Friday, September 30, 2011

யானை மேக்கர் ஆஃப் சீர்காழி ( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 4)

பெரிய பெரிய புத்தர் சிலைகளை வச்சு விற்கும் ஸ்கைலைன் கடைவாசலில் ஹேப்பி புத்தான்னு தொப்பை வயிறுடன், நிற்பவரின் தொப்பையில் காசு போட்டுட்டு தொப்பையைத் தடவிக் கொடுத்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையாம். போறவங்களும் வாரவங்களும் போடும் காசுகள் தர்ம காரியங்களுக்குச் செலவாகுது. இங்கே அடுத்தடுத்து ரெண்டு கோவில்கள், ஒன்னு கிருஷ்ணனுக்கு இன்னொன்னு க்வான் இம் (Kwan Im Thong Hood Cho Temple) சீனக்கடவுளுக்கு.
சீனக்கோவில் வாசலில் கலகலன்னு பெருங்கூட்டம். முதலில் கிருஷ்ணரைப் பார்த்துட்டு வந்துடலாமுன்னு போனோம். அழகான ஆஞ்சநேயரும் கருடருமா கோபுர வாசலின் ரெண்டு பக்கமும் நிற்க, கொஞ்சம் உள்ளே தள்ளி பெரிய திருவடி உள்வாசலில் நின்னு மூலவரைப் பார்க்க நாம் அவருக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு உள்ளே ஓடினோம். சந்நிதி மூடப்போறாங்க. சட்னு தரிசிக்க முடிஞ்சது. ஸ்ரீவேணுகோபாலன்.
முன்மண்டபம் முழுசும் பெருமாளும் தாயாரும் சரஸ்வதியும் லக்ஷ்மியுமா நிற்கும் இடத்தில் ஒரு சீனமாதாவும் கோவில் கொண்டிருக்காங்க. Guan Yin, the Goddess of Mercy. தொட்டடுத்துள்ள சீனக்கோவிலுக்கு வர்றவங்க அப்படியே இங்கேயும் எட்டிப் பார்த்துக் கும்பிடுவதால் 'தயை நிதி'க்கு ஒரு சந்நிதி வச்ச கோவில் நிர்வாகத்தைப் பாராட்டத்தான் வேணும்.
பிரகாரம் சுற்றிவரலாமுன்னு தலையைத் திருப்பினால்...... அட! இதைப் பார்றா...... யானை மேக்கர்! நமக்கான ஸ்பெஷல் இல்லையோ!!!! குட்டி யானைக்கு அலங்காரம் நடக்குது. கோவிலைப் புதுப்பிக்கும் வேலை மும்முரம். 1958லே வச்ச தூண்களை இப்போ மாற்றிப் புது டிஸைனில் செய்யறாங்க. பரவாயில்லையே பழைய தூண்கள் அம்பத்தி ரெண்டு வருசமாவாத் தாக்குப் பிடிச்சிருக்கு!!! ஊழல் இல்லா ஊராச்சே. அதான்! வரும் கிருஷ்ண ஜெயந்திக்குள்ளே முடிக்கும் அவசரமாக இருக்கணும். தூண்களும் அதில் இருக்கும் சின்ன மாடங்களில் விளக்கு வரிசையும் யானை வரிசையுமா அமைச்சுக்கிட்டு இருக்காங்க. குட்டி யானைகள் ஒவ்வொன்னும் முன்னால் இருக்கும் யானை வாலைப் பிடித்தபடிதான் வரிசை கலையாமல் நடக்கணும்.
சீர்காழிக்காரர் இளைஞர் தண்டபாணி. ரெண்டு வருசமா இங்கே தங்கி கோவிலின் சிற்பவேலைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்கார். ஒவ்வொரு யானையும் கண்ணுலே ஒத்திக்கிறமாதிரி இருக்கு. ஆனா சிமெண்ட் பூசுமுன் ஒத்திக்கிட்டா கம்பி குத்திரும்!
கோவிலுக்குள்ளில் வலம் வந்தால் மூச்சடைத்து நிக்கத்தான் வேணும். சின்னக்கோவில்தான். காம்பவுண்டு சுவருக்கும் கோவில் சந்நிதிக்கும் இடையில் ரெண்டு பக்கங்களிலும் ஒரு ஆறடி அகலம் இடம் விட்டுருக்காங்க. இந்த ரெண்டு பக்கமும் அழகழகான சிற்பங்கள். இவை எல்லாமே ரெண்டு வருசத்துக்குள்ளில்தான் வந்துருக்கணும். 2009 மார்ச்சில் இவை இல்லை!

