Wednesday, June 08, 2016

பதிவர் சந்திப்பில் ஒரு பகீர் :-( (இந்தியப் பயணத்தொடர். பகுதி 44)

அஹோபிலம், காஞ்சிபுரம் பயணங்களை முடிச்சுக்கிட்டு, சென்னை வந்து இதோ அஞ்சு நாளாச்சு. அடுத்த பயணம் எல்லாம் தமிழ்நாட்டுக்குள்ளேதான். நாளைக்குக் கிளம்பலாமுன்னு ஏற்பாடு. இன்றைக்கு இன்னும் சில நண்பர்களை சந்திக்கணும்.  திரும்பி வந்தபின் நேரம் கிடைக்குமான்னு தெரியலை.  எங்கேயும் ஹொட்டேல்ஸ் புக் பண்ணிக்காமக் கிளம்புவதால்   திரும்பிவர முன்னே பின்னே ஆகலாம்.

பதிவர் குடும்ப அண்ணனுக்கு ஃபோன் போட்டேன். வழக்கம்போல் அண்ணிதான்  ஃபோன் எடுத்தாங்க. குரலைக் கேட்டதும்  'எப்ப வந்தீங்க?'
"நேரில் வந்து சொல்றேன். இப்ப வரலாமா?  கேக்கணுமா என்ன? "
அடுத்த அரைமணியில் வீட்டுக்குள் போயாச்சு. சிஜின்னு நான் கூப்பிடும் சிவஞானம் ஜி என்ற மூத்தபதிவர்  இவர். தமிழ்மணப் பதிவர்களுக்கு  இவரைத் தெரிஞ்சுருக்கலாம். 2006  மே முதல் 2008 ஆகஸ்ட் வரை  பதிவுகள் எழுதிக்கிட்டு இருந்தார்..............    அப்புறம்? ஒரு அப்டேட்டும் கிடையாது. ஆனால் துளசிதளத்தை மட்டும்  எப்படியும் வாசிச்சுடுவார்!


வினையூக்கின்னு ஒரு பதிவர் இருந்தாரே .. நினைவிருக்கோ? (பேய்க் கதை ஸ்பெஷலிஸ்ட்!)  அவர்தான் இவருக்குப் பதிவெழுத ஒரு ஊக்கியாகச் செயல்பட்டார். அவர் வெளிநாடு போனதும் இவருக்கு ஊக்கம் குறைஞ்சுருச்சு போல....

எல்லாப் பயணங்களிலும் சிஜியைக் கண்டுக்காம வந்ததே கிடையாது.  அதே போலத்தான் இப்பவும். மொத்தக்குடும்பமும் நம்மை அப்படியே  இன்னொரு அங்கமா  ஏத்துக்கிட்டாங்கன்னுதான்  சொல்லணும்.

ஹாலில்  அண்ணனைக் காணோம் என்றதும்  எங்கேன்னு கேட்டதுக்கு வந்த பதில்   அதிர்ச்சியைக் கொடுத்துருச்சு.  உடம்பு சரி இல்லை. ஸ்ட்ரோக் வந்து   மருத்துவமனையில் சிகிச்சை  எடுத்துக்கிட்டு, அங்கே இருந்து வீடு திரும்பி இருக்கார்!

