Friday, December 24, 2010

Bபுலா ரஹேங்கே Bபுலந்த் தர்வாஸா..........

பகலுக்கு எதாவது சாப்பிடக் கிடைக்குமான்னு பார்த்துட்டு வரலாமுன்னு எதிரே மாலுக்குள் நுழைஞ்சால் இளநீர் விக்கிறார் ஒருத்தர். தொண்டைவேற தகராறு. வலி இருக்கு. பேசாம ஒரு இளநீர் குடிச்சுக்கலாம், போதுமுன்னு நினைச்சேன். மாடியிலே ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே கோபாலுக்கு எதாவது கிடைக்கும்.

முப்பது ரூபாய்ன்னார். முதலில் ஒன்னு வாங்கிப் பார்த்துட்டு நல்லா இருந்தால் இன்னொன்னு வாங்கிக்கலாம். சிங்கையில் வாங்குவது போல இங்கே இந்தியாவில் நம்பி வாங்க முடியலை பலசமயம் கரிப்போ கரிப்பு.
பேப்பர் டம்ப்ளர் எடுத்து சேம்பரில் இருந்து குழாயைத்திறந்து ரொப்பறார். பைப் லைனிலா இளநீர் வருது. ஃப்ரஷா இங்கே இருக்கும் இளநீரை வெட்டித் தான்னதும் கத்தியின்றி ரத்தமின்றி மெஷினில் வச்சு கைப்பிடியை அமுக்குனதும் 'சதக்னு இளநீரில் ஓட்டை. அட! நல்லா இருக்கே!
அதை உடனே டம்ப்ளரில் சரிச்சு ஒருகுறிப்பிட்ட அளவு வந்ததும் நம்மிடம் நீட்டினார். இன்னொரு டம்ப்ளரில் மீதம் இருப்பதை ஊத்துன்னா............. இந்த க்ளாஸ் 250 மில்லி. ஒரு இளநீர்ன்னா 206 மில்லி ( 4 மில்லி கொசுறு)ன்னு சொல்லும் போர்டு பாருங்கன்னுட்டு மீதம் இருக்கு இளநீரை அந்த சேம்பரைத் திறந்து ஸ்டாக் பண்ணிக்கிட்டார்.
பகல் கொள்ளையா இருக்கே! மாடர்னா ஆக ஆக இப்படியெல்லாம் நடக்கும்போல! அரை இளநி முப்பது, அநியாயம்:('

டெக்னாலஜி இஸ் கான் ஃபார் டூ மச்!!!

மாடிக்குப் போனால் எல்லா தளமும் காலியாக் கிடக்கு. ரெஸ்ட்டாரண்டும் மூடி இருக்கு. எஸ்கலேட்டர், லிஃப்ட் எல்லாம் வச்சு அருமையா இருக்கும் மாலில் கடைகளே இல்லை. ஒருவேளை 'மால்' அதிகம் கேக்கறாங்களோ என்னவோ? விடியா மூஞ்சு கதை! கீழ்தளத்துலே ஒரு மெக்டோனால்ட்ஸ்.. அங்கே போய் சிப்ஸும் பர்கரும் வாங்கிக்கிட்டோம். கீழ்தளத்துலேயே கைவினைப்பொருட்கள் (எல்லாம் பளிங்குச்சாமான்கள்) கடை ஒன்னு. ரெண்டு யானை கிடைச்சது.

இன்னும் அரைநாள் பாக்கி.. த டே ஈஸ் ஸோ யங்! ஒரு முப்பத்தியெட்டு கிமீ தூரத்தில் ஃபடே(ஹ்)பூர் ஸிக்ரி இருக்கு. போயிட்டு வந்துறலாமுன்னு கிளம்பினோம். போகும் வழியில் இன்னொரு யானை எதிர்கொண்டு போச்சு. கடைவீதிகளைத் தாண்டும்போது உடுபி ஹொடேல் போர்டு பார்த்து வச்சுக்கிட்டேன். நகர எல்லையைக்கடந்து கோட்டை வாசலுக்குப்போக ஒரு மணி நேரம் ஆச்சு.
நகர எல்லையைக் கடக்கும்போதே ஒரு கூட்டம் வந்து வழி மறிச்சது. நாம்தான் தேறிட்டோமே...... வண்டியை நிறுத்தாம ஓட்டிட்டோம்.

எல்லா வண்டிகளையும் வழி மறிச்சு கார்பார்க்குலே கொண்டுபோய் விட்டுடறாங்க. அங்கே பலத்த வரவேற்பு. 'மேலே மலை ஏறணும். நாங்களே கொண்டுபோய் எல்லாத்தையும் காமிச்சுக் கூட்டி வந்துருவோம்'

"வேணாம். நாங்களே பார்த்துக்கறோம். அதான் பஸ் ஒன்னு மேலே போகுமுன்னு போர்டு இருக்கே. அஞ்சு ரூபாதான் அதுக்கு. அதுலே போறோம்."

"பஸ் நிறைஞ்சால்தான் எடுப்பாங்க. அதிலும் அங்கிருந்து திரும்பிவர பஸ் சிலசமயம் கிடைக்காது. 'மலை'யில் இருந்து நடந்து வரணும்.." விடாமப் பின் தொடர்ந்தார். 800 ரூ சார்ஜ். பேரம் பேசி முன்னூறாக்குனோம். ஒரு செல்ஃபோன் கால். எங்கிருந்தோ ஆட்டோ ஒன்னு வந்து நம்முன்னால் நிக்குது. அதுலே வந்தவருக்கு அசைன்மெண்ட் கொடுத்தார் ஏஜண்ட்.

