Friday, August 30, 2013

இலை போட்ட சாப்பாடு......(மலேசியப் பயணம் 12 )

ஒத்தைப் பருக்கையை விடாம அப்படியே வழிச்சுத் தின்னுருக்கேன். என்ன ஆச்சுன்னு இவர் திகைச்சுப்போய் பார்க்கிறார். அப்படி ஒரு பசியா? இல்லை  சம்பிரதாயமான  சாப்பாட்டைப் பார்த்து  ரொம்பநாளாயிருச்சேன்ற நினைப்பா?  ஒன்னு ரெண்டு மூணுன்னு விரல்விட்டு எண்ணிப்பார்த்து  எட்டுநாளாச்சு  நம்மசாப்பாட்டைப் பார்த்துன்னேன். அப்ப பாலியில் தின்னது?  ஐய்ய.... அது நார்த் இண்டியன் சாப்பாடில்லையோ?

சரவணபவன் (சென்ட்ரல்) வாசலில் இறக்கிவிட்டுட்டார் டெக்ஸிக்காரர். உள்ளே போய் மெனுகார்டைக் கையில் எடுத்தால்  சவுத் இண்டியன் லஞ்ச்  ஆன் பனானா லீஃப்.  ஆஹா..... இன்னிக்கு விருந்து சாப்பிடவேண்டிய நாள்தான்.  இலைச்சாப்பாடுதன்னே அய்க்கோட்டே!

மெனுகார்டை ஆராய்ஞ்சவர், மோர்மிளகாயைத் தட்டில் காணோமேன்னு விசாரிச்சதும், பரிமாறுபவர் ஓடிப்போய்க் கொண்டுவந்து விளம்பினவர், நிறையப்பேர் அதை சாப்பிடாமல் தட்டுலேயே வேஸ்ட்டா விட்டுட்டுப்போயிடறாங்க. அதான் கேளுங்கள் கொடுக்கப்படும் வகையில் சேர்த்தாச்சுன்னார்.

இலை போட்ட சாப்பாட்டில் சாம்பார், ரசம், மோர், ரெண்டு கறி வகைகள், கூட்டு, ஸ்பெஷல் குழம்புன்னு ஒரு புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர்பச்சடி, ஒரு இனிப்பு,  ஊறுகாய், மோர்மிளகாய் அப்பளம், அளவுச்சோறு . இதுக்கு பத்து ரிங்கிட்,நாப்பது சென்ட்  சார்ஜ். இங்கெல்லாம்  சாப்பாட்டுக்கு  6 % வரி கூடுதலா தனியா பில்லில் சேர்க்கறாங்க.

திருப்தியா சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு கல்லாக்காரரிடம்  அருமைன்னு சொல்லிட்டுக் கிளம்பினோம். வலக்கைப்பக்கம் நடந்தால் மோனோ ரயிலுக்கான சென்ட்ரல் ஸ்டேஷன் வருமாம்.  இந்த சாலை முழுசும் ஏகப்பட்ட ரெஸ்டோரன்கள்.  மீன் தலை இங்கே ஸ்பெஷாலிட்டி ஐட்டம்போல!  பல இடங்களில் காட்சிக்கு உக்கார்ந்துருக்கு.

 சாலை பிரியும் ஒரு இடத்தில் கூடாரம் ஒன்று போட்டு சுறுசுறுப்பான வியாபாரம். பஜ்ஜி, போண்டா, வடை வகையறாக்கள்.. எல்லாம் மகளிரணி தயாரிப்பு. நல்ல சுவையாக இருக்கும்போல்.... கூடியிருக்கும் கூட்டமே சொல்லுது. வடை இழுத்தாலும் வயிற்றில் இப்போ இடமில்லை:(




ஹொட்டேல் டி செண்ட்ரல் , பார்க்க நல்லாவும்  அறைவாடகை விலை குறைவாகவும் இருப்பதாகத் தோணுச்சு. அடுத்து ஒரு  தமிழ்சினிமா  ஸி டி கடை.  தமிழ்ப்பாட்டு முழக்கமா இருக்கு.  சும்மா எட்டிப்பார்த்தேன்.  வாங்கிக்கத் தோணலை. நம்ம வீட்டுலேசினிமா சினிமான்னு  தேடித்தேடிப் பார்க்கும்  நபர் உள்ளே போய்  விசாரிச்சுட்டு வந்தார்.


