Thursday, June 09, 2016

பாத்ரூம் போகணுமா? தொட்டில் தூக்கிப்போய் அங்கெ உக்கார வச்சுரும்!

எங்கூர்லே  புத்தம்புதுசா ஒரு  ஆஸ்பத்திரி கட்டி முடிச்சுருக்காங்க.  ஊர்மக்களுக்கு ஒரு பொது அழைப்பு வேற! 'இன்ன தேதிக்கு ஆஸ்பத்திரியை வந்து பார்த்துட்டு ஆசி வழங்கிட்டுப் போங்க'ன்னு  வெத்தலை பாக்கு வைக்காத குறை :-)எங்க வழக்கம்போல்  வீக் எண்டுக்கு நேர்ந்து விட்டுருந்தாங்க. மே மாசம் 29.  ஞாயித்துக்கிழமை. முஹூர்த்த நேரம் காலை 10 முதல்  பகல் 2 வரை!
ஒரு மூணு நாளைக்கு முந்தி,  மவொரிகள் முறையில்  பூஜை புனஸ்காரம் நடந்து  முடிஞ்சுருக்கு! Official blessing  Thursday May 26.  அது கிரஹப்ரவேசம்!  நாம் போறது  House warming day!

நம்ம வரிப்பணத்துலே கட்டுன சமாச்சாரமில்லையோ?  என்னமாத்தான் இருக்குன்னு  பார்க்கலாமுன்னு   கிளம்புனோம். நம்மூர் புள்ளையாண்டான்  ஸ்ரீதர் இங்கே படிக்க வந்துருக்கார்னு சொன்னது நினைவிருக்கோ?  சிவில் எஞ்சிநீயர் ஆச்சே...   வந்து பார்த்தால் அவருக்கும் ப்ளஸ் மைனஸ் தெரியுமே!  மேலும்  ஞாயித்துக்கிழமை  தானேன்னு  அவரையும் நம்ம குழுவில் சேர்த்து,  போற வழியில் அவரையும் கூட்டிக்கிட்டு மூவரானோம்.

நம்ம வீட்டில் இருந்து  20 கிமீ. சிட்டி லிமிட்டுக்குள்ளேதான் இருக்கு. சரியா 20 நிமிசத்துலே போய்ச் சேர்ந்தோம்.  வளாகத்துக்குள் கார்பார்க்குக்கு திரும்பும்போதே  அட்டகாசமான கட்டடம் கண்ணை இழுக்குது!
மூணடுக்குதான்.  நிலநடுக்கம்  வந்து நடுங்கிக் கிடக்கும்  ஊர் என்பதால் இனி உயரக்கட்டிடடங்களுக்கு அனுமதி  இல்லவே இல்லை.  ஆபத்துன்னா.....  சட்னு ஓடிப்போய் தப்பிச்சுக்கணும், பாருங்க.

நீளமான  வெளிவெராந்தா கடந்து  கட்டிடத்துக்குள் நுழையறோம். வாங்க வாங்கன்னு உபசாரமொழிகள் சொல்லி  ஒரு நாலு பக்கத் தகவல் அட்டை(!)யைக் கொடுத்தாங்க.  'மகளே  இனி உன் சமர்த்து. இதுலே இருக்கும் படம் பார்த்துப் பயணம் செய்' :-)

வரவேற்புப் பகுதியில்  ஒரு மணற்கல் சிற்பம்.  மவொரி ஆர்ட் வகை.  தலைக்கு மேல் பத்துக்கை ஃபேன்!


இங்கெல்லாம் பொதுவான சேவைகளுக்கு,   வாலண்டியர்கள் உதவி செய்யறது வழக்கம்.  முதியோர் விடுதிகளில் கூட  வாரத்துக்கு  ஒரு ரெண்டுமணி நேரம் போய் ச்சும்மாப் பேசிக்கிட்டு இருப்பதும்கூட ஒரு பெரிய உதவிதானாக்கும், கேட்டோ!
கீழ்தளத்தில்  Cafeteria ஒன்னு.  அதுக்கு எதுத்தாப்ல பெரிய முற்றம்!  இன்னும் செடிகளைக் காணோம். வைப்பாங்கன்னு நினைக்கிறேன்.
ஆஸ்பத்திரிகளுக்கே உள்ள பெரிய பெரிய இடைவழிப் பாதைகள்(Corridors)
நல்ல கூட்டம்! அதிலும்  கொஞ்சம் வயதானவர்கள்தான் அதிகம். எப்படியும் ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் இங்கே வரத்தான் வேணும். அதுக்கு முன்னே என்னென்ன வசதிகள் இருக்குன்னு பார்த்து வச்சுக்கிட்டா நல்லதுதானே?

