மூட்டையைப் பிரிச்சால் பாத்திரங்களில் சொட்டைகள் ஏராளமா வந்துருக்கும். எல்லா ஊர்களிலும் பாத்திரத்தின் நசுங்கலை எடுக்கவும், ஈயம் பூசவும் ஆட்கள் தெருவிலே கூவிக்கிட்டு வருவாங்க. அவுங்களை வேலைக்குக் கூப்பிட்டு நம்ம வீட்டு வாசலிலே உக்காரவச்சு தட்டிக்கொட்டி ரிப்பேர் செஞ்சு வாங்கிக்குவோம். சின்னதா அடுப்புக்கரி பத்தவச்ச குழிகளில் தோல்துருத்தி வச்சு புஸ் புஸ்ன்னு காத்தடிச்சு ஈயம் உருக்குவதையெல்லாம் கண்கொட்டாம இருந்து வேடிக்கை பார்ப்பேன். அப்படியே நம்மூட்டுப் பாத்திரங்களுக்கும் காவல்!
சில வருசங்களில் அம்மாவுக்கே போரடிச்சுப்போச்சு போல. இதுலே பலசமயம் அக்காக்களின் ஃபேவரிட் பாத்திரங்களும் அடிபட்டு நசுங்கிப் போயிருதுன்னு அவுங்க கூச்சல் ஒரு பக்கம். அம்மா, தச்சுவேலை செய்யறவரிடம், ஒரு பெரிய மரப்பெட்டி செய்யச் சொன்னாங்க. கட்டில் மாதிரி அதுமேலே ஒரு ஆள் (அது நான் தான்) கால்நீட்டிப் படுக்கலாம்.
யானைப்பெட்டின்னு அதுக்கு நான் பேர் வச்சேன்:-) அதுலேதான் முக்கிய பாத்திரங்கள் இடம்பிடிக்கும். சொட்டையாகும் பாத்திரங்கள் எண்ணிக்கை கொஞ்சம் குறைஞ்சது.
என்னுடைய குடித்தனம் ஆரம்பமான காலக்கட்டங்களில் எண்ணி ஒரு பத்துப் பாத்திரங்கள் இருந்தாலே அதிகம். ஆனாலும் குடும்பப் பெட்டிக் கலாச்சாரத்தை அப்படியே ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தேன். நோ யானைப்பெட்டி:( இது கோகோகோலா கான்ஸண்ட்ரேட் வரும் அட்டைப்பெட்டியா இருந்து, அப்புறம் ஒரு டீ செஸ்ட்க்கு மாத்திக்கிட்டேன். டீசெஸ்ட் செஞ்ச அதிர்ஷ்டம் பாருங்க.... அது பூனா வந்தபிறகு உள்ளூர்லேயே ஆறு மாசத்துக்கு ஒரு வீடுன்னு மாற்றல்தான் முதல் மூணு வருசங்கள். அந்த செஸ்ட்டும்,டைனிங் டேபிள், வரவேற்பறை மேசை, அடுப்பு மேடைன்னு எடுக்காத ரூபம் இல்லை நம்மூட்டுலே!
அயல்நாட்டுக்குக் கிளம்பி வந்தபோது.... ட்ரங்கு பொட்டிகள் போய் ஸூட்கேஸ் வந்துச்சு. அதே பத்துப் பாத்திரங்களை ஒரு பெரிய லெதர் கேரி பேக்லே போட்டுக்கிட்டுப் போனோம். அந்த நாட்டுலே இருந்து வேறு நாடு போகும் போதுதான் முதல்முறையா பேக்கிங் செய்யும் ஆட்கள் வந்தாங்க. அவுங்க வந்து எடுத்துவைக்குமுன்னேயே நம்மாளு பேக்டரியில் இருந்து பொட்டிகளைக் கொண்டுவந்து 99% சாமான்களை 'அடைச்சு' வச்சுட்டார். திகைச்சு நின்னவங்க, வந்துட்டோமேன்னு அவுங்க பங்குக்கு டிவியை மட்டும் பொதிஞ்சு எல்லாத்தையும் வாரிக்கிட்டுப்போய் அனுப்பி வச்சாங்க.
நியூஸி வந்து சேர்ந்த சாமான்களில் பலதெல்லாம் தூளாகிக் கிடந்தது, நம்ம கைங்கர்யத்தாலேன்னு புரிஞ்சதும் ஆள் கப்சுப்:-) இதுக்கு அப்புறம் இடமாற்றம் வருமுன்னு நான் கனவுகூடக் காணலை. (நான் மட்டும் வெறுங்கையுடன் தனியா ஒவ்வொரு இரவும் இந்தியா வந்து போய்க்கிட்டு இருந்தேன். இது கணக்கில் வராத பயணம்)
போனவருசம் வேலை காரணமா இந்தியா வரவேண்டியதாப் போயிருச்சு. இந்த முறை சாமான்கள் மேலே கையை வைக்கக்கூடாதுன்னு நம்மாளுக்குக் கண்டிஷன் போட்டேன். தொழில்முறையான
பேக்கர்ஸ் வந்து மூணு நாளில் சகலத்தையும் ஒழுங்கா பேக் பண்ணி முடிச்சாங்க. இந்தியா கொண்டுவரவேண்டியவை, அங்கேயே ஸ்டோரேஜ்லே போட்டு வச்சுட்டு வரவேண்டியவைன்னு ரெண்டு பிரிவு. அமர்க்களமா அருமையா வேலையைச் செஞ்சாங்க. நாம் எதையும் தொட்டுப் பார்க்கலை. எது எதுன்னு சொன்னதோடு சரி. நானும் இதையெல்லாம் சுத்திச்சுத்திப் படம் எடுத்துக்கிட்டுக் கிடந்தேன்.