புகிட் பின்டாங் ரயில் நிலையத்துக்கு  தானியங்கி இயந்திரத்தின் மூலம் பயணச்சீட்டு வாங்கிக்கிட்டு  மாடியேறிப்போய் ரெயிலைப் பிடிச்சோம்.  ரயிலில் போகும்போது கண்ணுக்குத் தெரியும் காட்சிகள் எல்லாம்  அதிக தூரமுமில்லாமல் ரொம்பப்பக்கத்திலும் இல்லாமல் இல்லாமல் நம்ம கெமெராக் கண்களுக்குப் பொருத்தமா இருக்கு. க்லாங் நதி அமைதியா நகரத்துக்குள்ளெ ஓடுது. கூவத்துக்கு விடிவுண்டோ என்ற எண்ணம் வந்து தொலைக்குது:(

அறைக்கு வந்ததும் கொஞ்சநேரம் ஓய்வு.  உண்ட மயக்கம் இல்லையோ!  இன்றைக்கு மாலை நம்ம பேட்டையிலேயே வேடிக்கை பார்க்கலாம்.  ஷாப்பிங் டிஸ்ட்ரிக்ட் என்ற பெயர் புகிட் பின்டாங்குக்கு இருக்கே.

மாலை கிளம்புமுன்,  கொண்டாட்டத்தின் ஆரம்பமாக , காலையில்  முதலில் ருசிக்க நினைச்சு, மறந்து போன  இனிப்பை உள்ளெ தள்ளினோம். மாலைப்பொழுது(ம்) இனிதாக இருக்கட்டும்! ததாஸ்து.....

கூடாரம் என்னும் புது ஷாப்பிங் மால் இப்போதைக்கு மிகப்பெருசு என்னும் வரிசையில்முதலில் நிக்குது.  பதிமூணு லக்ஷத்து எழுபதாயிரம் சதுர அடிகள் பரப்பு.  ஐநூறு  கடைகள். எல்லாமே விஸ்தாரமாத்தான்.  காலை பத்துக்குத் திறந்தால் இரவு பத்துக்கு மூடுவாங்க. நின்னு நிதானமா ஷாப்பிங் செய்யலாம்.  நமக்கு விண்டோ ஷாப்பிங் செய்ய கசக்குதா என்ன?

கூடாரத்தின் நுழைவு வாசலில் ஒரு நீரூற்று. Liuli Crystal Fountain . இதுதான் மிகவும் உயரமான செயற்கை நீரூற்று என்று பதிவாகி இருக்கு. முழுசும் கண்ணாடி. மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திப்பூ  இடம்பிடிச்சுருக்கு.  ஆறு மீட்டர்  விட்டமும்  3.6 மீட்டர் உயரமும்.  வெவேறு நிறமுள்ள  ஒளி வரும்படி அமைச்சுருக்காங்க. பிரமாதமான லைட்டிங்ஸ்.  மால் ஆரம்பிச்சது 2007 என்றாலும்   இந்த நீரூற்று வச்சது என்னமோ 2009 இல்தான்.





மூணு பெரிய கண்ணாடிப் பாத்திரங்கள்,  மலேசியாவின் பல்வேறு இனமக்கள் இணைஞ்சு வாழும் கலாச்சாரத்தைக்குறிப்பிடுதாம்.  (Malaysia's multiracial culture living)  மலேசியாவின் சுற்றுலாத்துறை வெகுவாகப் பாராட்டி இருக்கு.

Teh tarik (literally "pulled tea")  இதை 'ஒரு மீட்டர்  டீ'ன்னும் சொல்றாங்க:-) எப்படி டீயை இழுப்பாங்க?  நம்மூர்  நாயர் கடையில் போய்ப் பாருங்க. அவர் எல்லா டீயையுமே இழுத்துருவார் !   டீயை  பெரிய (mug) மக்  இரண்டில்  இந்தக் கைக்கும் அந்தக் கைக்குமா மாத்தி மாத்தி ஆத்தறதுதான் இங்கே tarik! தலைக்கு மேல் கையை உசரத்தில் வச்சு  அங்கிருந்து  டீ அடுத்த மக்குக்குள் சிந்தாமல் சிதறாமல் பாய்வது' ஆ'ன்னு வாயைப் பொளந்து பார்க்கும் அதிசயம் வெள்ளைக்காரனுக்கு!
 சுட்ட படம்