அங்கங்கே  தடை போட்டு வச்சுருக்கும் பகுதிகளை விட்டுட்டுக் கண்ணில் பட்ட அறைகளுக்குள் புகுந்து பார்த்துக்கிட்டு இருக்கோம்.
இந்த  ஆஸ்பத்திரிக்கு  ஒரு காலத்துலே (1900 - 1920) வரை ப்ளேக் ஆஸ்பத்த்ரின்னு பெயர் இருந்துருக்கு. தொத்து வியாதிக்காரர்களைத்  தனி இடத்தில் வச்சு சிகிச்சிக்கக் கட்டுனதாம் இது. வெறும் தகரக்கூரை போட்ட  குடிசைகள். ஆஸ்பத்திரியைச் சுத்தி  முள்வேலித் தடுப்பு.  உறவினரையோ  நண்பர்களையோ பார்க்க வந்தால்  உள்ளே போகப்டாது. வேலிக்கு இந்தாண்டை இருந்துதான் அவுங்களோட கத்திக் கத்திப் பேசணும்.  எதாவது  சாப்பாடோ தின்பண்டமோ கொண்டு வந்துருந்தால் நீளக் குச்சியில் கட்டி விட்டு  அந்தாண்டை  நீட்டுனா அவுங்க எடுத்துக்கணும்.  அப்படி  தொற்று பார்த்து பயந்த காலம்!
அப்படி இருந்த இது,  இப்ப எப்படி ஆச்சுன்றதை படங்கள் போட்டு வச்சுருந்தது சுவாரஸியமான சமாச்சாரம்.  எல்லாம் சரித்திரம்!
ஒரு அறையில் கொஞ்சம் பெரிய சைஸ் படுக்கை. தலைக்கு மேலே  தொங்குது இப்படி ஒன்னு, ரெட்டை ஹேங்கர் மாதிரி....  அது என்ன? எப்படி வேலை செய்யுதுன்னு  விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தார்  ஒரு நர்ஸ்.
கொஞ்சம் பெரிய உடம்பு உள்ளவர்களுக்கான அறை இது.  450 கிலோ எடைவரை தாங்கும் ஸீலிங் லிஃப்ட்.  பொதுவா  இந்த அளவுள்ள நோயாளிகளை எழுப்பி உக்காரவைக்க, படுக்கை விரிப்பை  மாற்றிப்போட, அவர்களை குளியலறைக்கும்,  கழிவறைக்கும் கூட்டிக்கொண்டு போகன்னு வரும்போது  குறைஞ்சபட்சம் ரெண்டு பேர் உதவி செய்ய வேண்டி இருக்கும். அதுவும் ரொம்பவே ஒல்லியாக இருக்கும்  நர்ஸ்கள் என்றால் ரொம்பவே கஷ்டம்.  இந்த Ceiling hoist system இருப்பதால்  எளிதாக  பெரிய உடம்பு நோயாளிகளை  ரொம்பப் படுத்தாமல் அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்யமுடியும் என்றார்.  ரிமோட் கண்ட்ரோலில் வேலை செய்யுது. அட!



இதைப்போல்  சாதாரண உடம்பளவு உள்ள  நோயாளிகளுக்கும்  சிங்கிள் ஹேங்கர் ceiling hoist  வச்சுருக்காங்க.  ஒரு சிலதைத் தவிரப் பொதுவா எல்லா அறைகளிலுமே  இருக்கு!