நாலைஞ்சு நிமிசத்துலே 'மலை' ஏறியாச்சு. அங்கே இன்னும் உசரத்துலே கோட்டை மதிலுடன் நிக்குது ஜமா மசூதி. சரிவுப்பாதையில் மேலே ஏறிப்போறோம். கைடுக்கு கால் சரியில்லை. ஒரு பாதம் வளைஞ்சு இருந்தாலும் விந்திவிந்தி வேகமா நடக்கறார்.

இந்தப்பக்கம் ஃபடே(ஹ்)பூர் அந்தப்பக்கம் ஸிக்ரி. ரெண்டுக்கும் எதிரில் இருக்கும் குன்றின்மேல் இருக்கும் கோட்டையின் தெற்கு வாசலில் நின்னுக்கிட்டு கையை நீட்டிக் காட்டறார் மொஹம்மத். நமக்காக இவரைத்தான் அனுப்பினார் அடிவாரத்துலே இருந்த ஏஜண்ட்.

ஆமாம் பாஸ். இந்த ஆளுக்கு ஒரு ஆள் இருக்கான் பாஸ். அவன் அவனுக்குத் தெரிஞ்ச ஆள்கிட்டே சொல்லி அவனோட ஆள் மூலம் வேலையை முடிச்சுருவான் பாஸ்.

நாம் மசூதிக்கோட்டைக்குள் நுழைஞ்சது கிழக்கு வாசல் வழியாக. இதுதான் அரசகுடும்பம் வரும் வழியாம். (அது ஏன்னு அப்புறம் தெரிஞ்சது) மேற்குப்பக்கம் வெராந்தாக் கட்டிடமும் வெறும் சுவரும் தான். இந்த திசை நோக்கித்தான் கும்பிடுவாங்க. வடக்குப் பக்கம் நீண்ட வெராந்தாக்களுடன் உள்ளே உள்ளே போகும் கூடங்கள் இடதுபுறம். வலதுபுறம் தரை முழுக்க சமாதிகள். சிஷ்டி குடும்பத்தினருக்கு மட்டுமே இங்கே அடக்கம் செய்யும் உரிமை.
ஸலீம் சிஷ்டின்னு ஒரு சூஃபி ஞானி, ஸிக்ரி குன்றுகளின் குகையில் இருந்தார், அக்பர் சக்ரவர்த்தி, விந்திய மலைத்தொடரின் வாலாக இருக்கும் இந்தக் குன்றுகளின் மேல் ஒரு மசூதி அமைக்கத் திட்டம் போட்டு இங்கே வந்துருக்கார். இவர்தான் கட்டிடக்கலையில் ஆர்வம் மிகுந்தவராச்சே.

அக்பருக்கு ஏராளமான மனைவிகள் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லை. இந்த மகானை வழிபட்டு ஆசிகள் வாங்குனதும் மனைவி ஜோதாபாய்க்கு பிறந்த பிள்ளைதான் ஸலீம் ஜஹாங்கீர். அக்பருடைய பெரிய சாம்ராஜ்யத்துக்கு வாரிசு என்று ஜஹா...ங்கீர்னு பெயர். குருவின் ஆசியோடு பிறந்த பிள்ளை என்றதால் ஸலீமுன்னு குருவின் பெயரையும் சேர்த்து வச்சாராம்.
1570 இல் இந்த மசூதி கட்ட ஆரம்பிச்ச ரெண்டே வருசத்தில் (1572) குருவின் காலமும் முடிஞ்சுபோச்சு. குருவை இங்கே மசூதியிலேயே அடக்கம் செஞ்சு சமாதிக் கட்டிடம் எழுப்பி இருக்கார். இதுவும் கோட்டை மசூதி போலவே சிகப்பு மணல் கற்கள் கட்டிடம்தான். (இப்போ இதை சலவைக் கல் கட்டிடமா மாற்றிட்டாங்க.)
மசூதிக்கு மேற்கே குன்றில் சிலமாளிகைகளும் கட்டி இருக்கார். அதுலே ஒன்னு ஜோதாபாயின் அரண்மனை.

சின்னதும் பெருசுமா தரைப்பகுதியில் இருக்கும் குடும்ப சமாதிகளைக் கடந்து உள்ளே போறோம். ஒரு இடத்தில் படிக்கட்டுகள் கீழே இறங்கிப்போகுது. சுரங்கப்பாதை. இங்கே இருந்து ஆக்ரா கோட்டைக்குள் போய்ச் சேருது. இதன் வழியாத்தான் அனார்கலியை உயிரோடு சமாதி வைக்க ஆக்ராவுக்குக் கொண்டு போனாங்களாம்.

