மறுநாள் குளிக்கும்போது அந்த மார்கோவைப் பிரிச்சதும்........ ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்முன்னு அம்மம்மா வாசனை. உடம்பு தேய்ச்சுக்கும்போது நுரைச்சுக் கையில் வழுவழுத்துத் துள்ளி கீழே விழப்பார்த்த சோப்புக்கட்டி கைக்கு அடங்கியும் அடங்காமலும் இருக்கு. அம்மம்மா வீட்டுலே இப்படி ஒரு முழு சோப்பை கையில் பிடிச்ச அனுபவமே எங்க யாருக்கும் இருக்கச் சான்ஸே இல்லை.

இந்த மர ஸ்டூல் மட்டும் இல்லேன்னா அம்மம்மாவுக்குக் கையும் ஓடாது காலும் ஓடாது. ரொம்ப உயரம் குறைவான அகலமான ஸ்டூல் இது. அம்மம்மாவுக்குன்னே , சில வேலைகள் வீட்டுலே அலாட் ஆகி இருக்கும். அதுலே ஒன்னு அரிசியில் கல், நெல் எல்லாம் பொறுக்குதல். கண்ணாடி போட்டுக்கிட்டுக் காலை ஒரு பக்கம் நீட்டிக்கிட்டு, காப்படி ஒன்னுலே அரிசியை வாரி எடுத்து அந்த ஸ்டூலின் மேலே குவிச்சு வச்சு, கொஞ்சம் கொஞ்சமா, முன்னுக்குத் தள்ளிவிட்டு சொத்தை அரிசி, கல், நெல் எல்லாம் பொறுக்கி வாசலில் வீசுவாங்க. சட்னு பார்த்தால் இந்த வேலைக்காகவே ஜென்மம் எடுத்து வந்தாங்களோன்னு தோணும். அவ்வளவு கவனம். நேரம் ஆக ஆக கண்ணாடி கொஞ்சம் கொஞ்சமா நழுவி மூக்கு நுனிக்கு வந்துரும். அப்பப் பார்த்து சித்தி எதாவது கேக்கவோ, இல்லை சாதம் வெந்துருச்சான்னு கேக்க ஜல்லிக்கரண்டியில் நாலு பருக்கைகளை ஏந்தியோ வந்து நிக்கும்போது, தலையைக் கொஞ்சம் கூட நிமிர்த்தாம கண்ணைமட்டும் உசத்தி ஒரு பார்வை பார்ப்பாங்க...... எனக்கு ஒரே வேடிக்கையா இருக்கும்.
சிலசமயம் சித்திக்கு வேலை ஒன்னும் இல்லைன்னா அவுங்க அம்மம்மாவுக்கு எதிரில் உக்காந்து மடியில் ஒரு முறத்தை வச்சுக்கிட்டு ஸ்டூலின் மறுபுறம் அரிசியைப் பொறுக்கிக்கிட்டே எதாவது பேசிக்கிட்டு இருப்பாங்க.
அம்மம்மா வீட்டுக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை அரிசிக்காரர் ஒருத்தர் நெல்லூரில் இருந்து, அரிசி கொண்டுவந்து தருவார். குடும்பம் பெரூசா இருந்த தாத்தா காலத்தில் மாசாமாசம் அரிசிக்காரர் வருவாராம். அப்போ மூட்டையா வாங்குவாங்களாம். அரிசி தீர்ந்து போச்சேன்னு சிலசமயம் உள்ளுரில் கடையில் கிடைக்கும் அரிசியை வாங்கி சோறாக்குனா தாத்தாவுக்குச் சாப்பிடவே பிடிக்காதாம். சொத்து சுகம் எல்லாத்தையும் உதறித்தள்ளிட்டு ஊரைவிட்டு வரமுடிஞ்ச தாத்தாவால் சோத்து ருசியை மட்டும் தள்ளமுடியலைன்னு அம்மம்மா சொல்வாங்க.
தாத்தாவுக்குப் பூர்வீகமே நெல்லூர்தான். அவருடைய மாமனார் ரொம்ப செல்வாக்கானவராம். நிலம் நீச்சுன்னு லட்சுமி கடாக்ஷம் நிறைஞ்ச குடும்பமாம். மூலிகை மருந்துகளில் ஆர்வம் அதிகமா இருந்ததாலே அவரே இதையெல்லாம் அங்கங்கே சாதுக்களிடம் போய்த் தெரிஞ்சுக்கிட்டு ஊருக்கே வைத்தியம் பார்ப்பாராம். ஒத்தைக்காசை நோயாளிகள்கிட்டே இருந்து வாங்க மாட்டாராம். யாராவது காசை நீட்டுனா..... 'நேராப்போய் கோயில் உண்டியலில் போட்டுப் போ' ன்னுருவாராம். பொம்பளைங்க வைத்தியம் பார்த்துக்க வந்தால் ஒரு பட்டுத்துணியைக் கை மேலே போட்டு நாடி பிடிச்சுப் பார்ப்பாராம். அப்படி ஒரு கற்புக்கரசன் அவருக்கு ரொம்ப நாளாக் குழந்தைங்களே இல்லை. நாகதோஷம் காரணமாம்.
அவருடைய முன்னோர்கள் காலத்துலே ஒரு சம்பவம் நடந்து போயிருக்கு. அந்தக் காலத்துலே வீட்டுவீட்டுக்கு பசுக்களை வச்சு போற்றிக்கிட்டு இருந்தாங்களாம். இவுங்க வீட்டுலேயும் ஆறெழு மாடுகளாம். பாலைக் கறந்ததும் பெரிய மண்பானையில் ஊத்திக் காய்ச்சுவாங்களாம். காய்ச்சுன பாலைப் பத்திரமா சாமி அறையிலே கொண்டுபோய் வைக்கறதுதான் வழக்கமாம். யாரும் தப்பித்தவறி அதுமேலே விழுந்தோ, இல்லை கைபட்டோ கால் பட்டோ பானை ஒடைஞ்சு போச்சுன்னா?