படுக்கைகளும் பார்க்கவே வசதியாத்தான் வச்சுருக்காங்க.  இதுக்கும் ரிமோட் இருக்கு.  நர்ஸம்மாவைக் கூப்பிடாமல் நமக்கு வேணுங்கறமாதிரி   சாய்ஞ்சு உக்காரவோ, உடம்பின் பொஸிஷனை மாத்திக்கவோ முடியும்.

மொத்தத்துலே  குறைவான எண்ணிக்கையுள்ள  நர்ஸ்களை வச்சு , நோயாளிகளுக்குக் கஷ்டம் இல்லாம ஆஸ்பத்திரியை நடத்திக்கலாம் போல!!
அறைகளும்  குளியலறையோடு கூடி நல்ல வசதியாத்தான் இருக்கு.  விஸிட்டர்ஸ் வந்தால் உக்கார்ந்து பேச நாற்காலிகளும், ஜன்னலை ஒட்டி போட்டுருக்கும் விண்டோ ஸீட்களும் சூப்பர்!  இது போல ஒரு விண்டோ ஸீட்டுதான் நம்ம வீட்டுக்குப் போடணுமுன்னு  ஆசை.
அப்படியே அந்த  ஹாஸ்பிடல் over-bed table ஒன்னு  வாங்கினால் தேவலை.  இப்ப அதேபோல் ஒன்னு  வச்சுருக்கேன் என்றாலும்  இது இன்னும் நல்லா இருக்கே!  குளிருக்கு  இதமா படுக்கையில்  உக்கார்ந்துக்கிட்டுப் பதிவு எழுதலாம்:-)


நாட்டின் பிரதமர்  வந்து வசதிகள் எல்லாம் எப்படின்னு பார்த்துட்டுப் பாராட்டிட்டுப் போயிருக்கார்.

அங்கங்கே  குடும்பத்தினர்  உக்காந்து  பேசவும்,  காஃபி டீ போட்டுக் குடிச்சுக்கவும் ஃபேமிலி ஏரியா வச்சுருக்காங்க.

எட்டு படுக்கைகளுக்கு  ஒரு ஸ்டாஃப் பேஸ்.
உடற்பயிற்சிக்கூடம். அறுவை சிகிச்சை முடிஞ்சபின் நோயாளிகளுக்கு எழுந்து  நடமாடத் தேவையான சின்னச்சின்ன பயிற்சிகள் பிஸியோ தெரப்பிஸ்ட்டுகள் சொல்லிக்கொடுப்பதை இங்கே  தொடர்ந்து நாமே செஞ்சுக்கும்  இடம். கொஞ்சம் நல்லா ஆனபின் நோயாளிகள் தாமே வந்து பயிற்சி செஞ்சு கைகால்களை வலுவாக ஆக்கிக்கலாம்.  முழங்கால் அறுவை சிகிச்சை முடிஞ்சபின் மூட்டுக்கு வலுவேத்தும் பயிற்சிக்கான குட்டை சைக்கிள் இது.

எங்கூர்லே  முதியவர்களுக்கான  மருத்துவமனை  வேறொன்னு இருக்கு. எல்லாமே அரசு மருத்துவமனைகள்தான். அங்கே இருக்கும்  100 நோயாளிகளையும், 300  மருத்துவமனை  ஊழியர்களையும்   வர்ற திங்கக்கிழமை  இங்கே  இடம் மாத்தறாங்க. இங்கே 230 படுக்கை வசதிகள் இருக்கு.

இடமாற்றம் ஜூன் 13ன்னு முடிவு.  பகல் சாப்பாட்டுக்குக் கட்டுச்சோறு கட்டிக் கொடுத்துத்தான் கூட்டிவர்றாங்களாம். அடிச்சுபிடிச்சு ஒரேடியாக் கொண்டு வரமாட்டாங்களாம். ரொம்ப உடம்பு அதிராமப் பத்திரமாக் கூட்டி வந்து சேர்க்கணுமேன்னு கவலைப்படுது ஆஸ்பத்திரி. எப்படியும் எல்லோரும் இங்கே வந்து சேர ரெண்டு வாரம் ஆகிருமுன்னு சொன்னாங்க.

