Monday, September 23, 2013

ஊருக்கு ஒரு பேட்டர்ன் (சிங்கைப்பயணம் 1)


பழகின ஊர் ஒவ்வொன்னுக்கும் ஒரு பேட்டர்ன் வச்சுருக்கேன்.  சிங்கைன்னா  சீனுவை தரிசனம் செஞ்சு,  அங்கேயே உக்கார்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிச்சு அந்த நாளை  ஆரம்பிக்கணும். இந்த சகஸ்ரநாமம் வாசிப்பது  ஒரு எட்டுவருசங்களா  நடக்குது.  அதென்னமோ அங்கே கோவிலில் உக்கார்ந்து வாசிக்கும்போது  பெருமாளே பக்கத்தில் வந்து உக்கார்ந்துக்கற மாதிரி தோணும். வேறெந்த  ஊர் கோவில்களுக்கும்  இது நம்ம நடைமுறை இல்லையாக்கும், கேட்டோ!  இது சிங்கை ஸ்பெஷல்:-)

இன்னிக்குக் காலையில் எழுந்து கடமைகளை முடிச்சுட்டு நேரா கோமளவிலாஸ் ப்ரேக்ஃபாஸ்ட்.  கோபாலுக்கு இட்லி வடை, எனக்குப் பொங்கல் வடை. கூடவே ஃபில்ட்டர் காஃபி. கல்லாவிலிருந்த பெண்மணி, 'எப்ப வந்தீங்க'ன்னு சிரிச்சமுகத்தோடு கேட்டாங்க.  நாமும் கடந்த  29 வருசமா அவுங்களைப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்:-)

காலை ஒன்பதுக்கு முன்  நகரத்தின் பிஸியான சாலைகளில் ஒன்னான செராங்கூன் சாலையில் நடப்பது ஒரு தனி அனுபவம். ராத்திரி பெய்த மழையால் சாலை பளிச்சுன்னு ஈரத்துடன் கிடக்கு.  சாலைக்கு எதிர்ப்புறம் இருந்தே வீரமாகாளிக்கு  ஒரு கும்பிடு. 'அப்புறம் வாறேன் ஆத்தா.'

ரொம்பப்பொடி நடையில்  சீனுவின் கோவிலுக்குப்போய்ச் சேர்ந்தோம். முக்கால் கிலோமீட்டர். புள்ளையாருக்கு  ஒரு தேங்காய் உடைக்கணும்.  கோவிலுக்குள் நுழைஞ்சதும்  நேரா கண்ணை ஓட்டினால் கொடிமரமும் அதன் பின்னே இன்னும்கொஞ்ச தூரத்தில் திறந்த கண்ணோடு நிற்கும் பெருமாளும்!  'ஒரு சுத்து சுத்திட்டு வரேண்டா'  என்ற முணுமுணுப்போடு   ஒரு தேங்காயை மட்டும் வாங்கினோம். புள்ளையார் முன்னால் இருக்கும்  தொட்டியில்  சூறைத்தேங்காய்  உடைச்சார் கோபால்.

இந்தத் தேங்காய் உடைக்கும் தொட்டி அமைப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். செட்டிநாட்டுக் கோவில்களில்  முக்கியமாகப் பிள்ளையார்பட்டி  கோவிலில்  உள்ள  இந்த முறை  ரொம்ப 'நீட் ' என்றே நினைப்பேன்.  உடைஞ்ச ஓட்டாஞ்சில்லுகள் யார் காலிலும் மிதிபடாது பாருங்க.
புள்ளையார் சந்நிதியில்  தங்க முலாம் பூசிய வெள்ளிக் கவசத்தில் இருக்கும் மூலவர், பஞ்சலோக உற்சவருடன் தம்பியும் வேலாக நின்னு சேவை சாதிக்கிறார்.  பெருமாள் கோவிலில் தம்பி எப்படி இடம்பிடிச்சு நின்னார் பாருங்களேன்!!!!

