இங்கிலாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இப்படி நாலு நாட்டையும் கலந்து காட்டுன படம். என் வழக்கத்துக்கு மாறாகக் கொஞ்சம் கதையையும் விஸ்தரிக்கவா?
ப்ரிட்டனில் இருக்கும் ஒரு இஸ்லாமியரின் மகள் மேரி யூனியில் படிக்கிறாள். பாய் ஃப்ரெண்ட் உண்டு. மகளுடைய காதல் விவகாரம் இன்னொருத்தர் சொல்லித்தான் அப்பாவுக்குத் தெரியுது. ( இது வழக்கம்தானே?)
அவர் வந்து 'உன் பொண்ணைச் சரியா வளர்க்கலை. இது நம்மைப்போன்ற இஸ்லாமியர்களுக்கு மத விரோதமானது'ன்னு மூட்டி விட்டுடறார்.
மேரிக்கு அம்மா இல்லை. இறந்துட்டாங்க. அவுங்க ஒரு வெள்ளைக்காரப் பெண்.
இந்த அப்பா, இப்ப ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்காம 'லிவிங் டு கெதர்' உறவுலே இருக்கார். அந்தம்மா சொல்லுது, பொண்ணோட பாய் ஃப்ரெண்ட் நல்ல பையன். மகள் அவனைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா என்ன தப்பு? ன்னு.
இங்கே இருக்கும் மற்ற இஸ்லாமியர் சமூகம் தன்னை இழிவாப் பேசுமுன்னு சொல்லி அப்பா சண்டை போடறார். மகள் கிட்டே, அவளோட விருப்பப்படியே கல்யாணம் அந்த வெள்ளைக்காரப்பையன் (பெயர் Dave)கூட நடக்கும் அதுக்கு முன்னே ஒரு பத்து நாள் ஊருக்குப்போய் தன்னுடைய அம்மா, அண்ணன் குடும்பத்தைப் பார்த்துட்டு வரலாமுன்னு மகளைக் கூட்டிக்கிட்டுப் பாகிஸ்தான் போறார். (கொஞ்சம் கதையை யூகிக்க முடியுதா? ம்ம்ம்ம்ம்ம்....அதேதான்)
அண்ணனுக்கு ரெண்டு பையன்கள். இசையில் ஈடுபாடு உள்ளவர்கள். நல்ல வசதியுள்ள குடும்பம். கொஞ்சம் விசால அறிவு படைத்த அண்ணனும் அண்ணியும். பாட்டி மட்டும் பழைய சம்பிரதாயங்களில் ஊறியவர். பெரிய பையன் மன்ஸூருக்கு அமெரிக்காவில் போய் ம்யூஸிக் படிக்க விருப்பம். சின்னவன், மசூதியில் ஒரு முல்லாவைச் சந்திக்க நேரிடுகிறது. அவர் 'சங்கீதம் பாடுவது, படிப்பது எல்லாம் அல்லாவுக்குப் பிரியம் இல்லாத விஷயம். இன்னும் சரியான முஸல்மானாக இருப்பது, அது இது'ன்னு சொல்லி அவனுக்கு ஒருவித மூளைச்சலவைச் செஞ்சு வைக்கிறார். இதெல்லாம் மனசுக்குள்ளே போய் ஒரு குழப்பமான நிலையில் இருக்கும் சின்னவன் கடவுளுக்காகவே இனி வாழணுமுன்னு முடிவு செஞ்சுக்கிட்டார். தினமும் மசூதியில் ஒலிபெருக்கியில் பாங்கு விளிப்பது முதல் எல்லாம் செஞ்சு முல்லா சொன்ன பேச்சுக்கு அடிமையா இருக்கார். இவரோட குரல் அருமையை சிலாகிச்சுப் பேசும் முல்லா, இந்தக் குரல் அல்லாவுக்கு மட்டுமே சேவை செய்யணுமுன்னும் சொல்றார்.
