதும் ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போய் வந்து, பெட்டிகளை ஸ்டோரேஜுக்கு அனுப்பிட்டு,  நம்ம சுஸ்வாத் வரைபோய்  கொஞ்சம் தீனிகளை வாங்கியாந்தோம்.   
பயணத்தில் பாதுகாப்பாகக்கொண்டு போகணுமேன்னு குழந்தையை நல்லாப் பொதிஞ்சு, அவனோட பையில் வச்சேன்.  கூடவே வந்தாலும் கொஞ்சநாளைக்கு முகதரிசனம் கிடையாது.  

ஒரு பத்தேமுக்காலுக்குக் கிளம்பியாச்சு. முந்தியெல்லாம் வண்டலூர்வரை இருக்கும் ட்ராஃபிக் ஜாம், இப்போ கூடுவாஞ்சேரிவரை நீண்டு இருக்கு. இத்தனைக்கும் இன்றைக்கு ஞாயித்துக்கிழமை.  விஜி சொல்றார், அவ்ளோ ட்ராஃபிக் இல்லையாம் !!!! 

தாம்பரம் தாண்டும்போது, லோட்டஸில் இருந்து ஃபோன் ! ரூம் சாவியைக் கொடுக்கலையாம்.  சட்டைப்பையைத் தொட்டுப் பார்த்த நம்மவர்,  'அட ஆமாம்'னார். திரும்பிப்போக முடியுமா ?  மறதிக்கு,  மன்னிப்புக் கேட்டுக்கிட்டார்.  

காட்டாங்கொளத்தூர் தாண்டி மறைமலைநகர் (!) பெட்ரோல் பங்கில் , டேங்கை ரொப்பிக்கிட்டு  திண்டிவனத்துக்குக் கொஞ்சம் முன்னாலே பகல் லஞ்சுக்கு  ஆர்யாஸ் கார்டனில் ஒரு ஸ்டாப்.  வாசலில்  அழகான புள்ளையார்.    இந்த இடம்  நமக்குப் புதுசு.  




முந்திய பயணங்களில் எல்லாம்  உளுந்தூர்பேட்டை சமீபம் இருக்கும் ஆர்யாஸில்தான்  லஞ்சு.  அங்கே வாசலில் புத்தகக்கடைகூட இருக்கும்.  இந்த கார்டனைப் பார்த்த நினைவே இல்லை.

டீலக்ஸ் டைனிங் ஹாலாம் !   லஞ்சு ஆச்சு.  அடுத்த கட்டடத்தில் முன்பக்கம் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள்,  புத்தகங்கள்.  கூடவே கொஞ்சம் வீட்டலங்கார சமாச்சாரங்கள்.  ரெஸ்ட்ரூம் வசதிகளும் பரவாயில்லை
 நுழையும்போது மணி நாலு.  தங்கல் நமக்கு அதே ஹயக்ரீவாதான்.  சுமார் வசதிகள், ஆனால் கோவிலுக்குப் பக்கம் !  கீழே கார்பார்க்கில் இருந்த பாலாஜி பவன், இப்போ ஹொட்டல்  ஸ்ரீ ஹயக்ரீவா.   கொஞ்சநேரம் ஓய்வு, விஜிக்குக் கொடுக்கணும்தானே ? ஒரு டீ குடிச்சுட்டுக் கோவிலுக்குக் கிளம்பினோம். ராஜகோபுரம் பார்த்ததும் மனசு பரவசமானது உண்மை !


 கோபுரத்தாண்டைபோய் இறங்கினதும்,  விஜியை உள்ளே வரச் சொன்னேன்.  பார்க்கிங் இல்லைம்மா. வேறெங்கியாவது நிறுத்தணும்னார். கோவிலை ஏற்கெனவே பார்த்திருக்காராம்.  முடிஞ்சால் வாங்கன்னுட்டு நாங்க உள்ளே போனோம்.  திருமாமணி மண்டபத்தாண்டை போனதும்,  கண்ணைச்சுழற்றினால்..  என்னவோ வித்யாசமா இருக்கு.  வழக்கமா நமக்கிடதுபக்கம் இருக்கும்  கடைகளைக் காணோம்!  நாதமுனிகள் சந்நிதின்னு  போட்டுருக்கு ! 






