Monday, July 26, 2010

எங்கெங்கு காணினும் யானையடா........................(தாய்லாந்து பயணம் பகுதி 6)

இந்த பாங்காக் நகருக்கு இன்னொரு பெயர் இருக்கு தெரியுமான்னு கேட்ட நான்ஸிக்கு, ஏன் தெரியாம? 'ரத்னகோஸின்' னு சொன்னதுக்கு, ரொம்பச்சரின்னு சொன்னவங்க, மூச்சுவிடாமக் கிடுகிடுன்னு என்னவோ நீள நீளமாச்சொல்லி ------- இதுதான் அந்தப்பெயர். உலகிலேயே நீளமான பெயரை உடைய நகர் இதுன்னாங்க. நெசமாவா?
நம்ம அறை ஜன்னலில் இருந்து பார்த்தால் இடப்பக்கம் எரவான் கோவில் தெரியுது. கோவிலின் ஜனநடமாட்டம் இருக்கு. பறக்கும் ரயில் பாதைகள் கிளைபிரிஞ்சு ரெண்டு வரிசைகளாய் இருப்பதில் போறதும் வாறதுமா ரயில்களின் ஓட்டம்.. மூணு இல்லை நாலு பெட்டிகள்தான். கண்ணை நேரெதிரா செலுத்தினால் எரிஞ்சு போய் கொடுமையா நிக்கும் ஒரு அடுக்கு மாடிக் கட்டிடம். அதுக்குப் பின்னால்கொஞ்ச தூரத்தில் ஒரு புத்தர் கோவிலின் கோபுரம். ZEN என்ற பெரிய ஃப்ளெக்ஸ் பேனர் ஒன்னு வச்சு, சண்டையெல்லாம் வேணாம். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைச் சமரசமாத் தீர்த்துக்கலாம் னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. என்னன்னு விசாரிக்கணும்.

இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னே (மே மாசம் 19, 2010) செஞ்சட்டைகள் என்னும் இயக்கத்துக்கும் அரசுக்கும் நடந்த போராட்டத்தில் செஞ்சட்டைகளின் செய்கை எல்லை மீறிப்போனதால் ராணுவம் வரவழைக்கப்பட்டு ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டு நடந்த கலாட்டாவில் பாங்காக் நகரத்திலேயே பெரிய ஷாப்பிங் செண்டரான செண்ட்ரல் வொர்ல்ட் என்ற 18 மாடிக் கட்டிடடம் முழுக்க தீ பரவி அதே தெருவிலே அதன் பக்கத்துலே இருந்த இன்னொரு 20- கடைகளுமா சேர்ந்து எரிஞ்சுப்போய் இடிஞ்சு விழுந்துருக்கு.
சாதாரணமா ஆரம்பிச்சச் செஞ்சட்டை ஆதரவாளர்களின் ஊர்வலம் இப்படி முடிஞ்சதில் எல்லோருக்கும் மனவருத்தமே. அரசாங்கத்துக்கு எதிராக் குரல் கொடுத்துப் போராடும் சங்கத்தால் நாட்டுக்குப் பெரும் இழப்பும் மக்களிடம் செல்வாக்குக் குறைவும் ஏற்பட்டதுக்கு அவுங்களுக்கும் கஷ்டமாத்தான் இருந்துருக்கும். இனி இதெல்லாம் வேணாம். கருத்து வேறுபாட்டைச் சமாதானமாப் பேசித்தீர்க்கலாமுன்னு அரசு முடிவு செஞ்சுருக்கு. ஒருவேளை செஞ்சட்டைகளும் இந்த முடிவை ஏத்துக்குவாங்கன்னு மக்கள் நம்பறாங்க. அரசியல் வியாதிகளால் எல்லா நாட்டுலேயும் என்னென்னவோ ................ நடந்துருது.
மீசை வச்ச பெருமாள்
கருடவாகனம்