முற்றத்தில் ஒரு மரத்தைச்சுத்தி எழுப்பி இருந்த மேடையில் பூஜைப்பொருட்களை வச்சு விக்கறாங்க. கலர் கலரா மெல்லிய துணியில் சரிகை வச்சுருக்கு. ஸலீம் சிஷ்டி தர்காவுக்குள் வெறுங்கையாப் போகக்கூடாதுன்னு மொகம்மத் ஹிண்ட் கொடுக்கறார். உண்டியலில் காசு போடலாமான்னா...... ரூபாய்களை போடக்கூடாதாம். என்ன வம்பாப் போச்சு...உள்ளே போகலாமா வேணாமான்னு கோபாலுக்கு யோசனை.
மொஹம்மத்

மனுசர்களின் மனங்களைப் படிச்ச மொஹம்மத் சொல்றார்........

"ரொம்ப சக்தி வாய்ந்த தர்கா இது. வேண்டுதல்கள் கட்டாயம் நிறைவேறும். ஒவ்வொருத்தருக்கும் மூணு வேண்டுதல்கள் பலிக்கும். என்ன வேண்டுனோமுன்னு யார்கிட்டேயும் சொல்லக்கூடாது என்பது கண்டிஷன். நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா மூணு வரங்கள் கேக்கலாம். இந்த நிறங்கள் ஒவ்வொன்னும் ஒரு பிரிவுக்கான தர்ம கைங்கர்யம். விதவைகள் மறு வாழ்வு, ஏழைக் குழந்தைகள் படிப்பு, ஏழைப்பெண்கள் திருமண உதவின்னு வச்சுருக்காங்க."

ஏழைப்பெண்கள் திருமண உதவிக்கு இருக்கட்டுமுன்னு சிகப்புத் துணி வாங்கினோம். கூடவே ரெண்டு சிகப்பு மஞ்சள் நூல்கள் இருக்கு அதுலே. வேண்டுதலை மனசில் சொல்லிட்டு அந்தக் கயிறை அங்கே இருக்கும் சன்னலில் கட்டி விடணுமாம்.

இங்கே இது ஒரு ரிங்போல் செயல்படுதுபோல. வியாபாரிகளுக்கும் கைடுகளுக்கும் தர்காவில் பூஜை செய்பவர்களுக்கும் ஒரு உள்த்தொடர்பு இருக்கு. நாம் எடுத்த துணிக்கு 1100 ரூபாய் கட்டணம். 'கடைசி நிமிட்லே கவுத்துட்டியே பாவி'ன்னு, என்னை ஒரு பார்வை பார்த்தார் கோபால். 'போயிட்டுப்போகுது விடுங்க. ஏழைப்பெண்கள் கல்யாணம் சம்பந்தப்பட்டது. கணக்குப் பார்க்காதீங்க'ன்னு பார்வையால் பதில் சொன்னேன். இந்த முப்பத்தி ஆறரை ஆண்டு வாழ்க்கையில் பார்வைகளுக்குப் பொருள் துல்லியமாப் புரிஞ்சுருது.
தர்காவுக்குள் நுழைஞ்சோம். தலையை மூடிக்கணும். நமக்குத்தான் துப்பட்டா இருக்கே. ஆண்களுக்கு அங்கேயே ஒரு தொப்பி கொடுக்கறாங்க.
சரிகைத் துணியை விரிச்சு சமாதி மேல் போர்த்தணும். பூஜை செய்யும் நபர் உதவி செய்யறார். கண்மூடிப் பிரார்த்திச்சுக் கயிறுகளை ஜன்னலில் கட்டுனோம். சமாதி மேல் பலவித நிறத் துணிகள் நிறைஞ்சுருக்கு. சலவைக்கல்லில் நவரத்தினக் கற்கள் பதிச்சுருக்காங்க. முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட துணியால் ஆன விதானம்.

வெளியே வலம் வரும் வெராந்தா சுத்திவர பளிங்குக்கல் அலங்காரச்சுவர்கள் லேஸ் டிஸைனில் இருக்கு. நுண்ணீய வேலைப்பாடு. வெளியே இருந்து பார்த்தால் ஒன்னும் தெரியாது. உள்ளே இருந்து வெளிப்புறம் பளிச்ன்னு தெரியுது. ஒரு பக்கச்சுவரில் சின்னதா ஒரு மூணடி உசரக்கதவு. அது அந்தக் காலத்தில் பெண்கள் தரிசனத்துக்கு வரும் வழி.. ராஜபுதனப் பெண்கள் எப்பவும் நிமிர்ந்த நடை கொண்டவர்களாம். தலைவணங்காதவர்களுக்கு இத்தனை சின்னதா ஒரு வாசல். எப்படியும் குனிஞ்சுதானே உள்ளே வரமுடியும். ஜோதாபாய்க்காக கட்டுன வாசல்!!!!
கட்டளையாப் போடாமல் எப்படி நாசுக்கா இருந்துருக்கார் அக்பர்ன்னு பாருங்களேன்! தர்கா முகப்பில் சின்ன மண்டபத்துலே இருக்கும் அலங்காரத் தூண்கள் மழைநீர் சேகரிச்சுக் கிணற்றுக்குள்ளே அனுப்பும் விதமா செயல்படுது.
பிரமாண்டமான முற்றத்தில் தரையோடு தரையாக் கிணறு ஒன்னு சின்ன வாயோடு. நல்லவேளை கம்பிகள் போட்டு வச்சுருக்காங்க. இதுலே இருந்து தண்ணீர் கோரி பானைகளில் வச்சு பார்வையாளர்கள் குடிக்க ஒரு ஏற்பாடு. தீர்த்தம்!