கொஞ்சம் இளைச்ச முகத்தோடு லக்ஷ்மி நரசிம்மர், ஊஞ்சலாடும் கண்ணனும் ராதையும் ( வடக்கத்திச் சாயல். மதுராக்காரன் அப்படித்தான் இருந்தானோ என்னவோ! நமக்குத்தான் என் டி ராமராவ் முகம் வந்து மனசில் ஒட்டிப் பிடிச்சுருக்கு) இவுங்களுக்கு ரெண்டு பக்கமும், முரசின் தாளத்துக்குக் கோலாட்டம் ஆடும் குஜராத்தி மக்களோ? ஊஹூம்... என் கணிப்பு தவறு. ராசக்ரீடையாம். கோபியர்கள் கூட நடனமாடும் கிருஷ்ணர்கள்! இந்தக் குறிப்பிட்ட சிற்பங்கள் செய்ய பத்தே மாசங்கள்தான் ஆகி இருக்கு! சந்நிதிக்கும் முன்மண்டபத்துக்கும் வெளியே இடப்புறச்சுவர் முழுசும் இவை இடம்பிடிச்சுருக்கு!
இனி நம் வலத்தில் வலதுபக்கம் திரும்பினால் கருவறையின் பின்பக்கச்சுவர். நடுவில் அன்னபூரணி தங்க ஆசனத்தில் அமர்ந்து அருள் பாலிக்க, பாரதத்தின் புண்ணிய நதிகள் கங்கா, காவேரி, தாமிரபரணி வைகை, கோதாவரி, சரஸ்வதி, க்ருஷ்ணா அனைவரும் கம்பீமா நிற்கும் நீராழிமண்டபமா இருக்கு .எல்லாரும் குடங்களில் தண்ணீர் ஊத்தறாங்க கீழே இருக்கும் தொட்டி அமைப்பில்.
அடுத்த வலப்பக்கம் திரும்பினால் அரவணையில் பள்ளி கொண்டவனை ஏகாந்தமா தரிசிக்கலாம். அடுத்து ஆதிசேஷன் குடைபிடிக்க மஹாவிஷ்ணு நால்வருடன் அமர்ந்த கோலம். இந்த மூணாவது நபர் யாருன்னு தெரியாமல் கொஞ்சம் திகைச்சுத்தான் போனேன். ஸ்ரீதேவி, பூதேவி, *** & ஆண்டாள். (வீடு திரும்பினதும் முதல்வேலையா தோழிக்குப் படத்தை அனுப்பிக் கேட்டதும் முதலில் குழம்பின பிறகு நாலாவது மடலில் பெயரைச் சொன்னாங்க. நேத்து இந்தப் பதிவு எழுதும்போது நம்ம பதிவுலக 'அத்தாரிட்டி' ( ஆழ்வார்ன்னு சொல்லப்பிடாதாம்)யிடம் சந்தேகம் சொல்லி, நிவர்த்தியாச்சு. நப்பின்னை என்னும் நீளா தேவி (அட! நம்ம ஆண்டாளே இவுங்க ரெண்டுபேரும் ஈஷிக்கிட்டு இருந்ததைப் பாடியிருக்காங்களே)

சின்ன இடத்துலேயே இத்தனை சிற்பங்களை வச்சுருந்தாலும் நெரிசலா இல்லாம நின்னு பார்த்து ஒவ்வொன்னா ரசிச்சு அனுபவிக்கும்படி நீட்டாவே அமைச்சுருப்பதைப் பாராட்டத்தான் வேணும். சுவரில் ஒரு காலி இடம்கூட விட்டு வைக்கலை:-))))

