வீரநாராயணபுரத்திலிருந்து நான்குபேரை வரவழைக்க ஏற்பாடானது.
எந்த வீரநாராயணபுரம்? அதான் பொன்னியின் செல்வனில், முதல் அத்தியாயத்தில் வந்தியத்தேவன் குதிரை மீதமர்ந்து வரும் அதே வீரநாராயணபுரம்தானாம்! இப்போ அதன் பெயர் காட்டு மன்னார் கோவில். மன்னார் சரியான காட்டாளா இருப்பாரோ? ச்சேச்சே..... காட்டும் மன்னார் கோவில் என்பதுதான் காட்டுன்னு ஆகிப்போச்சு.
எதைக் காட்டுனாராம்? (நம்ம புத்தி குறுக்காத்தானே வேலை செய்யும்?)
பிரபந்தங்களைத்தான். வேறென்ன?
சரி... கதையைப் பார்ப்போம்.
இந்த வீரநாராயணபுரம்தான் ஸ்ரீ நாதமுனி ஸ்வாமிகள் அவதரித்தத் திருத்தலம். இவருடைய தந்தை ஈஸ்வரபட்டர், இவருக்கு வச்ச பெயர் ரங்கநாதன். கோவிலில் சாமி கைங்கர்யம். வாழ்க்கை இப்படிக் கடவுளோடு போய்க்கொண்டிருந்த சமயம், வேற ஊரில் இருந்து வந்த ஒரு பக்தர்கள் கூட்டம், திருவாய்மொழியில் பத்துப் பாடல்களை, 'ஆராவமுதே, அடியேன் உடலம் நின்பால் அன்பாயேன்னு தொடங்கி, குருகூர்ச்சடகோபன் குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத் தீரவல்லார் காமர்மானேயநோக்கியர்க்கே'ன்னு பாடறதைக் கேட்டார். ஓராயிரத்துள் இப்பத்து என்ற வார்த்தை , 'சட்'ன்னு மனசுக்குள் போய் பத்த வச்சுருச்சு.
இப்பப் பாடுன பாட்டில் உள்ள ஓராயிரத்துள் பத்து இதுன்னா பாக்கி தொளாயிரத்துத் தொன்னூறு எங்கே? தெரிஞ்சா அதையும் பாடுங்கன்னார்.
நாங்க, எங்க ஊர் வழக்கபடி அந்தக் காலத்துலே இருந்து வழிவழியாப் பாடிக்கிட்டு இருக்கும் இந்தப் பத்துப் பாட்டுதான் தெரியும். இந்த ஓராயிரத்துள் இருக்கும் பாக்கியைப் பத்தித் தெரியாது. குருகூர் சடகோபன்னு இதுலே வர்றது பாருங்க. அந்தக் குருகூர்லே போய்க் கேட்டால் ஒருவேளை தெரியும்னு சொல்லிட்டாங்க.
திருக்குருகூர்ன்னு ஒரு ஊர் இருக்குன்ற விவரம் கிடைச்சு அங்கே போனார். அங்கே இங்கேன்னு விசாரிச்சார். விவரம் சரியாக் கிடைக்கலை. அப்போ மதுரகவி ஆழ்வாரின் சிஷ்யர் ஒருவரைச் சந்திக்கிறார். 'ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எல்லாம் எக்கச்சக்கமா இருக்குன்னாலும், எங்கே யார்கிட்டே இருக்குன்னு ஒரு பிடியும் கிடைக்கலை. ஆனா என் குருநாதர் பாடுன பதினோரு பாடல்கள் இருக்கும் ஓலைச்சுவடி என்னாண்டை இருக்கு. அதுலே பெருமாளைப் பற்றி ஒன்னுமே இல்லை. எல்லாமே அவரோட குருவான நம்மாழ்வார் மேல் பாடுன பாட்டுக்கள்தான்'னார்.
'கண்ணிநுண்சிறுத்தாம்பு'ன்ற தொகுப்பில் பாடல்கள். இதைமட்டும் பனிரெண்டாயிரம் முறை மனமுருகப்பாடினால் சாக்ஷாத் நம்மாழ்வாரே தரிசனம் தருவார்ன்னு நம்பிக்கை. நீ வேணுமுன்னால் முயற்சி செஞ்சு பாரேன்னார். (நம்ம நவதிருப்பதி தரிசனத்தில் ஆழ்வார் திருநகரியில் உறங்காப்புளின்னு திருப்புளி ஆழ்வார்ன்னு ஒரு புளியமரம் பற்றி எழுதுனது நினைவில்லாதவங்க கை தூக்குங்க)
கோயில் தலவிருட்சமான இந்த மரத்தடியில்தான் நம்மாழ்வார் அவர்கள் தவம் செஞ்சாராம். அப்போதான் மதுரகவி ஆழ்வார் அவரைத் தேடிவந்து குருவாக ஏற்றுக்கொண்டார். குருவின்மேல் வச்ச அதீத பக்தியால் பாடுனதுதான் மேலே குறிப்பிட்டக் 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' ........