தனிக் கட்டிடமா இருக்கும் இதில்  இடது பக்கம் புள்ளையார், வலது பக்கம் சுதர்ஸனர். ரெண்டு சந்நிதிகளுக்கும் இடையில்  பின்புறம் கொஞ்சம் தள்ளி விஷ்ணுதுர்கை.  முன்னால் நின்னு பார்த்தால் மூன்று சந்நிதிகளையும்  ஒரு சேரப் பார்த்து சேவிக்கலாம்.

 ஸ்ரீ சுதர்ஸனருக்குப் பின்பக்கம்  வழக்கம்போல் நரசிம்ஹர், சிரிச்ச முகத்துடன்.    சுதர்ஸனர் சந்நிதியின் வெளிப்புறம் இரண்டு பக்கங்களிலும்  குமுதவள்ளி நாச்சியார் &திருமங்கை ஆழ்வார்  ஒரு புறமும், நம்மாழ்வார் & பெரியாழ்வார் மறு புறமும்  இருக்காங்க.  சந்நிதிகளின் வெளிப்புறச் சுவர்களில் அவரவருக்கு  தனித்தனி டிஸைன்களில்  யானை, சிம்ஹம் இப்படி வேலைப்பாடுகள்.  சும்மாச் சொல்லக்கூடாது  பார்த்துப் பார்த்துதான்  கட்டி இருக்காங்க. ஒவ்வொரு சந்நிதியையும் தனித்தனியாச் சுற்றிவரலாம்.

பிரசாத விநியோகம் நடக்குது. எட்டிப் பார்த்தேன்.  புளியோதரையும், ததியன்னமும்  துளித்துளி கோபாலுக்கும்  கேஸரி துளியூண்டு எனக்குமாக வாங்கிக்கிட்டேன்.  தெரிஞ்சிருந்தால் கோமளவிலாஸ்  போகாம நேரா இங்கே வந்திருக்கலாம். (என்ன தான் சொல்லுங்க பார்க் ராயல் (நியூபார்க்) வசதி வராது. கோவிலுக்கு ரொம்பப்பக்கம்.  ஆனால்.... அநியாயத்துக்கு  அறை வாடகை வச்சால் எப்படி? புத்தம்புது கிராண்ட் சோழாவா இருந்தால்கூடப் போனாப்போகுதுன்னு இருக்கும். இங்கே நியூ பார்க் என்ற பெயரை பார்க் ராயல்ன்னு மாத்தினதும் வாடகை எல்லாம் டபுள் ஆக்கினது  அடுக்குமா?)


அட்டகாசமான ருசி. அதென்னமோ  சாமிப் பிரசாதம் என்றாலே  .......     என்ன ஒன்னு. இங்கே பயமில்லாமல் சாப்பிட்டுக்கலாம்.  சுத்தமாச் செய்யறாங்க. சமைக்குமிடத்தைப் பார்த்தாலே அட்டகாசமா இருக்கு.

மஹாலக்ஷ்மி  தாயாரை  ஸேவிச்சுட்டுக் கோவிலை வலம் வந்தோம்.  ஆண்டாள் சந்நிதியில் 'தூமணி மாடம்' ஆச்சு.  எதிரில் துளசி மாடம்.  அப்புறம் எம்பெருமான்  தரிசனம்.  யாரும்  'ஜருகு ' சொல்லி விரட்டாமல் நிம்மதியா  நம்மிஷ்டம் போல் மனம் கொள்ளுமளவுக்கு  ஸேவிக்கலாம்.  இவர் ஸ்ரீநிவாசன். திருப்பதி  ஸ்ரீநிவாசனே  அனுப்பி  வச்சுருக்கார்.