உள் அறைக்கு ஓடிப்போய்ப் பார்த்தேன். அண்ணனுக்கும் தங்கைக்கும்  கண்களில் கங்கை :-(  மனசே சரி இல்லாமல் போச்சு.  அண்ணியைப் பார்த்தால்தான் இன்னும்  மனசில் வலி.  'இப்போ எவ்வளவோ தேவலை'ன்னு சொன்னாங்க.
'அதெல்லாம் நல்லா ஆயிடுவீங்கண்ணே...   பிஸியோ சொல்றமாதிரி  சின்னச்சின்னப் பயிற்சிகளைச் செய்யணும். இதுலே மட்டும் சோம்பலே கூடாது. மன உறுதி முக்கியமா வேணும். என்னாலே நடக்க முடியும்.  நடந்து காட்டறேன்னு  உறுதி எடுத்துக்குங்க.  அடுத்த பயணத்தில் நான் வரும்போது   நீங்கள் நடக்க ஆரம்பிச்சு  வாக் போகத் தொடங்கி இருக்கணும். உங்களுக்காக எம்பெருமாளிடம் நல்லா வேண்டிக்கறேன்'னு  சொல்லிக்கிட்டு இருந்தாலும் மனதுக்குள் ஒரு பதைப்பு இருக்கத்தான் செஞ்சது.
பேரன் சின்னக் குழந்தைதானே....  இன்னும் அஞ்சு வயசு  ஆகலை. நர்ஸரி  பள்ளிக்கூடம்  போக ஆரம்பிச்சாச்சு. இப்ப யூகேஜியில். தாத்தாவைப் படம் வரைஞ்சுருக்கான்.   தாத்தாவின் கைவிரல்களைப் பாருங்கன்னு சொன்னாங்க அண்ணி. குழந்தைகளுக்கு என்ன ஒரு கவனம் பாருங்க. அவுங்க கண்ணில் இருந்து எந்த ஒரு விஷயமும் தப்பவே முடியாது!
பொடிபோடும் வழக்கமுள்ள தாத்தாவின் விரல்கள்! ஹாஹா!
ஒரு முக்கால் மணி போல அங்கே இருந்து பேரன், மருமகள், அண்ணியார், அண்ணாவோடு  பேசிக்கிட்டு இருந்தோம்.  மகன் வேலைக்குப் போயிருந்தார்.
கொஞ்சம் மனச்சுமையோடு அங்கிருந்து கிளம்பி நேரா நம்ம அடையார் அநந்தபதுமன் கோவில்.  அடையார் பாலம் தாண்டும்போது  பாலத்தின் ஆரம்பத்தில் இருக்கும் சிற்பத்தைக் கவனிச்சு இருக்கீங்களா?  எனக்கு அது நம்ம கோகியின் நினைவைக் கொண்டு வரும். இப்போதும்தான்...   ப்ச்

பெருமாளிடம், சிஜியின் உடல், நலம் பெறணும் என்ற வேண்டுகோளை வச்சேன். கோவிலில்  விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு.
இவ்வளவு தூரம் வந்துருக்கோம்.  அப்படியே சித்ராம்மாவைப் பார்த்துட்டுப் போயிடலாமேன்னு திருவான்மியூர்.  எனக்கு இன்னொரு அப்பா அம்மான்னு சொல்லி இருக்கேனில்லையா... அவுங்கதான். சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷின் பெற்றோர்.  ஃபோனில் வரலாமான்னு கேட்டதும்,  'இது உன் வீடு. எப்ப வேணா வரலாம். கிளம்பி வா'ன்னு பதில். அடுத்த அஞ்சாவது நிமிட்டில் வீட்டின் காலிங் பெல்லை அடிச்சேன்:-)

எங்கிருந்து வர்றே?  ஃபோன் செஞ்சு  அஞ்சு நிமிஷம் கூட ஆகலையேன்னாங்க  மாமி.  கோவிலில் இருந்து வர்றவழியில்தான் ஃபோன் செஞ்சேன்னு உண்மையைச் சொல்ல வேண்டியதாப் போச்சு:-)
நலம் விசாரிப்புகள்,  மற்ற வீட்டு விவகாரங்கள், பயணம் எல்லாம் கொஞ்சம் கலந்துகட்டிப் பேசிட்டு  திரும்பி நியூஸி போகுமுன் நேரம் இருந்தால்  வருவேன்னு  சொல்லிட்டுக் கிளம்பினோம்.  எப்ப வந்தாலும் சாப்பிடாமல் கிளம்பிப்போறேன்னு   எப்பவும்போல் ஒரு திட்டும் கிடைச்சது:-)

ராமகிருஷ்ணா மடம் சாலையில் மயிலை வந்து சேர்ந்து,  விஜயா ஸ்டோர்ஸை எட்டிப் பார்த்துட்டு, சரவணபவனில் பகல் சாப்பாடு ஆனதும்,  மயிலைத் தோழி வீட்டுக்கு  ஒரு விஸிட்.  தோழி  அமெரிக்காவில் இருக்காங்க.  வீட்டுக்கு முன்னால் இருந்த காம்பவுண்ட் சுவரைக் கொஞ்சம் உயர்த்திக் கட்டி இருக்காங்க இப்போ.  பயங்கர ட்ராஃபிக் இருக்கும் ரோடாக இருக்கு!
வீட்டையும் தோட்டத்தையும் பார்த்துக்கும்  பணியாளரிடம்  நலம் விசாரிச்சுட்டுக் கொஞ்சம் படங்களை க்ளிக்கினேன்.  தோழிக்கு அனுப்பி வைக்கணும். செடிகள் நல்லாதான் இருக்கு. என் மனசுதான் வல்லியம்மாவையும் சிங்கத்தையும் நினைச்சுக் கொஞ்சம் பேஜாராச்சு.

