Friday, August 14, 2009

கனவை விதைத்த ஞானபாநு.

கோலம் என்ற பெயரைக்கேட்டதும் அப்படியே கொசுவத்தித் தானாப் பத்திக்கிச்சு. சரியாச் சொன்னால் ஆறு வருசம் முந்தி இதே பெயரில் ஒரு கடையை எங்கூரில் (நியுசியில்) நானும் என் மலேசியத்தோழியுமாத் தொடங்கினோம். ஆறே மாசத்துலே புத்தி கொள்முதல் செஞ்சுக்கிட்டு வெற்றிகரமா பின் வாங்கியது வேற விஷயம்:-)

ஆறரை மணிக்கு விழா. அடிச்சுப்பிடிச்சுப் போய்ச் சேர்ந்தோம்.வாசலில் நின்னுகிட்டு இருந்தவரைக் காமிச்சு இதோ இங்கே நிக்கறார்ன்னு சொல்லி அவரோடு கை குலுக்கினார் கோபால். யாருன்னு ஒரு வினாடி முழிச்சேன். கண்ணுத் தெரியலைப்பா............கண்ணாடியைக் கழட்டிக் கையில் வச்சுருந்தேன். ஏஸியில் இருந்து வெளிவந்ததும் கண்ணாடி பூராவும் மூட்டம் போட்டுருச்சே.....உத்துப் பார்த்துட்டு, வணக்கம் சொன்னேன் ஞாநிகிட்டே.


கோலம் என்ற பெயரில் அறக்கட்டளை. நம் வீடு தேடிவரும் நல்ல சினிமாவுக்கு உத்திரவாதம். விழா நடந்த இடம் தென்னிந்திய திரைப்படச் சங்கம்.
இயக்குனர்கள் கே. பாலச்சந்தர்,பாலு மகேந்திரா, மகேந்திரன் மூவரும் வருகை தந்திருந்தார்கள். உள்ளே முதல் வரிசையில் ஒல்லியான உருவத்தில் ஒரு பெரியவர் இருந்தார். யாருன்னு தெரிஞ்சுக்காட்டா என் மண்டை என்ன ஆகுமோ என்ற கவலை எனக்கு. கோமல் சுவாமிநாதன் என்றவுடன் 'தண்ணீர் தண்ணீர்' நினைவு வந்துச்சு. ஆனா அவர் இறந்து அஞ்சுவருசமாச்சுன்னு நம்ம உண்மைத்தமிழன் சொன்னார். (ஒருவேளை அவருடைய ஆவியோ? எனக்கு உண்மையாவே சந்தேகமா இருக்கு. அப்போ எடுத்த படத்தில் அவர் உருவம் தெரியலைன்றதை இப்போதான் கவனிச்சேன்.) நல்லாத் தெரிஞ்சா முகங்களில் நடிகர் ராஜேஷ் இருந்தார். அரங்கத்தின் கொள்ளளவு 220 ஆனால் 250 பேர் இருக்காங்கன்னார் ஞாநி. எனக்குப் பக்கத்து இருக்கையில் ஓய்வுபெற்ற சரித்திரப் பேராசிரியர் சுபத்திரா. இவுங்க ஞாநியின் தமக்கை. எனக்கோ....பழம்நழுவிப் பாலில் விழுந்த கதை. 'நிஜ உலக சரித்திர டீச்சரும் வலைஉலக சரித்திர டீச்சரும்' சந்திக்கறது லேசுப்பட்ட விஷயமா என்ன? :-)


முதலில் தாய்மண் வாழ்த்தாக , முண்டாசின் 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே' முதல் பகுதி. கடைசிவரியை மட்டும் தாயே வணக்கம் என்று மாற்றிப் பாடினார் ஒரு இளம்பெண்.. வந்தே மாதரத்தை விட்டாச்சு!
(இதைத் தவறுதலாகத் தமிழ்த்தாய் வாழ்த்து என்று குறிப்பிட்டிருந்தேன். ஞாநி அவர்கள் பிழையைச் சுட்டியதும் மாற்றி இருக்கேன். நன்றி ஞாநி)