எப்ப வந்தாராம்?  கோவிலைக் கட்டும் எண்ணம் வந்தது 1800 களில்.பெருகி வரும் வைஷ்ணவர்களுக்கு ஒரு பெரு(ம்) ஆள்  வேணும். அந்தக் காலக்கட்டத்தில்  இந்தியாவும் ப்ரிட்டிஷ் ஆட்சியிலே இருந்துச்சே!  கிழக்கிந்தியா கம்பெனி!  மாடர்ன் சிங்கப்பூர் உருவாகி  இருந்த சமயமும் அதுதான்.   மருத்துவர்கள், வக்கீல்கள் னு பெரியபடிப்பு படிச்சவுங்க முதல், வியாபாரிகள்,  நடுத்தர வர்க்கத்தில் பட்ட  குமாஸ்தாக்கள், ஆசிரியர்கள், போலீஸ், தபால் ஊழியர்கள் இப்படி வெள்ளைக்காலர்  வேலை செய்பவர்கள்,   கட்டிட வேலை,  கூலிவேலைன்னு செய்யும் சாதாரணத் தொழிலாளிகள் இப்படிப் பலரும்  இங்கே வந்து குடியேறினாங்க.

அருணாச்சலம் பிள்ளை,  கூத்தபெருமாள் பிள்ளை, ராமசாமி பிள்ளை, அப்பாசாமி பிள்ளை, சொக்கலிங்கம் பிள்ளை, ஜமீன்தார் ராமசாமி  என்பவர்கள் சேர்ந்து  ரெண்டு ஏக்கருக்கும் கொஞ்சம் அதிகமா நிலம் ஒன்னு ( 2 acres 2 woods and 24 poles )  நம்ம கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து வாங்கினாங்க. இருபத்தியாறு ரூபாய் எட்டணா செலவாச்சு.  ஒரே கம்பெனி என்பதால் அங்கத்துக் காசும் இங்கத்துக் காசும் (சிங்கப்பூர் செட்டில்மெண்ட்) ஒரே மாதிரி செல்லுபடி ஆனதாம். அப்ப 1851 வது  ஆண்டு. பலவருசங்களா இடத்தை அப்படியே போட்டு வச்சுருந்துட்டு,  1885 லே கோவில்கட்டி பெருமாளை வச்சாங்க. அவர் நரசிங்கப் பெருமாள்.

சிலவருசங்கள் கழிச்சு கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த  இன்னும் கொஞ்ச இடங்களையும் வாங்க முடிஞ்சது. ரெண்டு பக்தர்கள் அந்த இடங்களை வாங்கி கோவிலுக்கு நன்கொடையாக் கொடுத்தாங்க. ஆகஸ்ட் 15, 1912  இல் Mohammedan Hindu Endowments Board இன்னும் கொஞ்சம் இடத்தை 999 வருச லீஸ் எடுத்துக் கொடுத்து உதவி இருக்கு. தமிழக இஸ்லாமியர்கள்தான்  முதலில் இங்கே குடியேறினார்களாம். இந்த போர்டுதான் 1907 முதல்கோவில் நிர்வாகத்தையும்  பார்த்துக்கிட்டவங்க.

1950 வரை  இப்படியே நடந்துக்கிட்டு இருந்த கோவிலை, இன்னும் பெரிய அளவில் கட்டலாமுன்னு போர்டு முடிவு செஞ்சது.  அப்படியும் பத்து வருசமாயிருச்சு  அதுக்கான பொருள் சேர்க்க.  கோவிந்தராஜப்பிள்ளை என்ற புரவலர்  பணம் செலவு செய்ய முன்வந்தார். 1960 இல்  கோவிலைக் கொஞ்சம் பெருசாக் கட்டி முடிச்சாங்க. 1965 இல்  இவரது முயற்சியால் கல்யாணம் போன்ற சுபகாரியங்களுக்காக ஒரு ரெண்டு மாடி ஹால் கூடக் கட்டினாங்க. சுதந்திர சிங்கப்பூரின் முதல் ஜனாதிபதி   Enche Yusoff Bin Ishak அவர்கள்  இந்த ஹாலைத் திறந்து வச்சார்.