ரங்கவிலாஸ் மண்டபத்துக்குள் நுழைஞ்சு போனால்...... சிறப்பு நிகழ்ச்சியாக ஆழ்வார்கள்,மற்றும் ஆச்சார்யார்கள் திருநக்ஷத்திர  உத்ஸவம் (மொத்தம் 15 நாட்கள் ) நடந்துகொண்டு இருப்பதாகத் தகவல். தினமும்  மாலை  ஆறேகால் முதல் ஏழேகால்வரை. இன்றைக்கு உறையிலிடாதவர் மற்றும் குலசேகர ஆழ்வாரின் வைபவம்.  அதென்ன உறையிலிடாதவர்? ஙே......  அப்படி விட முடியுமோ ?  நம்ம திருமழிசை ஆழ்வார்தான் அவர் எனத்தெரிஞ்சதும் 'அட' என்றிருந்தது ! 

அகலங்கன் திருவீதி ஆஞ்சுவை தரிசனம் செஞ்சுட்டு, கார்த்திகை கோபுரவாசலில் நுழைஞ்சு போய் கருடமண்டபத்தில் ஆஜானுபாகுவாக வீற்றிருக்கும் பெரியதிருவடியை ஸேவிச்சுக்கிட்டோம்.  பெரிய பெருமாள் இருக்கும் திசை நோக்கி ஒரு கும்பிடு.  அவ்ளோதான்.  எனக்குத் தாயார் சந்நிதிவரை போகணும். கால் இருக்கும் இருப்பில் அவ்ளோதூரம் நடக்கவும் முடியாது. இருட்டு வேற வந்தாச்சு.  இன்றைக்கு சுதர்ஸனரை மட்டும்  பார்க்கலாம்னு நம்மவர் சொன்னதால்.... சக்ரத்தாழ்வார் சந்நிதிக்குப் போனோம்.
உட்ப்ரகாரம் சுற்றும்போது இடதுபக்க ஜன்னல்கள் வழியா நல்ல ஒரு தோட்டமும்,  மயில்கள் நடமாட்டமும் கண்டேன்.  தரிசனம் முடித்து வெளியே வந்தால் அமிர்தகலச கருடர் சந்நிதி திறந்துருக்கு. இங்கே கணக்குவழக்கில்லாத ஏகப்பட்ட சந்நிதிகள் இருந்தாலும், எல்லாமும் எப்போதும் திறந்துருக்காது. ரொம்பவே முக்கியமானவைகள்தான்  திறந்துருக்கும்.  நாம் போகும் நேரம் அபூர்வமாக  எது திறந்திருக்கோ அங்கே போய் தரிசனம் செய்வோம்.  
எத்தனையோ முறை வந்திருந்தாலும்,  அமிர்தகலச கருடரை ஒரு முறைதான் 2017 இல்  தரிசித்தோம்.  இதோ இன்றைக்கு  ரெண்டாவது முறை!  நல்ல தரிசனம் !  நாலு  கைகளும்,  நாகாபரணம் எட்டுமா  உக்கார்ந்த நிலையில்  கிழக்கு பார்த்து ஸேவை சாதிக்கிறார்!   வலது மேற்கையில் கூஜா போல ஒரு பாத்திரம்!  அதுக்குள்ளேதான் அமிர்தம் இருக்கு!  இடது  மேற்கையில்   படமெடுத்தாடும் நாகத்தை அப்படியே கொத்தாய் பிடிச்சுருக்கார்!  மற்ற இரண்டு கீழ்க்கைகளும் கும்பிடும் பாவத்தில் !

வெளிவாசலுக்குப்பக்கம்  ரெண்டு பாவைவிளக்கு. ஏன் இங்கே தனியாக ........  
இந்த அமுதகலச கருடர் காரணமாத்தான் நாம் கும்பமேளாக்களைக் கொண்டாடிக்கிட்டு இருக்கோம், தெரியுமோ ? 