ஞானபாநு இயக்கிய குறும்படங்கள் பல திரையில் காமிச்சாங்க. அட! நம்ம ஞாநிதான் அந்த ஞானபாநுன்னு புரிஞ்சது. 'திருமதி ஜேம்ஸ் என்ன செய்ய வேண்டும்?' என்ற ஒரே ஒரு ரீல், ஒரே ஷாட் & ஒரே டேக்கில் எடுத்த படம் அட்டகாசமாக இருந்தது. அதில் கதாநாயகி ரோகிணி, வாயைத் திறந்து ஒரு சொல் பேசலை. வசனம் முழுசும் நாயகன் மட்டுமே. அதுலேயே கதை முழுசும் வந்துருது. கடைசியில் ஞாநி திரையில் தோன்றி திருமதி ஜேம்ஸ் என்ன செய்யணுமுன்னு நம்மையே கேட்டார். முடிவு மட்டும் இருவிதமாக் காமிச்சிருந்தார். சூப்பர் ஐடியா!


ஞாநி அனைவரையும் வரவேற்று, தான் கனவு கண்ட 'கோலம்' பற்றிச் சொன்னார். நல்ல சினிமா பார்க்க ஏங்கும் மக்களுக்காக, நல்ல சினிமாக்களை எடுத்துத் தரணுமுன்னு ஞாநி கண்ட கனவுதான் கோலம். இதைப் பற்றி இன்றையக் குமுதத்தில் விவரம் வந்திருக்காம். சுருக்கமாச் சொன்னால் நாம் ஐந்நூறு ரூபாய் கட்டிப் பதிவு செய்து கொள்ளவேண்டும். மூன்று மாதத்தில் நல்ல கதையைப் படமாக எடுத்து நமக்கு அதன் டிவிடியை அனுப்பி வைப்பார்கள். குறைந்தபட்சம் ஆயிரம் பேர் பதிவு செஞ்சுக்கணும் என்று சொன்னார்.
இந்த முயற்சியை வாழ்த்த வந்துருந்த சிறப்பு விருந்தினர்களில் பாலு மகேந்திரா முதலில் பேசினார். மெல்லிய குரல். நல்ல சினிமா எதுன்னு தெரிஞ்சுக்க இந்தக் கால இளைய சமுதாயத்துக்குப் பயிற்சி கொடுக்கணும். இதுக்கு ஒரே வழி பள்ளிக்கூடத்துலே இதையும் ஒரு பாடமா வைக்கணுமுன்னு பலமுறை கெஞ்சிக் கேட்டுக்கிட்டார். இந்த வகுப்புக்கு மட்டும் யாருமே கட் அடிக்கமாட்டாங்கன்னும் சொன்னார். செலவும் அதிகம் இல்லை. ஒரு டிவிடி ப்ளேயரும், டிவிப் பொட்டியும் இருந்தால் ஆச்சுன்னார். பாடமா வச்சுட்டு அதுக்கும் மதிப்பெண் போட்டுறப் போறாங்களோன்னு எனக்குப் பயமா இருந்துச்சு. (நம்மூர் பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை எல்லா மதிப்பும் எண்களுக்குத்தான். புரிஞ்சுக்கிட்டுப் படிக்கிறாங்களான்னு யாரும் கவனிக்கறதில்லை. மனப்பாடம் செஞ்சுக் காகிதத்தில் வாந்தியெடுத்தாப் போதும். ஞாபகசக்தி யாருக்கு அதிகமோ அவன் ஜெயிக்கிறான். என்ன கொடுமை பாருங்க. இது என் கணிப்பு )

தன்னுடைய அபிமானக் கலைஞனான கமல் திரைக்கு வந்து அம்பது வருசம் நிறைவாச்சுன்னு பாலு மகேந்திரா மேடையில் சொன்னார். நமக்கு நேத்தே இது தெரியவந்துச்சு வேறொரு விழாவில். அதை அப்புறம் எழுதறேன்.