  அதுக்குப்பிறகு இன்னும் ஒரு வருசம் கழிச்சு (1966)  புள்ளையார் இருக்கும் கட்டிடமெல்லாம்  கட்டி முடிச்சுருக்காங்க. அந்த சமயம்தான்  பெரியோர்கள் பலர்  சேர்ந்து , மூலவரை மாத்தலாமுன்னு முடிவு செஞ்சு,   கோபமா இருக்கும் நரசிம்ஹனுக்கு பதிலாக காருண்யமான ஸ்ரீநிவாசனை மூலவராக்கிட்டாங்க.  அப்ப அருள்மழை பொழிய ஆரம்பிச்சவர்தான் நம்ம சீனு. 1979இல் ராஜகோபுரம் கட்டியாச்சு.  இதைக்கட்டவும் பெருமளவில்  உதவுனவர் நம்ம கோவிந்தராஜப் பிள்ளைதான்.  1978 இல் கோவில் சிங்கையின் பாரம்பரியக் கட்டிடமா அறிவிக்கப்பட்டது. இதுவரை மூணு முறை புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் ஆகி இருக்கு. வெளிப்புறம் மதில் கட்டுமுன் எடுத்த(சுட்ட) படம் இது. கோவிலுக்கு நன்றி.

எப்பப்போனாலும் பளிச்ன்னு கோவில் சுத்தமா இருப்பதோடு பூஜை விசேஷங்கள் எல்லாம் அருமையா அந்தந்த நேரத்தில்  சரியான முறையில்  நடக்குது.  எந்த மதக்காரரா இருந்தாலும் கோவிலுக்குள் வரத்  தடை ஏதுமில்லை. தாராளமா க்ளிக்கவும் செய்யலாம்.  தைப்பூசத்துக் காவடிகள் பால்குடங்கள் ஊர்வலம் எல்லாம் இங்கிருந்து கிளம்பிதான் டேங் ரோடு தண்டபாணி கோவிலுக்குப் போகுது.  சைவ வைஷ்ணவ ஒற்றுமைச் சின்னம்.

நம்ம தூண் காலியாத்தான் இருக்குன்னு  அங்கே உக்கார்ந்து  கையோடு கொண்டு போயிருந்த (பெரிய எழுத்து) ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை வாசித்தோம்.  அரைமணி நேரம்  ஆகும் வாசிச்சு  முடிக்க. வலது பக்கம் நம்ம நேயுடு தனிச்சந்நிதியில்,வெற்றிலை மாலையில் ஜொலிக்கிறார்!

பொடிநடையில் மீண்டும் அறைக்கு வந்தோம். இன்னும்  கொஞ்ச நேரத்தில் நம்ம தோழி வர்றாங்க .

தொடரும்..........:-)






22 comments:

  1. காலங்காத்தால தரிசனம் ஆச்சு. பின்னே புளியோதரை பொங்கல் பிரசாதமும் :)

    நேர்ல போயிட்டு வந்த மாதிரி வாசிச்சு வந்து சேர்ந்தேன்.

    விஷ்ணு சஹஸ்ரநாமம் வாசிக்கணும் :)

    'அப்புறம் வாறேன் ஆத்தா.'

    ReplyDelete
  2. அடடா.என்னவொரு தரிசனம்.

    தனக்கு வேணும்கறவங்க வந்தால் பெருமாளும் தாயாரும் துள்சிமாவும் எப்படி ஜ்வலிக்கிறாங்கப்பா!!!

    இந்தக் கோவிலுக்கும் யானை இருக்காமா.
    பிரசாதம் பார்க்கவே ஸ்ஸ்ஸ். ஸ்வீகரிக்க ஆசை.
    நரசிங்கப் பெருமாள் கோபம்னு அவங்க நினைத்தால் அவங்களோட தப்பு. தெரியாதவர்கள் தான் அப்படி நினைப்பார்கள்.
    இவராவது வட்டிக்கு வட்டினு கேட்பார். அவருக்கு ஒரு ரூபாய் எடுத்துட்டு எப்போவாவது உன்னைவந்து பார்க்கிறேன்னு சொன்னாப் போதும்.
    ஏன்னால் அவர் தான் நம்முடையேவே இருக்காரே!!!!!!!
    சிங்கை சீனு...பேரிலேயெ சிங்கம்:)))))

    ReplyDelete
  3. கோவிலின் தகவல்கள் மிகவும் அருமை அம்மா...

