'நான் ஸ்டாப்.' நேரில் பார்க்க ரொம்ப கூச்ச சுபாவமா இருக்கார். 'எப்படிங்க டீச்சர்........'னு நாத்தழுதழுக்க உணர்ச்சிவசப்பட்டுட்டார். நான் பேச அவர் கேக்க, அவர் கேக்க நான் பேசன்னே நேரம் போய்க்கிட்டு இருந்துச்சு:-)
வேலைக்கிடையில் வந்துருந்தாரேன்னு பேச்சைச் சுருக்கமா (!)முடிச்சுக்கிட்டேன். சந்திப்பு நிகழ்ந்த இடம் பாலாஜி பவன், தி,நகர்.
அங்கிருந்து கிளம்பி இன்னும் சில வேலைகளை முடிச்சுக்கிட்டு இன்னொரு 'பிரபல எழுத்தாளர்' நண்பரை ஆழ்வார்ப்பேட்டையில் சந்தித்தோம். எல்லாம் அவரவர் வேலை செய்யும் இடங்களுக்கருகில் இருந்த ஒரே காரணம்தான். 'உன்னைப்போல் ஒருவன்' பற்றியே நிறையப் பேசினோம். அந்த டிஸ்கஷனில் இருந்துதான் கொஞ்சநேரம் ஒதுக்கி நம்மைப் பார்க்க வந்தார்.
அவரைச்சந்திச்ச கையோடு இன்னொரு பதிவர் சந்திப்பு. (வயதில்) மூத்த பதிவரைப் போய்ப் பார்த்தோம். ரொம்ப நாளா...இல்லை ரொம்ப மாசங்களா ஒன்னுமே எழுதாதவர். அவர் குடும்பமே என்னை தத்து எடுத்துக்கிட்டு இருக்கு:-))) சலோ சாலிக்ராமம்னு போய் மாமாவின் குடும்பத்துக்கு ஹலோ சொல்லிட்டுக் காவேரி விநாயகரையும் கண்டுக்கிட்டு வந்தோம். கோயில் சந்நிதிகள் அடைச்சுட்டாங்க. அதனால் என்ன? அவர் நம்மைக் கவனிச்சுக்கிட்டுத்தானே இருக்கார். எத்தனைமுறை வந்துருக்கோம்! அப்படி மறந்துருவாரா என்ன? குருக்களுக்கே நம்மை நினைவிருக்கும்போது.....
கோயிலில் குடமுழுக்குக்கான வேலைகள் அந்த இரவிலும் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அருமையான தேக்குமரக் கதவுகள் தயாரா இருக்கு முன்வாசலுக்குப் பொருத்த. மாமாதான் கோவில் ட்ரஸ்டி என்பதால் இது நம்ம சொந்தக் கோயில்(மாதிரி)
பேருதான் பிள்ளையார் கோவில். ஆனால் ஸ்ரீராமலக்ஷ்மணர், சீதா, அஷ்டபுஜ துர்கை. அனுமான், முருகன், நவகிரகங்கள்,அகஸ்தீஸ்வரர், ஐயப்பன் இப்படிக் குட்டிக்குட்டிச் சந்நிதிகள் உண்டு. நம்ம தமிழ்சினிமா மாதிரிதான். எல்லோரையும் ஏதோ வகையில் திருப்திப் படுத்தணும். இந்தக் கோயிலுக்கும் கோலிவுட்டுக்கும் சம்பந்தம் நிறைய இருக்கு. சினிமா ஆட்கள் ஸ்பெஷல் பூஜை எல்லாம் போட்டுப் படத்தை நல்லா ஓடவைக்க புள்ளையாருக்குக் கோரிக்கை வைக்கிறாங்க. நம்ம புள்ளையாரும் சிரிச்சுக்கிட்டே தரமில்லாத படங்களை ஓட வச்சுடறார், தியேட்டரை விட்டு:-)
இன்னிக்கு ஏன் இப்படி ஓட்டமுன்னு கேட்டால் (கேக்கமாட்டீங்களா?) கார் ஒன்னு வாடகைக்கு எடுத்துருக்கு. காருள்ளபோதே சுற்றிக்கொள்!
