Wednesday, February 24, 2010

லக்ஷ்மியின் கொலுசு.

என்னவோ தோணுச்சு, சட்னு கிளம்பிப் போனோம். போகும்வழியில் கடல் மல்லையில் ஒரு சுத்து. அங்கிருந்து கல்பாக்கம், மரக்காணம் வழி பாண்டிச்சேரி.

திருவான்மியூரில் இருந்து வழிநெடுக போஸ்டரும் பேனரும் கொடிகளுமா அப்படி ஒரு வரவேற்பு. எனக்கில்லைப்பா...... துணை முதல்வர், நல்ல தண்ணி மிஷனுக்கு அடிக்கல் நாட்டப் போறாராம். மகாபலிபுரத்துக்குக் கொஞ்சம் முன்னால்வரை இந்தப் பரபரப்பு இருந்துச்சு. என்னென்ன வாசகங்கள். கற்பனை ஊற்றுக்குப் பஞ்சமே இல்லை. நமக்கு இனிமே மெயில் ஐடி கூட இவர்தானாம்! 'எங்கள் முகவரியே, வருக வருக'ன்னு ஒன்னு பார்த்தேன். இவரும் பலவித சிரிப்புகளில் அயராமப் போஸ் கொடுத்துருந்துருக்கார்.


ஊருக்குள்ளே வண்டி போகணுமுன்னா ஒரு வாகனவரி அடைக்கணும் என்பது சரி. ஆனால்...... அதை பாண்டிச்சேரியில் அடைச்சோமுன்னா 350. அதையே திண்டிவனம் வழிவந்து அடைச்சால் 230. சரி தொலையுதுன்னு பார்த்தாலும் ஊருக்குள் நுழையும் போதே கட்டணம் வசூலிக்க ஒரு ஏற்பாடு செய்யக்கூடாதா? தலையைச் சுத்தித்தான் மூக்கைத் தொடணும். அங்கே 'பக்கா'வாக் கட்டடம், ஆஃபீஸ் இருக்கோன்னு நினைச்சால் வெறும் ஓலைக்குடிசை. அதை ரெண்டு நுழைவுகளில் வச்சால் என்ன? என்னவோ போங்க.
பகல் சாப்பாடு ஹொட்டேல் ப்ரொம்னேட். கடற்கரை காந்தி சிலைக்கு எதிர்வரிசையில் இருக்கு இது. ஓய்வறை வசதிகள் நல்லா இருக்கு.

அண்ணா சாலை, அண்ணா திடலில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி. முதல்நாள் முதல் ஆளா நாம். ஏழெட்டுக்கடைகள் மட்டுமே விற்கும் பொருட்களை ஒழுங்கு படுத்தி இருக்கு. மீதி? அரையும் குறையுமா திறக்கப்படாத பெட்டிகளில்........
ஃப்ரெஞ்சு ஸ்டைலில் பழையகால வீடுகள் அமைஞ்ச சிலதெருக்களில் சுற்றினோம். எல்லாத் தெருக்களுக்கும் பெயர்ப்பலகை பளிச்சுன்னு சுவரில் இருக்கு. யாரும் இதன்மீது நோட்டீஸ், போஸ்ட்டர் இதெல்லாம் (இன்னும்) ஒட்டலை. சுவர்களிலும் கலர்கலரான கட்சி அடையாளங்களும், இல்லாத பட்டங்களையெல்லாம் போட்டு இந்திரனே சந்திரனே ன்னு கூவலை. ப்ளாட்ஃபார டாய்லெட்ஸ் மிஸ்ஸிங். எல்லாரும் வீட்டுக்குப்போய் போறாங்க!

இதேபோல வீடுகள் அமைஞ்ச சில தெருக்கள் நம்ம நியூஸியில் எங்கூருக்குப் பக்கத்திலேயே அக்கரோவா என்னும் டவுனில் இருக்கு. ஃப்ரெஞ்சுக்காரர்கள் காலனி அமைக்கப் பார்த்த இடம் அது!

அரவிந்தரின் ஆஸ்ரமம் போகலையான்னு தொளைச்சு எடுத்துட்டார் ட்ரைவர். எனக்கோ மணக்குள விநாயகனைப் பார்க்கணும். ரெண்டுமே அடுத்தடுத்த தெருவிலாம். வாகனப் போக்குவரத்தை அங்கே ரெண்டு இடத்துக்கு முன்னாலும் நிறுத்திவச்சுருக்காங்க. ரெண்டு இடத்திலும் மணல்மூட்டைச்சுவரின் பின்னே மறைஞ்சு இருக்கும் காவல்துறையினர்!