    ReplyDelete
  4. சு­தர்­ச­ன­ரும், ஆண்டா­ளம்மாவும் ­போட்டோ­வு­ல ­ஜொ­லிக்­க­றாங்­க; கண்­ணைப் ­ப­றிக்­க­றாங்­க. பு­ளி­யோ­த­ரை, பொங்­கல் ­பி­­ர­சா­தத்­தோ­ட ­கோ­யி­லை ­வ­லம் வ்­ந்­த­து­ல ­ப­ர­ம ­தி­ருப்­தி. ஏன்­னா... நான் ­இ­துவரை ­சிங்­கை ­வி­சிட் ­அ­டிச்­ச­தில்­லை!

    ReplyDelete
  5. நாங்க கேரளா திவ்ய தேசங்கள் போனபோது திருவல்ல -ஸ்ரீவல்லபன் சந்நிதியில் உட்கார்ந்து ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லோருமாக சேவித்தோம். அது ஒரு தனி அனுபவம் தான்.
    காலையில் சீனுவை சேவித்து பிரசாதமும் சாப்பிட்டாயிற்று. அடுத்தது உங்கள் தோழியை பார்க்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. Nalla tharisam kidachuduchu teacher...inga thaan kovil effect illatha kovila irukee.bangalore to dubainu 4 varusama suthi suthi ippo anju masama dubaila iruken teacher.All these yrs without fail i am reading yr blog.but,i could not send any msgs.pls suggest me any tamil font to download.

    ReplyDelete
  7. சீனு பெருமாள் தர்சனம். பிரசாதம் அமோகம்.

    வெற்றிலை மாலையில் நேயுடு அழகாக காட்சிதருகிறார்.

    ReplyDelete
  8. முதல் இரண்டு படங்கள் வித்யாச கோணத்தில் வெகு நேர்த்தியாய்-

    ReplyDelete
  9. 'அப்புறம் வாறேன் ஆத்தா.'

    சினிமா டைட்டில் மாதிரி இருக்கு

    ReplyDelete
  10. அடா அடா அடா... புளியோதரையும் தயிர்சாதமும்... பாக்கவே வாயூறுதே...

    இந்தக் கோயில் செரங்கூன் ரோட்டுல தானே இருக்கு? போயிருக்கேன். ஆண்டாளை கூண்டுக்குள்ள வெச்சிருப்பாங்களே.

    பொதுவாவே சிங்கையில் கோயில்கள் அருமையான பராமரிப்பு. எந்த மதத்தினரும் போகலாம். போட்டோ பிடிக்கலாம். ஆனாலும் கோயில்கள் நல்லாதான் இருக்கு. நம்மூர்லதான் அது ஆகாது இது போகாதுன்னு நூறு நொரனாட்டியங்கள்.

    முருகன் அங்கயும் வந்துட்டாரா? இது ரொம்பவே ஆச்சரியமான விஷயம்.

    ReplyDelete
  11. பிள்ளை யார் அசத்தறார் !! கண்கள் நிறைஞ்சுடுச்சு .மனசு குழஞ்சுடுச்சு .
    அருமையான படங்கள் .நன்றி துளசி .
    புளியோதரையும் தயிர்சாதம் இழுக்குது :) ( our family dish :))) )

    ReplyDelete
  12. வாங்க கவிதாயினி.

    கண்ணனின் அருள் எப்போதும் உங்கள் கூடவே வருது!

    ReplyDelete
  13. வாங்க வல்லி.

    கோவிலுக்கு அன்னிக்கு (மட்டும்) ஒரு யானை வந்துச்சு.

    மத்தபடி சிங்கயில் கோவில்களுக்கு யானை இல்லைன்னுதான் நினைக்கிறேன்.

    பிச்சையெடுக்க அரசு விடாது பாருங்க!

    நரசிங்கம் கோபமுன்னு நாந்தான் நினைச்சேன்ப்பா:(

    சிரிச்ச மனமுள்ள சிங்கமா அவன்!!!

    ReplyDelete
  14. வாங்க திண்டுக்கல் தனபாலன்.