அடுத்த இரண்டு நாட்கள் உற்றார் உறவினர் வீடுகள், அங்கங்கே ஓசிச் சாப்பாடுன்னு போச்சு. இதெல்லாம் சரிப்படாது. உண்மையான ரெஸ்ட் எடுத்தே ஆகணும் என்ற நிர்பந்தத்தில் கோபால் டெல்லி ஆஃபீஸுக்குக் கிளம்பிப்போயிட்டார்.
சுத்துன கால் சும்மா இருக்குமா? அட..என்னைத்தாங்க சொல்றேன். இப்போ என்னைக் கண்கலங்காமச் சுத்த வைக்கும் பொறுப்பு அண்ணனிடம். பாசமலர் ரேஞ்சுதான் நம்மூட்டுலே. காலையில் முதல்வேலையா, 'இன்னிக்கு எங்கெங்க போகணுமுன்னு சொல்லும்மா, போயிட்டு வந்துறலாம்'பார். ஏழடுக்குக் கடை இப்போ சிங்கை முஸ்தாஃபா ரேஞ்சுக்குப் போயிருச்சாமே அங்கே போய்ப் பார்க்கலாம். அப்படியே புத்தகம் சில வாங்கிக்கணும். காரைக்கொண்டுபோய் சரவணா ஸ்டோர்ஸ் பார்க்கிங்கில் விட்டோம். கடைக்குப் பின்பக்கமுள்ள தெருவழியாப் போகணும். அம்பது ரூபாய் சார்ஜ். அநியாயமா இருக்கா? கவலையை விடுங்க. நேரக் கணக்கெல்லாம் கிடையாது. கடையில் சாமான்கள் வாங்கிட்டுக் காசு அடைக்கும்போது பார்க்கிங் ரசீதைக் காமிச்சால் இந்த அம்பது ரூபாயைக் கழிச்சுக்கிறாங்க. அதுவும் ஒரே ஒருமுறை மட்டுமே:-) (ஏழு மாடின்னு ஞாபகம் வச்சுக்குங்க)
காய்கறிகள் பிரிவைத்தான் எப்பவும் (சிங்கையிலும்கூட) ஆசையாப் பார்ப்பேன். எதெது நமக்கு நியூஸியில் திங்கக் கொடுத்துவைக்கலைன்னு பார்த்துப் பெருமூச்சு விடத்தான். சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைத்தண்டு, புடலங்காய் இப்படி ஏராளம். மாம்பழம், சீத்தாப்பழமுன்னு பாய்ஞ்சு எடுத்தேன். எங்கூர்லே கொட்டிக்கிடக்கும் காலிப்பூ இங்கே ஆட்டம் போடுது இப்படிக் காளியா:-) தமிழ்ப்படங்கள் பகுதியில் நாலைஞ்சு டிவிடி, பாலச்சந்தரின் பழைய படங்கள் அரங்கேற்றம். அபூர்வ ராகம், சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும் இப்படி. ( ஆனால் எதையும் நம்மூர் வந்ததும் பார்க்கமுடியலை. என் டி எஸ் ஸி யில் பதிவாகி இருக்கு)
புத்தக உலகத்தைத் தேடி வடக்கு உஸ்மான் ரோடில் ரெண்டு மூணுமுறை இப்படியும் அப்படியும் நடக்க வேண்டியதாப் போச்சு. நம்ம நாச்சியார் வல்லி, அது சுந்தரி ஸில்க்ஸ்க்கு எதிரில் இருக்குன்னு சொல்லி இருந்தாங்க. இப்போ புதுசா ஒரு மேம்பாலம் வந்துருக்குன்னு கவனிச்சேன். கடைசியில் கடை மேம்பால இறக்கத்துக்கு எதிரில் ஒளிஞ்சிடுந்துச்சு. ஜில்லுன்னு ஏஸி போட்ட கடை.
இந்த முறை ஜெ.மோ.வை வாசிக்கணுமுன்னு இருந்தேன். சில தலைப்புகளைப் படபடன்னு சொன்னதும் கடைக்கார விற்பனைப்பகுதிப் பெண் கேட்டாங்களே ஒரு கேள்வி.