ரெண்டு இடத்திலுமே 'உள்ளே' படம் எடுக்க அனுமதி இல்லை. வாசலில் எடுத்துக்கலாம். வெடிகுண்டு இல்லைன்னு ரெண்டு இடத்திலும் கைப்பையைத் திறந்து காமிச்சுட்டுப்போகணும் ஆஸ்ரமத்தில் உள்ளே நுழைஞ்சதும் கள்ளிச்செடிவகைகள் உள்ள தோட்டம். பிரமாதம். தொட்டிகளில் செவ்வந்திப் பூக்களுடன் இருக்கும் அலங்காரம் ஏகப்பட்டது. ஒரு பெரிய மரத்தடியில் செவ்வகமா ஒரு பளிங்கு மேடை. மலர் அலங்காரத்துடன் பளிச்ன்னு இருக்கு. சமாதியாம். அதைச் சுற்றி உள்நாட்டோரும் வெளிநாட்டோருமா அமைதியாக் கண்களை மூடி உக்காந்துருக்காங்க.

அடுத்த ஒரு அறையில் ஆஸ்ரமத்தின் வெளியீடுகள் காட்சிக்கும் விற்பனைக்கும். மதர் & அர்விந்தரின் படங்கள் அங்கங்கே. அம்மா சொன்ன பூனைக்கதைகள்னு ஒன்னு இருந்துச்சு. 15 ரூபாய்தான். வாங்கினேன். இன்னும் வாசிக்கலை.

இந்தவகை ஆஸ்ரமங்கள் எல்லாம் எனக்குப் புதுசு. அங்கே இருந்த உதவியாளர் ஒருவரிடம், மதர் எப்போ இறந்தாங்க?'ன்னு கேட்டேன். அப்படியே 'திடுக்'ஆகிட்டாங்க. 'மதர் இறக்கலை'யாம். பின்னே? உடம்பை விட்டுட்டாங்களாம். ஓ அப்படியா? எப்போ? 1973 இல்.

அங்கே ஒரு சமாதிதானே இருக்கு. ரெண்டாவது எங்கேன்னு இன்னொரு மண்டைக் குடைச்சல். விசாரிச்சால் ஆச்சு........

இருவருக்கும் ஒரே சமாதியாம். அர்விந்தர் 1950 லே 'உடம்பை விட்டார்' அப்போ எழுப்புன சமாதி இது. அதுக்கப்புறம் 23 வருசம் கழிச்சு 'அன்னை' உடம்பை விட்டுட்டாங்க. அதே சமாதியில் இவருக்கும் இடம் ஆச்சாம். என்னவோ புரிஞ்சாப்புலே தலையை ஆட்டிட்டு வந்தேன். இங்கே ஆஸ்ரமத்தில் மூன்றுவயதுக்குட்பட்டப் பிள்ளைகளுக்கு அனுமதி இல்லை.

அடுத்த தெருவே மணக்குள விநாயகர் தெருதான். கோவில் நுழைவாசலில் பெயர் போட்ட அலங்கார வளைவு. பாரதி அடிக்கடி வந்து வணங்கிய விநாயகன். உள்ளே சுவர் முழுக்க விதவிதமான பிள்ளையார்கள். இந்தோனேஷியா, போர்னியா ன்னு உலகம் முழுசும் உள்ளவரை இங்கே ஓவியங்களாவும், படங்களாவும் கொண்டுவந்துட்டாங்க.
மூலவர் முன்பு ரெண்டு வரிசை. இடப்பக்கம் இலவசம். வலப்பக்கம் 10 ரூபாய். இலவசத்தில் போய் சேவிச்சோம். உள்ளே போகும்போது இல்லாத லக்ஷ்மி வெளிவரும்போது வந்துருந்தாள். நெஞ்சிலே பெயர் போட்ட பதக்கம். காலிலே அழகான கொலுசு. முன்னிரெண்டுக்கு மட்டும். காசு வாங்கி ஆசி வழங்கறாள். இப்போ கூட்டம் முழுசும் லக்ஷ்மியைச் சுத்தியே!

