எல்லாம் இந்த வாஸ்கோட காமா... தீஸ்கோடா ராமான்னு கொண்டுவந்து கொடுத்த வினை. நிம்மதியா உடம்புக்கு கெடுதல் செய்யாத மிளகை வச்சுச் சமாளிச்சுக்கிட்டு இருந்தோம். மிளகாய்ச்செடி வந்து சேர்ந்த வருசம் சரியாத்தெரியலை. போர்த்துகீஸியரான இவர் மூணுமுறை1498, 1500, 1524 வருசங்களில் பாரதம் வந்துருக்கார். மொதவாட்டியே காரத்தைக் கொண்டுவந்துட்டாரான்னு தெரியலை. அதனால் நடுப்பயணத்தில் கொண்டுவந்துருக்கலாமுன்னு என் யூகம். (இவர் பிறந்த வருசமும் 1460 இல்லை 1469ன்னு ஒரு குழப்பமும் இருக்கு)

மிளகாயின் சரித்திரத்தைக் கவனிச்சால் அதுக்குக் கிட்டத்தட்ட பத்தாயிரம் வயசு!!!! நமக்குப் பரிச்சயமாகி வெறும் 600 வருசங்கள்தான் ஆகுது! தென் அமெரிக்கக் கண்டத்திலே விளைஞ்சு குமிஞ்சு இருந்ததை கொலம்பஸின் கடல்பயணத்தில் கூடவே போன ஒரு டாக்குட்டர்தான் கொண்டுவந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகம் செஞ்சு வச்சுருக்கார். 1493 இல் கரீபியன் தீவுகளுக்குப்போய் வந்தப்பக் கையோடு பிடிச்சுக்கிட்டு வந்து ஸ்பெயின் நாட்டுலே நட்டுருக்கார்ப்பா.
இதோட மருத்துவ குணத்துக்காக ஸ்பெயின் & போர்ச்சுகல் நாடுகளில் சாமியார்கள் மடத்தில் பயிரிட்டு வளர்ந்துருக்காங்க. இந்த மாங்க்ஸ்க்கு (Monks)வேற வேலையே இல்லை போல! உ.பா. பீரை (Beer) முதல்முதலில் ஐரோப்பாவில் தயாரிச்சதுகூட இந்த சாமியார்கள் கூட்டம்தான். ஜெர்மெனி நாடுன்னு கேள்வி.
இந்தியாவில் காஷ்மீரி மிளகாய், குண்டு மிளகாய், ஜ்வாலா மிளகாய், காந்தாரி மிளகாய்ன்னு இப்போ பதினாலு வகைகள் பயிரிடறாங்க. காஷ்மீரி மிளகாய்க்கு அவ்வளவா காரம் இல்லை. ஆனால் கலர் மட்டும் அட்டகாசமான சிகப்பு. நிறத்துக்காகவே இதைக் கறிகளில் சேர்ப்பாங்க. ஆனால் இந்த காந்தாரி இருக்கா பாருங்க ... பேருக்கேத்த வகை. துரியோதனின் அம்மா போலவே அப்படி ஒரு உறைப்பு. சின்னதா இருக்கும் இதை ஒரு குழம்புக்கு ஒன்னு போட்டாலே முடியைப் பிச்சுக்கிட்டுப் போயிரும்!
தேஜ்பூர் மிளகாய்ன்னு மெக்ஸிகோ வகை ஒன்னு உலகிலேயே 'அதி(க)காரம் கொண்டதுன்னு சொல்றாங்க.
குஜராத், மகாராஷ்ட்ரா, ஆந்த்ரா, தமிழ்நாடு, கோவான்னு பல மாநிலங்களிலும் மிளகாய் விளைச்சல் சக்கைப்போடு போடுது. காலநிலை அதுக்கு ரொம்ப உகந்ததா இருப்பதே காரணம்.