இவருடைய கதையைக் கொஞ்சம் பார்க்கலாமா ? ( பதிவில் கதை சொல்லி ரொம்ப காலமாச்சு !) அமுதகலசத்தைக் கையில் ஏந்தும் வாய்ப்பு கருடருக்கு ரெண்டுமுறை லபிச்சுருக்கு ! பாற்கடலை கடையும் சம்பவத்தில் வந்த அமுதத்தை மஹாவிஷ்ணு, மோஹினி  அவதாரம் எடுத்து தேவர்களுக்கு மட்டும் விளம்பிட்டு,    கடையும் வேலையில்  பங்கெடுத்த  அசுரர்களுக்கு நாமத்தைப் போட்ட கதை உங்களுக்குத் தெரியும்தானே?

அப்போ பாத்திரத்தில் மீந்து போன அமிர்தத்தை,  தேவேந்திரன் அரண்மனையில் கொண்டு போய் வைக்கும் ட்யூட்டி  பக்ஷிராஜனான கருடனுக்குத்தான் !  அப்படி எடுத்துக்கிட்டுப்போகும் வழியில்  பாத்திரம் தளும்பி  ஒரு நாலு சொட்டு நாலு இடத்தில் விழுந்துருது! அந்த இடங்களில்தான்  கும்பமேளா  நடக்கும். 

ரெண்டாவது முறை.....  கொஞ்சம் பெரிய 'கதை' !

காஸ்யப முனிவருக்கு ரெண்டு மனைவிகள். கத்ரு, வினதைன்னு பெயர்கள்.  மூத்தவளுக்கு ஆயிரம் பிள்ளைகள் !  சின்னவளுக்கு ரெண்டே ரெண்டு!

மூத்தது பெத்த அத்தனையும் நாகங்கள்!   சின்னவள் பிள்ளைகள் தான் கருடனும், அருணனும்!  கருடன் , பெருமாளுக்கு வாகனமாவே போயிடறார்.  அருணன் வாகன ஓட்டியாக சூரியனிடம் வேலை பார்க்கிறான்.

கத்ருக்கு எப்பவும் வினதையைக் கண்டால் ஆகவே ஆகாது.  ஒருசமயம், இந்திரனின் குதிரை உச்சைச்சிரவஸ்  என்ற (வெண்)குதிரை  என்ன நிறமுன்னு  வினதையைக் கேக்க, அவள் வெள்ளைன்னு சொல்றாள். 'இல்லை. அது கருப்பு. என்ன பெட் கட்டுறே'ன்னதும்,  தான் சொன்னது சரியான விடைன்றதால்,  அலட்டிக்காம உங்க  விருப்பமுன்னு சொல்லிடறாள் வினதை! தோத்துப்போறவங்க ஜெயிக்கறவங்களுக்கு அடிமையா இருக்கணுமுன்னு  சொல்லிட்டு,  நாளைக்கு நாம் ரெண்டு பேரும்  நேரில் போய் என்ன நிறமுன்னு பார்த்துட்டு வரலாமுன்னாள்  கத்ரு.

தன்னுடைய ஆயிரம்  மக்களைப்பார்த்து, நாளைக்கு நானும்  சித்தியும் இந்திரலோகத்துக்குப் போறோம்.  நீங்க எல்லோரும் உடனே அங்கே போய், அந்த வெள்ளைக்குதிரை உடம்பை நல்லாச் சுத்திக்குங்க. ஒரு துளி வெள்ளை நிறம்கூட வெளியே தெரியப்டாது. ஜாக்கிரதைன்னாள்.  அதுகளும் அம்மா சொன்னபடியே செஞ்சதுகள்!

