Thursday, August 18, 2011

கரும்புள்ளி குத்திட்டேன் ராஜ் விலாஸுக்கு!........... (ராஜஸ்தான் பயணத்தொடர் 41. நிறைவுப்பகுதி)

கிட்டத்தட்ட 553 கி.மீ பயணம் காத்திருக்கு. வெள்ளெனக் கிளம்பினா நிதானமாப் போகலாமுன்னு ஏழு மணிக்கு பிகானீரை விடலாமுன்னு ஒரு திட்டம். அஞ்சு மணிக்கு எழுப்பச் சொல்லிட்டுத் தூங்கி எழுந்து பார்த்தால் குளியலறையில் வெந்நீரைக் காணோம். 24 மணி நேரமும் சுடுதண்ணி சப்ளை இருக்குன்னு ஜம்பமாப் போட்டு விளம்பரம் பண்ணிய இடம் இது. கொஞ்ச நேரம் வெந்நீர்க்குழாயைத் திறந்து வச்சா சுடுதண்ணி வந்துருமேன்னு திறந்துவச்சுட்டு காமணி நேரமா தண்ணிர் வீணாப் போய்க்கிட்டு இருக்கு. தண்ணீர்க்கஷ்டமான இந்த ஊர்களில் இப்படிக் குழாயைத் திறந்து போடறமேன்னு மனசாட்சி ஒரு பக்கம் குத்தோ குத்துன்னு........

ஹவுஸ் கீப்பிங் பிரிவுக்குப் போன் போட்டால் எடுக்க நாதி இல்லை. வரவேற்புலே கூப்பிட்டா குழாயைத் திறந்து வையுங்க கொஞ்ச நேரத்துலே தண்ணி வருமுன்னு சொல்றாங்க. இருவது நிமிஷமா தண்ணி பாழாப்போய்க்கிட்டு இருக்கேய்யான்னால்....... சோம்பல் முறிக்கும் குரலில் இன்னும் பாய்லர் போடும் ஆள் வரலைன்றார். எப்பதான் வருவாருன்னா.....வந்துருக்கணும். ஆனா வரலை. எப்படியும் ஆறு மணிக்குள்ளே வந்துருவார்.

அடப்பாவிகளா..... ஒரு மணி நேரத் தூக்கம் போச்சே:( நேத்து சாயந்திரம் ஒரு பெரிய டூர் க்ரூப் வந்து இறங்கி இருக்கு. அத்தனை பேரும் குளிச்சு ஏழுமணிக்கு எப்படி ரெடியாகப்போறாங்களோ? ஊர்க்கவலைப்பட எனக்குச் சொல்லியே தரவேணாம்:-)

கடைசியில் வெந்நீர் வந்தப்ப மணி ஆறரை. சூப்பர் ஃபாஸ்ட்டா குளிச்சு ரெடியாகி டைனிங் ஹால் போனால் டூர் குரூப் மொத்தமும் அங்கேதான். 'முட்டை போடற ஆள்' வரலை, சப்பாத்தி செய்யும் ஆள் வரலைன்னு அங்கேயும் ஏகப்பட்ட குழறுபடி. நமக்கு அதெல்லாம்தான் தேவை இல்லையேன்னு ரொட்டித் துண்டையும் சாயாவையும் முழுங்கிட்டு செக்கவுட் செஞ்சு வண்டியைக் கிளப்பும்போது ஏழு நாப்பது. இனிமே இந்த ராஜ் விலாசுக்கு வரவே கூடாதுன்னு கரும்புள்ளி வச்சேன்.