மகளைக் கூட்டிவந்த லண்டன்கார அப்பா, தன்னுடைய அண்ணன், அம்மாவிடம் வந்த நோக்கத்தைச் சொல்லும்போது அவருடைய அண்ணனும் அண்ணியும் மட்டும் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக் கல்யாணம் பண்ணவே கூடாதுன்னு எதிர்ப்புக் காட்டுறாங்க. இதுவிசயமா, பெண்ணின் சின்னம்மா என்ன சொல்றாங்க? அவுங்களை ஏன் கூட்டிவரலைன்னு அண்ணன் கேக்கும்போது, 'அவளை நான் கல்யாணம் செஞ்சுக்கலை. முதல் மனைவி விவாகரத்து வாங்குனப்ப பாதி சொத்தை அவளுக்குக் கொடுக்கணுமுன்னு தீர்ப்பு ஆகிருச்சு. எனெக்கென்ன பைத்தியமா? நாளைக்கு இவளும் இப்படிச் செஞ்சுட்டா? அதான் கட்டாமச் சேர்ந்து வாழ்க்கை நடத்தறேன். என் பொண்ணு விஷயத்துலே அவளுக்கு என்ன உரிமை இருக்கு ஏதும் சொல்ல? ன்னதும் அண்ணன் இதெல்லாம் சரியில்லைன்னு தலையை ஆட்டுறார். வீட்டுலே நடக்கும் இந்த விசயத்தை முல்லாவிடம் சொல்லிச் சிக்கலைத் தீர்க்கும் உபாயம் எதாவது இருக்கான்னு சின்னவன் கேட்க, அதுக்கு அவர் சொன்னவழி.......
லண்டன்காரர் மகளுடனும், சின்னவனுடனும், முல்லா அனுப்பிய இன்னொரு ஆள் கூடவும் சேர்ந்து பாகிஸ்தான் எல்லையைக் கடந்து ஆஃப்கானிஸ்தான் போய்ச் சேர்றாங்க. எங்கே போறோமுன்னு மகள் கேட்டதுக்கு, ஒரு கல்யாணத்தைப் பார்க்கப்போறோமுன்னு அப்பா சொல்றார். சந்தோஷமாப் போகும் மகளுக்கு அங்கே இருக்கும் சில பெண்கள் அலங்காரம் செஞ்சுவிடறாங்க. கல்யாணப்பெண் எங்கேன்னு கேக்கும் மேரிக்கு அதிர்ச்சி. அவள்தான் கல்யாணப்பொண்ணு. மாப்பிள்ளை அவளோட கஸின்.(சின்னவன்) அவளோட எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மிரட்டிக் கல்யாணம் நடந்துருது. மறுநாள் காலை, அப்பா, மேரியை ( இனி அவள் பெயர் மரியம்) அங்கேயே விட்டுட்டு லண்டன் போயிட்டார்.
மூத்தவன் மன்ஸூர் அமெரிக்காவுக்குப் போய், இசைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். அங்கே சகமாணவியுடன் ஏற்பட்ட பழக்கம் காதலா மாறுது. அந்தப் பொண்ணு இவரைக் கல்யாணம் செஞ்சுக்க வற்புறுத்துது. இவர் தயக்கம் காட்டுறார். காரணம் மதம் இல்லை. கலாச்சாரம்னு சொல்றார். 'எனக்காக உன் கலாச்சாரத்தை எவ்வளவுநாள் விட்டு இருக்கமுடியும்? ஒரு நாள் இல்லேன்னா ஒருநாள் உனக்கு இந்த வாழ்க்கை போரடிச்சு, நீ மீண்டும் உன் பழக்கவழக்கம், கலாச்சாரத்துக்குப் போகணுமுன்னு ஆயிரும். அதனால் வேணாம்.' பொண்ணு பிடிவாதம் பிடிக்குது. 'உனக்காக நான் ஆல்கஹால், சிகெரெட் எல்லாத்தையும் விட்டுட்டேன் பாரு'ன்னுது.
உலகவர்த்தக மையத்தைத் தகர்த்த சம்பவம் நடக்குது அந்த நாளில். எல்லாம் ஒரே குழப்பம். சிலநாளில் ரெண்டுபேரும் ரெஜிஸ்தர் கல்யாணம் செஞ்சுக்கறாங்க. அன்னிக்கு இரவு இவுங்க தூங்கும்போது , இவரைமட்டும் போலீஸ் கடத்திக்கிட்டுப் போயிருது. விசாரிக்கறாங்க, இவருக்கும் அல்கெய்தாவுக்கும் என்ன தொடர்புன்னு.