மறுநாள் கத்ருவும் வினதையும் இந்திர லோகத்துக்கு,  உச்சைச்சிரவஸைப் பார்க்கப்போனாங்க.  கொஞ்சதூரத்துலே  நின்னு பார்த்து, 'அதோ தெரியுது பார் குதிரை. இப்போ சொல்லு அது என்ன நிறம்னு? '

வெள்ளைக்குதிரை ஏன் இப்படிக் கருப்பா இருக்குன்னு புரியாமல்....  முழிச்ச வினதை,  'அது வெள்ளைதான். ஆனா இப்ப ஏன் இப்படிக் கருப்பா இருக்குன்னு தெரியலை'ன்னாள்.

'பந்தயத்துலே நீ தோத்துப்போயிட்டே...  இனி நீ என் அடிமை'ன்னுட்டாள் கத்ரு.  அடிமை வாழ்க்கையில் மனமும்  உடலும் நொந்து கிடக்கும் தாயைப் பார்த்த  கருடனுக்கு மனசு தாங்கலை.

நேரா, கத்ரு வீட்டுக்குப்போய்,  'என் அம்மாவை இந்த அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கணும். நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்'னு கெஞ்சிக் கேட்டதும், இந்திரலோகத்தில் இருக்கும் அமிர்தத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் உன் தாய்க்கு விடுதலைன்னுட்டாள்!

இவரும்  இதோன்னு பறந்து தேவலோகம் போய், இந்திரனின் அரண்மனைக்குள் இருந்த  அமிர்த கலசத்தை அப்படியே தூக்கிக்கிட்டு  வந்துட்டார். இவர் பெருமாளுக்கு வேண்டப்பட்டவர் என்பதால்  யாரும் தடை ஒன்னும் சொல்லலை போல!

கத்ருவுக்குக் கலசத்தைப் பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சி!  அடிமை சாஸனத்தைக்  கொண்டு வந்து நீட்டினாள். இந்தக் கையாலே கலசத்தை  தர்ப்பைப்புல்  மேல் வச்சவர், அடுத்த கையாலே சாஸனத்தை வாங்கிக் கிழிச்சுப்போட்டார்.  அம்மாவுக்கு விடுதலை!

பிள்ளைகளுக்கு அமிர்தம் கொடுத்துட்டால் அதுகள் அழிவே இல்லாமல் எப்பவும் இருக்கும் என்ற ஆசையில் எல்லாப் பிள்ளைகளையும்  கூப்புடறாள்.  சரசரன்னு  வந்துக்கிட்டு இருக்காங்க. ஒன்னா ரெண்டா? ஆயிரமும் வரவேணாமோ?  அதுக்குக் கொஞ்சம் நேரம் ஆகத்தானே செய்யும்?

இதுக்குள்ளே இந்திரனுக்கு ,   கருடன்  கலசம்  கொண்டுபோன சமாச்சாரம் தெரிஞ்சு  அடுத்த நொடியில் கிளம்பி வந்து  கத்ரு வீட்டாண்டை தர்பை மேல் வச்சுருக்கும் கலசத்தைத் திரும்ப எடுத்துக்கிட்டுப் போயிட்டான்!

ஐயோ ஐயோன்னு அலறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்து பார்க்கிறாள் கத்ரு.  பசங்களும் வந்துட்டாங்க. நோ கலசம், நோ அமிர்தம்......  கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலை....  அதுக்காக சும்மா இருக்க முடியுதா?  இந்தப் புல் மேலேதான்  அமிர்தகலசம் இருந்துச்சுன்னு அதை எடுத்து நாக்குலே நக்கிப் பார்த்ததும்,  அது நாக்கைக் கிழிச்சுருச்சு  :-(  தர்ப்பைப்புல்  ஓரம் நல்ல கூர்மையா இருக்கும், கேட்டோ!  அப்போ இருந்துதான் பாம்புகளுக்கு  ரெண்டா பிளவான நாக்கு அமைஞ்சதுன்னு.... ஒரு 'கதை' !

ரொம்ப இருட்டிப்போச்சும்மா.... நாளைக்குக் காலையில் வரலாம்னு நம்மவர்  சொன்னதால் கிளம்பி  ரங்கவிலாஸ் மண்டபத்துக்குள் வந்தால்  அன்றைய சிறப்பு நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருக்கு. நல்ல கூட்டம்வேற ! 