ஹயக்ரீவர், ப்ரம்மா கண்ணனை வணங்குவது, ஆண்டாள்ன்னு ஏராளமான சிற்பங்கள். ரெண்டு பக்கமும் மூலையில் எதிரும் புதிருமா சிரிக்கும் சிம்மமும் பூவராகனும். பார்த்துப்பார்த்துக் கலை நயத்தோடு அமைக்கப்பட்ட சிற்பங்கள். காங்க்ரீட் சிமெண்டுக் கலவைதான் , ஆனால் முக லக்ஷணம் அப்படியே அள்ளிக்கிட்டுல்லே போகுது!!!!!
கோவிலைவிட்டு மனசில்லா மனசோடு வெளியில் வந்தால் சீனக்கோவில் போல இங்கேயும் வாசலில் மேசை போட்டு அதில் சீன ஊதுபத்திகள் கட்டுக்கட்டா வச்சுருக்காங்க. சீனர்கள் அதைக் கொளுத்தி அங்கே இருக்கும் அலங்காரப்பாத்திரத்தில் நட்டு வச்சுட்டுக் கைகூப்பி வணங்கறாங்க. அவுங்க மட்டும் இங்கே கும்பிட்டால் போதுமா? நாமும் அங்கேபோய் கும்பிடவேணாமா? பழிக்குப் பழி:-))) நாங்க பக்கத்துச் சீனக்கோவிலுக்குள் போனோம். வாசலில் ஏகப்பட்ட ஊதுவத்திகள் வச்சுருக்காங்க. அதையே எடுத்துக் கொளுத்திப் பிரார்த்தனை செஞ்சுக்கலாம். நம்ம ஊர்க் கோவில்களிலும் இப்படி வச்சுருந்தால் எவ்வளவு நல்லா இருக்குமுல்லே?

உள்ளே தங்கமான தங்கம்.(படம் எடுக்க அனுமதி இல்லை) ஸ்டேஜ் போட்டமாதிரி ஆளுயர மேடைகளில் அலங்கார சந்நிதிகளில் வெவ்வேறு சீனச்சாமிகள். வணங்கிட்டு பக்கத்துலே தட்டுகளில் வச்சுருக்கும் பிரஸாதங்களை எடுத்துக்கலாம். பிரஸாத வகைகளைப் பாக்கெட் பாக்கெட்டாப் பிரிச்சுப் போட்டுத் தட்டுகளை நிரப்பிக்கிட்டே இருக்காங்க கோவில் ஊழியர்கள். எல்லாம் ரொம்ப மெனெக்கெடாத வகைகள். கலர் காகிததில் சுத்தி இருக்கும் (லாலீஸ்) மிட்டாய்கள்கள்தான்.

இந்தக் கோவில் காலை 6 மணியிலிருந்து மாலை 6.15வரை தினமும் திறந்திருக்கும். அமாவாசை பவுர்ணமி தினங்களில் காலை 5 முதல் மாலை 6.45 வரை. சீனர்கள் சந்திரக் காலண்டர் பயன்படுத்தறாங்களாம். சீனப்பண்டிகைகள் நடக்கும்போது காலை 4 மணிக்கே கோவில் திறந்துருவாங்களாம். நம்மூர்லேயும் சமீபகாலமா வருசப்பிறப்புக்கு முத ராத்ரி பெருமாளைத் தூங்கவே விடறதில்லை! அதிலும் முக்கியமா ஆங்கில வருசப்பிறப்புக்குத்தான் முதலிடம் கொடுத்துருக்காங்க. ராத்ரி 12 மணி ஆனதும் முதல்லே சாமியைப்பார்த்துட்டா வருசம் பூராவும் நல்லதுன்னுற நம்பிக்கை. உலகம் பூரா மனுச குலத்துக்கு இப்படி பல நம்பிக்கைகள்

பகல் 'லஞ்சு அவர்' நேரமானதும் சதுக்கமும் மார்கெட் பகுதியும் மக்கள் கூட்டத்தால் நிறையத் தொடங்குச்சு. செஸ்ட்நட்டைப் புதுவிதமா வறுத்துக் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஒரு கடைக்காரர். கறுப்பா சின்ன விதைகளைப் போல் இருக்கும் பொடிக்கற்களை ஒரு தொட்டி போன்ற அமைப்பில் சூடாக்கி அதில் செஸ்ட் நட்டுகளைப் போட்டு தொட்டியைச் சுத்தவிடறார். அந்தக் கற்களின் சூட்டிலேயே இது வறுபட்டுப் போகுது. ( நியூஸியில் ஏராளமா இந்த மரங்கள் இருக்கு. பேசாம நாமும் இந்த பிஸினஸை ஆரம்பிக்கலாமா............)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல் ஒரு கலைஞர், நாம் குடிச்சுட்டு வீசியெறியும் ஜூஸ் கேன்களைவச்சு அலங்காரச் சாமான் செஞ்சு வித்துக்கிட்டு இருக்கார். சின்னக் கைப்பிடியுடன் இருக்கு. பேனா பென்ஸில் போட்டு மேஜையில் வச்சக்கலாம்.
கடைகண்ணிகளை கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டுப் பொடிநடையில் மீண்டும் செராங்கூன் சாலைக்கே வந்தோம். கோமளவிலாஸ் கடக்கும்போது அங்கேயே சாப்பிடலாமேன்னு தோணுச்சு.