அங்கே மரியத்துக்கு எப்பவும் காவல். அந்த வீட்டுப் பெண்கள் நிலையைப் பார்த்துப் பரிதாபமாவும் இருக்கு. ஒரு நாள் ஆண்கள் இல்லாத சமயம் அந்த வீட்டுப் பெண்கள் மேரியைத் தப்பிக்க விடுறாங்க. ஓட்டமான ஓட்டம் ஓடி பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இருக்கும் ஆற்றுக்கு வந்துட்டாள். தப்பிப்போக அங்கே தண்ணீருக்கு மேலே கயிறு கட்டுன தொட்டில் போல ஒரு அமைப்பு இருக்கு. அதுலே உக்கார்ந்து அந்தப் பக்கம் போய்க்கிட்டு இருக்காள். அதுக்குள்ளே வீட்டுக்குவந்த சின்னவனும் அந்த ஆஃப்கானியும் இவள் தப்பிட்டாளுன்னு தெரிஞ்சு தேடிக்கிட்டு ஓடிவர்றாங்க.
(சினிமா என்பதால் இங்கே ஒரு இண்டர்வெல் விடவா?. பாக்கி இன்னொரு பதிவாப் போடவா....இல்லை..... சொல்லி முடிச்சுடவான்னு ஒரு குழப்பம். ஒருவழியா முடிவு எடுத்துட்டேன்.)
அமெரிக்காவில் குற்றவாளிகளை விசாரிக்கறதுலே நம்மூரே தேவலை என்ற அளவுக்குக் கொடூரம். மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். போதாக்குறைக்கு அந்த மன்ஸூர் போட்டுருந்த தாவீஸ்/தாயத்தைப் பிரிச்சுப் பார்க்கறாங்க. அதுலே கட்டம்கட்டி என்னவோ எண்கள் எழுதுன காகிதம் இருக்கு. அந்த எண்கள் எல்லாம் குரான் லே இருக்கும் வாசகத்தின் எண்களாக இருக்கலாம். அதுலே 9 ன்னு ஒரு கட்டத்துலேயும், 11 ன்னு ஒரு கட்டத்துலேயும் இருக்கு. இது போதாதா?
"இசைக்கல்லூரி மாணவன்னு சொல்றே. ஆடம்பரமான அபார்ட்மெண்ட்லே இருக்கே. கார்வேற வச்சுருக்கே. இதுக்கெல்லாம் யார் காசு கொடுத்தா? அல்கெய்தா தானே? பின் லேடன் என்ன சொல்லி உன்னை இங்கே அனுப்புனார்.? கல்லூரியில் சேர்ந்தப்பக் கொடுத்த விண்ணப்பத்துலே உன் ஆர்வம் எல்லாம் ப்ளேன்னு சொல்லி இருக்கியே."
அப்புறம் அருவருப்பா அந்த செல்லுலே யக்.......
அடுத்தபக்கத்துக்கு இன்னும் கொஞ்ச தூரமே இருக்கும்போது, இந்தப் பக்கம் இருந்து அந்த தொட்டிலமைப்புக் கயிறை இழுத்து மரியத்தை மீண்டும் அந்த வீட்டுலே கொண்டுபோய்ப் பூட்டிவைக்கிறங்க. இவளைத் தப்பியோடாமப் பார்த்துக்கறது பெரிய கஷ்டமுன்னு சலிச்சுக்கும் சின்னவரிடம், அதெல்லாம் ஒரு குழந்தை பிறந்தாச் சரியாப்போயிடுமுன்னு சொல்றார் அந்த ஆஃப்கானி. "அதுக்குச் சான்ஸே இல்லை என்னைக் கண்டாலே வெறுப்பு. இதுவரை சம்பந்தம் ஒன்னுமில்லை"
மறுபடி ஓடு அந்த மௌலானாகிட்டே. 'அடப்பாவி. இன்னுமா ஒன்னுமில்லை. அவள் உன்னை விட வயசுலே பெரியவளாச்சேன்னு பயந்துக்கிட்டு இருக்காதே. ஆண் எப்பவுமே பெண்ணைவிட வலிமை வாய்ந்தவன். ஞாபகம் வச்சுக்கோ. அவளை எப்படியாவது மடக்கிடு.'