விஜியைக் கூப்பிடறேன்னு   இவர் ரங்கா கோபுரத்தைக் கடந்து போய்க்கிட்டு இருக்கார். என்னால் மெதுவாகத்தான் நடக்கமுடியும்.  இடது பக்கம் பார்த்தால்  பளிச்ன்னு ஒரு சந்நிதி !  லக்ஷ்மிநரசிம்மர் & கூரத்தாழ்வார் சந்நிதி ! இதையும் இன்றைக்குத்தான் பார்க்கிறேன். உள்ளே போகலாமுன்னா... எங்கே....  நம்மவர்?  ப்ச்.... 

இன்னொரு முறை திறந்திருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் !
சந்நிதிகளை மறைச்சுக்கிட்டு இருந்த வியாபாரங்களையெல்லாம் வெளியேத்திட்டு,  சந்நிதிகளைத் திறந்துவச்சுப் பராமறிக்கிறாங்க போல !  நல்லது ! 

ஹயக்ரீவா வந்ததும்,  கீழே டின்னரை முடிச்சுக்கலாமுன்னு போனோம். எனக்கு இட்லி, நம்மவரும் விஜியும் தோசை சொன்னாங்க. 
ஒன்னும் சரியில்லை.  புது மேனேஜ்மென்ட் ஒன்னையும் கண்டுக்கறதில்லை போல..... பணியாளர்களும் எதைக்கேட்டாலும் முழிக்கறாங்க.

இது சரிப்படாது. மறுநாள் முதல் சாப்பிட வேற இடம் பார்க்கணும்............ சரியா ? 

தொடரும்........ :-)      


14 comments:

  1. 1.  தாம்பரத்துக்கு ஒரு பாரலல் ரோடு உண்டு.  அதில் கூடுவாஞ்சேரி வரை சென்று மாறலாம்.  அல்லது அப்படியே செங்கல்பட்டை அடையலாம்.

    2.  சாவி மறந்து விட்டாலும் டன்ஸோவிலோ, ஸ்விக்கியிலோ போடு அனுப்பி இருக்கலாமே...

    3.  கோவிலுக்குள் நடக்க சிரமப்படுபவர்களுக்கு பேட்டரி கார் உண்டே.....

    ReplyDelete
  2. Replies
    1. வாங்க விஸ்வநாத்,

      நன்றி !

      Delete
  3. 1. உறையிலிடாதவர்-போர்வீரன் தன் வாளை உறையிலிடாமல் தொடர்ந்து போர் புரிவதைப்போலே தான் சொல்லவந்த 'நாராயணனே பரதெய்வம்' என்ற கருத்தைத் தன் ஒவ்வொரு பாசுரத்திலும் விடாமல் சொல்லியதால் திருமழிசையாழ்வாருக்கு அந்தப் பெயர்
    2. சாப்பாட்டுப் படம்... ஆசையைத் தூண்டியது. எனக்கு பெங்களூர் உணவு பிடிப்பதில்லை. எப்போதடா தமிழகம் செல்வோம், சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவோம் என்றிருக்கிறது
    3. 2021ல் திருவரங்கத்தில் கோயிலுக்குள் யாரும் மொபைல் எடுத்துச் செல்லக்கூடாது, திருப்பதிபோல டெபாசிட் பண்ணிவிட்டுச் செல்லவேண்டும் என்று இருந்தது. சென்ற வருடத்திலிருந்து அனுமதிக்கிறார்கள் என்று நினைக்கிறேன் (2021க்கு முன், எடுத்துச் செல்லலாம்)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத்தமிழன்,
      உறையிலிடாதவர்..... விளக்கத்துக்கு நன்றி !

      சாப்பாட்டுப்படம்.... பெங்களூர் இல்லை. விழுப்புரத்தாண்டைதான் !

      முந்தியெல்லாம் கெமெரா டிக்கெட் வாங்கிப்போம். 2020 கொரோனாக்கப்புறம் போகவே இல்லை. இந்தப் பயணத்தில் பார்த்தால் அந்த டிக்கெட் கவுன்ட்டரே காணோம் !