அது போகட்டும். எப்படியோ மிளகாய் வந்து இங்கே நல்லா காலூணிருச்சு. இந்தியச் சமையலுன்னா கரம் மசாலா இல்லைன்னாலும் பரவாயில்லை மொளகாய் இருந்தே ஆகணுமுன்னு ஆகிக்கிடக்கு பாருங்க. நாக்குக்குக் காரம் வேண்டித்தான் கிடக்கு. மளிகை வாங்கணுமுன்னா உப்பு புளி .மொளகாய்ன்னுதானே ஆரம்பிக்கிறோம்.
இங்கே நியூஸிக்கு வந்த புதுசுலே பச்ச மிளகாய், வெள்ளைப்பூண்டு தேடித்தேடி நகரத்துக்கு வெளியில் கொஞ்சம் போனால் பக்கத்தூருலே கிடைக்குதுன்னு விவரம் சேகரிச்சோம். பூண்டு பதினைஞ்சு டாலர் கிலோன்னு ஒரு இடத்தில் கிடைச்சது. மிளகாய்க்கு இன்னும் ஒரு பத்துகிலோ மீட்டர் பயணம் செஞ்சு ஹாட் ஹவுஸ் விளைச்சல் இடத்துக்குப் போனோம். தண்ணீரில் வச்சு (Hydroponics)வளர்க்கறாங்க. நியூஸியில் சூப் டின்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு மொத்தமா வித்துருவாங்களாம்.
மிளகாய் வாங்க வந்துருக்கோமுன்னதும் நீங்களே பறிச்சுக்கணுமுன்னு கண்டிஷன் போட்டார் உடமையாளர். கிடைச்சது பாக்கியமுன்னு நாலுகைகளால் பரபரன்னு மூணு கிலோ அறுவடை செஞ்சோம். கிலோ இருவது டாலர் மேனிக்குக் கொடுத்தார். வருசத்துக்கு போதுமுன்னு கழுவித் துடைச்சு ஃப்ரீஸரில் வச்சுக்கிட்டேன்.
அதுக்கப்புறம் சில வருசங்கள் தொடர்ச்சியா அவரோடு ஒரு வியாபாரம். ஒரு சமயம் பேசிக்கிட்டே மிளகாய் எடுக்கும்போது, 'இண்டியன்ஸ் எப்படித்தான் மிளகாய் தின்னறீங்களோ? காரம் நாக்குலே எரியாதா?'ன்னார். நம்மாளு, இதெல்லாம் ஜுஜுபி.... நாங்க பச்சையாக்கூடக் கடிச்சுக்கிட்டு சோறு திம்போமுன்னு மிதப்பாச் சொல்லிக்கிட்டே ஒரு மிளகாயை எடுத்து அந்த ஆளுக்குக் கடுப்பத்தறேன்னு வீரமா வாயில் வச்சு ஒரு நறுக். கரகரன்னு பற்கள் அரைக்க அரைக்க அந்த ஆளுக்குக் கண் நட்டுக்கிச்சு. நம்மாளுக்குக் கண்ணுலே மளமளன்னு தண்ணீர் ஊற்று. ஐயோ ன்னு கத்த அவர் தன்மானம் இடங்கொடுக்கலை. பதறிப்போன நாந்தான் ஓடிப்போய் வண்டிக்குள் இருந்த கோக் பாட்டிலை தூக்கியாந்தேன். அப்புறம் வீட்டுக்கு வர்ற வழியெல்லாம் நான் பாட, அவர் கேக்க, மகள் முழிக்கன்னு ......
அதுக்குப்பிறகு அங்கே இங்கேன்னு இன்னும் சிலர் மிளகாய் வியாபாரம் தொடங்குனாங்க. விலையும் கொஞ்சம் கொஞ்சமா இறங்கிக்கிட்டே போச்சு. கடைசியா வாங்குனது கிலோ பனிரெண்டு கோடை முடியும் சமயம் சனிக்கிழமை பேப்பரில் கண்ணு வச்சுக்கிட்டே இருந்தால் எப்பவாவது விளம்பரம் வரும். பிக் யுவர் ஓன்.