தரிசனம் முடிச்சு அடுத்த பகுதியில் இருக்கும் கூடங்களுக்குள் போனால். அக்பர் ஸ்தாபிச்ச புது மதமான தீன் இலாஹிக்கான ஹால். இந்து கிறிஸ்துவம் இஸ்லாமிய டிசைன்கள் மூணும் இணைஞ்சுருக்கு. கிறிஸ்துவ தேவாலயங்கள்போல் கிண்ணக்கூரை(டோம்) இஸ்லாமியக் கட்டிடக்கலையான வளைஞ்சும் நெளிஞ்சும் இருக்கும் சுவர் டிஸைன், ரெண்டு சுவர்கள் சேரும் இடத்தில் இந்துக்கோவில் கோபுர டிஸைன்.
என்ன ஒன்னு, கோபுரம்தான் தலைகீழா இருக்கு:(

இன்னும் சில கூடங்களின் சுவர்களில் வெவ்வேற ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்டப் பல நிறங்களில் உள்ள பளிங்குக்கற்களால் பூவேலைகள் அமைச்சுருக்காங்க. இன்லே ஒர்க். அவையெல்லாம் பழுதுபட்டால் மீண்டும் புதுப்பிக்கும் வேலை செய்ய ஒரு ஆயிரத்து ஐநூறு குடும்பங்கள் இந்த படே(ஹ்)பூர் ஸிக்ரியில் இப்போதும் வசிக்கிறாங்களாம்.


பதினைஞ்சு வருசம் கஷ்டப்பட்டுக் கட்டுன இந்தக் கோட்டையையும் சுற்றுப்புற அரண்மனைகளையும், எண்ணிப் பதினாலு வருசங்கள் மட்டுமே தலைநகராக வச்சுருந்தவுங்க தண்ணீர் கஷ்டத்தால் இந்த இடத்தைவிட்டு மறுபடி ஆக்ராவுக்கே போயிட்டாங்க. யமுனை இருக்கே!.
இப்போ நாம் நிற்கும் இடம் புலந்த் தர்வாஸா. 'புலந்த்' ன்னால் உசரம் ரொம்ப உசரமுன்னு பெர்ஸிய மொழி சொல்லுது. 175 அடி! மசூதி கட்டி முடிச்ச அஞ்சாவது வருசம் டெக்கான் போரில் ஜெயித்த அக்பர், அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமா இந்த வாசலைக் கட்டுனார்.
குன்றின்மேல் இந்த வாசல் 54 மீட்டர் உயரம். கீழே தரையில் இருந்து குன்றுக்குவர நீளமான படிகள் 42. கொஞ்சம் உயரமான படிகள். ஏறி வர்றது மூட்டுவலி கேஸ்களால் முடியாது. வலியில்லா மக்களுக்குமே கஷ்டம்தான். ஆனா பலர் இந்த வழியா வர்றாங்க!!!!இந்தக் கணக்கில் உலகிலேயே உயரமான வாசல் இது.

இந்த முப்பது மீட்டர் அகல வாசலுக்கு பிரமாண்டமான மரக்கதவுகள் ரெண்டு. கதவுகளிலும், குதிரை லாடங்களை ஏராளமா அடிச்சு வச்சுருக்காங்க. அதிர்ஷ்டம்!!

இந்த புலந்த் தர்வாஸா (வாசக்) கட்டிடத்துலே மார்பிள் எழுத்துக்களால் குரானின் சில பகுதிகள் பொறிக்கப்பட்டிருக்கு. கூடவே இயேசு கிறிஸ்தின் உபதேசங்கள் சிலதும்! அக்பருடைய பரந்த மனப்பான்மையையும், மத நல்லிணக்கத்தைக் காட்டும் வகையிலும் அமைஞ்சுருக்கு. பகவத் கீதையில் இருந்து ஒரு வரியும் சேர்த்துருந்தா நோக்கம் முழுமையா நிறைவேறி இருக்கும்.

பலவிதப் பழங்களை அடுக்கி வச்சு ஃப்ரூட் ஸாலட் செஞ்சு விக்கறாங்க சிலர். ஃபடே(ஹ்)பூர் ஸிக்ரி படங்கள், புத்தகங்கள் விற்கும் சிறுவர்கள் பயணிகளைப் பிச்சுப்பிடுங்கறாங்க. ஆரம்ப விலையில் இருந்து சட்னு அதலபாதாலத்துக்குப் போகுது. நாம்தான் ஏற்கெனவே மதுராவில் வாங்கிட்டோமே, ஹோம் ஒர்க் செய்ய.
ஜோதா அரண்மனை

இந்த இடத்தில் இருந்து பார்க்கும்போது கொஞ்ச தூரத்தில் ஜோதாபாய் மாளிகை தெரியுது. ஆனால் அங்கே சிஷ்டியின் வம்சத்தினர் இப்போ வசிப்பதால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையாம்.
மசூதியின் உள்புற வெராந்தாவில் அழகழகான கைவினைப்பொருட்கள் (எல்லாம் ஸோப் ஸ்டோன், மார்பிள் செதுக்கல்கள்) கிடைக்குது. மின்சார விளக்கு, மெழுகுவத்தி இப்படி உள்ளே வச்சோமுன்னால் அழகா ஜொலிக்குது. எனக்கும் ஒரு யானை ஆப்ட்டது. (நவம்பர் மாச பிட்டுக்கு அனுப்பினேன்) பேரம் பேசிக்கணும். முதலில் சொல்லும் விலை மக்கள் மனசறிஞ்சு ரெண்டு மடங்கு!