நாலைஞ்சு தளத்தில் கடைகள் இருக்கே தவிர  வானம் நோக்கிப்போகும்  அடுக்கு மாடிகளில் ஆடம்பரமான வீடுகள்தானாம்.  விலைக்குத் தர்றோம் வேணுமான்னு  கேட்டதுக்கு மறு பேச்சில்லாம  தலையை மட்டும் இடதுவலதா ஒரு ஆட்டு.  பெவிலியன் டவர். வெறும் இருவது மாடிகள்தானாம்,   (ரொம்பப் புளிக்குதே இந்தப்பழம்) யாருக்கு வேணும்?

ச்சும்மாச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். ஒரு கேஃபேயில் வெளி வராந்தாவில்  உக்கார்ந்து சாப்பிடும் அமைப்பு ரொம்பப் பிடிச்சது. சுவரிலேயே ஒட்டிப்பிடிக்கும் இருக்கையும் மேசையும். அறுவது  உணவுக்கடைகள் இதுக்குள்ளே  இருக்குன்னு  தகவல்.   இன்னொரு மாடியில் ஃபுட் கோர்ட் ஒன்னும் இருக்கு. இந்தியா வகைகள் கூட கிடைக்குமாம்.

போய்ப் பார்க்கலாமுன்னு போனால்....   அது ஒரு Teh Tarik Station  ரொட்டிச்சனாய் (பயந்துறாதீங்க. நம்மூர்  பரோட்டா தான்) தேத்தண்ணி ஆர்டர் கொடுத்தோம். ச்சாயா இப்ப   ஸ்பெஷல் டீலில் இருக்கு. வழக்கம் போல் அரை லிட்டர்  டீ.

பெவிலியன் மாலில் சுத்திட்டுப் பக்கத்து கடையில் ஷாப்பிங் செஞ்சோம். கோபாலுக்கு   ரெண்டு சட்டைகளும், மகளுக்கு  ரெண்டு க்ரீமும்.  எனக்கு? இந்த முறை மெலமைன் வாழை இலைத் தட்டு  வேணும் . கொக்குக்கு ஒன்றே மதி!  நோக்கமில்லாமல் எந்தக் கடைக்குள்ளும் நுழையமாட்டேன் கேட்டோ:-)

நல்ல தரமான ஷூஸ்  இருக்குன்னு  செருப்புக்கடைகளில் புகுந்து புறப்பட்டார்.  லேடீஸ்தான் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவழிப்பாங்களாமே!  அது பொய் என்பது உறுதியாச்சு:-)

மறுநாளைக்கு தேவையான பழங்கள் வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பினோம்.

தொடரும்............:-)






27 comments:

  1. போண்டா பஜ்ஜி எல்லாம் சூப்பரோ சூப்பர்.

    எதுக்கும் இருக்கட்டும் அப்படின்னு கை நிறைய
    அள்ளிக்கிட்டு, இந்தியாவுக்கு சென்னைக்கு வந்தேன்.

    இங்கே பதிவர் மா நாடு வட பழனிலே நடக்குதுல்லே
    துளசி கோபால் உபயம் என்று சொல்லி கொடுக்கலாம்
    இல்லையா.
    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  2. வாழை இலை விர்ந்தா?! ஜமாய்ங்க!!

    ReplyDelete
  3. இதை 'ஒரு மீட்டர் டீ'ன்னும் சொல்றாங்க:-) எப்படி டீயை இழுப்பாங்க? நம்மூர் நாயர் கடையில் போய்ப் பாருங்க. அவர் எல்லா டீயையுமே இழுத்துருவார் //

    அதுதானே! நம்மூர் போல வருமா!

    ReplyDelete
  4. டீ கப் பயமுறுத்துதே..

    ReplyDelete
  5. உங்க கூட குடும்பத்தோட உலக சுற்றுலா போகணும் போல இருக்கு டீச்சரம்மா..