உனக்கு வேணுமுன்னா நீ பறிச்சுக்கிட்டுக் காசைக்கொடு.உள்ளுர் இந்தியன் கடைகளில் ஃபிஜியில் இருந்து காய்கறிகள் வரும்போது பச்சைமிளகாயும் சிலசமயம் வரும். எப்பவாவது இறக்குமதியாகும் காய்களில் ஒரு புழு பூச்சி இருந்தால் ஒட்டுமொத்த இறக்குமதியையும் அழிச்சுட்டு அப்படியே இனி காய்கறிகள் வரக்கூடாதுன்னு தடை போட்டுருவாங்க. இறக்குமதி வியாபாரம் செய்யும் கம்பெனிகள் அஞ்சாறுமாசம் கழிச்சு மறுபடி அரசாங்கத்திடம் கெஞ்சிக் கூத்தாடி எல்லா நிபந்தனைகளுக்கும் ஆமாஞ்சாமின்னு தலையாட்டிட்டு பல பரிசோதனைகளுக்கு ஈடு கொடுத்து மறுபடி காய்கறிகளைக் கொண்டுவருவாங்க. எப்போ கிடைக்கும் எப்போ கிடைக்காதுன்ற நிலையாமை இருந்ததால் விலையை ரொம்பவும் கவனிக்காமல் கொஞ்சம் வாங்கியாந்துக்குவோம்.
சீனர்கள் இங்கே குடியேறிய பின்னே அவுங்க நடத்தும் கடைகளில் பச்சைமிளகாய், சிகப்பு மிளகாய், இன்னும் அவுங்க சாப்பாட்டு சமாச்சாரமெல்லாம் உறையவச்சதா கிடைக்க ஆரம்பிச்சது. நல்ல தரமான பேக்கிங், சுத்தமான பொருட்கள். பருப்புவகைகள் அரிசின்னு நாங்களும் சீனக்கடைகளையே நம்பி இருந்தோம். இந்தியக்கடைகள் ஒன்னு ரெண்டு முளைச்சது அதுக்கப்புறம்தான்.
ஒரு ஏழெட்டு வருசமுந்தி உறையவச்ச காய்கறிகள் இந்தியாவில் இருந்து வர ஆரம்பிச்சது. இந்தியக்கடைகளில் இறக்குமதி செஞ்சாங்க. ப்ரோஸன் பராத்தா, ரொட்டின்னு ஆரம்பிச்சுக் காய்கறிகள் (முருங்கைக்காய் கூட!) கிடைச்சது. முக்கியமா பஞ்சாப், தில்லி கம்பெனிகள். தெற்கேன்னா கேரளா. ஏற்கெனவே அமீரகத்துக்கு அனுப்பிக்கிட்டு இருந்தாங்கதானே! அப்படியே கொஞ்சம் இங்கேயும்.......
இப்போ ஃப்ரொஸன் பச்சைமிளகாய், துருவிய தேங்காய் வர ஆரம்பிச்சுருக்கு.
ரெடி டு ஈட் வகைகளில் நம்ம MTR வகைகள் உட்பட பலதும் கடைகளில் இடம் பிடிச்சாச்சு. இதிலும் கேரளாவில் இருந்து நிறைய வருது. தமிழ்நாட்டு வகைகளோ, தயாரிப்புகளோ ஒன்னும் இல்லை ஒரு சில மசாலாப் பொடிகளைத் தவிர. சக்தி மசாலா புளியோதரைப்பொடி, எலுமிச்சை சாதப்பொடின்னு பார்த்துட்டு ஆசையா வாங்கிவந்தேன். த்ராபை:( வாயில் வைக்க வழங்கலை:( செய்முறை விளக்கம்கூட சரியாத்தரலை. என்னவோ போங்க.....