ஊர்முழுக்க வெளிநாட்டவரின் நடமாட்டம் அதிகமா இருக்கு. ரெண்டு சக்கரவாகனங்களில் ஹாய்யா எல்லா இடங்களிலும் புகுந்து புறப்படறாங்க. உடுப்புகளுக்கு மேலே நம் 'பாரம்பரியத்தை' அனுசரிச்சு ஒரு துப்பட்டா!

சைக்கிள் ரிக்ஷாக்கள் இன்னும் இருக்கு!

பஞ்சவடி கோவிலுக்குப் போனோம்.மறுபடியும் திண்டிவனம் போகும் சாலையில்,வாகனவரி கட்டப்போன இடத்தைத் தாண்டிக் கொஞ்ச தூரத்தில் இருக்கு. சமீபகாலக்கோவில். க்ரீம்கலர் கோபுரங்கள்.
நம்ம நங்கநல்லூர் ஆஞ்சநேயர்போல நிக்கிறார். அவரைவிட இவர் உயரம் குறைவு. அவர் ரொம்பவே ஆஜானுபாகுவா உசரமா இருக்காரேன்னு தோணல். கடைசியில் பார்த்தால் ரெண்டே அடிதான் வித்தியாசம்! அவர் 32 அடி. இவர் 30 அடி! இவருக்கு ஆனால் ஐந்து முகங்கள் இருக்கு. கருவறையில் வெளிச்சம் போதலை. என் அரைப்பார்வைக்கு எல்லாம் மசமச. விசாரிச்சேன். ஹயக்ரீவர், நரசிம்மன், வராஹர், கருடர்ன்னு நேயடுவுக்கு அஞ்சு முகங்கள். பத்துக் கைகள். கருடர் தலைக்குப் பின்புறம். பிரகாரத்தின் பின்னாலே போய் பார்க்கலாம். ஜன்னல் இருக்குன்னார். அதுக்குள்ளே மூலவருக்குத் திரை போட்டாச்சு. பின்புறம் போனால் சதுரவடிவ திறப்பு உயரத்துலே இருக்கு. அங்கேயும் நீலத்திரை. நல்லவேளை சரியான நேரத்துலே வந்து மூலவரைப் பார்க்க முடிஞ்சது.

கார் பார்க்கிங் வசதி இருக்கு. நாங்கள் கீழே இறங்கிக் கோவில் வாசலுக்குப் போனப்ப, செருப்பை வண்டியிலே விட்டுட்டுப்போங்க'ன்னு கோவில் ஊழியர் சொன்னார். ரொம்பச்சரி. ஆனால் கார் இல்லாம நடந்து வர்றவங்க.......................???????
திரும்பிப்போக திண்டிவனம் வழியா இல்லே ஈ ஸி ஆர் வழியான்னு யோசிச்சால்..... தாம்பரத்துலே நெரிசலில் மாட்டிக்குவோமேன்னு வந்தவழியாவே திரும்பினோம். போகும்போது விட்டுப்போன அய்யனார், சயனகாளி, பெருமாளின் நீராழிமண்டபம், மரக்காணம் உப்பளங்கள் எல்லாம் க்ளிக்கிட்டு வீடுவர எட்டேகால் ஆச்சு. போனஸா ஒரு இடத்தில் மயிலார் கண்ணுக்குக் காட்சி அளித்தார்.






படங்கள் இங்கே.

44 comments:

  1. லக்‌ஷ்மி கொலுசு அருமையா இருக்கு. ஜல் ஜல்னு சத்தம் வந்திருக்குமே!!1

    ReplyDelete
  2. யானை‍ கொலுசு எப்ப‌டிங்க‌! எப்ப‌டிங்க‌!
    வித்தியாச‌மான‌ சிந்த‌னையில் வ‌ந்து விழுந்த‌ ப‌ட‌ம். அருமை.

    ReplyDelete
  3. தலைப்பு புரிந்த இடத்தில் வந்தது வியப்பு.

    எப்படிங்க நாட்டியம் ஆட வச்சு எடுத்தீங்க? பிரமாதம்ங்க!