    ReplyDelete
  6. //மெனுகார்டை ஆராய்ஞ்சவர், மோர்மிளகாயைத் தட்டில் காணோமேன்னு விசாரிச்சதும்//

    ஓ.. கோபால் சார் மோர்.மி காதலரோ?:))

    என்ன வேணும்-ன்னாலும் சொல்லுங்க; அந்த இலை பரத்தி, ஒவ்வொன்னாக் கொட்டிக் கொட்டிச் சாப்பிடும் சுகமே சுகம்:)

    //மீன் தலை இங்கே ஸ்பெஷாலிட்டி ஐட்டம்போல!//

    நம்மூர்லயும் தான்!
    Cityல தான் மீன் ஆயும் போது தூக்கி வீசிடறாங்க;
    கிராமங்களில் உப்புக் கண்டம் போட்ட மீன் தலை + சுடு சோறு

    //போண்டா பஜ்ஜி வடை//

    டீச்சர் அதென்ன கருப்பு போண்டா? வெள்ளை போண்டா?

    ReplyDelete
  7. //மாலைப்பொழுது(ம்) இனிதாக இருக்கட்டும்! ததாஸ்து.....//

    அழகான ஜாங்கிரி ஜோடிகள்!
    *எனக்கு ஒன்னு
    *முருகனுக்கு ஒன்னு
    காக்காக் கடி கடிச்சித் தின்னுக்கறோம், இப்படிக் குடுங்க டீச்சர், ஒங்களுக்கு ஜாங்கிரி ஒடம்புக்கு ஆவாது:)

    //கூடாரம் என்னும் புது ஷாப்பிங் மால்//

    Pavilion Mall நாங்க போகும் போதும் இருந்துச்சி:)
    Fountain அழகே அழகு! செம்பருத்திப் பூ எங்கு பார்த்தாலும்! தேசியப் பூ அல்லவா?

    //ஒரு மீட்டர் டீ//

    என்ன-"டீ" ன்னு கேட்டா ஒதை விழுகும்:)

    //லேடீஸ்தான் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவழிப்பாங்களாமே! அது பொய் என்பது உறுதியாச்சு:-)//

    Me too!:)
    Why மானத்தை buying teacher?:)

    ReplyDelete
  8. அன்பின் டீச்சர்,

    இன்று சரவணபவனில் மசாலா தோசையை ஒரு கட்டுக் கட்டினேன். சட்னிகளில் காரம் கம்மி. எனக்குப் பிடித்திருந்தது.

    இன்றைய ஸ்பெஷல், தாளி என்றார்கள்.(தாலி/தாழி தமிழில் பொருந்தாது என நினைக்கிறேன். தாளி சரியா?) என்னடாவென்று பார்த்தால் நீங்கள் போட்டோவில் போட்டிருக்கும் அதே ஐட்டங்கள். சோற்றுக்குப் பதிலாக பூரி, சப்பாத்தி எது வேண்டுமானாலும் தருவார்களாம். சோறும் உண்டு. கறிவகைகளில் எதைச் சாப்பிட, எதை விட எனத்தான் திணறிப் போய்விட்டோம். :-)
    ஆனால் இப்படி எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக தொட்டுப் பார்க்க மட்டுமே உணவு வாங்குகிறோம் என்பதால் அவர்கள் கொஞ்சமாக வைத்துத் தரலாம். நிறையத் தருகிறார்கள். நாங்கள் மீதம் வைப்பதெல்லாம் வீண் தானே? :-(

    அந்த மாடி வீடு வேண்டாமெனச் சொல்லும் முன்பு, கோபால் அண்ணாவிடம் நீங்கள் ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டும் டீச்சர் ;-)

    ReplyDelete
  9. சரவணபவன் சூப்பர். ஜாங்கிரி ஜோடியும் சூப்பர்.
    துபாயிலும் ஒரு மியூசிக் ஃபௌண்டெயின் இருக்கு.அது இன்னும் உயரமா இருக்குமே.
    போண்டா பஜ்ஜி நல்ல சுத்தமா தயாரிக்கிறாங்களா.பார்க்க வாயில் நீர்:)
    கறுப்பா இருப்பது என்னவோ?டீ புல்லிங் பிரமாதம்.

    ReplyDelete
  10. மீட்டர் டீ படம் (சுட்டு போட்டதுக்கு நன்றி )சூப்பர் !!

    //லேடீஸ்தான் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவழிப்பாங்களாமே! அது பொய் என்பது உறுதியாச்சு:-)//

    அதே !!! அதே!!
    //கூவத்துக்கு விடிவுண்டோ என்ற எண்ணம் வந்து தொலைக்குது:(//

    ப்ச் ஆமாங்க .