      Delete
  4. Is lotus allowing 24 hour checkout? I used to stay there when I visit India. Now they are very strict with 12 PM checkout

    ReplyDelete
    Replies
    1. வாங்க தெய்வா,

      நலமா ? ரொம்ப நாளா உங்களை இங்கே பார்க்கவேயில்லையே.....

      லோட்டஸிலும் இப்போ மாற்றங்கள் வந்தாச்சு. செக்கவுட் பகல் 12 மணி. ஒரு ரெண்டு மணி நேரம் சிலசமயம் கூடுதலாகக் கிடைக்கும்.

      Delete
  5. வாங்க ஸ்ரீராம்,
    விஜிக்கு அந்த பேரலல் ரோடு தெரியாதோ என்னவோ.....

    நேஷனல் ஹைவேயில் போகும்போது டன்ஸோவை எங்கேன்னு போய்த் தேட ? ரூம் சாவி கார்டுதானே. இன்னொன்னைத் தாற்காலிகமாச் செஞ்சுருவாங்களே !

    பேட்டரிகார்கள் ஒரு இடத்தில் ஓய்வில் இருந்தன. ப்ச்.....

    ReplyDelete
    Replies
    1. // நேஷனல் ஹைவேயில் போகும்போது டன்ஸோவை எங்கேன்னு போய்த் தேட ?  //

      வண்டலூர் ஏரியாதானே?  எங்கே போடறீங்களோ அங்கேயே பத்து பதினைந்து நிமிடங்களில் வந்து வாங்கிச் செல்வார்கள்.

      Delete
  6. அக்கா, உள்ள நுழைஞ்சதும் இடப்பக்கம் இருக்கும் நம்ம இரும்பு சாமான் கடைகள் எதுவும் இல்லையா? அடடா நான் ஸ்ரீரங்கம் போனா அந்தக் க்டைகளுக்குள்ள ஒரு பார்வை விடாம வந்ததில்லையே....

    எல்லா படங்களும் சூப்பர். நிறைய சன்னதிகள் கடைகள் மறைச்சிருக்கும் வெளிய. இன்னும் கோவிலை முழுசா பார்த்ததில்லை. அரை நாள் வேணும்னு தோணும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா,

      அந்தக்கடைகளில் ஒன்னு நம்ம ஸ்ரீதரோடது. ஆன்ட்டீக் டீலர் அவர். ரொம்ப அருமையான ஐட்டங்களை நான் அங்கேயிருந்து வாங்கியிருக்கேன். இந்தப் பயணத்தில் ஏமாற்றமே !

      கோவிலை முழுசாப் பார்க்கணுமா ? அரைநாள் எந்த மூலைக்கு ? இருக்கும் ஏகப்பட்ட சந்நிதிகளில் பாதிக்குமேல் மூடித்தானே இருக்கு ?

      Delete
  7. @ ஸ்ரீராம்,
    இந்த டன்ஸோ, ஆன் லைன் ஃபுட் டெலிவரி இத்யாதிகள் பற்றி எங்களுக்கு இதுவரை ஒன்னுமே தெரியாது. சர்வீஸ் பயன்படுத்தியதுமில்லை. போனமுறை ஓலா ஆப் மட்டும் பயன்படுத்தினோம். ஒன்னும் சரியில்லை. எங்களுக்கு இந்த ஜிபே கூட தெரியலைன்னா பாருங்க..... அதே போல ரயிலில் போய்ப் பார்க்கும் ஆசை இருந்தாலும்..... புக் பண்ணும்போது 'ஆதார்' எல்லாம் கேட்பதால், நம்மிடம் இல்லையேன்னு விட்டுடறோம். ப்ளேன்தான் இப்போ பஸ். OCI மட்டும்தான் இருக்கு.

    ReplyDelete
  8. நாராயண தரிசனத்துடன் பயணம் ஆரம்பம்.

    ReplyDelete
  9. வாங்க மாதேவி,

    நடப்பதெல்லாம் நாராயணன் செயல் !!!

    ReplyDelete