    ReplyDelete
  4. "என்னது? மஹாத்மா காந்தி எறந்துட்டாங்களா?" ரேங்சுக்கு இருக்கு. :)

    //அங்கே இருந்த உதவியாளர் ஒருவரிடம், மதர் எப்போ இறந்தாங்க?'ன்னு கேட்டேன். அப்படியே திடுக்'ஆகிட்டாங்க.//

    - சிமுலேஷன்

    ReplyDelete
  5. எம்மாம் பெரிய காலுக்கு இத்தணூண்டு கொலுசு

    ReplyDelete
  6. எப்படிங்க நாட்டியம் ஆட வச்சு எடுத்தீங்க? பிரமாதம்ங்க!

    //

    அதானே..

    யாரா இருந்தாலும் துளசி பேச்சு கேட்டுத்தான் ஆகனும்.. ;)

    ReplyDelete
  7. வாங்க புதுகைத் தென்றல்.

    ஜல்ஜல் வரலைன்னு நினைக்கிறேன்.

    அப்படியே வந்தாலும் மக்கள்ஸ் போடும் கூச்சலுக்கு முன்னால்.... இது கேட்டுருக்குமா? :-)))

    ReplyDelete
  8. வாங்க குமார்.

    முந்தி நெல்லை கோவிலில் பார்த்தப்பவே கொலுசு போட்டா எவ்வளோ நல்லா இருக்குமுன்னு நினைச்சேன்.

    இப்பப் பாருங்க....போட்டுகிட்டே வந்துட்டாள்:-)

    ReplyDelete
  9. வாங்க ராமலக்ஷ்மி.

    நான் எங்கேப்பா ஆடவச்சேன்? அதான் ஒரே ஷோயிங் ஆஃப் ஆக இருந்தாளே!!!

    ReplyDelete
  10. வாங்க சிமுலேஷன்.

    இதானே....... எப்போன்னு கேட்டதுக்கு அவுங்க 'திடுக்' ஆகலை! இறந்தாங்க என்ற சொல்தான் காரணம்!

    அதெப்படி 'சாமி'யை செத்துப்போச்சுன்னு சொல்வே?

    நம்ம பதிவர் ஒருத்தர் ஒரு கதை எழுதி இருந்தார். சாமியார் ஒருத்தர் 'போனதும்' மடத்தில் இருந்தவங்க இன்னும் பெரிய மனிதர்கள் எல்லாம் விவிதவிதமான அலங்காரச் சொற்களால் நடந்ததைச் சொல்வாங்க. கடைசியில் சின்னப் பசங்க பார்த்துட்டு..... சாமி செத்துப்போச்சுடா'ன்னு சொல்வதுபோல் முடியும் கதை.

    ReplyDelete
  11. வாங்க சின்ன அம்மிணி.

    அதானே?

    பெரிய கொலுசு ஸ்பான்ஸார் செய்ய உங்க பெயரைக் கொடுத்துறவா? :-))))

    ReplyDelete
  12. வாங்க ஸ்டார்ஜன்.

    நன்றி

    ReplyDelete
  13. வாங்க கயலு.

    எல்லாம் 35 வருசத்துக்கும் மேலான 'ஆட்டுவித்தல்'தான்:-)))))

    ReplyDelete
  14. இறந்து விட்டார் என்பதற்கு அலங்கார வார்த்தை 'சமாதி ஆகிவிட்டார்' சரி.

    சர்ஜிகல் ஆபரேஷன் பண்ணிக்கொள்கிறார்களே! கண்ணாடி அணிந்து கொள்கிறார்களே! டயபடீஸ் மருந்து சாப்பிடுகின்றார்களே!

    இதற்கெல்லாமும் அலங்கார வார்த்தைகள் உண்டா?

    - சிமுலேஷன்

    ReplyDelete
  15. சொல்லிவச்ச மாதிரி யானை வந்துருது பார்த்த்யா..பீச்சுக்குப் போகலியா.காத்து பிய்த்துக் கொண்டு போகும். ஆரொவில் க்ராமத்தில நல்ல ஊதுபத்திகளும் விதவிதமா டெரகோட்டாக்களும் கிடைக்கும். ஃப்ரென்ச் லேஸ் வச்ச பொம்மையெல்லாம் கூட இருக்கும்பா.
    லக்ஷ்மி அழகு. அவ கொலுசும் அதை அவ காண்பிக்கற அழகும் இன்னும் அழகு.

