Wednesday, November 30, 2016

ஆளாளுக்கு விதியை மாத்தறேன்னு கூப்ட்டா எப்படி? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 102)

கோவில் திருப்பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. சின்னக்கோவில்தான். வரம் தரும் வரதராஜர்! கோபுரவாசலைத் தாண்டி உள்ளே போனதும்  பலிபீடம் கொடிமரம். சின்ன மண்டபத்தில் பெரிய திருவடி.  கண்ணுக்கு நேரா இருக்கும் வாசலில் நுழைஞ்சால்   சின்ன  முன்மண்டபத்தோடு  கருவறை!  அம்பூட்டுதான்.
பட்டாச்சாரியார், ஜாதகம் கொடுங்கன்னு கை நீட்டுனார். எனக்கு ஒன்னும் புரியலை. எதுக்கு? மொதல்லே எனக்கு ஜாதகமே இல்லையே.....  நம்மவருக்கு இருக்குன்னாலும் அதெல்லாம் ஊருலே மாமியார் வச்சுருந்தாங்க. அவுங்க டைம் முடிஞ்சாட்டு, இப்ப யார்கிட்டே இருக்கோ?
நமக்குப் பின்னாலேயே வந்த இன்னொரு குடும்பம்  பையில் இருந்து  ஒரு  காகிதம் எடுத்து நீட்டுனாங்க.  ஜாதகம் ! அதை வாங்குன பட்டர் சாமியின் காலடியில் கொண்டு போய் வச்சுட்டு,  அவுங்க கொண்டு வந்துருந்த தேங்காய் பழம் பூ  எல்லாத்தையும் ஒரு தாம்பாளத்துலே வாங்கிப்போய் தேங்காயை உடைச்சுட்டு, அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சார்.  கற்பூர ஆரத்தி ஆச்சு. நாங்களும் கும்பிட்டுக்கிட்டோம்.

ஜாதகத்தைத் திரும்ப அவுங்களிடம் கொடுத்த பட்டரிடம், என்ன ஏதுன்னு விவரம் கேட்டேன்.  'இவர் வரம்தரும் வரதராஜர். அதனால் நமக்கு நம்ம விதிப்படி என்ன கஷ்டம் இருந்தாலும், நம்ம ஜாதகத்தை இங்கே பெருமாள் காலடியில் வச்சு வணங்கினால்  அதை நல்லபடியா மாத்தி நாம் கேட்கும் வரத்தை அருள்வார். எண்ணி நாப்பத்தியஞ்சு நாளில் நல்லது நடக்கும். ஆனால்....  நாம் கேட்கும்  வரம் நியாயமானதா இருக்கணும்'  என்றார்.
  கோவில் மதில்சுவரில்கூட வரம்தரும் பெருமாள்னுதான் போட்டுருக்காங்க.
வெளியே படம் எடுத்துக்க அனுமதி வாங்கிக்கிட்டு வலம் ஆரம்பிச்சோம்.
பின்பக்கம்  ஒரு பெருமாள் நின்ற கோலத்தில் இருக்கார்.  தலைக்கு மேல் ஒரு தென்ன ஓலையில் தட்டுப் பந்தல்!

ஐயோ.... என்னத்துக்கு இப்படிப் பெருமாள்,  கோவிலின் பின்புறம் தனியா நிக்கறார்?  அதுவும் ஓலைப் பந்தலுக்கடியில்?

இப்போ  தலைக்கு மேலே  ஒரு கூரையாவது இருக்கு. ரொம்ப நாளுக்கு முன்னால்   வானமே கூரையாத்தான்  இருந்தாராம்.......   அதான்... ஏன் இப்படி?

கோவில் சங்ககாலத்துலே இருந்தே  இருக்கு. பெருமாளும் அப்போதே இருந்துருக்கார். பிறகு எட்டாம் நூற்றாண்டுலே இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கோவிலை நல்லபடியாகக் கட்டிக் கொடுத்துருக்கார்.  எல்லாம் சில நூற்றாண்டுகள்தான்.....  பிறகு  சிதிலமடைய ஆரம்பிச்சது.  சடையவர்மன் வீரபாண்டியன்  சரி செஞ்சு கொடுத்துருக்கார்.  அப்பெல்லாம் சாமி புருஷோத்தமன் தானாம்.

அதுக்கப்புறம்  நாயக்கர்   ஆட்சி காலத்தில்   வரதராஜரா திரும்பப் பிரதிஷ்டை ஆகி இருக்கு.  அட! அப்ப புருஷோத்தமன் என்ன ஆனார்? இப்போ எங்கே?
காலப்போக்கில் என்னென்னமோ ஆகிப்போய்  வரம் தரும் வரதராஜர் இங்கே ஸ்திரம் ஆனார்.