'எஸ் பாஸ்'ன்னு சொல்லாதது ஒன்னுதான் பாக்கி.
மரியம் கர்ப்பமா இருக்காள். ஆண்குழந்தையாப் பிறக்கணுமேன்னு அங்கே ஒரு மரத்துலே (சில துண்டுத் துணிகளைக் கட்டிவச்சு எல்லாரும் பிரார்த்தனை செய்யரது வழக்கம்போல இருக்கு!) இவளும் ஒரு சின்னத் துணியைக் கட்டிவச்சுக் கும்புட்டுக்கறாள். இஸ்லாமியர்கள் அல்லாவைத் தவிர வேற யாரையும் கும்புடமாட்டாங்கன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஒருவேளை இந்த மரத்தடி , முஸ்லீம் சாது ஒருவரின் சமாதியோ என்னவோ!
பொண் குழந்தை பிறந்துருது. இப்ப அவளோட கடுங்காவல் கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருக்கு. குழந்தை பிறந்த விவரத்தை அப்பாவுக்கு எழுதியிருக்கேன். இதை அனுப்புங்கன்னு அந்த வீட்டு அம்மாகிட்டே கொடுக்கறாள். கடிதம் போயிருது. எங்கே? அவளொட பாய் ஃப்ரெண்ட்க்கு.
மேரி/மரியம் பிரிட்டிஷ் குடியுரிமை உள்ள பெண். அவள் விருப்பத்துக்கு எதிராக அங்கே பிடிச்சுவச்சுருக்காங்கன்ற விவரம் தெரிஞ்சுபோனதும், மேரியோட ஸ்டெப் மதரின் துணையோடு காவல்துறைக்குப் புகார் கொடுக்கறார் அந்த பாய்ஃப்ரெண்ட்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் வேகமா நகருது. பாகிஸ்தானின் காவல்துறை வேற வழி இல்லாமல் மௌலானாவிடம் பேசி முடிச்சு, மேரி இருக்குமிடம் தெரிஞ்சுக்கிட்டு, ஆஃப்கானிஸ்தான் போய் அவளைக் காப்பாற்றிக் கூட்டிக்கிட்டு வருது. என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த சின்னவன்( படத்துலே இவர் பெயர் சர்மட்) கூடவே கிளம்பி பாகிஸ்தான் வந்துடறார்.
இதுக்கிடையில் மேரியைப் பார்க்க அவுங்க ஸ்டெப் மதர் வந்து துணைக்கு இருக்காங்க. திரும்ப லண்டன் போயிறலாமுன்னு சொல்றாங்க. இவ்வளவு கொடுமை செஞ்சவங்களைக் கோர்ட்டுக்குக் கொண்டுபோய் நிறுத்தியே ஆகணுமுன்னு மேரியின் எண்ணம்.
மௌலானாவைக் கோர்டில் விசாரிக்கும்போது, பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகக் கல்யாணம் செய்வது தப்பே இல்லை. மதத்துக்காக என்னவும் செய்யலாமுன்னு ஒரே போடு போடறார். இங்கே பாகிஸ்தானில் இருக்கும் இன்னொரு மௌலனா வாலி( இவர் மௌலானாக்களுக்குத் தலைவரா இருக்குமோ)அவர்களைக் கோர்ட்டு அழைச்சப்ப அவர் வரலைன்னு மறுத்துடறார். மேரி போய் அவரைச் சந்திச்சு
விஷயத்தைத் தெளிவுபடுத்தி, பெண்ணுக்கு விருப்பம் இல்லாத கல்யாணம் கட்டி வைக்கக் குரான் அனுமதிக்குதான்னு கேக்கும்போது அவர் இல்லைன்னு சொல்றார். அதைக் கோர்ட்டுலே வந்து சொல்லச்சொல்லி வேண்டும்போது, இது டைம் வேஸ்ட். எனக்கு அஞ்சு நேரம் சாமி கும்பிடும் வேலை இருக்குன்றார். அநீதி இழைக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஆதரவா வந்து ஒரு வார்த்தைச் சொல்றதை சாமி வேணாமுன்னு சொல்லுமான்னு மேரி கேக்கக் கொஞ்சம் விவாதம் போகுது.