    ReplyDelete
  16. உங்க பதிவுகள் சில படித்து வார்த்தை ஜாலங்களை ரசித்திருந்தாலும், இதுதான் என் முதல் பின்னூட்டம் உங்களுக்கு. (இதை ஃபிரேம் போட்டு வைப்பதும், வைக்காததும் உங்கள் இஷடம்; நான் பெரிய ஆளானதுக்கப்பறம் வருத்தப்படக்கூடாது!!) ஹி.. ஹி.. மயில்.. வான்கோழி... ;-)))

    //எல்லாரும் வீட்டுக்குப்போய் போறாங்க!//
    நல்ல கண்டுபிடிப்பு!! ;-)))

    //நம்ம நியூஸியில்//
    அப்படியா??!!

    /எப்படிங்க நாட்டியம் ஆட வச்சு எடுத்தீங்க?//

    அதானே, நீங்க பாடினீங்களா?

    கொலுசு நிஜமா சூப்பர்; அந்த போஸ் அதுக்கு இன்னும் அழகு சேர்க்குது!!

    ReplyDelete
  17. டீச்சர் என்ன குஜராத்ல இருந்து பாண்டிக்கு ???

    //அதானே, நீங்க பாடினீங்களா? //

    :):):):):):):):)

    - லக்

    http://www.karthikthoughts.co.cc/2010/02/blog-post_24.html

    ReplyDelete
  18. அருமையான‌ சிந்த‌னை valai pathivil annathum padithu viten old pathivukal nan Parka mudiuma

    ReplyDelete
  19. குஜராத்திலே ஸ்வாமி நாராயணன் கோவிலைப்பத்தி நீங்க எழுதியதை நேற்றுதான் படிச்சேன்.
    அதற்குள்ளே பாண்டிச்சேரிலே மணக்குள வினாயகர் கோவிலுக்கு வந்துட்டீகளே !!

    விமானமா ! மனோ வேகம் தான் போங்கள் !!

    அந்த கொலுசு டிஸைன் ரொம்பவே நல்லா கீதாம்.
    எங்க் வீட்டு கிழவி பாத்து பாத்து ரசிச்சுகினே கீது.

    அது என்ன பொல்லாத கொலுசு !!
    அதல்லாம் யானை போட்டுக்கிற கொலுசு, உனக்கு நானு தங்கத்திலேயே போடறேன்னு அப்படின்னு
    சொல்லிப்பிட்டேன்.

    எப்பன்னு கேட்கறாக.

    அடுத்த ஜன்மத்திலே கட்டாயம் எனறேன். வாக்கு பலித்திட மணக்குள வினாயகர் அருள் புரிய் வேண்டும்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  20. சின்ன பயணமா இல்ல குஜராத் அம்புட்டு தானா!?? ;)

    கொலுசு தான் ஸ்பெசல்..சூப்பரு ;)

    ReplyDelete
  21. சிமுலேஷன்,

    நானும் யோசிச்சுக்கிட்டே இருக்கேன். புது அலங்காரச் சொற்கள் புதுசா இனி நாம்தான் கண்டுபிடிக்கணும்.

    "கண்ணணி அணிந்து கணினியில் பணி புரிகிறாள்"

    ReplyDelete
  22. வாங்க வல்லி.

    காந்தி சிலைக்குப் பின்னால் வெறும் கல் பீச்சுப்பா. ஆனாலும் அங்கே அசராமல் உக்கார்ந்து சிலர் கடலைப் பார்த்துக்கிட்டே கடலை போட்டுக்கிட்டு இருந்தாங்கதான்!

    ஆரோவில் போகலை. நம்ம வீட்டுக்கு ரொம்பப் பக்கத்தில் அவுங்க நடத்தும் புடீக் ஒன்னு இருக்கு. அவுங்க தயாரிப்பு சகலமும் இங்கே கிடைக்குது.

    அவ்வளோ சின்னக் கோவிலில் யானையை நான் எதிர்பார்க்கவே இல்லை. தானாய் வருது பாருங்களேன்!

    ReplyDelete
  23. வாங்க ஹுஸைனம்மா.

    முதல் வரவா? வணக்கம். நலமா?

    உங்க பின்னூட்டத்தை ஃப்ரேம் போடலைன்னாலும் 'கண்ணாடி போட்டு'க்கிட்டுப் படிச்சுட்டேன்!

