
நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 6)
கடுகையும் கறுப்பு எள்ளையும் கலந்து ஒரு முறத்தில் போட்டுக் கொடுத்துருவாங்களாம். யாருக்கு?குட்டிச்சாத்தானுக்கு. அதுபாட்டுக்கு ஒரு மூலையில் உக்காந்து ரெண்டையும் தனித்தனியே பொறுக்கி எடுத்து வைக்குமாம். எல்லாத்தையும் செஞ்சு முடிச்சதும் தனித்தனியா இருக்கறதை மறுபடியும் ஒண்ணாக்கொட்டி அதுகிட்டே கொடுப்பாங்களாம். அப்படி ஒரு வேலையும் கொடுக்கலேன்னா............என்ன செய்ய? என்ன செய்ய? ன்னு கேட்டு ஆளைப் பிச்சு எடுத்துருமாம். இதை யாரோ கோபாலுக்குச் சொல்லிட்டாங்க போல. மறுநாள் வேலைக்குக் கிளம்பும்போது 'இங்கே கல்கி மந்திர்ன்னு ஒண்ணு இருக்காம்.அங்கே போயிட்டு வாயேன்'ன்னார்.
'டெல்லியிலே சுத்திப்பார்க்க இடமா இல்லை? இன்னிக்குக் கார் வேற இருக்காது. நீங்க எடுத்துக்கிட்டுப் போறீங்க. இங்கேயே பக்கத்துலே எங்கேயாவது போறேனே'ன்னு சொன்னதுக்கு, 'வாசல்லே டாக்ஸி இருக்கு.பேசாம அதுலே போயிட்டு வா. நல்ல சக்தி வாய்ந்த கோயிலாம்'ன்னார். என்னுடைய ப்ளான், இன்னிக்கு இங்கே இருக்கும் ஹரே கிருஷ்ணா கோயில். சரி, கல்கியைப் பார்த்துட்டுப் போகலாமுன்னு டாக்ஸி எடுத்தேன்.
பஞ்சாபி இளைஞர் டாக்ஸி ஓட்டிக்கிட்டே போறார் போறார், சுத்திச் சுத்தி எங்கெங்கேயோ போறார். மதுரா போற ரோடுலே நேராப் போனாலே நேரு ப்ளேஸ் வந்துருக்கும். கிழக்கு கைலாஸ் தாண்டி தாமரைக் கோயில் பக்கம் போனா ஆச்சு. ஆனாத் தொழிற்பேட்டை இருக்கும் பக்கமெல்லாம் கொண்டுபோய் காமிச்சுக்கிட்டு இருக்கார். ஏறும்போதே மீட்டர் இருக்குன்னு உத்திரவாதம் கொடுத்தவர்தான். சொந்த ஊர் எங்கேன்னு கேட்டதுக்கு லுதியானான்னு சொன்னப்பவே நான் புரிஞ்சுக்கிட்டு இருந்திருக்கணும்.
தலைநகரம், கனகம்பீரமா இருக்கும் தெருக்கள், எல்லாம் மாடர்ன் பியூட்டீஸ்ன்னு இருந்த காட்சி 'சட்'ன்னு மாறி ஒரு அறுதப் பழைய கிராமத்துக்கு வந்தமாதிரி இருக்கு. செம்மண் பூமி. சரியான பாதைகள் கூட இல்லை. இதுலே என்னை இறக்கி விட்டுட்டு இன்ஸ்ட்ரக்ஷன் வேற!
"யார் கிட்டேயும் பேச வேணாம். இப்படியே நேராக் கோயிலுக்குப் போயிட்டு வந்துரணும். நான் இங்கேயே காத்திருப்பேன். நான் போயிட்டா அவ்ளோதான். திரும்பிப்போக வண்டியே கிடைக்காது. பத்திரமாப் போயிட்டு வா ஆண்ட்டி"
என் மூஞ்சியில் இருந்த திகைப்பைப் பார்த்துட்டு .............
" வெயிட்டிங் சார்ஜ்கூட தர வேணாம்.இங்கேயே காத்திருக்கறேன்"
ஒரு சின்ன குன்றுமேலே கோயில் இருக்கு போல. அகலமான பாதைதான். கல் பாவி இருக்கு.
அங்கங்கே சின்ன ஏத்தம். ரெண்டு பக்கமும் கடைகள். எல்லாம் கோவில் சம்பந்தபட்ட சாமான்கள்.வளையல்களாக் குவிச்சு வச்சிருக்காங்க. சிகப்புக் கயிறுகள் கொத்துக் கொத்தா தொங்குது. வெள்ளையா பாப்கார்ன் பொறிச்சதுபோல இருக்கும் இனிப்புவகைகள் இருக்கு. சாமிக்குப் படைக்க வாங்கிக்கிட்டுப் போறாங்க மக்கள்ஸ்.