ராஜ்விலாஸ் பேலஸ் காரிடோர் முழுசும் தலைப்பாகைகள்தான். விதவிதமான தலைப்பாகை, அதை எந்தூர்க்காரவுஹ அணிஞ்சுக்குவாங்கன்னு விளக்கத்தோடு படங்களா மாட்டி வச்சுருக்காங்க. கிளம்பும் அவசரத்தில் நடந்துக்கிட்டே க்ளிக் செஞ்சுக்கிட்டேன். அப்பப்பா........ என்ன ஒரு கடமை உணர்ச்சி!
ஊர் எல்லையை விட்டு வெளிவந்துட்டோம். பொட்டல் மணல்காட்டு நடுவிலே தார் சாலை மலைப்பாம்பா நீண்டு கிடக்கு. அங்கங்கே ஒரு சில முள்ளு மரங்கள். இன்னொரு வண்டியையோ, மனுசரையோ பார்ப்பது அபூர்வமா எப்பவோ ஒன்னு. சின்னச்சின்ன ஊர்களைக் கடந்து போய்க்கிட்டே இருக்கோம். நாலைஞ்சு மண்ணு வீடுகள் அடுத்தடுத்து இருந்தால் அது ஒரு ஊர். ஒன்னரை மணி நேரம் கழிச்சு ஒரு டீக்கடை கண்ணுலே பட்டது. பத்துப்பனிரெண்டு சார்ப்பாய்கள் போட்டு வச்சுருக்காங்க. இந்த மாதிரி ஒன்னைத்தான் நான் சண்டிகரில் தேடிக்கிட்டு இருந்தேன். கிடைக்கவே இல்லை:(
ஊர் வருது போல..... பானைகள் சாலை ஓரமா விற்பனைக்கு வச்சுருக்கு. நல்ல வெள்ளைக்களிமண் பானைகள்! இன்னும் ஒரு முக்கால்மணி போனபிறகு ஹனுமன்கட் என்ற ஊரை சமீபிக்கிறோம். ஸீனரி மாறியதுபோல் மரங்கள் அங்கங்கே கொஞ்சம் நிறையவே இருந்தாலும் எல்லாம் அதே முள்ளு மரங்கள்தான்.

தேசிய நெடுஞ்சாலை பதினைஞ்சில் பயணிச்சுக்கிட்டு இருந்த வண்டி சூரத்கட்(ஹிந்தியில் இருக்கும் இந்த 'கட்' எல்லாம் ஆங்கிலத்தில் எழுதும்போது 'கர்' ஆகிடுது. சண்டிகர் கூட சண்டிகட் தான் ) என்ற ஊரில் கிளை பிரிஞ்சு MDR 103 என்ற சாலையில் போய் ஹனுமன்கட் என்ற ஊர் வழியாப் போகுது. இந்த ஊர் ஹனுமன்கட் கொஞ்சம் பெரிய(!) ஊர்தான். மண் வீடுகளுக்கு நடுவே சுண்ணாம்பு அடிச்சக் கல்வீடுகளும் இருக்கு.

சின்ன ஊரோ பெரிய ஊரோ, ஒரு நாலு கடைகள் மட்டுமே இருந்தால்கூட அதுலே குறைஞ்சது ரெண்டுகடை ஏர்டெல், ஏர்செல், டாடாஇண்டிகாம்னு இடம்பிடிச்சு உக்காந்துருக்கு. பத்து பைசா காலுக்கு கொழிச்சுக்கிட்டு இருக்காங்க. (ஹூம்..... நியூசியிலே 89 செண்ட் நிமிசத்துக்கு)
சங்கரியாவைத் தாண்டி கொஞ்ச தூரத்தில் ராஜஸ்தான் எல்லை முடிஞ்சு பஞ்சாப் ஆரம்பிச்சுருது., கூடவே பசுமையும் வளமும். வழியெங்கும் திராக்ஷை, ஆரஞ்சுப்பழத் தோட்டங்கள், தண்ணீர் நிறைஞ்சு ஓடும் கால்வாய்கள் எல்லாம் கண்ணுக்குக் குளிர்ச்சி. மண்டி எல்லாம் கடந்து பதிண்டா போய்ச் சேரும்போது பகல் சரியா ஒரு மணி.
ஃபௌஜி சௌக் கடந்து போகும்போது பெயர்க்காரணத்துக்கு ஒரு சிலை சவுக்கத்தின் நடுவில். அண்டைநாட்டு எல்லை அருகிலே(யே) இருப்பதால் ராணுவ ஏற்பாடுகள் அதிக அளவில். கண்டோன்மெண்ட் ஏரியாவைப் பத்திச் சொல்லவே வேணாம்!
இந்த பதிண்டா ( Bathimda) நகர் உண்மைக்குமே ரொம்ப பழமையான இடம். கிறிஸ்து பிறப்புக்கு நாப்பதாயிரம் வருசங்களுக்கு முன்பே மக்கள் குடியேறிய இடமாம். சரித்திரமுன்னு பார்த்தால் பதிமூணாம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட ரஸியா சுல்தானாவை சிறைப்பிடிச்சு வச்சுருந்த கோட்டைகூட இங்கேதான் இருக்கு. ராணி,வீரப்பெண்மணி. பல போரில் நேரிடையாவே கலந்து சண்டை போட்டுருக்காங்க. (இந்த ரஸியா சுல்தானாவைப் பற்றி ஒரு ஹிந்திப்படம்கூட வந்துச்சே....நம்மூர் ஹேமமாலினி நடிச்சது. யாருக்காவது நினைவிருக்கா? )
இந்த ஊர்லே ரெண்டு தெர்மல் ப்ளாண்ட்ஸ் கூட வச்சு மின்சார உற்பத்தி நடக்குது. இந்த ரெண்டு அணு உலைகளுக்குமே, குரு நானக் தேவ், குரு ஹர்கோபிந்த்ன்னு சீக்கிய குருமார்களின் பெயர்களை வச்சுருக்காங்க. உரத்தொழிற்சாலை ஒன்னு இங்கத்து வளத்துக்கு ரொம்பவே உதவுது போல! வரும்வழியெல்லாம் அறுவடை முடிச்சுக் கட்டுக்கட்டாகப்போட்டு வச்சுருக்கும் பொன்னிறமான கோதுமை வயல்களும் அறுவடைக்குத் தயாராத் தலைகுனிஞ்சு நிற்கும் கதிர்களுமா வளமோ வளம்.