மூளையில் பாதிப்பு இருந்து   அறுவை சிகிச்சை முடிஞ்சபின் அவர்களை  மீண்டும் முன்பு இருந்த நல்ல நிலமைக்குக் கொண்டுவரும்  சீரமைப்புக்கான வசதிகளும் இங்கே  இருக்கு.

எங்கூர்  பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை முடிச்சு ஓரளவு சரியானபிறகு, மேற்கொண்டு அவுங்களை  முழுசா     குணமாக்க இங்கேதான் கொண்டு வருவாங்க. முக்கியமா இங்கே எல்லோரும்,  பிள்ளைகள், குடும்ப அங்கங்கள் என்று  யாரையும் சார்ந்திருக்காம தனிப்பட்ட வாழ்க்கைதான் வாழ விரும்பறாங்க. அதனால்  அதற்குத் தேவையான பயிற்சியைக் கொடுத்து,    அவுங்க வாழ்க்கைமுறைக்குத் திரும்பவைக்கிறதுதான் முக்கிய நோக்கம்.

ஊருக்கெல்லாம் ஒரேஆஸ்பத்திரின்னு  சொல்லிக்கிட்டு இருந்தவ வேற ஒன்னைப் பத்திச் சொல்றாளேன்னு இருக்கா? அது என்னன்னா....  பெரியாஸ்பத்திரியின் கிளையாஸ்பத்திரிகளா எங்கூர்லேயே நாலு இருக்கு. ஒன்னு நான் எப்பவும் சொல்லும் பெரியாஸ்பத்திரி. ரெண்டாவது அதை ஒட்டியே இருக்கும் பிரசவ ஆஸ்பத்திரி. செவன் ஸ்டார் ஹொட்டேல் கணக்கா இருக்கும்!  மூணாவது   பர்வுட் Burwood   என்ற பேட்டையில் இருக்கும்  முதுகெலும்பு, மூளை சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களுக்கானது. (Surgical Orthopaedic, Spinal,   Orthopaedic Rehabilitation  Brain Injury Rehabilitation )
இங்கேதான் நம்ம தோழி மருத்துவரா இருக்காங்க. நாங்க சுத்திக்கிட்டு இருந்த சமயம், இவுங்களும் அவுங்க ரங்க்ஸைக் கூட்டி வந்து சுத்திக் காட்டிக்கிட்டு இருந்தாங்க:-)   நாலாவது  முதியோர்களுக்கான  ஆஸ்பத்திரி.  அஞ்சாவது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான   ஆஸ்பத்திரி.
மேலே நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் புது ஆஸ்பத்திரிகூட பர்வுட் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள்ளே கட்டுனதுதான். முதியோர்களுக்கான ஸ்பெஷலா இதைக் கட்டி, ஏற்கெனவே இருக்கும் ஆஸ்பத்திரியில் இருந்துதான் இங்கே இடமாற்றம். பழைய கட்டிடத்தை என்ன செய்யப்போறாங்கன்னு  இன்னும் தெரியலை. முதியோர்கள் உடல்நிலம் எவ்ளோ முக்கியமோ அதே அளவு அவுங்க மனநிலமும் முக்கியம் என்பது  எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு!

இவ்ளோ நல்லா இருக்கேன்னு ஆசையா இருந்தாலும், அதுக்காக  வியாதி வரணுமா என்ன?  நோய் இல்லாத  வாழ்க்கைதான் நல்லது. அப்படியே எதாவது வந்தாலும், நல்ல கவனிப்பில், அருமையான இடத்தில் இருப்போம் என்பது  மனுஷ மனசுக்கு ஒரு ஆறுதல்தான்.

மக்கள்ஸ் கூடியவரை நோய் நொடி இல்லாம இருக்கட்டும்னு எம்பெருமாளை வேண்டிக்கிட்டேன்.

வெளியே வந்தால் ட்ரோன் ஒன்னு  பறந்து பறந்து படம் எடுத்துக்கிட்டு இருந்துச்சு. யூ ட்யூபுக்கு வந்ததும் பார்க்கலாம் :-)



22 comments:

  1. //அந்த ஹாஸ்பிடல் over-bed table ஒன்னு//

    இது இங்கே ஹிந்துஜா மாதிரியான பெரிய ஆஸ்பத்திரிகளில் ஏற்கனவே வந்தாச்சு. நல்லா வசதியாத்தான் இருக்கு.