அடுத்து மகேந்திரன் ஞாநியின் புதுக் கனவு வெற்றி அடையணுமுன்னு வாழ்த்தி, அபூர்வராகங்களாக, அழியாத கோலங்களாக இருக்கணுமுன்னும் சொன்னார். கடைசியில் இந்த இயக்கத்தை ஆரம்பித்து வைத்து கே. பாலச்சந்தர் பேசும்போது தாய்க்கழகத்துக்கே திரும்பிட்டேன்னு சொன்னார்:-) நாடக வாழ்க்கையில் ஆரம்பிச்சுப் பெரிய திரை( அப்போ, அந்தக் காலக் கட்டத்தில் இந்தச் சின்னத்திரை ஏது?)அடுத்துக் கால ஓட்டத்தின் கணக்குப்படிச் சின்னத்திரையிலும் ஆடி ஓடி இப்போ திரும்பவும் நாடகத்துக்குத் திரும்பி இருக்கார். எல்லாம் ஒரு சுழற்சிதான்:-)

சினிமாவில் 'அஸிஸ்டண்ட் டைரக்டர்'ன்னு சொன்னால் கல்யாணத்துக்குப் பொண் கிடைக்கறதில்லையாம். நெசம்தான். இவுங்களுக்குக் கண்ணுலே காசையே காட்டலைன்னா யார் கட்டிக்குவா? வாழ்க்கைக்குப் பணம் என்ற விசயமும் ரொம்பத் தேவையா இருக்கே. அதனால் சினிமாவுக்கு வர ஆசைப்படும் இளைஞர்கள் வேற வேலையைப் பார்த்துப் பொண்ணு கட்டிக்கிட்டு. அப்புறமா இங்கே வந்துருங்க. 'சினிமாக்காரன்னா அப்படி'ன்னு அவுங்க சொல்றமாதிரிதானே நாமும் நடந்துக்கறோமுன்னார்.

தமிழனையும் சினிமாவையும் பிரிக்கமுடியாதுன்னு நான் அடிக்கடி சொல்வேன் பாருங்க.....அதையே பாலச்சந்தர் மேடையில் சொன்னதும் எனக்கு அப்படியே உச்சி குளிர்ந்துருச்சு. (நம்ம பேச்சை எப்போ கேட்டாராம் இவர்:-)..)

"தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது. தமிழனின் அரசியல்கூட அதே சினிமா மூலம்தான்"





ஞாநியின் முயற்சி வெற்றி பெற, இந்தத் திரையுலக மும்மூர்த்திகளும் கைகொடுப்போமுன்னு உறுதி சொன்னாங்க. புதுவிதமான கதைகள், புது நடிகநடிகையர், புது இயக்குனர்கள் இப்படியெல்லாம் உருவாகப்போறாங்க. (நமக்கும் எதாவது நடிக்கச் சான்ஸ் கிடைக்குதான்னு பார்க்கணும்)

இயக்குனர் பாலச்சந்தர், ஞாநிக்கு சொன்ன அதி முக்கியமான சொற்கள்,

"குவாலிட்டியை எப்பவும் காம்ப்ரமைஸ் பண்ணக்கூடாது"

வணிக சினிமாவை விட்டுட்டு , இடைபட்டப் பாரலல் சினிமாக்களை எடுத்து நமக்குத்தரப் போறாங்க. அதுவும் வீட்டுக்கே வரப்போகுது. நானும் அதுக்கு விமரிசனம் எழுதத்தான் போறேன்ற நம்பிக்கையோடு, எழுத இன்னும் சில சுவாரசியமான விஷயங்களையும் (எல்லாம் தானாக் கிடைக்குதே!) சேகரிச்சுக்கிட்டு வந்தேன்.

பகல் கனவும் பலிக்கும், அது சமூகத்துக்கு நன்மை தருவதாக இருந்தால்!


பி.கு: மேலோட்டமாத்தான் எல்லாத்தையும் எழுதி இருக்கேன். காரணம்? உண்மைத்தமிழனும் விழாவுக்கு வந்துருந்தார்!

38 comments:

  1. டீச்சர்

    பின் குறிப்பு

    நெம்ப நெம்ப சூப்பர் ...

    ReplyDelete
  2. துளசி மேடம்.அவர்கள் சொன்னது தப்பு.அது இரண்டு ஷாட்டில் எடுக்கப்பட்டது..பிலிம் ஒரு கேன் 400 அடி தான் கிடைக்கும்.படம் சுமார் 8 நிமிடங்கள் ஓடுகிறது.

    ReplyDelete
  3. வாங்க நட்புடன் ஜமால்.

    பாராட்டுக்கு நன்றி:-))))))

    ReplyDelete
  4. வாங்க தண்டோரா.