கோட்டையைப் பார்க்க நேரமில்லைன்ற 'ஆசுவாசத்தோடு' பகல் சாப்பாட்டை ஹைவேயில் இருக்கும் ஒரு ரெஸ்ட்டாரண்டில் முடிச்சுக்கிட்டு பாக்கி இருக்கும் 230 கி.மீ பயணத்தைத் தொடங்கினோம். ரெண்டரை மணி நேரத்தில் பாட்டியாலா.
நீர் இன்றி அமையாது உலகு!


சின்ன ஓய்வுக்கு (ட்ரைவர் பிரதீபுக்குத்தான்) வண்டியை நிறுத்தி ரெண்டு பேரை சாத்துக்குடி ஜூஸ் குடிக்க வச்சுட்டு ( நானில்லைப்பா.... அதான் பயணத்துலே வயித்தை இறுக்கக் கட்டிக்குவேனே!) இன்னொரு சரித்திரப்புகழ் வாய்ந்த நகரான பாட்டியாலாவை, (67 கி.மீதானே?) இன்னொரு சமயம் பார்த்துக்கலாம் என்ற எண்ணத்துடன், வீட்டுக்கு வந்தவுடனே ஆக்கித்தின்னத் தேவையான சில காய்கறிகளை மட்டும் வாங்கிக்கிட்டு ஒன்னரை மணி நேரத்தில் சண்டிகர் எல்லையைத் தொட்டோம். வீட்டுக்கு வர இன்னொரு கால் மணி.
பலவருசமா மனசுலே போட்டுவச்சுருந்த ராஜஸ்தான் பயணம் இனிதே முடிஞ்சது. மாநிலம் முழுக்கச் சுற்றிப்பார்க்கலைன்னாலும் முக்கியமான இடங்களைப் பார்த்தோம் என்ற திருப்தி.

பதிவின்கூடவே உறுதுணையாப் பயணிச்ச அன்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!!


27 comments:

  1. /பயணம் உள்ளத்துக்கு நல்லது.... ஆதலினால் பயணம் செய்வீர்...// சரியாச் சொன்னீங்க.....

    41 பகுதிகளில் எத்தனை எத்தனை விஷயங்கள்.... நான் கேட்பது கொஞ்சம் ஆர்வம் அதிகம் என்று தோன்றினாலும், “அடுத்த பயணத் தொடர் எப்போது?”....