    இந்தத் தகவல்கள் எனக்கும் புதுசுதான்.அதுதான் இங்கே பகிர்ந்துகொண்டேன்.

    ரசனைக்கு நன்றி.

    ReplyDelete
  15. வாங்க பால கணேஷ்.

    ஆஹா...பதிவுலே என்ன இப்படி மின்னலடிக்குதேன்னு பார்த்தேன்!!!

    சிங்கைக்கு சரிதாவுடன் சேர்ந்து வரணுமுன்னு ப்ரார்த்தனை இருக்குமே!

    ReplyDelete
  16. வாங்க ரஞ்ஜனி.

    அடையாறு அனந்தபத்மநாபன் கோவிலில் கூட ஒரு லேடீஸ் க்ரூப் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ராநாமம் சொல்லுவாங்க. மாலை 4 மணிக்குக் கோவில்திறந்தவுடன் மக்கள்ஸ் வரவர நாலரைக்கு ஆரம்பிக்கும்.

    அப்போ நாம் கோவிலில் இருந்தோமுன்னா..... குழு சொல்வதன் கூடவே கோவிலில் இருக்கும் மற்றவர்கள், சுத்தி வருபவர்கள் இப்படி அங்கங்கே வாய்விட்டு, முணுமுணுத்தபடியும்
    சொல்லிப்போவதுமா அந்த சூழ்நிலையையே பரவசமாக்கிரும்.

    ரசித்தமைக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  17. வாங்க சிந்து.

    தமிழ் ஃபாண்ட்க்கு இ கலப்பை டவுன்லோடு செஞ்சுக்கலாமே!

    சுலபமாத்தான் இருக்கு.

    ReplyDelete
  18. வாங்க மாதேவி.

    நேயுடுக்கு என்னப்பா..... நிம்மதியா இருக்கார்!

    கூடவே வர்றதுக்கு நன்றீஸ்.

    ReplyDelete
  19. வாங்க ஜோதிஜி.

    //வித்யாச கோணத்தில் //

    அப்டீங்கறீங்க!! எனக்குள் ஒரு கேமெராக்காரி இருக்காள் போல!!!!

    கவனிப்புக்கு ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  20. வாங்க ஜி ரா.

    ஆண்டாள் கூண்டுக்குள் இருந்தாலும் உள்ளே நல்ல வெளிச்சம் உண்டு. நம பக்கங்களில்தான் இருட்டறையில் அவளைப் பூட்டி வச்சுருவாங்க.

    மார்கழியில்மட்டும்தான் அவள் இருப்பதே கண்ணுக்குப் புலப்படும். அந்த ஒரு மாசம் மட்டு தலையில் தூக்கி ஆடிட்டு, அப்புறம் தூக்கிக் கடாசிருவாங்க:(

    முருகன் ரொம்ப வருசமா அங்கே வேல் உருவில் ஒளிஞ்சு நிக்கறார். பெரிய உருவ அண்ணன்மேல் நம் பார்வை சுலபமா விழுந்துரும் வேலை நாம் கூர்ந்து கவனிக்கணும்.

    ReplyDelete
  21. வாங்க சசி கலா.

    புளியோதரையும் தயிர்சாதமும் கூடவே எலுமிச்சை சாதமும் நம்ம ஃபேமிலி ஃபேவரிட் டிஷ்.

    கோவில் படு சுத்தம் என்பதால் சட்னு மனசை இழுத்துருது.

    ReplyDelete
  22. ஜருகு ' சொல்லி விரட்டாமல் நிம்மதியா நம்மிஷ்டம் போல் மனம் கொள்ளுமளவுக்கு ஸேவிக்கலாம். இவர் ஸ்ரீநிவாசன். திருப்பதி ஸ்ரீநிவாசனே அனுப்பி வச்சுருக்கார்.//

    கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    கோவில் சுத்தமாக இருப்பது மனதுக்கு மகிழ்ச்சி தான்.,நீங்கள் எடுத்த இறைவன் படங்களைப் பார்க்கும் போதும் பார்க்க ஆவலாக இருக்கிறது.

    ReplyDelete