மணி ரெண்டாகப்போகுதே. வெளியே சாப்பாடு கிடைக்குதான்னு 1 பார்க்கலாமுன்னு போனேன். நம்ம ஹொட்டேல் வாசலில் ஒரு சாமி சிலை வச்சுருக்காங்க. கருடன் தோளில் நிற்கும் பெருமாள். நமக்குப் பழக்கப்பட்ட கருடவாகனமா இல்லாம பார்க்க வித்தியாசமான சிலை,.
பெருமாள் கையில் இருக்கும் சங்கு சக்கரத்தைப் பார்த்துத்தான் புரிஞ்சுக்கிட்டேன். தினமும் இங்கே பூஜை செய்து மலர் மாலைகள் எல்லாம் அணிவிக்கிறாங்க. கருடனின் காலருகில் உள்ள மேடையில் வகைவகையா யானைகள்!!!
அநேகமா எல்லா வீயாபார நிறுவனங்கள், வீடுகள், சூப்பர் மார்கெட்டுகள் இப்படி நான் பார்த்தவரை எல்லா இடங்களிலும் வாசலில் ஒரு சாமிச்சிலை இருக்கு. அதுக்குன்னே சின்னதா மண்டபம், இல்லேன்னா ஒரு ஸ்டேண்டு மேலே நிற்கும் குட்டி மண்டபம் இப்படி விதவிதமாச் செஞ்சு வச்சுருக்காங்க.
வேடிக்கை பார்த்துக்கிட்டே எதிர்வரிசையில் இருந்த எரவான் கோவிலுக்குப் போனேன். வேகாத வெய்யிலும் நல்ல கூட்டம். அங்கங்கே குடைகளை வச்சுருக்காங்க. தாய் நடனப் பெண்கள் குழுவினர் சிலர் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டும் சாப்பிட்டுக்கிட்டும் இருந்தாங்க. சுற்றிவரப் போடப்பட்டுள்ள இருக்கைகளில் சில நிமிஷம் உக்கார்ந்துருந்துட்டுக் கிளம்பிப்போனேன். நடைபாதை ஓரத்தில் இருக்கும் கடைகளில் பூமாலைகள் கோர்க்கும் வேலை சுறுசுறுப்பா நடந்துக்கிட்டு இருக்கு. .எரவான் ஹொட்டேல், ஃபோர் சீஸன்ஸ் ஹொட்டேல் ன்னு பலதும் வரிசையா இருக்கு. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஸ்வாமி மாடங்கள். யானைச் சிற்பங்கள் விதவிதமா அலங்காரத்துக்கு வச்சுருக்காங்க.

ஹொட்டேல் யானை

அரசாங்கயானையும் பாப்பாவும்

பழங்களைத் தோல் சீவித் துண்டு போட்டு அழகாக கண்ணாடிப் பெட்டியில் இருக்கும் பனிக்கட்டிகள் மீது அடுக்கிவச்சு வித்துக்கிட்டு இருக்கார் ஒருத்தர். பார்க்கவும் சுத்தமாக இருக்கு.
நம்மூரில் இது போல் வச்சால் என்ன? சென்னையில் தர்பூசணிப்பழங்களைத் துண்டுபோட்டு நடைபாதையில் விற்பதைப் பார்த்துருக்கேன். பெட்ரோல் புகை, தெருப்புழுதி, மொய்க்கும் ஈக்கள் இத்துடன் அந்த நடைபாதையில் இன்னும் 'என்னென்னமோ அழுக்குகள்'. குறை சொல்றேன்னு என்னை ஏசக்கூடாது. சுத்தமா வச்சுக்கிட்டால் என்ன தப்பு? சாமி கண்ணைக் குத்திருமா?

மாம்பழத் திருவிழா போனபோது மாம்பழங்களைத் துண்டு போட்டு 2 விற்கலாமேன்னு கோபால் சொன்ன ஐடியாவைப் 'பட்'னு முறிச்சுபோட்டேன். மொச்சைக்கொட்டையாட்டம் ஈக்கள் சுத்துது. இதுலே நம்ம மக்கள் தின்னுட்டு வீசிப்போட்டக் குப்பைகள் வேற வேணுமா? முழுசாவே விக்கட்டும் அதுதான் நல்லதுன்னேன்.
பச்சையம்மன்னு நான் நினைச்சுக்கிட்ட இந்திரன் (பச்சைப் பளிங்கு) சிலை.