    ராஜஸ்தானிய பகடி [தலைப்பாகை] நான் கட்டிக்கொண்டு இருக்கிறேன் ஜெய்ப்பூர் பயணத்தின் போது... :) அப்பாடா, சுத்தோ சுத்துன்னு சுத்திட்டாங்க தலையைச் சுற்றி... :)

    ReplyDelete
  2. மாநிலம் முழுதும் பார்க்கனும்ன்னு வேற ஐடியா இருந்துச்சா சரிதான்.. :))

    இந்த வெந்நீர்க்குழாய் ப்ரச்சனை எல்லா ஹோட்டலிலும் இப்படித்தான் செய்யராங்க..

    ReplyDelete
  3. ஆறு நாட்கள் டிரிப்பை 41 பதிவுகளில் அழகாக, தெளிவான விவரங்களுடன் எழுதியிருக்கீங்க.

    இனிமேல் நாங்க எங்கயாவது போகணும்னா அந்த இடத்தை பற்றிய முழு தகவல்களை உங்க பதிவிலிருந்து நிச்சயம் பெறலாம்.

    நல்ல பயணத் தொடர்.

    ReplyDelete
  4. தொடர் நிறைவாக இருந்தது..

    அடுத்ததுக்கு காத்திருக்கிறென்:))

    ReplyDelete
  5. பகடிகள்லதான் எத்தனை வகைகள்!! ராஜஸ்தான்ல யார் சீக்கிரமாவும், நேர்த்தியாவும் பகடியை கட்டுறாங்கன்னு அவ்வப்போது போட்டியே நடக்குமாம்.. ஜெயிச்சவங்களுக்கு பரிசும் உண்டாம்.

    ReplyDelete
  6. வாங்க வெங்கட் நாகராஜ்..

    அடுத்தபயணமா?????

    வாசிக்க நீங்க ரெடின்னா....எழுத நான் ரெடி:-)))))

    உள்நாடு வெளிநாடுன்னு கடந்த 6 மாசத்துப்பயணங்கள் 2 பாக்கி நிக்குது. அதுலே ஒன்னு எழுதணும்:-)

    பகடிக்கு ஒரு ஆறுகஜம் இருக்குமோ!

    படம் இருந்தால் போடுங்க.

    ReplyDelete
  7. வாங்க ஷர்புதீன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  8. வாங்க கயலு.

    பொதுவாச் சுற்றுலாப் பயணிகள் போகாத இடங்களில்தான் அருமையான பல விஷயங்கள் இருக்குமேப்பா.

    கண்டது ஒரு சதவீதம். காணாதது....பாக்கி 99 இல்லையோ?

    இந்த வெந்நீர் பிரச்சனையை இந்தப் பயணத்தில் இங்கே மட்டும்தான் சந்திச்சேன். அதுவும் கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பும் திட்டம் இருந்ததால்:(

    ReplyDelete
  9. வாங்க கோவை2தில்லி.

    இப்படி 25 சதம் கழிச்சால் எப்படி?

    பயணம் மொத்தம் 8 நாளாக்கும் கேட்டோ:-))))

    ஆக மொத்தத்தில் 'பயனுள்ள பதிவு'ன்னுதானே சொல்ல வந்தீங்க? :-))))

    நன்றியோ நன்றி.

    ReplyDelete
  10. வாங்க நிகழ்காலத்தில்.

    இவ்வளவு ஆர்வமாக் கேக்கும்போது மாட்டேன்னு சொல்ல முடியுதா?

    எழுதிடலாம்......சீக்கிரமே!:-)

    ReplyDelete
  11. வாங்க அமைதிச்சாரல்.

    எண்ணற்ற வகை இருக்குப்பா. பகடியை வச்சே அவுங்க ஜாதகத்தைச் சொல்லிடலாம் போல!

    உதய்பூர் காங்கோர் திருவிழாவில் கூட இந்த பகடிப் போட்டி இருந்துச்சு.

    கூட்டம் நெரியுதேன்னு அதுவரை காத்திருக்காம வந்துட்டோம்:(

    ReplyDelete
  12. சரியான சமயத்தில் தான் உள்ளே வந்துருககேன் போலிருக்கு. அப்பாடி தொடர்ந்து மூச்சை பிடித்து கொண்டு விடாமல் தொடரை படிப்பவர்களை உங்க எழுத்து நடையின் காரணமாக உங்க பின்னாலேயே ஓடி வர வைத்து விடுறீங்க.