" நீங்க அந்த மாதிரி புத்தகம் படிக்கிறவங்களா?"
"எந்த மாதிரி?"
கொஞ்சம் 'ஙே'ன்னு முழிச்சேன். கூட்டிக்கிட்டுப்போய் ஒரு ஷெல்ஃப் முன்னாலே விட்டாங்க. ஏழாம் உலகம், காடு கிடைச்சது. நம்ம பாலாவின் அவன் அவள் அது, கையில் எடுத்தவுடன் இன்னொரு திருநங்கை எழுதிய புத்தகத்தை என் கண்முன்னே நீட்டுனாங்க. இருக்கட்டும் பிறகு பார்க்கலாமுன்னு தலையை ஆட்டினேன் வலதும் இடதுமாய். ஆசிரியர் ஒரு பதிவரா(வும்) இருக்கணும் என்ற நம்ம கண்டிஷன் அவுங்களுக்குத் தெரியாதுல்லே:-)
ரெண்டு பணியாட்கள் ஓரமா உக்காந்து பார்சல் கட்டிக்கிட்டு இருந்தாங்க. ஏனோதானோன்னு இல்லாம நல்லாப் பொதிஞ்சதைக் கவனிச்சேன். புத்தகம் வேணுமுன்னா அவுங்களே அனுப்புவாங்களாம். இந்தியாவுக்குள் தபால்செலவு இலவசம். கடையும் அதன் சேவைகளும் ரொம்ப நல்லா இருக்கு. துணிஞ்சு வாங்கலாம்.
யானைகள் அணிவகுப்பும் கையில் கேடயத்தோடு நிற்கும் படைவீரர்களுமான வரிசையைத்தாண்டிப் போய்க்கிட்டு இருக்கோம். வண்டியை நிறுத்தி இறங்கிப்போய் அந்த வி ஐ பி மரியாதையை வாங்கிக்காம 'விர்'ன்னு வி ஜி பியைக் கடந்துப் போய்க்கிட்டே இருக்கோம். அருமையான சாலை. வேகத்துக்குக் கேட்பானேன். இன்னிக்குக் காலையில் அண்ணன் கேட்டதுக்கு மறுமொழி தக்ஷிண சித்ரா.
ஆரவாரமில்லாத முகப்புக் கட்டிடம். பன்னிரெண்டு வருஷமா இந்த ஐடியாவை மனசுலே ஊறவச்சுத் திட்டம் போட்டு இதோ, இப்படி நம்ம கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துனது 1996 டிசம்பர் 14. இதுக்காகப் பாடுபட்டது ஒரு தனிமனிதரல்ல. ஒரு குழு. நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் அந்தக் காலத்துலே எப்படி இருந்தோமுன்னு வருங்கால சந்ததிகளுக்குக் காமிக்கவும் இத்தனை அருமையா ஒரு ஏற்பாடு செஞ்ச அந்தக் குழுவினருக்கு நாம் நன்றிக்கடந்தான் படவேணும். குழு அங்கத்தினரில் பெரும்பாலோர் பெண்கள் என்பது ஒரு கூடுதல் மகிழ்ச்சி. 33 சதவீத இட ஒதுக்கீடு இங்கே ஆண்களுக்கு:-))))
வெறும் தமிழ்நாடுன்னு ஒதுக்கிவைக்காமப் பூராத் தென்னியக் கலாச்சாரத்துக்கும் சேர்த்து உருவாக்கி இருப்பதைப் பாராட்டத்தான் வேணும். சென்னைக்கு அருகாமையிலேயே அமைஞ்சதும் ஒரு நல்ல வாய்ப்புதான். முக்கியமாப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் வந்து பார்க்க லகுவா இருக்குமே. நாளைய உலகம் அவுங்களுதுதானே? செல்வம் மிகுந்தவர் புரவலர்களாகவும் ஆர்வம் இருப்பவர்கள் தன்னார்வத் தொண்டர்களாவும் இங்கே போய் உதவி செய்யலாமாம். வரவேற்கிறார்களாம். அஞ்சாயிரம் கட்டுனா ஆயுட்காலம் முழுசும் அங்கத்தினரா இருக்கலாம். இலவச இனைப்பாச் சலுகைகள் நிறைய உண்டு. கைவினைப்பொருட்கள் செய்யும் கலைஞர்களும் இங்கே கடை விரிச்சுவச்சுருக்காங்க. எனக்கும் ஒரு யானை அரைவிலையில் கிடைச்சது.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா & கர்னாடகாப் பகுதிகளைச் சுற்றிப்பார்த்தோம். இதே பயணத்தில் சுவாமிமலை ஆனந்தத்தில் தங்குனதால் இங்கே அவ்வளவாச் சுவை இல்லாமப்போச்சுன்னாலும், தமிழ்நாடு நீங்கலா மற்ற மூணு பகுதிகளும் நல்லாவே இருக்கு. கர்நாடகாவுக்குப் போகும்போது மட்டும் மூக்கைக் கெட்டியா மூடிக்கணும். பயங்கர (துர்)நாற்றம். தண்ணி தராட்டா இப்படித்தான் நாறுமோ என்னவோ!