ஆட்டோவில் ஏத்திக் கீழே கொண்டுவந்து விட்டுட்டு காசை வாங்கிக்கிட்டார் மொஹம்மத். ஒன்னரை மணி நேரம் ஆகி இருக்கு.
ஆக்ராவுக்குத் திரும்பிக்கிட்டு இருக்கோம். கடைவீதிக்குள் பாதிவழியில் இருக்கும்போது ட்ராஃபிக் போலீஸ் நம்ம வண்டியை ஓரங்கட்டுச்சு. " வண்டி யாருது? கிஸ்கா காடி ஹை?" எங்களுதுதான். பேப்பர்ஸ் எல்லாம் இருக்கா? இருக்கு. அப்ப நீ ஒன்வே யிலே வந்துட்டே. இல்லையே எங்களுக்கு முன்னால் வண்டி போகுது. பின்னாலும் வண்டிகள் வருது.

பேப்பர்ஸ் காமின்னதும் எடுத்துக் காமிச்ச ப்ரதீப்பின் கையில் இருந்து 'லபக்'னு பிடுங்கிட்டு போறார் போலீஸ். ஐயோ ஐயோன்னு ப்ரதீப் ஓட, எனக்கு எரிச்சலா இருக்கு. அஞ்சு நிமிசத்துக்கும் மேல் ஆச்சு இன்னும் ஆளைக் காணோமேன்னு கோபால் போய் பார்த்தா ரெண்டாயிரம் கொடுன்னு பேரம் ஆரம்பிச்சு ரெண்டு நூறில் படிஞ்சது. அடாவடி போலீஸ்.

ட்ரைவர் மட்டும் போயிருந்தால் அம்பது, நூறோடு முடிஞ்சுக்கும். நான் போனதால் 'லஞ்ச' விலை ஏத்திட்டான்றார் கோபால். மதிப்பு கூடிப்போச்சோ;-)))))

இதுக்குத்தான் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் சொன்னதுபோல், இது இதுக்கு இவ்வளவுன்னு அஃபீஸியலா பட்டியல் ஒன்னு போடவேணுங்கறது.

காலையில் அம்பது ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு. டின்னருக்கு அம்பது எப்படிப்போதும்? அதான்........

ஆக்ச்சுவலா அது ஒன்வே இல்லை. வெளியூர் வண்டின்னதும் அதிகாரம் காமிக்கிறாங்க. கேஸ் புக் பண்ணிக்கோன்னா..... யாராலே இதுக்காக அங்கே இன்னொருமுறை போ ஆஜராகமுடியும்? தொலையட்டும் சனியன்னு லஞ்சம் கொடுக்க வேண்டித்தான் இருக்கு. மக்களுடைய இயலாமையைக் காசாக்கத் தெரிஞ்சுக்கிட்டாங்க.

இந்தியா முழுக்க வண்டி ரெஜிஸ்ட்ரேஷனுக்கு நம்பர் மட்டும் கொடுக்கலாம். முன்னாலே எந்த ஸ்டேட்ன்னு ரெண்டு எழுத்து போடுவதால் தானே இந்தத் தொல்லை?

அப்படி ஒரு விதி கொண்டுவந்தால் போலீஸே போராட்டம் நடத்துமோ என்னவோ? ஒரு ரெண்டு மணிநேர உண்ணாவிரதம்......

மறுநாள் கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பி நேரே வீட்டுக்கே போயிடலாம். பத்துமணி நேர ட்ரைவிங். முடியுமான்னு ப்ரதீப்பிடம் கேட்டால் பிரச்சனை இல்லை. நான் பதினெட்டு மணிநேரம் ட்ரைவ் செஞ்சு ஆமடாவாத் போயிருக்கேன்னார்.

மறுநாள் காலையில் தொண்டை பயங்கரவலி. பல்தேய்க்கும்போது தொண்டையில் இருந்து ரத்தமா வருது. கோபாலுக்குச் சொல்லலை. பயந்துருவார் மனுசர். கையில் இருக்கும் மாத்திரையைப் போட்டுக்கிட்டு எதிரில் இருந்த மெக்டோனால்ட்ஸ்லே காஃபிக்குப் போனா 'அதிகாலை'ப் பத்துமணிக்குத்தான் திறப்பாங்களாம்.

கிளம்பிடலாம். போகும் வழியில் நேத்து பார்த்துவச்ச உடுபி இருக்கே! எட்டுமணிக்குத்தான் டிஃபன் கிடைக்கும். கறாராச் சொன்னார் பணியில் இருந்தவர். இப்போ ஏழே முக்கால். காஃபி போதும். அது வந்து குடிக்க ஆரம்பிக்கும்போது மணி எட்டு. இட்லி வடை கிடைச்சது.

மதுரா வழியிலேயே வந்து தில்லிக்குள் நுழையாம ரிங் ரோடில் போய் ஊரெல்லையைத் தாண்டுனோம். மயூர்விஹார் போகும் சாலை, நிகம்போத் காட் எல்லாம் கண்ணில் பட்டபோது சம்பந்தப்பட்டப் பதிவர்கள் நினைவுக்கு வந்தாங்க.