நான் நினைக்கிறேன்...  அப்பெல்லாம் சிவ வைணவ பேதங்களும் சண்டைகளும் அதிகமா இருந்துருக்கலாம். பக்கத்துக் கோவிலில் சைவர்களுக்காக,   பிரம்மனின் தலை விதி மாத்திய ப்ரம்மபுரீஸ்வரர், ப்ரம்மனிடம் பொறுப்பை  ஒப்படைச்சுட்டு இருக்கும்போது,    வைணவர்கள் மட்டும்  தங்கள் தலை விதியை மாத்திக்க எங்கே போவாங்களாம்?
அதுக்குத்தான்  உங்களுக்கு உங்க சாமின்னா எங்களுக்கு  எங்க சாமின்னு  வரதராஜர் எண்ட்ரி ஆனது!    அங்கே வெறுமனே விதியை மாத்திதான் எழுதுவாங்க.  என்ன எழுதறாங்களோ அது ப்ரம்மனின் இஷ்டம்.  ஆனால் இங்கே  .....  நாம் எப்படி இருக்க ஆசைப்பட்டு வரம் கேக்கறமோ  அதை  உடனே  நாப்பத்தியஞ்சு நாட்களில் நிறைவேத்தி வைக்கும் வரம் தரும் பெருமாள். த சாய்ஸ் இஸ் அவர்ஸ்!
இருக்கட்டும்... இருக்கட்டும்  அந்த புருஷோத்தமர் அப்புறம் என்ன ஆனார்?  அடடா.... அவர்தாங்க இங்கே வெளியே நிக்கறார்!
அடப்பாவமே....  அவரையும் கருவறையிலேயே வச்சுருக்கக்கூடாதா?  அது எப்படி?

கோவில் ஒருமுறை சிதிலமாப்போய் இடிஞ்சு விழுந்ததில்  மூலவர் சிலை பின்னப்பட்டுப் போயிருச்சு.    பின்னமான சிலையை  கும்பிடக்கூடாதுன்னு   அதை எடுத்துட்டுப் புதுப்பெருமாளை வச்சுருக்காங்க. பெயர் மாற்றமும் அப்போதான் வந்துச்சோ என்னவோ?

எனக்குப் பெருமாள் வெளியே அம்போன்னு நிக்கறதைப் பார்த்து மனசுக்கு ஆறலை. சாமி நம்ம குழந்தை மாதிரி. குடும்பத்தில் ஒருவர். அப்படி நினைச்சுதானே அபிஷேகம், அலங்காரம், நைவேத்யம் எல்லாம் செய்யறோம். காலையில் எழுப்பி விட்டு, விஸ்வரூபம்னு ஆரம்பிச்சு  பகலெல்லாம் உச்சி பூஜை, சாயரக்ஷைன்னு கொண்டாடி,  ராத்ரியில் அர்த்தஜாம பூஜை நடத்தி, அதன்பின்  பள்ளியறையில் தூங்க வச்சுன்னு  என்னெல்லாம் செய்யறோம்! குடும்ப நபராக் கொண்டாடறோமா  இல்லையா?

நம்ம குடும்பத்தில் நம்ம  நெருங்கிய சொந்தத்துக்கு  எதோ விபத்தில் எதாவது அங்கம் பழுதாகிப்போனால்.... அப்படியே வீட்டை விட்டு விரட்டிடறோமா?  இல்லே வயசாகிப்போய் படுக்கையில் விழுந்துட்டா, தூக்கி எறிஞ்சுடறோமா?  அவுங்க காலம் முடியும்வரை கூடவே வச்சுக் காப்பத்தறோமா  இல்லையா?  அப்படி மனுசருக்கே செய்யும்போது, பின்னமான சிலைன்னு வெளியே போட எப்படி மனசு வருது?
திரும்ப ஓடிப்போய்ப் பெருமாளைப் பார்த்தேன்.....  என் ஊனக்கண்களுக்கு ஒரு பின்னமும் தெரியலை!  இருந்தாலும் பொருட்படுத்த மாட்டேன்றது.....  வேற.  'இருக்க இடமில்லை. ஆனால் அலங்காரம் பண்றேன்னு,  எனக்கு லிப்ஸ்டிக் போட்டுட்டா பாரேன்' என்றார் :-)

 'எனக்கு ஒரு கோவில் கூட தனியா   வேணாம். ஒரு சந்நிதி மட்டும் கிடைச்சாலும் போதுமுன்னு  நீர்  உள்ளே இருப்பவரிடம் வரம் கேட்டுக்கிட்டால் நல்லது'ன்னு  அவர்கிட்டே சொல்லிட்டு, நானும்  உள்ளே இருப்பவரிடம் என் விண்ணப்பத்தை கொடுத்தேன்.