கடைசி ஸ்டாப்பிங் அசோக்நகர். சந்தியா பதிப்பகம். புத்தகத் திருவிழா முடிஞ்சு தேர் இப்போதைக்கு நிலைக்கு வந்திருக்கு:-)  தொலைபேசினேன். பதிப்பாளர் இருந்தார்.  சூடான காஃபியோடு வரவேற்பு.
இப்போ ஒரு புதிய மாற்றம் என்னன்னா...  முந்திபோல் ஆயிரம் ரெண்டாயிரமுன்னு  புத்தகங்களை அச்சடிச்சு ஸ்டாக் வைக்காமல், தேவைக்கு ஏற்ப முன்னூறு நானூறு கூட அச்சுப் போட்டுக்கலாமுன்னு  சொன்னது எனக்குப் பிடிச்சு இருந்துச்சு.

அடுத்து  வரப்போகும் நம்ம புத்தகத்துக்கான ஏற்பாடுகளை விசாரிச்சுட்டு, சென்னை வெள்ள பாதிப்புகளைப் பற்றிப் பேச்சு வந்தது.   வெள்ளத்தால் பல பதிப்பகங்களுக்கு கஷ்டமாப் போயிருச்சுன்னவர், இங்கேயும் பல புத்தகங்கள் நனைஞ்சு போய் பாழாகிருச்சுன்னு  சில புத்தகங்களைக் காமிச்சார்.  ப்ச்.....
கவலைப்பட்டுக்கிட்டு இருக்கும்போதே...  'உங்களுக்கு ஒரு செக் கொடுக்கணுமே'ன்னு  இன்பத்தேனைக் காதில் பாய்ச்சினார்.   பேங்க் போய் அவஸ்த்தைப் பட நேரமில்லை. எனக்கு  காசாக வேணுமுன்னதும், இப்போ பேங்க் போய் வர ஆளும் இல்லை. சனிக்கிழமை வேற என்றதால்  கேஷ் எடுத்து வையுங்க.  ஊர் திரும்புமுன் ஒரு நாள் வர்றேன்னு  கிளம்பி அறைக்கு வந்து சேர்ந்தோம்.

இன்றைக்கு ரொம்பவே சுத்தியாச்சு. நாளைக்கு ஒரு பயணம் கிளம்பறோம். ஒரு பத்து நாளைக்கான துணிமணிகளுடன் காலையில் புறப்படத் தயாராகுங்க. நாங்களும்  சின்ன பெட்டியில்  வேண்டியவைகளை எடுத்து வச்சுட்டு, பெரிய பெட்டிகளைக் கீழே லாக்கர் ரூமில்  வச்சுட்டுக்  கிளம்பணும்.

காலை  எட்டரைக்கெல்லாம்  புறப்பட்டா நல்லது. சாலையில் கூட்டம் சேருமுன்  தாம்பரத்தைத் தாண்டிடணும். சரியா?

தொடரும்.........  :-)


27 comments:


  1. காலை எட்டரைக்கெல்லாம் புறப்பட்டா நல்லது. சாலையில் கூட்டம் சேருமுன் தாம்பரத்தைத் தாண்டிடணும். சரியா?//


    நானும் என் முதலாளி அம்மாவும் கூடவே வர்றோம்.

    இடம் இல்லேன்னு சொல்லிடாதீக. டிக்கிலே குந்திக்கினே ஆவது வருவோம் ல.

    போகும்போது ஒன்லி காபி கடை லே நிறுத்துங்க.

    காபி என்ன சுகம் ! என்ன சுகம் !!!