    ReplyDelete
  2. உங்க ஊருல தான் செட்டில் ஆகணும் டீச்சர்..

    ReplyDelete
  3. ஆஸ்பத்திரி அழகாக இருக்கு. உங்கள் வரிப்பணம் எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுது. பேங்குல நிறைய பணம் இருக்கு என்ற எண்ணமே நமக்குத் தெம்பு தருவதுபோல, அவசரம் ஏற்பட்டால் நல்ல ஆஸ்பத்திரி இருக்கு என்ற எண்ணமே போதும். ஆஸ்பத்திரியைப் பாத்தாச்சு. இனிமே அதைப் பார்க்க வரவேண்டிய அவசியம் இல்லாமல் போகட்டும் உங்கள் எல்லோருக்கும்.

    எங்க போனாலும் கோபால் சாருக்குச் செலவு வைக்கறதுக்கு ஏதாகிலும் யோசித்துக்கொண்டே இருப்பீர்கள் போலிருக்கிறது. அதுவும் நல்லதுதான்.

    ReplyDelete
  4. இந்தமாதிரி ஆஸ்ப்பத்திரிகள் ஸாதாரண பிரஜைகளுக்குக் கிடைக்குமா? உடல்நலம் பாதித்த முதியோர்களுக்கு எவ்வளவு வசதி. எல்லாம் வசதியுடையவர்களுக்கதான். மேல் நாட்டில் அப்படி இல்லை. மெடிகல் இன்ஷியூரென்ஸ் கை கொடுக்கும். ரொம்பவே ஆர்வமாகப் படித்தேன் 2--3, முறை. முதுமை கஷ்டம் கொடுக்காது இருக்க வேண்டும்.என்ன கோர்வையாக அழகாக விஷயம் தொகுத்துக் கொடுக்கிறீர்கள். ரொம்ப நாளாயிற்று உங்கள் பதிவிற்கு வந்து. ரஸிக்கும் படியான வயோதிகம் திரும்பப் படிக்கத் தோன்றுகிறது. அன்புடன்

    ReplyDelete
  5. என் கமென்ட் என்ன ஆச்சு

    ReplyDelete
  6. ithula enna solla... verum attendence mattum than :)

    ReplyDelete
  7. very nice. yes at the time of old age if some one is take care of us this thinking is very strengthen of us .good take care

    ReplyDelete
  8. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! இந்தியாவில் [வாழும் வயதில் உள்ள] மக்களுக்கு இதில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு உதவி கிடத்தாலே இந்தியா ஒளிரும்!

    ReplyDelete
  9. வாங்க சாந்தி.

    இங்கே ஆஸ்பத்ரிகளில் இதுபோல எப்பவுமே இருக்குன்னாலும் இப்ப புதுசாப் போட்டுருப்பது அட்டகாசமா இருக்கே!

    நம்ம வீட்டில்கூட லேப் டாப்புக்கு பத்துவருசமா ஒன்னு வச்சுருக்கேன். ஆனால் புதுசு இதைவிட வசதியா இருக்குமுன்னு தோணுது ! நம்ம வீட்டில் இருப்பதை இந்தப் பதிவில் கடைசியா சேர்த்துக்கேன். எட்டிப் பாருங்க:-)

    ReplyDelete
  10. வாங்க காவேரிகணேஷ்.

    குளிர் ஒன்றைத்தவிர ரொம்ப நல்ல ஊர்தான் இது:-)

    செட்டில் ஆகவும் நல்ல இடமே!

    ReplyDelete
  11. வாங்க நெல்லைத் தமிழன்.


    நான் செலவு வைக்கலைன்னா வேற யார் இருக்காங்க அவருக்கு? பாவமில்லையோ:-)

    நல்ல கவனிப்பு இருக்கும் என்பதே மனசுக்கு ஆறுதல்தான்!

    ReplyDelete
  12. வாங்க காமாட்சி அக்கா.

    நலம்தானே?