வந்திறங்கி வீடு தேடி எல்லாம் ஒருமாதிரி அமைஞ்சதுக்குப் பிறகு சாமான்கள் வந்து சேரத் தாமதமா ஆகிருச்சு. தாற்காலிக ஏற்பாடா, ஒரு கட்டில், மைக்ரோவேவ், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷீன், கம்ப்யூட்டர் டேபிள், சில நாற்காலிகள் எல்லாம் வாடகைக்கு எடுத்துப்போட்டு புழங்கிக்கிட்டோம். இதெல்லாம் சென்னையிலே வாடகைக்குக் கிடைக்கும் என்பதே எனக்கு முதலில் தெரியாது. நம்ம கோபால்தான் 'வலைவீசி'த் தேடிக் கண்டுபிடிச்சார். 'ட்ரேடு ஏஜன்ஸீஸ்' ன்னு ஒன்னு, வள்ளுவர் கோட்டம் பக்கத்தில் இருக்கு. போய்ப் பார்த்து நம்ம தேவைகளைச் சொல்லி, சாமான்களைப் பார்வையிட்டு நமக்கு வேணுங்கறதைத் தெரிவு செஞ்சோம். இதன் உரிமையாளர் சம்பத் நல்ல நட்பானவர். 28 வருசமா இந்த பிஸினெஸ் செய்யறாராம். மனைவி மகன்னு குடும்பம் பூராவும் யாவாரத்தைப் பார்த்துக்கறாங்க. வேலை விஷயமா தாற்காலிக இடமாற்றமுன்னு வர்றவங்களும், அமெரிக்காவில் இருந்து முக்கியமா சங்கீத சீசனுக்கு வந்து ஒரு சில மாசங்கள் வீடோ, ஃப்ளாட்டோ வாடகைக்கு எடுத்துத் தங்குற மக்கள்தான் இவருடைய வாடிக்கையாளர்களாம். இப்போ நாமும் அந்த லிஸ்ட்டுலே இருக்கோம்.
சென்னைத் துறைமுகத்துக்கு நம்ம கண்டெயினர் வந்து சேர்ந்ததும் இங்கே சென்னையில் க்ளியரிங் ஏஜண்டு நம்மை துறைமுகத்துக்கு வரச்சொல்லி உள்ளே போக ஒரு நாள் அனுமதி பாஸ் வாங்கிக்கொடுத்தார். இது(வும்) ஒரு அனுபவமுன்னு கிளம்பிப்போனோம். கண்டிஷன் ஒன்னுதான் படா பேஜாராப்போச்சு. கேமெரா கொண்டுவந்துறாதீங்கன்னார். (அவருக்கு எப்படித்தெரியும் நம் புகைப்பட ஆர்வம்!!!!!)
நம்ம கண்முன்னால்தான் கண்டெயினர் பூட்டைத் திறந்தாங்க. அதிகாரி ஒருத்தர் வந்து பார்த்தார். லக்னோக்காரர். ஹிந்திமே பாத் ஹுவா. ஒரு கட்டணம் சொல்லி அதை ட்யூட்டியாக் கட்டிட்டு சாமான்களை எடுத்துக்கச் சொல்லிட்டார். நாலைஞ்சு கையெழுத்தும், சின்னக் கட்டணமுமா எல்லாம் அஃபீஸியலா முடிஞ்சது. கண்டெயினர் துறைமுகத்தைவிட்டுக் கிளம்புச்சு. ஆனால் நம்ம வீடு இருந்த பகுதியில் பகலில் கண்டெயினர் வர அனுமதி இல்லையாம். அதனால் ஏஜெண்டுகளின் கிடங்குக்கு(வண்டலூர்) கொண்டுபோய் அங்கிருந்து ரெண்டு ட்ரக்குகளில் நிரப்பி மறுநாள் காலை வீட்டுக்குக் கொண்டுவந்து எல்லாப் பொதிகளையும் பிரிச்சு, சாமான்களை நாம் சொல்லும் இடங்களில் அடுக்கி, அட்டைப்பொட்டிகள், காகிதம், பப்புள்ராப் எல்லாம் எடுத்துச் சுத்தம் செஞ்சுட்டுப்போச்சு ஒரு குழு. ஒரே ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவின் மூடி மட்டும் விரிசல் விட்டுருந்துச்சு, ஒரு கண்டெயினர் சாமான்களில். இதுலே சாமான்களைப் பிரிக்கும் சிலர், நாங்க இன்னும் இதைவிட அருமையா இங்கே பொதிஞ்சு அடுக்குவோம். எல்லா நாடுகளுக்கும் சாமான்களை அனுப்பி இருக்கோம் அது இதுன்னு சொல்லிக்கிட்டே வேலையைப் பார்த்தாங்க.
தினமும் அதிகாலையில் கடற்கரைக்குப்போய் நடக்கணும். நியூஸி திரும்பும்போது இப்போ இருக்கும் உடம்பு பாதியாக் கரைஞ்சு(!!) போகணுமுன்னு என்னென்னவோ மனக்கோட்டை கட்டிக்கிட்டு வந்துருந்தேன். ஆனா......ப்ச் ............விடுங்க.
பதிவின் நீளம் கருதி மீதி நாளை.