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. சிஜி ஐயா விரைவில் பூரண நலம் பெறட்டும் _/\_

    ReplyDelete
  3. //முந்திபோல் ஆயிரம் ரெண்டாயிரமுன்னு புத்தகங்களை அச்சடிச்சு ஸ்டாக் வைக்காமல், தேவைக்கு ஏற்ப முன்னூறு நானூறு கூட அச்சுப் போட்டுக்கலாமுன்னு சொன்னது எனக்குப் பிடிச்சு இருந்துச்சு//
    Teacher, remember ? Prabhandham, with meaning and fotos - I gave a request for your next book; You said we need to find 999 more buyers. Now it has reduced. Just another 250+. We can easily sell out. Pl consider.

    ReplyDelete
  4. // நாளைக்கு ஒரு பயணம் கிளம்பறோம் //
    நாளைக்கு எங்கே ?
    நாளை மறுநாள் தானே. இடையில ஒருநாள் - காத்திருக்கே.

    ReplyDelete
  5. பெட்டியில் துணி எடுத்துக் கொண்டு நானும் கிளம்பறேன்...

    ReplyDelete
  6. எங்கெல்லாமோ போறீங்க . உங்கள் பயணத்தில்பெங்களூர் இல்லையா.?

    ReplyDelete
  7. தாம்பரம் தாண்டி என்றால் பயணம் கும்பகோனம், தஞ்சாவூர் பக்கமா?

    ReplyDelete
  8. துளசி மா
    நீங்க என் செல்ல செல்வங்கள், அக்கா தவிர இன்னும் எத்தனை புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறீர்கள் , எல்லாமே சந்தியா பதிப்பக வெளியீடுகள் தானா
    இந்தத் தகவல் நாங்கள் வாங்க விடுபட்ட புத்தகங்களை வாங்க உதவியாக இருக்கும், ப்ளீஸ்

    ReplyDelete
  9. மூத்த பதிவர் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்தனைகள். நூல் அச்சு பற்றிய உத்தி அருமை.

    ReplyDelete
  10. டீச்சர் கல்பாக்கம் வாங்க, மலைமண்டல பெருமாள், திருவெட்டிஸ்வரர், திருவெள்ளிஸ்வரர், இந்தியாவில் முதலில் வந்து இறங்கிய டச்சுக்காரர்களின் சதுரங்கபட்டினம் கோட்டை, மற்றும் சுற்றியுள்ள கூவத்தூர்,விட்டிலாபுரம் பெருமாள் கோவில் எல்லாம் சேவிக்கலாம். என் நம்பர்.9176444307.

    ReplyDelete
  11. மூத்த பதிவர் உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
    எல்லோரையும் மறக்காமல் சந்தித்து , வல்லி அக்காவின் வீட்டையும்
    பார்த்து அவர்களுக்கு ஆறுதலாக தகவல் அனுப்பிய அன்பு வியக்க வைக்கிறது.
    வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.

    ReplyDelete
  12. அனேக நன்றி.
    சிஜி சார் பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது. சரியாகணும். பிடிவாதக்காரர். சரியாகிடுவார். பாவம் அவர் மனைவி.

    ReplyDelete
  13. வாங்க மீனாட்சி அக்கா அண்ட் சுப்பு அத்திம்பேர்.

    நீங்க கூட வருவது மனசுக்கு மகிழ்ச்சி! நல்ல இடத்தில் போய் வண்டியை நிறுத்திட்டு காஃபி குடிக்கலாம். த ஒரிஜினல் கும்பகோணம் ஃபில்டர் காஃபி!

    ReplyDelete
  14. வாங்க சாந்தி.

    பிரார்த்தனைக்கு நன்றி.

    ReplyDelete
  15. வாங்க விஸ்வநாத்.

    ஓக்கே. அப்பச் சரி. புத்தகம் போட்டுடலாம்! 200 கணக்குன்னா ஏகப்பட்ட பதிப்புகளாகவும் ஆகுமே! சொல்லிக்கவே ஜோரா இருக்கும்!

    நாளைக்குன்னா.... அடுத்த வகுப்பில் என்றுதான்.... :-)

    ReplyDelete
  16. வாங்க ரோஷ்ணியம்மா.