    எல்லாம் அவுங்க சொன்னதுதான்.....டெக்னிக்கலா எனக்கு ஒன்னும் தெரியாதுங்க. விளக்கமானத் தகவலுக்கு நன்றி.

    நம்ம மக்கள்ஸ் நிறையப்பேர் நேத்துவந்துருப்பாங்கன்னு நினைச்சேன். உங்களையெல்லாம் பார்க்க முடியலை.(-: முகம் தெரியலையேப்பா..... சந்திச்ச நண்பர்கள் உ.தவும் வண்ணத்துப் பூச்சியாரும்தான்.

    ReplyDelete
  5. உள்ளேன் டீச்சர் ;)

    ReplyDelete
  6. சரித்திர ஆசிரியர்,
    இப்ப சென்னை ரிப்போர்ட்டரா மாறி இருக்காங்க.
    கோவில் விசிட் என்ன, இலக்கிய கூட்டங்கள் என்ன, இப்ப சினிமக் கூட்டத்துக்கும் போஉ எழிதியாச்சு:)
    வாழ்க நும் பணி. துளசிமா.

    ReplyDelete
  7. வாங்க கோபி.

    கடைசி பெஞ்சா? :-))))

    ReplyDelete
  8. வாங்க வல்லி.

    'இருக்கும்போது' கிடைக்கும் சந்தர்ப்பங்களை விட்டுறக்கூடாதுன்னு இருக்கேன்ப்பா:-))))))

    ReplyDelete
  9. திருமதி ஜேம்ஸ் ஒரே ஷாட்டில் எடுக்கத்தான் திட்டமிடப்பட்டது. ஆயிரம் அடிகள் பிலிம் போடக் கூடிய மேகழின் உண்டு. ஆனால் எங்கல் படப்பிடிப்பின்போது சென்னை, ஹைதராபாத்,மும்பை மூன்று இடத்திலும்முயற்சி செய்தும் அது கிடைக்க வில்லை. எனவே 500 அடி பிடிக்கக்க் கூடிய மேகசினில் இரு ஷாட்டுகளாக எடுத்தேன்.டேக் ஒன்றே ஒன்றுதான். முழுவதும் ஹேண்ட் ஹெல்ட்.

    டெக்னிக்கலாக உற்று கவனித்தால் மட்டுமே இரு ஷாட்களை ஜாய்ன் செய்ததைக் கண்டுபிடிக்க முடியும். சட்டென்று தெரியாது. படத்தின் நீளம் டைட்டில் உட்பட பத்து நிமிடங்கள்.

    ஞாநி

    ReplyDelete
  10. பார்த்த எஃபெக்ட்டை கொண்டு வந்துட்டீங்க டீச்சர்.

    ReplyDelete
  11. உங்க இயல்பான ஸ்டைல்ல அழகா எழுதிடீங்க.

    ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சது பின்குறிப்பு தான். Super...

    ReplyDelete
  12. //ஞாபகசக்தி யாருக்கு அதிகமோ அவன்
    ஜெயிக்கிறான்.//


    மிக,மிக உண்மை.

    ReplyDelete
  13. நிகழ்ச்சி தொடக்கத்தில் பாடப்பட்ட பாடலில் தமிழ்த் தாயே வணக்கம் என்று இருந்ததாகக் குறிப்பிடப்பட்டது. அது உண்மையல்ல. பாரதியின் எந்தைஉம் தாயும் என்ற பாடலின் முதறகண்ணிதான் பாடப்பட்டது. அதில் வந்தே மாதரம் என்றுவரும் இடத்தை ’தாயே வணக்கம்; என்று தமிழில் பாடி்னார். அவ்வளவுதான். அது மொழி வணக்கப் பாடல் அல்ல. தாய் மண் வணக்கப் பாடல்.

    ஞாநி

    ReplyDelete
  14. வாங்க ஞாநி.

    விளக்கத்துக்கு மிகவும் நன்றி.

    தண்டோராவுக்கும் பதில் கிடைச்சுருச்சு.

    ReplyDelete
  15. வாங்க அமித்து அம்மா.

    வருகைக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  16. வாங்க வண்ணத்துப்பூச்சியாரே.

    நண்பரைப் பத்திச் சரியாத்தானே சொல்லி இருக்கேன்:-)

    ReplyDelete
  17. வாங்க கோமதி அரசு.