இந்திரன் தலையலங்காரம்!
முத்தலை ஐராவதம்

மறுபடிக் கோவில் வாசலுக்கு வந்து வெய்யிலுக்கு இதமா ஒரு இளநீரை வாங்கிக் குடிச்சுக்கிட்டே அக்கம்பக்கம் இருந்த மக்களிடம் பேச்சுக்கொடுத்தேன்.( பதிவில் வரும் சிலபலத் தகவல்கள் அப்படி சேகரிச்சதுதான்) கோவிலுக்கு வலது பக்கம் இருக்கும் சாலையில் நேத்து இரவு ஒரு சாமிச்சிலையைப் பார்த்ததும் அது பச்சை வண்ணத்தில் இருந்ததும் நினைவுக்கு வந்துச்சு. பச்சையம்மன் சிலையோ என்னவோ..... இன்னொரு முறை கண்டுக்கலாமுன்னு போனால்..... அது இந்திரன் சிலை(யாம்) முன்னால் அவர் வாகனமான ஐராவதம், மூன்று தலையோடு நிக்குது. ஆஹா......
அங்கிருக்கும் தானியங்கிப் படிகள் மூலம் நடை பாலத்துக்கு வந்தால் நம் தலைக்கு மேலே ரயில்கள் பறக்குது. ரெட்டை அடுக்குப் பாலங்கள். ரயிலுக்கு ஒன்னு. நமக்கு ஒன்னு. சாலைகள் ஓரம் நடக்காமல், கடக்காமல் நாம் மேம்பாலத்து வழியாவே ரொம்பதூரம் போகலாம். அங்கங்கே கீழே தெருவில் போய்ச் சேர்ந்துக்க படிகள் வச்சுருக்காங்க.

ரெண்டு மூணு ஷாப்பிங் ஆர்கேடுகளைப் பார்த்துட்டு ரெண்டு பொம்மைகளை ( இந்தவருசக் கொலுவுக்கு) வாங்கிக்கிட்டு அறைக்கு வந்து 'புன்னகைதேசம் சாந்தி'யுடன் தொலைபேசியில் கொஞ்ச நேரம் பேசினேன். அரைநாள் டூர் எப்படி இருந்துச்சுன்னதுக்குச் சின்னதா ஒரு (அரை) ப்ளேடு போட்டேன். இரவு உணவை அவுங்க கொண்டுவந்து தர்றேன்னாங்க. எதுக்கு வீண்சிரமம்? இங்கே ரெஸ்டாரண்டிலே சாப்பிட்டுக்குவோமுன்னா கேட்டால் தானே? ஒரு நேரமாவது வீட்டு சாப்பாடு சாப்பிடணுமாம். அப்படி ஒரு பிடிவாதம். ஒரு எட்டரை மணி போல கொண்டுவரேன்னு சொன்னாங்க.

எனக்கு போரடிக்குமேன்னு இவர் மடிக்கணினியை விட்டுட்டுப் போயிருந்தார். நீளப்பெயர் சரிதானான்னு தேடுனா ரொம்பச்சரி.

KRUNGTHEP MAHANAKHON AMON RATTANAKOSIN MAHINTHAR AYUTTHAYA MAHADILOKPHOP NOPPHARAT RATCHATHANIBURI ROM UDOM RATCHANI WET MAHASATHAN AMONPHI MANAWATAN SATHITSAKKATHATTIYA WIT SANUKAM PRASIT

சொல்லிப்பாருங்களேன். 169 எழுத்துகள்


க்ரங்தீப் மஹநகோன் அமோன் ரத்னகோஸின் மஹிந்தர் அயோத்தியா மஹதிலோக்போப் நோப்பாரத் ரக்ஷதனிபுரிரோம் உடோம் தசனிவெட் மஹாசதன் அமோன்பி மனவதன் சதிட்சக்கதாட்டியவிட் சனுகம் பராசி(த்)ட்

ஹைய்யோ..... விடிஞ்சது போங்க!!!!

நியூஸியில் இருக்கும் ஒரு நகரம் இரண்டாம் இடத்தில் இருக்கு,. 85 எழுத்துகள் தான்.

TAUMATA WHAKATANGI HANGAKOAU AUOTAMATE ATURIPU KAKAPIKI MAUNGA HORONUKUPOKAIWHEN UAKITAN ATAH

மூணாவது இடம் வேல்ஸ் WALES நகரம் ஒன்னு 58 எழுத்துகள்
LLANFAIRPWLLGWYNGYLLGOGERY CHWYRNDROB WLLLLANTY SILIOGOGOGOCH

வரிசையில் ரெண்டாவதா இருக்கும் ஒரு பெருமையோடு , தமிழ்மணம் பார்க்க ஆரம்பிச்சக் கொஞ்ச நேரத்துலேயே இவர் வேலையில் இருந்து திரும்பி வந்துட்டார். எப்படியும் வர ஆறரை ஆகுமுன்னு சொன்னீங்களேன்னா..... 'நீ போரடிச்சுக்கிடப்பேன்னு ஓடோடி வந்தேன் துள்சி' ன்னார்.