இப்படி ஒரு நாள் பாலைக் காய்ச்சி, அது சூடா இருக்கக்கொள்ளவே வீட்டில் இருந்த பாட்டியம்மா பானையைத் துணிவச்சுத் தூக்கியெடுத்து சாமு ரூமுக்குள்ளே போய் அங்கிருந்த பிறிமணையில் வச்சுட்டு வந்துருக்காங்க.
கொஞ்ச நேரத்துலே என்னவோ பொசுங்குற மணம் லேசா வந்துருக்கு. முதல்லே அவ்வளவாக் கண்டுக்கலைன்னாலும், நேரம் போகப்போக என்னவோ ஒரு மணம் ரொம்ப வருதேன்னு என்ன ஏதுன்னு தேடிப் பார்த்துருக்காங்க.
அந்த வீட்டுலே ஒரு மனைப்பாம்பு இருந்துருக்கு. யாரையும் தொந்திரவே செய்யாதாம். தானுண்டுன்னு இருந்துருக்கு. அதுதான் அன்னிக்குச் சாமி அறையில் சுருண்டு படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்துருக்கு. பாட்டியம்மாவுக்கோ பார்வை கொஞ்சம் மட்டு. பிறிமணைன்னு நினைச்சுப் பானையைப் பாம்பு மேலே வச்சுருக்காங்க:(
பாவம், பாம்பு தப்பிச்சு ஓடாம அப்படியே கருகி உசுரை விட்டுருக்கு:(
விஷயம் தெரிஞ்சதும் ஏதேதோ பரிகாரமெல்லாம் செஞ்சும், அந்தக் குடும்பத்தை நாகதோஷம் பிடிச்சுக்கிச்சாம். இனி உங்க பரம்பரையில் பெண்குழந்தைகளே பிறக்காதுன்னு நாகம் சாபம் விட்டதா ஒரு பேச்சு.
கனவுலே வந்து சொல்லி இருக்குமோ என்னவோ? எப்பவும் சாமிங்க எல்லாம் கனவுலே தானே வந்து நான் இங்கே இருக்கேன். இப்படி இருக்கேன், இங்கே கோவில் கட்டுன்னெல்லாம் கட்டளை போடுது, இல்லையா?
அது போகட்டும், குழந்தைகளே பிறக்காதுன்னாலும் ஏதோ பொருள் இருக்கு. அதைவிட்டுட்டுப் பொண்குழந்தைங்க பிறக்காதுன்னா என்ன அர்த்தம்? இந்தக் காலமா இருந்தா நல்லதாப்போச்சுன்னு மக்கள்ஸ் நிம்மதியா இருப்பாங்க. ஒருவேளை அந்தக் காலத்துலே பெண் குழந்தைகள் மஹாலக்ஷ்மிக்குச் சமானமுன்னு நினைப்பு இருந்துருக்கலாம்.
இவுங்க வீட்டுலேயும் நாலைஞ்சு தலைமுறைக்கு பெண் வாரிசுகளே இல்லை. பரிகாரம், பூஜை, தீர்த்தயாத்திரை, காசிக்குப்போய் பாவம் தொலைச்சுட்டு வர்றதுன்னு பல உபாயங்களும் செஞ்சுக்கிட்டே இருக்க இருக்க...சாபம் நீர்த்துப்போய், வைத்தியர் வீட்டுலே ஒரு பொண் குழந்தை பொறந்துருக்கு. நாக தேவதையை வேண்டிப் பூஜையெல்லாம் செஞ்சு குழந்தைக்கு நாகரத்தினம் னு பெயர் வச்சு வளர்த்துக்கிட்டு இருக்காங்க.
அந்தக் கால வழக்கப்படி அஞ்சு வயசுலே கல்யாணம். மாப்பிள்ளை பெயர் ராஜகோபால். உள்ளூர்க்காரர். ஏதோ சொந்தமும் கூட. வீட்டுக்கு ஒரே புள்ளை. அப்பா அம்மாவைச் சின்னவயசுலேயே இழந்துட்டாராம். அதனாலே மருமகனும் ஒரு மகனா இருக்கட்டுமுன்னு மாமனார் வீட்டோடவே வந்துட்டார்.
ரொம்ப வருசங்களுக்குப்பிறகு வைத்தியர் ஐயா வீட்டுலே ரெண்டாவது குழந்தை. அதுவும் பெண். ஸோ சாபம் முற்றிலும் தீர்ந்தே போயிருச்சு. ஜெயம்மாள்ன்னு பேர் வச்சுக் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. வீட்டுலே கூப்புடும் பேர் பங்காரு. அப்படின்னா தங்கம்ன்னு பொருள்.
நாகரத்தினம், ராஜகோபால் தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தப்ப நம்ம பங்காருவுக்கு வயசு மூணு. ரெண்டு குழந்தைகளும் ஒன்னா வளர்ந்து வீட்டுலே எல்லோரையும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிச்சுக்கிட்டு இருந்துச்சு.
சரி....மீதிக்கதையை நாளைக்குச் சொல்றேன்.
PIN குறிப்பு: நாள் இன்னிக்கு நல்லா இருக்கேன்னு நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரத்து ஐநூறு' வுக்கு அடிக்கல் நாட்டியாச்சு. எதுவுமே வீட்டில் இருந்தே ஆரம்பிக்குது என்றதால் அம்மம்மா முதலில் வர்றாங்க.
உங்க அன்பும் ஆதரவும் தொடரும் என்ற நம்பிக்கையுடன்.