    உண்மைதான். அதை எப்ப மாத்துவாங்கன்னு தெரியலை.
    இல்லாமலா வல்லாரைக்கீரை மாத்திரை தேர்வு சமயத்தில் அமோக விற்பனை ஆகுது!

    ReplyDelete
  18. வணக்கம் ஞாநி.

    தலையை நீட்டிட்டேன். (லேசா) ஒரு குட்டுக்கு நான் தயார்.

    தாயேன்னதும் தமிழ்த்தாய்ன்னு தோணிப்போச்சு. மொழிக்கான பாட்டுன்னு நினைச்சுக்கிட்டேன்.

    தாய்மண் வணக்கமுன்னு இப்போத் தெரிஞ்சுக்கிட்டேன். அப்ப அது பாரதமாதா என்ற தாய். இல்லையா?

    மிகவும் நன்றி.

    ReplyDelete
  19. I assumed u r back to Newzealnd, r u still in India, good post,

    ReplyDelete
  20. //Blogger வல்லிசிம்ஹன் said...

    சரித்திர ஆசிரியர்,
    இப்ப சென்னை ரிப்போர்ட்டரா மாறி இருக்காங்க.
    கோவில் விசிட் என்ன, இலக்கிய கூட்டங்கள் என்ன, இப்ப சினிமக் கூட்டத்துக்கும் போஉ எழிதியாச்சு:)
    வாழ்க நும் பணி. துளசிமா.//

    repeat'ae! busy life!!

    ReplyDelete
  21. அன்புள்ள துளசி,

    அந்தக் குறும் படக் காட்சி எங்கேனும் காணக் கிடைக்குமா?

    நல்ல கவரேஜ். வாழ்த்துகள்!

    ReplyDelete
  22. அன்புள்ள துளசி,

    அந்தக் குறும் படக் காட்சி எங்கேனும் காணக் கிடைக்குமா?

    நல்ல கவரேஜ். வாழ்த்துகள்!

    ReplyDelete
  23. பின்குறிப்பில் என்னை அடையாளம் காட்டிய நியூஸிலாந்து தாய்க்கு எனது நன்றிகள்..!

    ReplyDelete
  24. டீச்சர்,
    //ஆறு வருசம் //
    //ஆறே மாசத்துலே//
    //ஆறரை மணிக்கு//

    பேசாம 'ஆறு காலம்'னு தலைப்பு வச்சிருக்கலாம் :)

    என்ன கடை ஆரம்பிச்சீங்க டீச்சர்? அது பத்தியும் ஒரு பதிவு போட்டா, எல்லோருக்கும் ஒரு பாடமா இருக்கும்ல?

    //(நமக்கும் எதாவது நடிக்கச் சான்ஸ் கிடைக்குதான்னு பார்க்கணும்)//

    நான் படமெடுத்தா, நிச்சயம் டீச்சருக்கு ஒரு ரோல் தருவேன்.
    (பதிவு போட்டு பாடமெடுத்தே படத்தை வெற்றியடையச் செய்வீங்கள்ல :) )

    ReplyDelete
  25. நல்லதொரு நிகழ்ச்சி.
    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  26. வாங்க ராம்ஜி யாஹூ.

    இன்னும் ட்ரான்ஸிட் பீரியட்தான்.

    கொஞ்ச நாள் ஆகும் நியூஸி வர.

    அதுவரை கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விடுவதா இல்லை:-)

    ReplyDelete
  27. வாங்க தருமி.

    விட்டதைப் பிடிக்கும் முயற்சி:-)

    ReplyDelete
  28. வாங்க எல்லே ராம்.

    நாளைக்கு ஞாநியைச் சந்திக்கும்போது இதைப் பற்றிக் கேட்டால் ஆச்சு.

    கிடைத்தால் வலை ஏற்றலாம்.

    ReplyDelete
  29. வாங்க உண்மைத் தமிழன்.

    அதெல்லாம் அடையாளம் காட்டாம விட்டுருவமா? :-)))))

    ReplyDelete
  30. வாங்க ரிஷான்.

    உடல்நிலை பூரணகுணம்தானே?

    கடையின் கதையை 'ஆ..விரல்' தொடரில் கோடி காட்டியிருந்தேனே.