    ரைட் ரைட்.... கிளம்பியாச் :-)

    ReplyDelete
  17. வாங்க ஜிஎம்பி ஐயா.

    பெங்களூருக்கு இப்போதைக்கு இல்லை. இன்னும் மூணு பயணங்களுக்கு அப்புறம்தான்! முதலில் இந்த 108 யாத்திரையை முடிக்கப்பார்க்கிறோம்.

    ReplyDelete
  18. வாங்க மனோ சாமிநாதன்.

    ஆமாம். கும்பகோணம் உண்டு. தஞ்சாவூர் இல்லை :-(

    ReplyDelete
  19. வாங்க skirubas.

    அதிகம் ஒன்றும் இல்லை, மொத்தமே நாலுதான். சந்தியா பதிப்பகம் போட்டுருக்காங்க.

    1. நியூஸிலாந்து

    2. ஃபிஜித்தீவு.

    படிச்சுட்டு உங்க கருத்துகளைச் சொல்லுங்கோ. நன்றி.

    ReplyDelete
  20. வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

    பிரார்த்தனைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  21. வாங்க பித்தனின் வாக்கு.

    இந்தப் பயணத்தில் கூட சதுரங்கப்பட்டினம் கோட்டை கவனத்துலே இருந்ததுதான். ஆனால் வாய்க்கலை. ஏகப்பட்ட கோவில்களைச் சொல்றீங்களே!

    அடுத்த பயணத்தில் முயற்சி செய்கிறேன்.

    வருமுன் தகவல் தெரிவிக்கிறேன். அழைப்புக்கு நன்றி!

    ReplyDelete
  22. வாங்க கோமதி அரசு.

    எனக்கும் மூத்தபதிவர் உடல் நலமில்லாமல் போனது ரொம்பவே கவலையாத்தான் இருக்கு:-(

    வல்லியை ரொம்ப மிஸ் செஞ்சேன்.........

    உங்களைக்கூட சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது!

    என்ன செய்வது? சில நேரங்களில் இப்படித்தான் அமைஞ்சுடுது....

    ReplyDelete
  23. வாங்க வல்லி.

    சிஜியின் உடல்நிலை விரைவில் நல்லபடி ஆகணும்ப்பா.

    இங்கத்து ஆஸ்பத்திரி பதிவு போட்டபோது சிஜியின் நினைவுதான் அதிகமாக இருந்தது. ரீஹேபில் கவனம் அதிகம்ப்பா இங்கே.

    ReplyDelete
  24. தொடர் சந்திப்புகள்..... தொடரட்டும்.

    நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  25. சிவஞானம் ஐயாவை மறக்க முடியுமா? அவருடைய உடல் நலக்குறைவு வருத்தத்தைத் தருகிறது. விரைவில் முழுநலம் பெற முருகனை வேண்டிக் கொள்கிறேன். செந்தமிழ்த் தெய்வமான முருகன் எல்லாருக்கும் நல்ல உடல் நலமும் மன நலமும் வழங்கி அருள வேண்டிக்கொள்கிறேன்.

    பல பதிப்பகங்களில் புத்தகங்கள் நனைஞ்சு போச்சாம். இப்போ ஒரு புத்தகத் திருவிழா ஓடிக்கிட்டிருக்கு. ரொம்ப வாங்கலைன்னாலும் கொஞ்சமா வாங்கினேன்.

    ReplyDelete
  26. வாங்க வெங்கட் நாகராஜ்.

    தொடர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  27. வாங்க ஜிரா.

    சிஜிக்கான வேண்டுதல்களுக்கு நன்றி.

    புத்தகத் திருவிழா நேத்தோடு முடிஞ்சுருக்கும். மனசெல்லாம் எனக்கு அங்கேதான் இருந்தது. ஃபேஸ்புக்கில் ஏராளமானவர்கள் பதிவு செஞ்சுருந்ததை வாசிச்சு மனதை தேற்றிக்கிட்டேன். ஜனவரியில் ராயப்பேட்டையில் நடந்த விழாவுக்குப் போக முடிஞ்சது. கொஞ்சம் புத்தகமும் வாங்கிவந்தோம்.

    என்னென்ன புத்தகம் வாங்கினீங்க? வாசிக்க ஆரம்பிச்சாச்சா?

    ReplyDelete