    ReplyDelete
  11. வாழைஇலை சாப்பாடு சூப்பர்.

    இங்கு வாழையிலை கடையில் வாங்குவேன். ரீ தினந்தோறும் நம்மூரில். ஜாங்கிரி எனக்கு பிடிக்காது தப்பித்தேன்.
    அந்த பற்றிஸ்,போண்டா, வடைதான் இழுக்கிறது :)

    ReplyDelete
  12. டீச்சர்... மோர் மிளகாயில் ஒரு ரகசியம். பொறிக்கும் போது மொறுமொறுப்பு வர்ரது போல பொறிக்கனும். லேசா கருகிட்டா கூட நல்லதே. ஆனா கடிச்சா சவுக்கு சவுக்குன்னு இருக்கக்கூடாது. அதுதான் பக்குவம். மோர்மிளகாய் தயிர்ச்சோற்றுக்கு மட்டுமல்ல... மோர்க்கொழம்புக்கும் அட்டகாசமாகப் பொருந்தும்.

    பஜ்ஜி வகைகளைப் பார்த்தாலே பரவசம். ஆனா இப்பல்லாம் கொறச்சாச்சு. ரொம்ப எண்ணெய் சாப்பிட்டா பிடிக்கிறதில்ல.

    நீங்க திருப்தியா சாப்டேன்னு சொல்லி நான் படிக்கிற பதிவும்மா இது. சுத்திப் போட்டுக்கோங்க. முருகனருள் முன்னிற்கும். :)

    ReplyDelete
  13. வாங்க சுப்புரத்தினம் ஐயா.

    அமெரிக்காவை சுத்தோ சுத்துன்னு சுத்திப் பார்த்துட்டு, சி.செ. திரும்பிட்டீங்க போல!

    வடை மட்டும் சீக்கிரம் தீர்ந்து போச்சாமே பதிவர் மாநாட்டில்!

    ருசியா இருந்ததுங்களா?

    ReplyDelete
  14. வாங்க புதுகைத் தென்றல்.

    நன்றிப்பா.

    ReplyDelete
  15. வாங்க ராஜி.

    உங்களுக்கொரு மாநாடுன்னா எனக்கொரு சரவண பவன்!

    இலைபோட்ட விருந்துச் சாப்பாடு நல்லா இருந்ததா?

    ReplyDelete
  16. வாங்க கோமதி அரசு.

    ஆதிகாலம் முதலே நம்ம பக்கங்களில் இழுபட்ட டீதானே:-)))))

    ReplyDelete
  17. வாங்க அமைதிச்சாரல்.

    ஃபேமிலி தோசை போல இதை ஃபேமிலி டீயா வச்சுக்கலாம்:-))))

    ReplyDelete
  18. வாங்க காவேரிகணேஷ்

    பேசாம நாமே ஒரு சுற்றுலா பிஸினஸ் ஆரம்பிச்சுறலாமா?

    கூட்டமாப் போனால் சௌகரியம் அதிகம் இல்லையோ?

    ReplyDelete
  19. வாங்க கே ஆர் எஸ்.

    பேசாம சவுத் இண்டியன் போண்டா & நார்த் இண்டியன் போண்டான்னு பெயர் வச்சுக்கலாம்.

    கருப்பு இனிப்பு, வெள்ளை உப்பு. அதான் வித்தியாசம். யோசிச்சுப்பார்த்தால் கணக்கு சரியா வருதே:-)))))

    கோபால் பொதுவா மிளகாய்க் காதலர்:-)

    அவருக்கு எது ரொம்பப்பிடிக்குமோ அதுக்கு நான் எதிரி:-)

    ReplyDelete
  20. கே ஆர் எஸ்.

    //Why மானத்தை buying teacher?:)//

    இது ஒன்னுதான் இலவசமாக் கிடைக்குது 100 % ஆஃப் :-)

    ReplyDelete
  21. வாங்க ரிஷான்.

    ஹிந்தி மொழியில் தால் என்றால் தட்டு. ஒரு பெரிய தட்டில் எல்லாத்தையும் சின்னச் சின்னக்கிண்ணங்களில் (இதுக்கு வாட்டி என்று மராத்தியில் சொல்றாங்க.ஹிந்தியில் பேலா) வச்சு விளம்புவதால் தாலி என்று பெயர் வந்துருச்சு.