தொடரும்.........................:-)

24 comments:

  1. ரொம்பவே அருமையான பகிர்வு.. இவ்வளவு சுத்தமான நாட்டைப்பாக்கவே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..

    ReplyDelete
  2. ஓடோடி வந்தேன் துளசி!!!ஆஹா.

    ReplyDelete
  3. யானைகள் அட்டகாசமா இருக்கே.
    அதென்ன பச்சை இந்திரன்:)

    முன் பதிவில் லிங்கேஸ்வரர் பார்த்தேன். எமனும்வாகனமும் பக்கத்திலியே இருக்கா?????

    ReplyDelete
  4. ஐசில் உள்ள பழங்களைப் பார்க்கையில் மிகவும் வியப்பாக உள்ளது.எங்கள் பகுதியிலும் தர்ப்பூசணியை வெட்டி குழந்தைகளுக்கு வைக்கும் குடைபோன்ற நைலான் கொசுவலையை வைத்து விற்பார்கள். ஆனால் இவ்வளவு சுத்தமாக எதிர்பார்க்க முடியாது.
    பெரிய பதிவர் கேமராவோடு வருகிறார் என்று தெரிந்தோ என்னவோ நீங்கள் படம் எடுக்கும் இடங்கள் எல்லாம் மிகவும் தூய்மையாகவே உள்ளது. இதையெல்லாம் பொறாமையோடு பார்ப்பதைத்தவிர வேறு வழியில்லை.
    இங்கே நடைபாலம் அமைத்தாலும் அதிலும் நடக்கவிடாமல் கொண்டைஊசி முதல் கர்சீப் வரை கடைபரப்பி விற்க ஆரம்பித்துவிடுவார்கள்.

    ReplyDelete
  5. Hello Akka....This is Part 6 and not 5 :-) Good Photos

    ReplyDelete
  6. அழகான யானை..

    ஹப்பாடான்னு தமிழ்மணம் பாக்கும்போது வந்துட்டு வசனம் பாருங்க :)

    ReplyDelete
  7. //KRUNGTHEP MAHANAKHON AMON RATTANAKOSIN MAHINTHAR AYUTTHAYA MAHADILOKPHOP NOPPHARAT RATCHATHANIBURI ROM UDOM RATCHANI WET MAHASATHAN AMONPHI MANAWATAN SATHITSAKKATHATTIYA WIT SANUKAM PRASIT
    // ஐயோ அக்கா முடியல் தலை சுற்றுகிறது...வழக்கம்போல் படங்களும் கட்டுரையும் கலக்கல்...

    ReplyDelete
  8. பச்சை இந்திரன் சிலை தலை அலங்காரத்துடன் அழகாக காட்சியளிக்கிறார்,மீசை வச்ச பெருமாள் சிலையும் நன்றாக உள்ளது டீச்சர்.

    ReplyDelete
  9. படங்கள் அழகா இருக்கு.
    நல்ல பதிவு.

    // அடிச்சுக்கிட்டு நடந்த கலாட்டாவில் பாங்காக் நகரத்திலேயே பெரிய ஷாப்பிங் செண்டரான செண்ட்ரல் வொர்ல்ட் என்ற 18 மாடிக் கட்டிடடம் முழுக்க தீ பரவி அதே தெருவிலே அதன் பக்கத்துலே இருந்த இன்னொரு 20- கடைகளுமா சேர்ந்து எரிஞ்சுப்போய் இடிஞ்சு விழுந்துருக்கு.//

    இதுக்கு எங்கள் நாட்டு மக்கள் பரவாயில்லை போல இருக்கே. பஸ்ஸைக் எரிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறார்களே.

    ReplyDelete
  10. \\அரைநாள் டூர் எப்படி இருந்துச்சுன்னதுக்குச் சின்னதா ஒரு (அரை) ப்ளேடு போட்டேன். இரவு உணவை அவுங்க கொண்டுவந்து தர்றேன்னாங்க///

    ஆகா..உணவு வாங்குறதுக்கு இப்படி ஒரு வழி இருக்கா..சூப்பர் டீச்சர் ;))

    ReplyDelete
  11. வாங்க அமைதிச்சாரல்.

    நீங்க சொல்வது மிகச்சரி.

    ஒருவேளை பாங்காக் நகரின் வேறு மூலைகளில் இந்த்ச் சுத்தம் இல்லாமலுமமிருக்கலாம். ஆனால் நகரின் முக்கிய பகுதிகள் எல்லாம் பளிச்சுன்னே இருக்கு.