பகல் உணவுக்கு ஹைவேயில் சோனிப்பெட் ஹவேலிக்குள் நுழைஞ்சுட்டு, வீடுவந்து சேர்ந்தப்ப மணி மாலை ஆறரை. சரியாப் பதினொன்னரை மணி ஆகி இருக்கு. வெரி லாங் ட்ரைவ்:(

மதுரா ஆக்ரா பயணம் முடிஞ்சது.

கிறிஸ்மஸ் விடுமுறைக்காக உங்களுக்கு லீவு விட்டாச்சு! புதுவருசத்தில் சந்திப்போம்.

நண்பர்கள் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
என்றும் அன்புடன்,
டீச்சர்.

41 comments:

  1. இளனி இவ்ளோ காஸ்ட்லியா :-(

    சரித்திரப்புகழ் பெற்ற இடங்களை நேரில் பார்க்கும் உணர்வு..

    ReplyDelete
  2. இப்போது உடம்பு எப்படி இருக்கு டீச்சர், அட்வான்ஸ் புது வருட வாழ்த்துக்கள் டீச்சர்.

    ReplyDelete
  3. \\Bபுலா ரஹேங்கே Bபுலந்த் தர்வாஸா.........."\\

    'Bபுலா', 'Bபுலந்த்' என்று போட்டது சரியான சமயோசிதம். இல்லைன்னா நாங்க pula, pulanth ன்னு படிப்போம்:)

    இளநீர் முப்பது ரூபாயா?

    ஆமடாவாத் = அகமதாபாத்?!

    ஆமடாவாத் பழைய பேர்தானே?

    ஜோதா அக்பர் படம் பார்த்ததில் இருந்தே பதேபூர் போகனும்னு ஆசை. பாப்போம். ஒரு பதினைஞ்சு நாள் லீவ் போட்டு நார்த் சைடு பூரா முடிஞ்சவரைக்கும் பாத்துட வேண்டியதுதான்.

    ReplyDelete
  4. வாங்க அமைதிச்சாரல்.

    தென்னை மரத்தின் உசரத்துக்குச் சமமான விலை!

    ReplyDelete
  5. வாங்க சுமதி.

    வீட்டுக்கு வந்தவுடன், 'மெடிக்கல் ஷாப்'லே நிலையைச் சொல்லி மருந்து வாங்கினவுடன் உடம்பு சரியாப்போச்சு.

    டாக்டரை இன்னும் தேடலை இந்த ஊரில்.

    ReplyDelete
  6. வாங்க கோபி ராமமூர்த்தி.

    க்ரந்த எழுத்துக்கள் வேணாமுன்னு எல்லோரும் சொல்லிட்டாங்க. உச்சரிப்பு முக்கியம் அதான் கொஞ்ச நாளா இப்படி யோசிச்சு செஞ்சுருக்கேனாக்கும்.

    ஆங்கிலம் வேணாமுன்னு இன்னும் யாரும் சொல்லலை!

    ஆமாங்க. அதுதான் அதன் பழைய உண்மைப்பேர்!

    வெறுமனே கோயில் மட்டுமே போகாம அங்கங்கே இருக்கும் சரித்திர சம்பந்தமுள்ள இடங்களையும் பார்க்கணும். அதான் கொஞ்சம் இங்கே கொஞ்சம் அங்கேன்னு பார்த்துக்கறேன்:-)

    பதினைஞ்சு நாள் போதாது. இங்கே ட்ராவலிலேயே பாதி நேரம் போயிருதே. சாலைகள் அப்படி...:(

    ReplyDelete
  7. நல்ல பதிவும்மா. ஃபதேபூர் சிக்ரி பற்றிய விவரங்கள் அருமை. தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க ஒரு பெரிய கிணறு கூட வெட்டியுள்ளார்கள் அந்த காலத்தில்லேயே. நான் ஒரு முறை அங்கே சென்றபோது சிறுவர்கள் அந்த அதலபாதாள கிணற்றில் குதித்து வெளிவந்து காசு கேட்டனர் சுற்றுலா பயணிகளிடம். இப்போது இருக்கிறதா தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. போலீஸ்காரனுக்கும் கைடுக்க்கும் கொடுக்கவே பணம் தனியா எடுத்துவைக்க்கணும் போல.


    படங்கள் அத்தனையும் அருமை,.
    நேரில் பர்த்தாச்சு உங்க தயவால. தொண்டை சரியாகி இருக்கணும். ரத்தம் வந்ததா சொல்றீங்களே:(

    ReplyDelete
  9. padangal arumaya irukku. thirumbavum oru murai vandaargal vendraargal padikkanum ellaam marandutuchchi. elani romba costly aanaa colava vuda better. udambu thevalaamaa? take care xmas matrum advance new year vaazhththukkal!

    ReplyDelete
  10. Fantastic as if we are also travelling with your family members.

    ReplyDelete
  11. ஆமாம் பாஸ். இந்த ஆளுக்கு ஒரு ஆள் இருக்கான் பாஸ். அவன் அவனுக்குத் தெரிஞ்ச ஆள்கிட்டே சொல்லி அவனோட ஆள் மூலம் வேலையை முடிச்சுருவான் பாஸ்// சிரிச்சி மாளலை...:)

    ReplyDelete
  12. அக்பர் டெக்கான் வெற்றியைக் கொண்டாடக் கட்டிய "புலந்த் தர்வாஸா" அமோகமாக இருக்கிறது.