கடைக்காரர்களே செலவு செஞ்சு போட்டுக்கிட்ட பாதையோ என்னவோ சில இடத்துலே அலங்காரமா டைல்ஸ் கூட பதிச்சு இருக்காங்க. கடைகடைக்குப் பக்திபாட்டு முழங்குது. எல்லாம் சேர்ந்து கலந்துகட்டியாஒரு இரைச்சல். இதுலே கடைக்காரர்கள் போறவர்றவங்களைக் கூவிக்கூவி கூப்புடறாங்க. எதோ திருவிழா சமயம் திருத்தணியிலே இருக்கறமாதிரி ஒரு தோணல்.
பக்கா கிராமத்து ஜனங்கள். பதினைஞ்சு இருபது நிமிஷத்துலே டெல்லின்னு ஒரு இடம் இருக்குதுன்னுகூடத் தெரிஞ்சிருக்குமோ என்னவோ?
படியேறிப்போனேன். பாதுகாப்பு, பரிசோதனைகள் இப்படி ஒண்ணுமே இல்லை. படிச்சவுங்க இருக்கற இடத்துலேதான் ஆபத்து இருக்கும்போல. கோயிலில் கூட்டமான கூட்டம். ஆரஞ்சு நிறத்துலே மெழுகிவச்ச ஒரு பெரிய பாறை. இதுதான் கல்காஜி. சுயம்பு. சுத்திவந்து கும்பிடலாம். ஆனா சுத்தவிடாம வழியை மறைக்கிற மாதிரி பலர் நின்னுக்கிட்டு இருக்காங்க. அவுங்க முழங்கைவரை சிகப்புக் கயிறுகள். அதுலே இருந்து ஒவ்வொண்ணா எடுத்து ஜனங்கள் கையிலே மணிக்கட்டுலே கட்டுறாங்க. கட்டிக்கிட்டவங்க அவுங்களுக்குக் காசு கொடுக்கறாங்க.பயங்கரப் போட்டா போட்டி யாரு கட்டுறதுன்னு. 'கட்டிக்கோ கட்டிக்கோ'ன்னு என்னைப் பார்த்து கூச்சல். 'நஹி நஹி'ன்னுசொல்றதைப் பார்த்து, 'சாமிக் கயிறை வேணாங்குது! இப்படியும் ஒரு ஜென்மமா?'ன்னு ஒரு பார்வை. ஒரு மாதிரி சமாளிச்சு வெளியே வந்து அந்தச் சின்னக்கோயிலை வலம் வந்தேன். அங்கே ஒரு வாசல் போல வெளிச்சம் தெரிஞ்சது.
அதுக்குள்ளே எட்டிப் பார்த்தால்................ ச்சின்னதா ஒரு ஷாமியானா போட்டு வச்சிருக்கு. திண்டுதிம்மாசுன்னு சிலது கிடக்கு. அதுலே சரிஞ்சாப்புலே சாய்ஞ்சு உக்கார்ந்துருக்கார் தாடியும் மீசையுமா ஒரு பெரியவர். தலையெல்லாம் சடைசடையா இருக்கு. அதுலே ஒரு தலைப்பாகை. சிகப்புக் கலருலே ஒரு கோட்டுமாதிரி போட்டுருக்கார். அவருடைய வலதுகையிலே ஒரு உடுக்கை. முன்னாலே ஒரு பெரிய தாம்பாளத்துலே குங்குமம் நிரம்பி இருக்கு. உடுக்கையை அப்பப்பஆட்டிக்கிட்டு இருக்கார்.'
ட்டூஊஊஊஊங்.....டுமுரு... டுமுரு.. டுமுரு.. டுமுரு.. ட்டூஊஊஊஊஊஊங்'
ஜனங்க அவர் காலுலே வுழுந்து கும்புடுது. ஒருகையாலே குங்குமத்தை வாரி அவுங்க நெத்தியிலே பூசறார். காணிக்கையை அவர்முன்னாலே இருக்கற இன்னொரு தட்டுலே போடறாங்க.
'டமரு வாலா லால் பாபா'ன்னு அந்த ஷாமியானாவுலே ஒரு பேனர் எழுதித் தொங்குது.
எதையுமே நம்புனாத்தான் தெய்வம். மக்கள் முகத்துலே இருந்த பரவசமே அவுங்க நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காமிக்குது. கள்ளமில்லாத கிராமத்து மக்கள். கும்பலாக் குழந்தையும் குட்டியுமா சந்தோஷமாச் சிரிச்சுப் பேசிக்கிட்டு உக்கார்ந்திருக்காங்க. பிள்ளைங்க கோயிலைச் சுத்திச்சுத்தி ஓடிவிளையாடுதுங்க. இது ஒரு புது அனுபவம்தான்னு கீழே இறங்கி வந்தேன். நண்டும் சிண்டுமாப் பசங்க கூடவே ஒட்டிக்கிட்டு வருதுங்க காசு கொடு காசு கொடுன்னுக்கிட்டு.