    உலகமே நம்மதுன்னும்போது நியூஸி மட்டும் நம்மது இல்லீங்களா????

    பாவங்க லக்ஷ்மி. பயப்படுத்த வேணாமுன்னுதான் நான் பாடலை:-)

    ReplyDelete
  24. வாங்க எல் கே.

    ச்சும்மா ஒரு டீ டூர்தான். அங்கே வழியை அடைச்சு 'மாற்றுப்பாதையில் பயணிக்கவும்'னு அறிவிப்பை வச்சுருந்தாங்க:-))))

    ச்சும்மா.........

    ReplyDelete
  25. வாங்க ப்ரசன்னா.

    ஆமாம்ப்பா. அதான் எல்லாத்தையும் அம்போன்னு விட்டுட்டு உடனே லக்ஷ்மியின் கொலுசைப் (பதிவாக)போட்டுட்டேன்.

    ReplyDelete
  26. வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

    மீனாட்சி அக்காவுக்கு இல்லாத கொலுசா? ஆஹா..... அப்படியே அதுக்கு மேட்சா ஒரு ஒட்டியாணம்கூட வாங்கிப் போட்டுருங்க. அதெல்லாம் அக்கா எத்தனை ஜென்மமானாலும் வெயிட் பண்ணுவாங்க. கோச்சுக்க மாட்டாங்க. இதையேதான் போன ஜென்மத்துலேயும் சொன்னீங்க. இப்ப மறந்துட்டீங்கன்னு அக்கா சொல்றாங்க.

    மணக்குள விநாயகன் அருளுக்குப் பஞ்சமே இல்லை!

    ச்சும்மா ஒரு ஃப்ளையிங் விஸிட் பாண்டி வந்துட்டு ...தோ..... இப்ப மறுபடி ஆமடாவாட் போய்க்கினே இருக்கேன்.

    ReplyDelete
  27. வாங்க சுகிஹரி.

    நல்வரவு.

    ஆஹா...புது வாசகர் கிடைச்சுட்டீங்க. விட்டுறமுடியுமா?

    நம்ம வலைப்பக்கத்தில் வலதுபுறம் ஆடும் யானை இருக்கு பாருங்க. அதன் தலைக்கு மேல் 2004 வது வருடம் முதல் வந்த பதிவுகள் கிடங்கில் இருக்கு.

    ஒவ்வொன்னையும் க்ளிக்கினால் உள்ளே போய் மொத்தமும் படிக்கலாம். அதிகமில்லை. ஒரு 990 வரும்.

    ReplyDelete
  28. வாங்க கோபி.

    கொலுசைப் பார்த்ததும் எல்லா வேலையையும் அப்படியே போட்டுட்டு இதைச் சொல்ல ஓடிவந்தேனாக்கும்!

    ReplyDelete
  29. ஆஹா அருமை ஒரு சுற்றுலா சென்ற உணர்வு . வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  30. லஷ்மியோட நாட்டியம் நல்லா இருக்கு.
    உங்க பதிவுல ஆடுற யானைக்கும் முடிஞ்சா, ஒரு கொலுசு போட்டு விடுங்களேன் :-)))

    ReplyDelete
  31. லஷ்மியோட நாட்டியம் நல்லா இருக்கு.
    உங்க பதிவுல ஆடுற யானைக்கும் முடிஞ்சா, ஒரு கொலுசு போட்டு விடுங்களேன் :-)))//

    ரிப்பீட்டேய்ய்ய்

    லஷ்மியப் பாத்த பிறகாவது போடனுமில்ல.

    ReplyDelete
  32. வாங்க பனித்துளி சங்கர்.

    நாம்தான் இங்கே சுற்றுலா ஸ்பெஷலிஸ்ட்!

    தன்னடக்கம் காரணமா போர்டு போட்டுக்கலை:-)))))

    ReplyDelete
  33. வாங்க அமைதிச்சாரல் & கண்மணி.

    ஆடறவளுக்குக் கொலுசுப்போடத் தெரிஞ்சா நான் இப்படியா இருப்பேன்.

    நான் ஒரு க.கை.நா. என்பதை மறந்துட்டீங்களா??????

    ReplyDelete
  34. அதெப்படி யானையும், பூனையும்(பூனை புத்தகமும்) உங்க கண்ணுல சரியா வந்துவிழறாங்க துள்சிம்மா.