    பயண்ம் உள்ளத்துக்கு நல்லது. உண்மை தான். எல்லோருக்குமா இந்த வாய்ப்பு அமைந்து விடுகின்றது. சூழ்நிலை ஒரு பக்கம். பர்ஸ் கனம் மறுபக்கம் (?)

    நேரம் கிடைக்கும் போது பணப்பிரச்சனை. பணம் நிறைய இருக்கும் போது நேரப்பிரச்சனை.

    இதோ இருக்கிற கன்யாகுமரியில் ஒரு மூன்று நாட்கள் குழந்தைகளுடன் தங்கி வர வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. ஆனால் அது நிராசையாகத்தான் போய்க் கொண்டேயிருக்கிறது.

    ReplyDelete
  13. 8 நாட்கள் பயணத்தை 6 நாட்களாக சுருக்கியதற்காக ”ஷமிக்கணும்”.

    ReplyDelete
  14. அருமையான பதிவு.
    நாங்களும் தொடர்ந்து பயணம் செய்தோம்.
    வாழ்த்துக்கள் அம்மா.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  15. கிளம்பும் அவசரத்தில் நடந்துக்கிட்டே க்ளிக் செஞ்சுக்கிட்டேன். அப்பப்பா........ என்ன ஒரு கடமை உணர்ச்சி!//

    ரசிக்கவைத்த பயணத்திற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. ராஜஸ்தான் பயணம் நிறைவில்...
    கோதுமை அறுவடை, தாகம்தீர்க்க ஆரேஞ்யூஸ் என இனிதான பயணம். நன்றி.

    ReplyDelete
  17. //பலவருசமா மனசுலே போட்டுவச்சுருந்த ராஜஸ்தான் பயணம் இனிதே முடிஞ்சது. மாநிலம் முழுக்கச் சுற்றிப்பார்க்கலைன்னாலும் முக்கியமான இடங்களைப் பார்த்தோம் என்ற திருப்தி. //

    நீங்கக் கொடுத்து வச்சவங்க, நின்னு நிதானமாக எல்லாவற்றையும் பார்க்க நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது.

    ReplyDelete
  18. வாங்க ஜோதிஜி.

    விதியின் விளையாட்டுன்னு இதைச் சொல்லலாமோ?

    இளமையும் கால்களில் நடக்க வலுவும் இருந்த காலத்தில் இங்கெல்லாம் போக முடியாமல் நம்ம நிதி நிலமை இருந்துச்சு. இப்ப நிதி ஓரளவு சரியானாலும் உடல்நலம் சரி இல்லாம ஆகிப்போச்சு.

    ஒன்னு இருந்தால் ஒன்னு இருக்காது என்பதுதானே'விதி'

    ஆனால் ஒன்னு நமக்கு கிடைக்கணுமுன்னு, (மறுபடியும் விதியைத்தான் சொல்ல வேண்டி இருக்கு பாருங்க)இருந்தால் கிடைக்காமல் போயிடாது. ஆனால் அது எப்பன்னுதான் நமக்குத் தெரியறதில்லை!

    கன்னியாகுமரிப் பயணம் சீக்கிரம் அமையட்டுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  19. க்ஷமிச்சு கேட்டோ கோவை2தில்லி:-)))))

    ReplyDelete
  20. வாங்க ரத்னவேல்.

    தொடர்ந்த உங்கள் ஊக்குவிற்புக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  21. வாங்க இராஜராஜேஸ்வரி.

    பயணத்தில் துணையாக வந்ததுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  22. வாங்க மாதேவி.

    உடல்நலம் தேறியதா?

    தொடந்துவரும் ஆதரவுக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  23. வாங்க கோவியாரே.

    ரொம்ப நின்னு பார்க்கலை. ஆனால் கிடைச்சது எதையும் விடலை என்றதுதான் திருப்தி!

    ReplyDelete
  24. We are planning to visit Rajastan in this year end. The information you have provided is very useful. Thank you.

    ReplyDelete
  25. We are planning to visit Rajastan in this year end. The information you have provided is very useful. Thank you.

    ReplyDelete
  26. Thanks Ashok.

    Enjoy the trip. Stay in palaces like maharaja:-)

    ReplyDelete