ஒரு நாள் உள்ளூர் காய்கறிக் கடை ஒன்னில் பச்சைமிளகாயைப் பார்த்தேன். என்னதான் உறைஞ்ச மிளகாயை வச்சுச் சமைச்சாலும் ஃப்ரெஷ் மிளகாய்க்குன்னு ஒரு வாசம் இருக்கே அதை எப்பவாவது அனுபவிக்கலாமுன்னு ஆசையா மிளகாயைக் கையில் எடுத்தப்பத்தான் எனக்குள்ளே இருந்த விவசாயி உறங்கி முழிச்சது.... சீச்சீ.... அந்த மிளகாய் ஒரே புளிப்பு கீழே போடுன்னு குரல்! விவசாயிதான்.... டாலர் 1.95 Each மிளகாய். குடும்பம் வெளங்குனாப்பொலதான்.....
நம்மூட்டு மிளகாய்மகளிடம் புலம்பினால்..... 'நான் மிளகாய்ச்செடி ஒன்னு வாங்கி வீட்டில் வச்சுருக்கேன். ஆறெழு மிளகாய் வந்துருக்கு'ன்னாள். இத்தைப் பார்றா...... என்ன விலை அந்தச் செடி? அதிகமில்லை, ஒன்னு ஏழு டாலர்(தானாம்) ஜாலபெனோ Jalapeno வகை. நல்ல கரும்பச்சை நிறத்தில் காய்கள். கொஞ்சம் தடியா ஸாலிடா இருக்கு. அதி'காரம்' உள்ளவை.

ஏழான்னு யோசிச்ச ஒரு நாளில் பூச்செடிகள் வாங்க ஒரு கார்டன் செண்டருக்குப்போனபோது அங்கே ஆறு ஜாலபெனோ மிளகாய்ச்செடிகள் நாலரைக்கு ஆப்ட்டது. வாங்கியாந்து நட்டேன். அப்புறம் சண்டே மார்கெட் சந்தையில் சில்லி பெப்பர் செடிகள் ரெண்டும் ஒரு எக் ப்ளாண்ட் (நம்ம கத்தரிக்காய்தாங்க)செடியும் ஒவ்வோர் டாலர் மேனிக்குக் கிடைச்சது.
வெளியே
உள்ளேதொட்டிகளில் நட்டு, கரிசனமும் கவனிப்புமா இருந்து உள்ளே வெளியே, வெளியே உள்ளேன்னு காலநிலைக்குத் தகுந்தாப்போல ஆட்டம் எல்லாம் ஆடி அறுவடையும் செஞ்சாச்சு. முதல் கொய்த்து கழிஞ்ஞு. ஒரு செடியில் பத்து பதினைஞ்சு மிளகாய்கள் தேறும். அந்த சில்லிபெப்பர் செடிகளில் கொஞ்சம் பெருசா இருக்கும் காய்களைப் பார்த்ததும் பஜ்ஜி பஜ்ஜின்னு பஜனை செய்ய ஆரம்பிச்சார் நம்மாள். கத்தரிக்காயும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு காய்ச்சது!

MTR போண்டா பஜ்ஜிமாவு கிடைச்சது. அதுலே தோய்ச்சுத் தோய்ச்சு கத்தரி, மிளகாய்ன்னு போட்டுக் கொடுத்தேன்.கோடை முடிஞ்சு ஒரு மாசம் ஆகப்போகுதுன்னாலும் கன்ஸர்வேட்டரியில் இருப்பதால் இன்னொரு கொய்த்துக்குக் காய்கள் கிடைக்கும் என்று இருக்கேன்.

தோழி சொன்னாங்க..... பச்சை விரலாம்.
எனக்கே தெரியாமல் எனக்குள்ளே ஒரு விவசாயி இருக்கார்ப்பா! 