    ஆனாலும் லக்ஷ்மியோட படம் வெகுஜோர்.
    காலில் சலங்கை மட்டுமல்ல நடன போஸ். ச்ச்ச்ச்ச்சும்மா சூப்பருங்கோ.

    அதுக்கு முன்னால போட்ட போட்டோகளுக்கு ஆட்டோ வராம பாத்துக்கோங்க:)

    ReplyDelete
  35. வாங்கம்மா கவிதாயினி.

    நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சு!

    பூனைக்கண்ணுக்கும் யானை உடம்புக்கும் இதெல்லாம் கண்ணில் படாமல் இருக்க நோ ச்சான்ஸ்:-))))

    லக்ஷ்மிக்கே ஒரு ஒய்யாரம் வந்துருக்கு, இந்த கொலுசைப் போட்டுக்கிட்டதும்!

    ஆட்டோவா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். தமிழ்நாட்டுலே பேச்சுரிமையும் எழுத்துரிமையும் இருக்கா, இல்லையா?

    ReplyDelete
  36. விரைவிலேயே 1000-ஆவது பதிவு காணவிருக்கும் டீச்சரக்கா.. உங்களோட இந்த 975-ஆவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.countdown starts now. :-))

    ReplyDelete
  37. வாங்க அமைதிச்சாரல்.

    ப்ளொக்கர் 994ன்னு சொல்லுதேன்னு போய்ப் பார்த்தேன். அரையும் குறையுமா ட்ராஃப்ட்லே கொஞ்சம் போஸ்ட்ஸ் நிக்குது. எப்போ முடிக்க நேரம் கிடைக்குமோ தெரியலை.

    இன்னும் 25 எழுதணுமா? விடிஞ்சது போங்க. சன்மானமுன்னா அதுக்குள்ளதைக் கழிச்சிச்சுக்கிட்டு அனுப்பிவைக்கக்கூடாதா:-))))))

    ஏப்ரலுக்குள்ளே முடியுமான்னு பார்க்கலாம். எண்ணிக்கைக்காக சின்னச்சின்னதா எழுதித் தள்ள விருப்பம் இல்லை. நம் நாமாவே இருக்கணும். நம்பராங்க பெருசு?

    ஆனாலும் நம்ம வகுப்பு மாணவர்கள் அநியாயத்துக்கு கணக்குலே பெஸ்ட்டா இருக்கீங்களேப்பா!!!

    ReplyDelete
  38. கவலைபடாதீங்க . 1000 அடிச்சதும் ஒரு விழா எடுத்ட போச்சு .. என்ன சொல்றீங்க மக்களே

    ReplyDelete
  39. ப்ரெஞ்சு ஸ்டைல் பழையகால வீடு... கொலுசுக் கால் சூப்பர்.

    ReplyDelete
  40. வாங்க மாதேவி.

    அந்த வீடுகளும் முற்றமும் ரொம்ப அழகா இருக்குப்பா.

    ReplyDelete
  41. இன்னொரு கொலுசுவும் பார்த்து விட்டேன். நீங்க போற இடத்திலெல்லாம் யானையும் கொலுசும்...உங்க வார்த்தகளால அருமையா சொல்றீங்க!

    உங்க பயண அனுபவங்கள் எல்லாமே சுவாரஸ்யமா இருக்கு. இனிமே தான் குஜராத் பயணம் படிக்கணும்!

    2004 ல இருந்து ப்ளாகரீங்களா? எல்லாத்தையும் எப்ப படிச்சு ரசிக்கறது?

    ReplyDelete
  42. வாங்க ரஞ்ஜனி.

    கொலுசு ரொம்பவே அழகா இருக்குல்லே அவள் காலுக்கு!!!!

    ரசிப்புக்கு நன்றிப்பா.

    நிதானமா நேரம்கிடைக்கும்போது பாடுங்களேன். அதிகமில்லை ஒரு 1430தான்!

    அதுக்குமுந்தி ஒருஆறு மாசம் மரத்தடி குழுமத்தில் குப்பை கொட்டினேன். என்னை ஒரு எழுத்துக்காரியா அங்கீகரிச்சது அவுங்கதான்!!!

    பாவபுண்ணியமெல்லாம் அவர்களுக்கே :-))))

    ReplyDelete