திருப்புளி ஆழ்வார் முன் அமர்ந்து இடைவிடாது மூணு பகலும் மூணு இரவும் சேர்ந்தாப்புலே இந்தப் பாடல்களை பனிரெண்டாயிரம் முறை பாடினார் நம்ம ரங்கநாதன் என்ற நாதமுனி ஸ்வாமிகள். பக்தியைப் புரிஞ்சுக்கிட்ட ஸ்ரீ நம்மாழ்வார் அவர் முன் தோன்றி,' என்ன வேணுமு'ன்னு கேட்க, அதுக்கு இவர்,
'நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் முழுசும் வேணும். அதுக்குப் பொருளும் சொல்லணுமு'ன்னு விண்ணப்பித்தார். அப்படியே ஆச்சு. அதுக்குப்பிறகு வீரநாராயணபுரம் திரும்பிவந்த நாதமுனி ஸ்வாமிகள், மக்களுக்கு எல்லாம் திவ்யப்பிரபந்தத்தைச் சொல்லி, ராகத்தோடு பாட்டாகப்பாடி இறைவனை ஆடல்பாடலோடு வணங்கும் வழக்கத்தை உண்டாக்குனார், இதுதான் அரையர் சேவையா ஆகி இருக்காம்.
நாலாயிரம் பாடல்களில் நம்மாழ்வார் ஒரு ஆயிரம் பாடல்களும், (அதுக்கு மேலேயேன்னு கூகுளாண்டவர் சொல்றார்) திருமங்கை ஆழ்வார் ரெண்டாயிரம் பாடல்களும் மற்ற ஆழ்வார்கள் பத்துப்பேரும் சேர்ந்து ஒரு ஆயிரமும் பாடி இருக்காங்களாம். இந்தக் கதையும் விவரங்கள் எல்லாம் நம்ம' பர்த்டே கேர்ள்' கிட்டேக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டது தான்.
இந்த வீரநாராயணபுரத்து ஏரிக்கரையில்தான் நம்ம பொன்னியின் செல்வரின் வந்தியத்தேவன் நமக்கு அறிமுகம் ஆறார். உங்களுக்கெல்லாம்கூட இந்த ஏரியைத் தெரிஞ்சிருக்கும். செய்திகளிலாவது படிச்சு இருப்பீங்க. இதுதாங்க வீராணம் ஏரி.
ஆடி மாசம் மகம் நட்சத்திரத்தில் பிறந்த இவுங்களோட சொந்த ஊர் இதே காட்டுமன்னார்குடிதான். இந்த ஊரைக் காட்டுமன்னார்கோவில் என்றும் சொல்றாங்க. அங்கே இருக்கும் பெருமாள் கோவிலில் திருவாய்மொழியில் 'ஆராவமுதே' தொடங்கிப் பத்துப் பாடல்களைச் சலவைக்கல்லில் பொறிச்சுச் சுவர்களில் பதிச்சக் கைங்கர்யத்தைச் செஞ்சவர் இவரோட அப்பா. அவருடைய சதாபிஷேகத்துக்குக் கலசம் வைக்க வாங்குன குடம், இன்னிக்குப் பூஜையில் வச்சுருந்தாங்க.
அந்த நாலு பேர்
நாலு மகன்கள், மருமகள்கள், பேரன் பேத்திகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள், ரெண்டு மகள்கள், மருமகன்கள், அவுங்க குழந்தைகள், மூணாவது மகளா நானும், மருமகனாக் கோபாலும் கலந்துக்கிட்டோம். வீடே கலகலன்னு இருந்துச்சு.
பூஜை முடிஞ்சு ஆசீர்வாதங்கள் ஆச்சு. அப்புறம் பிரசாதவகைகள், விருந்து சாப்பாடுன்னு அட்டகாசம் போங்க.
இப்போதையக் காலக்கட்டத்துலே, இப்படி நல்ல நாட்கள் வரும்போது பெரிய குடும்பமா எல்லோரும் சேர்ந்து அரட்டையும் கலாட்டாவுமா மகிழ்ச்சியா இருப்பது மனசுக்கு நிறைவா இருந்துச்சு. நம்ம பர்த் டே கேர்ள்க்கும் கண்ணுலே தண்ணி நிறைஞ்சுபோச்சு. பொன்னியின் செல்வனையும் நந்தினியையும், குந்தவைப்பிராட்டியையும், வந்தியத்தேவனையும் யாருமே மறக்கலை. பேச்சு பூராவும் இவுங்கதான். ஆழ்வார்க்கடியானையும் விடலை:-)
'குடும்பத்தைக் கட்டிக் காத்து எவ்வளோ நல்லது செஞ்சுருக்கீங்க. உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோமு'ன்னு, மாமியாரைப் பாராட்டி அண்ணன் சொன்னதும், நாங்கள் எல்லாம் சேர்ந்து 'ஹேப்பி பர்த் டே டு யூ' பாடுனோம்:-))))
அண்ணன் பதிவர் இல்லை...ஆனாலும் எப்படி நம்ம டயலாக் எல்லாம் தெரிஞ்சதுன்னு........... சென்னையில் ஒரு டிஜிட்டல் பேனரை விடறதில்லை போல:-))))
மகம் பிறந்த மங்கைக்கு வயசு அதிகம் ஒன்னும் இல்லை. ஜஸ்ட் 80தான்.
வணங்கி ஆசிகள் பெற்றோம்.
பி.கு: இவுங்ககிட்டே நிறையக் கதைகள் இருக்கு. பேசாம நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரதைஞ்ஞூற'லே சேர்த்துக்கலாமா?