    பல இடங்களைப் பார்க்கக் கிடைத்தது. நன்றி.

    உங்களுக்கும் கிறிஸ்மஸ் புதுவருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. Dear Friends,

    Sorry , not replying for the feedbacks.

    At the moment travelling in Chennai.

    Once I return home, will reply.

    Sorry once again.

    Have a very Happy New year.

    With regards,

    Tulsi

    ReplyDelete
  14. படங்கள் எல்லாமே அருமை நாங்களுமுங்க கூடவே வந்ததுபோல இருந்தது.

    ReplyDelete
  15. சென்னைக்கு வந்ததைப் பற்றி எப்ப எழுதப் போறீங்க?

    பொதுவா பயணக்கட்டுரைகளில் இதுவரை யாரும் முயற்சிக்காத வெறும் புகைப்படங்களை வைத்து இது போனற் குறிப்புகளை கொடுத்தே ஒரு நீண்ட புத்தகத்தை கொடுக்கலாம் போலிருக்கு.

    அப்புறம் அந்த வண்டிக்குள் பக்கவாட்டில் தெரியும் கண்ணாடியை இன்னும் லேசாக திருப்பி நம்ம தலைவரை முகத்தையும் (ஓட்டிக் கொண்டுருப்பவர் அவர் தானே?) வரும்படி செய்து இருந்தால் ஒளி ஓவியான்னு ஒரு பட்டம் கொடுத்துருப்பேன்.

    ReplyDelete
  16. ஜோதா அக்பர் ஓவியம் ஏதாவது பாத்தீங்களா? இருந்தா இணைச்சிருக்கலாமே ? ஐஸ்வர்யா மாதிரி இருக்காங்காளா ? ( என்னா ஒரு ஆர்வம் சரித்திரத்தில !!!!)

    ReplyDelete
  17. உங்க எழுத்து படங்களோட படிக்கும் போது உண்மையிலேயே மிக நன்றாக மனதில் அப்ப்டியே பதிந்து விடுகிறது.

    உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    இந்த முறை இந்தியா வந்தால் உங்களை நேரில் பார்க்க ஆசையாய் (ஆசை படுகிறேன்)இருக்கிறது.

    எனக்க்கு முடிந்தால் உங்க தொடர்பு கொள்ளும் விலாசம், தொலைபேசி இருந்தால் அனுப்பினால் பார்க்க ஆசைபடுகிறேன்.
    நன்றி நன்றி.

    ReplyDelete
  18. happy new year thulasigopal
    may this year be filled with many moments of perfect bliss
    may the inner light illuminate your personality
    may happiness be thy personal and most special private possession

    regards
    sivashanmugam

    ReplyDelete
  19. மனித நேயம் வளர்க்கும் துளசிகோபாலே
    வலைப்பூக்கள் கண் சிமிட்டும் துளசிதளமே!
    வைஷ்ணவம் சைவம் இணைந்து இங்கு
    உன் வரவாலே முகமதியம் கைகோர்த்தது
    பதேய்பூர் சிகிரியிலே என்று சொன்னால்
    மறுப்பார் உண்டோ அவனியிலே?
    எத்துனை நாடுகள் எத்துனை ஊர்கள்
    அத்துனையும் சுற்றி வந்தாய் உந்துனையோடு!
    கோபாலன் உன்துணை என்று சொல்லாமல்
    விளங்குமன்றோ? ..இனிய புத்தாண்டு நன்னாளிலே
    (கருவை) மாது சுமப்பது போல் இனிவரும்காலங்களில் சுமந்திடுவாய் நீவிர் பெற்ற பிள்ளையாம் துளசிதளத்தை!

    ReplyDelete
  20. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
    இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
    மகிழ்வான முத்தாண்டாய்
    மனங்களின் ஒத்தாண்டாய்
    வளங்களின் சத்தாண்டாய்
    வாய்மையில் சுத்தாண்டாய்
    மொத்தத்தில்
    வெத்தாண்டாய் இல்லாமல்
    வெற்றிக்கு வித்தாண்டாய்
    விளங்கட்டும் புத்தாண்டு.

    ReplyDelete
  21. Author:sivashanmugam.
    Title: sivakumara.

    மதுரைமா நகர் வாழும் என்
    நண்பா சிவ குமார உன்
    முத்தான புத்தாண்டு வாழ்த்து
    பார்த்தேன் சுவைத்தேன் மகிழ்தேன் !

    கற்றது பெருக்கி நற்றமிழ் வளர்க்கும்
    சைவத் திருமறை யோ(ன்) நீ !
    உற்றது வேண்டி பெற்ற(து) நன்
    சைவத் திருமறை யாம்கேட்டு நாளும்
    நலம் விளைந்திடும் அருட் பாவே!

    நவில் கூறும் நடை அழகில்
    சுவை ஊரும் தமிழ் அமுதே !
    சைவ நெறி உன் உயிர்
    (உன்)னுயிர் போயினும் நெறி வழுவா
    ஏந்தலே! அய்யனே! நீவிர் நலம்
    பல பெற்று சைவம் காத்து நிற்க
    அருள் புரிவானே அந்த ஆறுமுகனே!

    ReplyDelete
  22. Title: Kandhar anuboothi
    Translated by sivashanmugam.