    இங்கே இது அரசு மருத்துவமனைதான். மெடிக்கலின்ஷூரன்ஸ் இல்லைன்னாலும் பிரச்சனையே இல்லை!

    கல்வி, மருத்துவம், சட்டம் எல்லாம் எல்லோருக்கும் பொது என்பதால் அனைவருக்கும் எல்லாமும் நல்லபடியாத்தான் கிடைக்குதுக்கா.

    இந்தியாவில்தான் ஆஸ்பத்திரிக்கு ஒரு அவசரமுன்னு போனால்.... பணத்தைக் கறந்துடறாங்க :-( தனியார் மருத்துவமனைகள் இப்படின்னா, அரசு மருத்துமனையில் அலட்சியம் அதிகம். ப்ச்....

    ReplyDelete
  13. வாங்க நாஞ்சில் கண்ணன்.

    வருகையைப் பதிவு செஞ்சுட்டேன்:-)

    இது அரசு மருத்துவமனை எப்படி இருக்குன்னும், முதியவர்கள் பராமரிப்பு எப்படின்னும் நம்ம மக்கள்ஸ்க்கு சொல்லும் பதிவுதான்!

    ReplyDelete
  14. வாங்க மீரா.


    ஆமாம்ப்பா. ரொம்பச் சரி.

    ReplyDelete
  15. வாங்க நம்பள்கி.

    நலமா? எங்கே ரொம்ப நாளாக் காணோம்?

    நீங்க சொல்றது ரொம்பச் சரி.

    இந்தியாவில் அலட்சிய மனப்போக்கு அதிகமாகிக்கிட்டே வருது. காசு பணம் துட்டு ..... இருந்தால்தான் எல்லாமேன்னு ஆகிக்கிடக்கு :-(

    கல்வி, மருத்துவம், சட்டம் எல்லாம் எல்லோருக்கும் பொது என்று ஆனால்தான் நல்லது. ஆனால் அரசியல் வியாதிகள் நல்லது செய்ய விடுவாங்களா? ப்ச்....

    ReplyDelete
  16. எனக்கு ஒரு சந்தேகம் ஆசுபத்திரியா செவென் ஸ்டார் விடுதியா. எவ்வளவு சொத்து இருக்க வேண்டும் அங்கு வந்து சிகிச்சை பெற

    ReplyDelete
  17. வாங்க ஜிஎம்பி ஐயா.

    அரசு மருத்துமனைதான். நியூஸி குடியுரிமை உள்ளவர்களுக்கு 100% இலவசம்தான். அஸ்ட்ராலியா மக்களுக்கும் இலவசம்தான். நியூஸிக்கும் ஆஸிக்கும் ஒப்பந்தம் இருப்பதால் நாங்க அங்கே போனாலும் அங்கேயுள்ள அரசு மருத்துமனைகளில் முழுக்க முழுக்க இலவசமே !

    வெளிநாட்டு மக்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது. இங்கு தங்கியிருக்கும் நோயாளிக்கு ஒருநாளைக்கு 800 டாலர் வரை செலவு என்று சொல்கிறார்கள்.

    ReplyDelete
  18. மருத்துவ மனை .... சூப்பர் ....இதமான கவனிப்புக்கு ஏற்ற அமைப்பு ...

    ReplyDelete
  19. ஒரு நாளைக்கு 800 டாலரா. மோசம்பா.
    ஆனால் ஆசுபத்திரி பார்த்தால் ஆசையா தான் இருக்கு. அதுவும் ஓல்ட் ஏஜ்னு
    ஒரு வார்த்தை போட்டுட்டீங்க.
    என்ன சௌகரியம் செய்திருக்காங்க.
    அதிசயமாவும் அற்புதமாவும் இருக்கு. அதுவும் அந்தத் தூளி சூப்பர்.

    ReplyDelete
  20. வாங்க அனுராதா ப்ரேம்.

    ஆமாம்ங்க. உண்மைதான்.

    ReplyDelete
  21. வாங்க வல்லி.

    இந்த 800 அரசுக்கு ஆகும் செலவு. குடிமக்கள் கட்டவேண்டியது இல்லை!

    ReplyDelete