    தமிழ் நாட்டுலே தாலிக்கு வேற (மீனிங்)பொருள் இருக்கே. அதனால்தான் போல தாளி தாளின்னு சொல்லி தாளிச்சுக்கிட்டு இருக்காங்க:-)

    பொதுவாப்பார்த்தால் மலேசியா லிவிங் வேணாமுன்னே தோணுது எனக்கு.
    தோழி (ஒரு பிரபலத்தின் மனைவி) சொல்றாங்க...... மாடியில் இருந்து பணியாளர் வராத என்றைக்காவது குப்பையைக் கொண்டுவந்து கீழே அடித்தளத்தில் வச்சுருக்கும் குப்பைத் தொட்டியில் போடணுமுன்னாக்கூட கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியைக் கழட்டி வச்சுட்டு வரணுமாம். இப்படி திருட்டுக்கும்பல் இருக்கும் நாட்டில் வாழ்வது கடினம்.

    இங்கே நம்மூரில் காசு மாலை போட்டுக்கிட்டு கடைத்தெருவில் சுத்துனாலும்..... ஹூம்....யாராவது பார்க்கணுமே! ஒரு பாராட்டும்/ பொறாமையும் இல்லாமல் என்ன நகைநட்டு வேண்டிக்கிடக்குதுன்னு தோணிப்போகும்.

    ரெண்டும் ரெண்டு எக்ஸ்ட்ரீம்!

    ReplyDelete
  22. வாங்க வல்லி.

    வெறும் ஜாங்ரி ஜோடி மட்டுமா சூப்பர்???

    கறுப்பு gula melaka போட்டது.

    பயந்துட்டீங்களா?

    பனை வெல்லம்தான்:-)))

    ReplyDelete
  23. வாங்க சசி கலா.

    பதிவர் மாநாட்டு வேலையெல்லாம் முடிஞ்சு நல்லா ரெஸ்ட் எடுத்தீங்களா?

    கூவக்கரையில் குடிசை போடுவதை நிறுத்தினாலே பாதி சுத்தமாகிரும்.

    ஆனால்..... ஓட்டுகள் இருக்கே! விடமுடியுமா அரசியல் வியாதிகளால்?

    ReplyDelete
  24. வாங்க மாதேவி.

    நம்மூட்டுலே வாழை மரம் ஒன்னு இருக்கு. ஆனால் இலையைப் பறிக்கணுமுன்னா சாமியாடுவேன்!

    உங்க பங்கு ஜாங்கிரியை இங்கே என் இலைக்குத் தள்ளிவிட்டுருங்க.

    எனக்கு மை.பா. பிடிக்கும். ஆனால் கோபாலுக்கு அறவே பிடிக்காது. அதான் பொதுவில் வச்சுட்டேன் ஜாங்கிரியை:-)

    ReplyDelete
  25. வாங்க ஜி ரா.

    மோர் மிளகாயை வறுத்து எடுத்தவுடன் அந்த நொடியில் கொஞ்சம் சவுக் சவுக்தான். கொஞ்சம் ஆறியதும் க்ரஞ்சியா இருக்கும்.

    சாம்பாரும் ரசமும் நல்லா இருந்துச்சு. அதான் அவைகளை மட்டும் சேர்த்து ஒரு பிடி பிடிச்சேன்.

    கொஞ்சூண்டு பருப்பு தனியா வச்சுருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

    என் கண்ணே பட்டிருக்கும்தான்:-))))

    தினமுமா பஜ்ஜி திங்கப்போறோம்? என்றாவது ஒருநாள் ஓக்கே!

    பிடிச்ச சமாச்சாரத்தை அறவே ஒதுக்கினால்....வாழ்வதில் பொருளுண்டோ?

    ReplyDelete
  26. I think you have mistaken me for another person by name sasikala . I dont have a blog and did not attend the meeting .
    I read all your padhivugal and a fan of Thulasi and Thulasidhalam!!!

    ReplyDelete
  27. //I think you have mistaken me for another person by name sasikala . I dont have a blog and did not attend the meeting .
    I read all your padhivugal and a fan of Thulasi and Thulasidhalam!!! //

    Thank you! God bless !

    ReplyDelete