    அதேசமயம், நம்ம சி.செ.வின் அதிமுக்கிய சாலையான அண்ணாசாலை எனப்படும் மவுண்ட் ரோடு நடைபாதைகள் இருக்கும் அழகு நினைவுக்கு வந்துச்சு:(

    ReplyDelete
  12. வாங்க வல்லி.

    நானும் அவரை 'ஏமாற்றாமல்' உடனே ஊர் சுத்தக் கிளம்பிட்டேன்:-)))))

    எல்லாம் ஜாடிக்கேத்த மூடி:-))))))))

    ReplyDelete
  13. வல்லி,

    இந்திரனுடைய 'மஞ்சள்' நடவடிக்கை அவரை 'பச்சைபச்சையாய்' ஆக்கிருச்சு!

    ReplyDelete
  14. வாங்க பிரகாசம்.

    இந்தக் கண்ணாடிப்பெட்டி, ஐஸ்கட்டிகள் எல்லாம் வச்சு நம்ம ஊர்களிலும் விற்பனை செய்தால் நமக்கும் நல்லது. வியாபாரிக்கும் நல்ல வரும்படி கிடைக்கும். வியாபாரமும் பெருகுமே!

    சுத்தமா வச்சுக்கணும் என்பது நம்ம மக்கள் மனசுலே பதியலை. வீட்டைப் பெருக்கிக் குப்பையை வாசலில் கொட்டுனா ஆச்சு என்ற கருத்துதான் விசனம்:(

    ReplyDelete
  15. வாங்க ஹரிஹரன்.

    நூறு ஆயுசு உங்களுக்கு. இப்பத்தான் உங்களுக்கு பதில் எழுதிக்கிட்டு இருக்கேன். அதே சமயம் உங்க அடுத்த பதிவுக்கான பின்னூட்டம் வந்துருக்கு!!!!

    ஊர்சுற்றும் உற்சாகத்தில் ஆறை அஞ்சாக்கிட்டேன்.

    கவனிப்புக்கு நன்றி.

    ReplyDelete
  16. வாங்க கயலு.

    எப்படியும் கோபால் கணினியில் தமிழ் எழுத்துரு இல்லை. பின்னூட்டம் கொடுக்க முடியாது. சும்மா ஒரு பார்வை பார்த்துக்குவேன் என்ன நடக்குதுன்னு. பலசமயம் (முக்கியமா) என்னென்னவோ நடந்தும் பார்க்க விட்டுப் போயிருக்கும்:(

    யானையே அழகுதானேப்பா!!!!

    ReplyDelete
  17. வாங்க மேனகா.

    முடியலைன்னா..... நம்ம நியூசிப்பக்கம் வந்துருங்க. இது வெறும் 85 எழுத்துதான்:-))))


    கூட வருவதற்கு நன்றிப்பா.

    ReplyDelete
  18. வாங்க சுமதி.

    அதீத அலங்காரங்கள் ஒன்னும் இல்லாமல் நாம் தினம் பார்க்கும் நம் மனித இனத்து மக்களில் ஒருவரா பெருமாளைப் பார்க்கும்போது நல்லாத்தான் இருக்கு.

    இந்திரன் தலை அலங்காரம் சூப்பர் இல்லே!!!!

    ReplyDelete
  19. வாங்க வானதி.

    முதல்வருகைக்கு நன்றி. நலமா?


    பஸ்ஸை எரிக்கும்போது அதுலே சனங்கள் இல்லாம இருக்கணுமே என்பதுதான் என் கவலை.

    ReplyDelete
  20. வாங்க கோபி.

    பதிவர்கள் இருக்கும் ஊருக்கு டூர் போகணும் என்பது இங்கே முக்கிய குறிப்பாக்கும்.ஆமா:-)))))

    ReplyDelete
  21. இந்திரன் சக்கரத்தோட பச்சைமாமலை போல் மேனி பாட்டை ஞாபகப்படுத்தறார்.

    ReplyDelete
  22. வாங்க சின்ன அம்மிணி.

    நானும் இருட்டுலே பார்த்துட்டு 'பச்சையம்மா'ன்னு நினைச்சுக்கிட்டேன்.

    ReplyDelete
  23. பச்சை இந்திரன் வித்தியாசமாக கவர்கிறார்.

    ReplyDelete
  24. வாங்க மாதேவி.

    நன்றிப்பா.

    இந்திரனை இங்கே போடாமல் விட்டுருந்தால் இந்த மாச பிட்டுக்கு அனுப்பி இருக்கலாம்!

    ReplyDelete