தொடரும்.......................:-)

29 comments:

  1. சிற்பங்கள் ஒவ்வொன்றும் வாய் பிளக்க வைத்தன! :)

    புத்தா சிலையில் காசு போட்டு வயிற்றைத் தடவுவாங்களா? இது புதுசா இருக்கு...

    நல்ல பகிர்வு டீச்சர்....

    ReplyDelete
  2. புத்தர் சிலை விவரம் அருமை.
    கிருஷ்ணர் கோவில் பிராகரத்தில் உள்ள சிலைகளின் படங்கள் மிக அழகு.இவ்வளவு அழகான சிலைகளா?என்று மலைப்பாக இருக்கு.

    ReplyDelete
  3. யானை மேக்கர் அருமை..

    ReplyDelete
  4. ஒவ்வொரு யானையும் கண்ணுலே ஒத்திக்கிறமாதிரி இருக்கு. ஆனா சிமெண்ட் பூசுமுன் ஒத்திக்கிட்டா கம்பி குத்திரும்!.//

    நல்லா சிரிக்கிற மாதிரி சொல்லியிருக்கீங்க.

    வேலைப்பாடுகள் மனதை கொள்ளைகொண்டன. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. சிற்பங்கள் எல்லாமே பிரமாதமா இருக்கு! யானை மேக்கர் ரொம்ப நுணுக்கமா செய்திருக்கார்.

    பேனா ஸ்டாண்ட் அழகா இருக்கு.

    ReplyDelete
  6. நப்பின்னை என்கிற பேர் ரொம்ப பிடிக்கும்..யாராச்சும் பெண் பெயர் கேட்டா சொல்லிட்டே இருக்கேன் யாரும் வைக்கமாட்டேங்கராங்க :)

    ReplyDelete
  7. எவ்ளோ அழகா இருக்கு இந்த சிலைகள்.

    ReplyDelete
  8. அருமையான பதிவு.
    நேரில் சுற்றிப் பார்த்தது போன்ற உணர்வு.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  9. பதிவுலக ஆழ்வாரை ஆழ்வார்ன்னு சொல்லாம அத்தாரிட்டின்னு சொன்னதற்கு எனது அன்பான கண்டனங்கள். :-)

    ReplyDelete
  10. வாங்க வெங்கட் நாகராஜ்.

    சரியாப் பார்த்தால் அது புத்தர் சிலையே இல்லை. ஆனால் இங்கெல்லாம் இவரை புத்தான்னே சொல்றாங்க.

    அவர் புத்தர், இவர் புத்தா போல!

    இவர் வேவ்வேற ஸ்டைலில் சின்னதும் பெருசுமா சில சமயம் நம்ம கொலுவில் வைக்கும் செட்டியார் பொம்மைபோல எல்லாம் இருக்கார் தோளில் ஒரு துணிப்பை மூட்டையுடன்.

    ReplyDelete
  11. வாங்க ராம்வி.

    கண்முன்னே இந்த அழகைச் செய்வதைப் பார்த்ததும் கண்ணு விரிஞ்சதென்னவோ நிஜம்!

    ReplyDelete
  12. வாங்க இராஜராஜேஸ்வரி.

    சூப்பரா இருக்குல்லே அந்த அலங்காரம்!

    ReplyDelete
  13. வாங்க கோவை2தில்லி.

    சின்னக் கம்பிதான் கையில். அது அந்த சிமெண்ட் கலவையில் வளைஞ்சும் நெளிஞ்சும் செய்யும் வேலைப்பாடுகள் அற்புதமே!

    ReplyDelete
  14. வாங்க கயலு.