தமிழ் எழுத்துக்கள் எப்படி ஆரம்பிச்சு இப்படி இன்னிக்கு இருப்பதுபோல் உரு மாறியிருக்குன்னு ஒரு சார்ட் இருந்துச்சு. தெரிஞ்சுவச்சுக்கிட்டாக் கல்வெட்டுகளைப் படிக்கமுடியுதான்னு பார்க்கணும்:-) சின்னச் சின்னத் திண்ணைகள் வச்சக் குட்டிக்குட்டி வீடுகள். ஓலைக்கூடைகள் பின்னுவது, ஈரக் களிமண் கொண்டு பானைகள் வனைவதுன்னு கொஞ்சம் நாமும் செஞ்சுதான் பார்ப்போமே என்ற அளவில் ஆக்ட்டிவிட்டீஸ் இருக்கு. பது ரூபாய் அஞ்சு ரூபாய் என்ற அளவில்தான் இதுக்கெல்லாம் சார்ஜ். ஆங்.....சொல்ல மறந்துட்டேனே..... நுழைவுக் கட்டணம் ஒன்னும் வச்சுருக்காங்க இங்கே. பிரச்சனையில்லை நமக்கு. 75 ரூபாய்கள். வெள்ளைத்தோல் என்றால் 200 ரூபாய்கள். சின்னப் பிள்ளைகளுக்கு 20 ரூபாய்கள். பள்ளிக்கூடத்துக் குழுவா வந்தா இன்னும் கொஞ்சம் மலிவா இருக்கலாம். நாங்க போன அன்னிக்கும் பள்ளிக்கூடப் பசங்க வந்துருந்தாங்க. சேத்துப்பட்டுலே இருக்கும் பள்ளிக்கூடமாம்.
மயிலாட்டம் ஒன்னு ஏற்பாடு செஞ்சுருந்தாங்க. மயில் வந்து சுமாரா மேளதாளத்துக்கேற்ப ஆடுச்சு. மயில்கால் போன்ற சாக்ஸ் போட்டுருந்தா நல்லா இருந்துருக்கும். அழுக்குக் கால்களோடு இருந்த மயிலின் 'முகம்' கடைசியில் தெரிஞ்சப்ப ஒரு பரிதாபம்தான் மனசுலே தோணுச்சு. பிள்ளைங்க ரொம்பவே ரசிச்சாங்க. குழந்தை மனம் வேணும் என்பது ரொம்பச் சரி.
கிளம்பி வெளியே வரும்போது மணி ரெண்டு இருக்கும். கல்லூரி மாணவிகள் கூட்டம் மூணு பஸ்களில் வந்து சேர்ந்தாங்க. அதில் குதிச்சு உள்ளே ஓடிவந்த அம்மணிக்குக் கால் பிசகிக்கிச்சு. வலியில் கூத்தாடச் சிசுருஷை செஞ்சாங்க ஒரு டீச்சர் (அப்படீன்னு நினைக்கிறேன். அதான் புடவை கட்டிக்கிட்டு இருந்தாங்கல்லெ;-)
படங்களைத் தனி ஆல்பமாப் போட்டுருக்கேன். பாருங்க.
தொடரும்......:-)