    அப்புறம் கதைகளில் அது இனி வராது.

    கூறியது கூறல் குற்றாமாம்:-)

    ReplyDelete
  31. வாங்க துபாய் ராஜா.

    ஊர்கூடித் தேர் இழுப்போமுன்னு அவர் சொன்னார். அதான் .....நாமும் ....

    ReplyDelete
  32. வாங்க கலகலப்பிரியா.

    அடிக்கடி வந்து போங்க:-)

    கலகலன்னு இருக்கு.

    ReplyDelete
  33. Viewers and users contibution of Rs.500 is good method. Over and above this, Rajni and Kamal (even Vijay, Nayandara, ajith, Trishaa, Shankar, ARR ) too may contribute eash Rs.1 lack for this project. Because they earned money and fame only from Cinema.

    ReplyDelete
  34. // "குவாலிட்டியை எப்பவும் காம்ப்ரமைஸ் பண்ணக்கூடாது" //

    அப்படி பண்ணனும்னு ஒரு சூழ்னிலை வந்துடுச்சுன்னா,
    குவாலிடின்ன என்னா அப்படின்னு ஒரு புது டெஃபனிஷன்
    தயார் பண்ணி, கையில் கரெட்டா எடுத்து வச்சிருக்கணும்.

    லைஃப் லே எல்லாம் மாறும் பொழுது குவாலிடின்னா என்னங்கறதும்
    மாறாதா என்ன ? ( பழையன கழிதலும், புதியன புகுதலும், வழுவல , கால வகையினாலே )

    அது சரி ! அவரு அதான் பாலசந்தர் சாரு, அன்னிக்கு எடுத்த படம் மாதிரி
    இன்னிக்கு எடுப்பாரா ! எடுக்கத்தான் முடியுமா !

    இன்னிக்கு ரசிகர் பெருமக்கள் குவாலிடின்னு எத நினைக்கிறாக !
    அத தர்றதுக்கு யாரால முடியுமோ
    அவங்க என்ன செஞ்சாலுமே அது குவாலிடிதான் !

    நீங்க என்ன நினைக்கிறீங்க ?

    எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு
    அவ்வது உறைவது அறிவு.

    அப்படின்னு தானே வள்ளுவரும் சொல்லியிருக்காரு.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  35. வாங்க ராம்ஜி யாஹூ.

    மேல்விவரங்களுக்கு நன்றி.

    ஞாநியும் மேடையில் பேசும்போது, இப்படிப் படம் எடுக்கறோமுன்னு தெரிஞ்சா சிலபேர் ஸ்பான்ஸார் செய்ய முன்வருவாங்க. அதை மட்டும் வச்சுப் படம் எடுப்பதில் உடன்பாடு இல்லை. மக்கள் & ரசிகர்களின் பங்களிப்பு இருக்கணும். அப்பதான் இது நம்ம படம் என்ற ஈடுபாடும் ஆர்வமும் நமக்கு வருமுன்னு சொன்னார்.

    பிரபலங்கள் கொடுத்தா.... அதையும் வச்சு இன்னும் பல நல்ல கதைகளைப் படங்களா எடுக்கலாமே!

    ReplyDelete
  36. வாங்க சுப்பு ரத்தினம்.

    ரசிகர்கள் விரும்புகிறார்கள்ன்னு சொல்லியே குத்துப்பாட்டு, நம்பமுடியாத ஃபைட், டூயட் ன்னு நம்ம தலையில் கட்டும் இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் என்னதான் செய்வது(-:

    குறைஞ்சபட்சம் குவாலிட்டியாவது இருக்கட்டுமே:-)

    ஆனா ஒன்னு, ஒளிப்பதிவாளர்களில் நம்ம தமிழாட்களுக்கு இருக்கும் திறமை உண்மையிலேயே அபாரம்!

    ReplyDelete
  37. லாஸ் ஏஞ்சலீஸ் ராம்,

    ஞாநி அவர்களிடம் கேட்டுட்டேன். இந்தப் படம் பெரிய திரையில் மட்டுமே வெளியிடப்படும் ஃபார்மேட்டில் எடுத்ததாம். வேற எங்கேயும் பார்க்கச் சான்ஸ் இல்லைன்னு சொல்லச் சொன்னார்.

    ReplyDelete