    Maga mayai kalainthida valla piraan,
    Mugam aarum mozhindum ozhindilane,
    Agam maadai madantair endru aayarum,
    Chaga mayayul nindru thayanguvathe.

    O Lord Muruga, the Six Faced One
    The One who removes even the strongest of Illusions, the ego
    Yet this illusion clings on in the form of wealth and spouse
    This is the torment - i'm stuck in this illusion

    shivayadav

    ReplyDelete
  23. வாங்க வெங்கட் நாகராஜ்.

    நீங்க சொன்ன அந்தக் கிணற்றைக் கண்ணுலே காட்டலைங்களே நம்ம மொஹம்மத்:(

    ReplyDelete
  24. வாங்க வல்லி.

    'தடைபடாத பயணம் வேணுமா? பணம் கொடுத்துட்டுப் போ' என்பதே தாரகமந்திரமாம் காவல்த்துறைக்கு!

    ReplyDelete
  25. வாங்க குலோ.

    அந்த 'வந்தார்கள். வென்றார்கள்' இன்னும் படிக்கலைங்க. அடுத்தமுறையாவது வாங்கிக்கணும்.

    புத்தகக்கடைக்குப் போனால் 'பட்டிக்காட்டான் முட்டாய் கடை பார்த்ததுபோல' பிரமிச்சு நின்னுடறேன்.

    ReplyDelete
  26. வாங்க ரத்னவேல்.

    நீங்களெல்லாம் எங்ககூடவே அருவமா வந்துக்கிட்டுத்தான் இருக்கீங்க. இல்லேன்னா எனக்குப் பயமா இருக்காதா?

    தொடர்வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  27. வாங்க கயலு.

    அததுக்கு ஆள் இருக்குப்பா:-))))))))

    ReplyDelete
  28. கயலு,

    நன்றி க்ரேஸின்னு போட்டுருக்கணும்!

    ReplyDelete
  29. வாங்க மாதேவி.

    வெற்றியைக் கொண்டாடக் கட்டி விட்டதோடு சரி. சலவைக்கல்லில் பெயர் பொறிக்கத் தெரியலை அவருக்கு:-))))))

    ReplyDelete
  30. வாங்க கோமு.

    கூடவே வருவதற்கு நன்றிங்க.

    விட்டுடாதீங்க. இன்னும் போக வேண்டிய பயணங்கள் அதிகம்.

    ReplyDelete
  31. வாங்க ஜோதிஜி.

    சென்னை விஜயம் சுருக்கமாத்தான் எழுதணும். ஒரு மூணு போதாதா?

    கார் ஓட்டிவருவது நம்ம ட்ரைவர் ப்ரதீப்தான். தலைவரை வண்டியைத் தொடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்:-))))

    ReplyDelete
  32. வாங்க சிவகுமாரன்.

    உங்க ஆர்வம் 'மெய் சிலிர்க்குது' :-)))))

    ஓவியத்துலே அவுங்க முழுக்க முழுக்க முகத்திரை போட்டுருந்தாப் பரவாயில்லையா?

    ReplyDelete
  33. வாங்க விஜி.

    தற்சமயம் சண்டிகர் நகர் வாசம்.

    உங்க மின்மடல் முகவரியை இங்கே பின்னூட்டமா அனுப்புங்க. (பிரசுரிக்கப்படாது)

    தொடர்பு கொள்வேன்.

    ReplyDelete
  34. வாங்க சிவஷன்முகம்.

    உங்கள் வாழ்த்துகளுக்கும் 'பா'க்களும் நன்றி.

    என்னங்க இப்படிக் கவிதையெல்லாம் எழுதி என்னைத் திக்குமுக்காடச் செஞ்சுட்டீங்களே!!!!

    ReplyDelete
  35. என்னங்க சிவஷன்முகம்,

    கந்தர் அநுபூதி முழுவதும் மொழி பெயர்ப்பு செஞ்சுட்டீங்களா?

    பேசாம ஒரு வலைப்பக்கம் தொடங்கி அதுலே போடுங்க. பலருக்கும் பயன் படுமே!!!

    உங்கள் அன்புக்கு நன்றிகள்.

    என்றும் நன்றியுடன்,
    துளசி

    ReplyDelete
  36. அன்புள்ள ஆசிரியருக்கு
    எனக்கு வலை தளம்
    அமைக்க விருப்பமே
    எபடியாமைபது என்று
    தெரியாது

    ReplyDelete
  37. வாங்க சிவஷன்முகம்.

    எல்லாம் 1 2 3 சொல்றதுபோலத்தான்.

    தனிமடலில் விவரம் அனுப்புகிறேன்.

    அதுவரை.......இந்தச்சுட்டியைக் க்ளிக்கிப் பார்க்கவும்.

    http://thulasidhalam.blogspot.com/2004/09/1-2-3.html

    ReplyDelete
  38. வணக்கம்
    இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/04/blog-post_8729.html?showComment=1398557553068#c6628647698252830455
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  39. அட! நல்ல சேதிக்கு நன்றி ரூபன்.

    ReplyDelete
  40. அருமையான இடம்

    ReplyDelete
  41. வாங்க ஜிஎம்பி ஐயா.

    ஆமாங்க. காற்று அப்படியே பிச்சுக்கிட்டுப் போகுது.

    ReplyDelete