க்யான்சிங் டாக்ஸியிலே தூக்கம். அங்கே இருந்து இஸ்கான் போனோம். வழக்கம்போலவே(!!) வெயிட் பண்ணறேன்னு சொன்னவர்கிட்டே,'வேணாம். நீங்க போகலாம். எனக்கு நேரமாகும்'னு சொன்னாலும் கேக்கற மாதிரி இல்லை. 'எனக்கு வெயிட்டிங் சார்ஜ் வேணவே வேணாம். ச்சும்மா இங்கே காத்திருக்கறேன்'. இதென்னடா வம்பாப்போச்சு. கணக்கைச் சொல்லுப்பா........ன்னு கெஞ்சறேன். 350 ரூபாய் ஆச்சு. 'மீட்டர் த்தோ பராபர் ஹை'.500 ரூபாய் நோட்டு எடுத்துக் கொடுத்தால் பாக்கி 100 ரூபாய் தரார். இன்னும் 50? 'எனக்கு இனாம் தரக்கூடாதா? பாக்கி அந்த அம்பதைக் கண்டிப்பா வேணுமுன்னா தரேன். இனாம் வச்சுக்கோன்னு சொன்னா வச்சுக்கறேன்'
தப்பிச்சாப்போதுமுன்னு இறங்கி ஓடுனேன் கோயிலைப் பார்த்து. இந்த ஹரே கிருஷ்ணா கோயிலும் ஒரு குன்று மேலேதான் இருக்கு. பிரபலமான இடங்களைப்போல இங்கேயும் பாதுகாப்புக்காக எலெக்ட்ரானிக் கேட் வச்சிருந்தாங்க. ஆனா தடவல்கள் இல்லை. கைப் பையை மட்டும் திறந்து காமிச்சாப் போதும். கோயிலுக்குள்ளே ஒரு குழு பஜனை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. மூணு மாடங்கள் அமைச்சு விக்கிரகங்கள். எல்லாமே
பளிங்குச்சிலைகள். அதுலே அந்த ராமர், லக்ஷ்மணர், சீதாவுடன் அமெரிக்கையா உக்கார்ந்துருக்கற அனுமார் கொள்ளை அழகு.உயிரோட்டமான கண்கள். ச்செல்லம்போல இருக்கார்.
இங்கே படம் எடுத்துக்கலாமுன்னு சொன்னாங்க. கோயில் வாசலில்வெளி முற்றத்தில் ஒரு கருடாழ்வார் சிலை. அமர்க்களமா இருக்கு. ராதா பார்த்தசாரதின்னு ஒரு விக்கிரகம் தாடி மீசையோடுஇருக்கு.(படம். பதிவின் ஆரம்பத்தில்)
கொஞ்சம் கீழே அஞ்சாறுபடி இறங்கிவந்தா, இன்னொரு பகுதியிலே வீடியோ படம் காமிக்கிறாங்க. ஆரம்பிக்கப்போறாங்க,உள்ளே வர்றீங்களான்னு ஒருத்தர் கேட்டார். பக்திப்படம் பார்க்கலாமுன்னு நினைச்சாலும், இப்ப வேணாமுன்னுமுடிவு செஞ்சுட்டேன்.
கொஞ்சம் உயரமான குன்றுமேலே எழும்பி இருக்கும் கோயில். குன்றின் அமைப்பையொட்டி ஒவ்வொரு நிலையிலும் ஒரு கட்டிடமா இருக்கு. புத்தகம், போஸ்ட்டர்கள் , ஜெபமாலைகள், துளசிமணிமாலைன்னு விக்கற கடைகள், பக்கத்துலேயேசிற்றுண்டி வியாபாரம். வாசலிலே ஒரு மேஜை போட்டு ஒலிஒளி, ஃபிலிம்ஷோ அறிவிப்பு செஞ்சுக்கிட்டே, ச்சின்னதா நினைவுப்பொருட்களாக கண்ணன் படம் போட்ட கீ செயின், நெத்திக்கு இட்டுக்கும் கோபிச்சந்தனம் வகையறாக்களை விற்கும் இடம், அங்கங்கே நின்னு அக்கம்பக்கத்து வியூக்களை பார்க்கும் விதமான விசாலமான காலி இடங்கள்,ஏற்றவும் கீழ் தளத்துலே 'கோபால்ஸ் ரெஸ்டாரண்டு'ன்னு சாப்பாட்டுக் கடை இப்படி நல்லாதான் கட்டி இருக்காங்க.
நேத்து ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடந்துச்சே அதைப் பத்தி யோசிச்சுக்கிட்டே படிகள் இறங்கிவந்து உள்ளே எலெக்ட்ரானிக் கேட் (எப்படியும் இதைத் தாண்டித்தானே வரணும்?)அருகே இருக்கும் கட்டைச்சுவரில் உக்கார்ந்து நண்பருக்காகக் காத்திருந்தேன்.இன்னிக்கும் நடக்கப்போவது ஒரு வலைப்பதிவர் சந்திப்பு!
தொடரும்..........