கடைசியில் அவர் கோர்ட்டுக்கு வந்து குரானில் இருக்கும் விளக்கங்களையும், திருமணங்களில் பெண்ணுக்கு இருக்கும் உரிமைகளையும் சொல்றார். கூடவே சங்கீதம் அல்லாவுக்குப் பிடிக்காதுன்னு யார் சொன்னாங்க. இதுவரை அவதரித்த ஒரு லட்சத்து இருபத்திநாலாயிரம் மகான்களில் அல்லாவுக்கு விருப்பமானவர்கள் நாலே பேர்தான். மோசஸ், இயேசு, தாவீத், நபிகள் நாயகம். இதுலே சங்கீதம் பாடுனவர் தாவீதுன்னும் சொல்றார். இறைவனை இசை மூலமும் அடையலாம்.
படம் முழுசும் பார்த்தாலும் தெரிஞ்சமுகம் எனக்கு மௌலானா வாலி தான். நம்ம நஸ்ருதீன் ஷா.
மேரிக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்குது. சர்மத்க்கு சிறைவாசம். மேரியையும், 'துணைவி'யையும் கூட்டிப்போக அப்பா லண்டனில் இருந்து வர்றார். அப்பாவைப் பார்க்கவே வெறுப்பா இருக்கு மேரிக்கு.
கடைசியில் புறப்பட்டுப்போய் போர்டிங் பாஸ் எல்லாம் வாங்கிக்கிட்டுப் ப்ளைட்டுக்குக் காத்திருக்காங்க. மேரி, திடீர்னு மனம்மாறி, நான் இங்கேயே இருக்கப்போறேன். எனக்கான கடமை இங்கேதான் இருக்கு. என்னை இந்த இக்கட்டுலே இருந்து காப்பாத்துன நண்பன் dave க்கு நான் விளக்கமாக் கடிதம் போடுவேன். நீங்க போங்கன்னு சொல்லிடறாள்.
தாலிபான்காரர்களால் அடிச்சு நொறுக்கப்பட்டப் பள்ளிக்கூடத்தை மீண்டும் நடத்தப்போவதுதான் மேரி செய்யப்போகும் கடமை & சேவை.
மேரி/மரியமா நடிச்ச இமான் அலி, சில கோணங்களில் நம்ம ஷோபனாவை நினைவுபடுத்தறார்.
படத்தின் பெயர் குதா கே லியே (Khuda kay liye). In the name of God ன்னு ஆங்கிலத்தலைப்பு வச்சுருக்காங்க.

இந்தப் படம் சில அவார்டுகளையும் வாங்கி இருக்கு. அவை.
Honoured with the Roberto Rosselini award in Italy
Best film award at 31th Cairo International Film Festival
Best Foreign film award at Muscat Film Festival
கடவுள், மதம், நல்லது கெட்டது இப்படித் தெளிவில்லாம ஒரு குழப்ப நிலையில் இருக்கும் இளைஞர்களை, மதவெறியர்கள் எப்படியெல்லாம் மூளைச் சலவை செஞ்சு தப்பான வழியில் கொண்டுபோறாங்கன்னு சொல்லுது.
படம் பார்த்து முடிஞ்சதும் மனசுக்குள்ளேக் கொஞ்ச நேரம் பாரமா இருந்துச்சு.
மனுசன் வாழ்க்கை ஒரு ஒழுங்குலே நடக்கணுமுன்னு, வழிநடத்த ஒரு வழிகாட்டியா இருக்கணுமுன்னு உண்டாக்கப்பட்ட மதங்கள், இன்றைய நிலைமையில் மனிதத்தை அப்படியே மறக்கடிச்சு, மதங்களுக்காகவே மனுசன்னு ஆக்கிவச்சுக்கிட்டு இருப்பதைப் பார்த்தால்...............
மதங்கள் , மனுசனைப் பிடிச்சுக்கிட்டு, மனுசத்தன்மையைப் பழி வாங்கிருச்சோ......