    நம்ம சிங்காரிக்கும் நப்பின்னைன்னு வச்சுருக்கலாம். ஆனால் நான் ஜனனின்னு பெயர் ஏற்கெனவே வச்சுக் கூப்பிட்டு அவளுக்கு அது பழகிப்போச்சே:-)))))

    ReplyDelete
  15. வாங்க சுசி.

    அழகை அழகுன்னுதான் சொல்லணும் இல்லே:-)))))

    ReplyDelete
  16. வாங்க ரத்னவேல்.

    கூட(வே) வருவதற்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  17. வாங்க குமரன் தம்பி.

    அவருடைய அடக்கம், என்னைச் சொல்லவிடாமல் அன்புக் கட்டளை போட்டுருக்கார். அதுக்காக கோடி காமிக்காமல் இருக்கமுடியுமா?
    அதான்........:-)))))))

    ReplyDelete
  18. Hello Thulasi...
    hru mam? howz life? long time. Hope to see you again in our upcoming chennai blogger meet arranged by indiblogger. will u be there??

    ReplyDelete
  19. துளசி சிங்கப்பூர் போணும்னு ஆசையைத் தூண்டிவிட்டீங்களே.
    நாலு தேவியரும் நாராயணனும் அழகு. எல்லோரும்
    நேரில பார்க்கிற மாதிரி இருக்குமா. க்வான் யின் சிலை கூட தத்ரூபமா இருக்கு.

    ReplyDelete
  20. காங்கிரீட்டோ கல்லோ.. சிற்பக்கலையை வளர்க்கணுங்கற ஆர்வம் வந்ததே பெருசு :-)

    ReplyDelete
  21. சிற்பியின் சிந்தனையில் கோபியர் கிருஷ்ணா வித்தியாசமான படைப்பு.

    ReplyDelete
  22. ஆஹா..... யாரு வந்துருக்கா!!!!! பார்த்து எம்பூட்டு நாளாச்சு????

    வாங்க குடை!

    நியூஸிக்குத் திரும்பிட்டேன்.

    நானில்லாத விழாவைக் கொண்டாடுங்க:-)

    ReplyDelete
  23. வாங்க வல்லி.

    இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். இங்கே சந்நிதிகளில் த்வாரபாலிகாக்கள் கூட ஆளுயரச்சிலைகள்தான். வகைவகையான அசல்புடவைகளையே கட்டிவிட்டுருக்காங்க.சூப்பர் போங்க!!!!

    ReplyDelete
  24. வாங்க அமைதிச்சாரல்.

    இந்தக் கணினி யுகத்திலும் யாருக்காவது கலைக்கண்கள் இருந்துக்கிட்டேதான் இருக்கு. அதுவரையில் நல்லதுதான்.

    எல்லாம் 'அவன்'செயல்!

    ReplyDelete
  25. வாங்க மாதேவி.

    வித்தியாசம்தாங்க. வெறும் க்ரே கலர் சிற்பங்களில் மின்னும் தங்க ஆபரணங்கள் வேறொரு உணர்வைத் தருதே!

    ReplyDelete
  26. This is ananthu from chennai, from tamil.blogspot.com i selected your website around 2 yrs back
    without gap i continously reading your travel experience(s) and i m very much moved by your attachment/attitude, relationship with others i am working with CTS,Chennai i m not proficient with writing tamil in website but your way "nakkal" comedy in writing and interest in people and god is very interesting Please keep doing best wishes for Mr.gopal and you

    by ananthu
    cananthu@gmail.com
    +91 8056027460

    ReplyDelete
  27. >சீர்காழிக்காரர் இளைஞர் தண்டபாணி<

    நல்லது. அந்த ஊர்க்காரர்கள் அப்படித்தான், திறமை உள்ளவர்கள்:)

    நன்றி.

    ReplyDelete
  28. வாங்க அனந்து.

    முதல் வருகைக்கு நன்றிகள். கலப்பையைக் கையில் பிடிச்சா தமிழில் உழுதுக்கிட்டே போகலாம். நோ ஒர்ரீஸ்.

    வாழ்க்கை முழுசும் நம் அனுபவங்களே பாடங்கள்!!!

    ReplyDelete
  29. வாங்க வாசன்.

    நலமா? இங்கே உங்களைப் பார்த்தே ரொம்ப நாளாச்சுதே!

    சீர்காழிக்காரர்களின் திறமையை சீர்காழியரே அறிவார்:-)))))))

    ReplyDelete