இத்தனை களேபரத்திலும் நம்மை பற்றிக் கொஞ்சம் உயர்வாச் சொல்லி ஒரு போர்டு(ம்)  வச்சுருந்தாங்க!
 கூடவே  வரம் தரும் வரதராஜருக்கும் தேவிகளுக்குமா ஒரு அஷ்டோத்ர  நாமாவளி  எழுதி வச்ச போர்டும்!
ஆலயத் திருப்பணிக்கு  தாராளமா கைங்கரியம் பண்ணச்சொல்லி  ஒரு விண்ணப்பம். அதையடுத்து, 'எங்கிட்டே ஒத்தைப் பைஸா கிடையாது!  பெருமாளே கதி' ன்னு ரெண்டு உயிர்கள்.  க்ளிக்கினபோது  சின்னது  லேசா ஒரு கண்ணைத் திறந்து பார்த்தது :-)

உள்ளே கோவில் வாசலை  ஒட்டி ஒரு மேஜையில் அரிசி, பருப்பு  வகைகள், கொஞ்சம் மளிகை சாமான்கள் எல்லாம் ஒரு கிலோ, அரைக்கிலோ, 100 கிராம், இப்படிப் பொட்டலங்களா இருந்துச்சு. பட்டாச்சார்யார்  இதுலே எது விருப்பமோ அதைப் பெருமாளுக்குக் கொடுக்கலாம். இதோ இந்தக் கூடையில் போடுங்கோன்னார்.  அடப்பாவமே............  பெருமாளுக்கே இந்த கதியா?  ஒரு நாலைஞ்சு வகைகளை எடுத்துக் கூடையில் போட்டுட்டு, அதுக்குண்டான காசை பட்டரிடம் கொடுத்ததும் ரசீதும் கொடுத்தார்.
கூடவே  இங்கே பௌர்ணமியில் நடக்கும் சுதர்ஸன  ஹோமம் ரொம்பப் பிரசித்தம்னு அதுக்குண்டான நோட்டீஸையும் கொடுத்தார்.  வாங்கி வச்சுக்கிட்டேன்.
ரமேஷ் பட்டாச்சாரியாரின் பொறுமைக்கும், அயராமல் பக்தர்களுக்கு உதவி செய்யும் குணத்துக்கும், முக்கியமா சிரிச்ச முகத்துக்கும்,  கோவில் விவரங்களைக் கேட்டவுடன்  சலிச்சுக்காமல் சொன்ன  பண்புக்கும் நன்றி சொல்லிட்டு, நல்ல  பட்டர் கிடைச்சுருக்கார். விட்டுடாதேன்னு  'அவனுக்கும்'  சொல்லிட்டுக் கிளம்பினேன்.
வரம்தரும் பெருமாளுக்கே....  இப்படி ஒரு பட்டர் கிடைக்கலைன்னா.....   அவர் கதி இன்னும் மோசமா ஆகி இருக்கும் போல!  போகட்டும்  அவர் கொடுத்த நோட்டீஸை ஸ்கேன் செஞ்சு இங்கே போட்டுருக்கேன். யார் கண்ணிலாவது பட்டு, எதாவது நடக்காதா என்ற நப்பாசைதான் எனக்கும்.....
இன்னொன்னு சொல்லணும்....  பெருமாள் தனக்குத்தானே வரம் தந்துக்கப்டாதான்னு   கேக்கப்டாது, கேட்டோ! பொறத்தியாருக்குத்தான் பலிக்கும். தனக்காக வேண்டினால் பலிக்காதுன்ற நியமம் வைகுண்டத்தில் இருக்கலாம்! யார் கண்டது?
அடுத்தாப்லே ஒரு அம்மன் கோவில் இருக்கு. நமக்கு  நேரம் கொஞ்சம் டைட் இப்போ என்பதால்  வெளியே இருந்தே போறபோக்கில் ஒரு கும்பிடு .


கட்டாயம் போக வேண்டிய அடுத்த கோவிலுக்கு ஓடணும். இன்னும் பனிரெண்டாக  இருபது நிமிட் தான் இருக்கு......... கோவில்  மூடறதுக்குள்ளே..........  போயிடணும்.....

தொடரும்...........  :-)


Monday, November 28, 2016

எனக்கும் புது வாழ்வு. தேடிவந்தால் உமக்கும் புதுவாழ்வு ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 101)

மூணே நிமிசத்தில்  பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். திருப்பட்டூர் ஸ்ரீப்ரம்மபுரீஸ்வரர். சிவன் கோவில்தான். ஆனால் ப்ரம்மாவுக்குத் தனியாக ஒரு சந்நிதியே இருக்கு!  ப்ரம்மன் வந்து சிவனை வழிபட்ட தலம்!   கைலாயத்தை விட்டுட்டு எதுக்கு ப்ரம்மன் பூலோகத்துக்கு வந்து சிவனைக் கும்பிட்டுத் தவம் செய்யணுமாம்?
ஆதிகாலத்தில், சிவனைப்போல்  ப்ரம்மனுக்கும் அஞ்சு தலை!  ஸேம் ஸேமா இருப்பதால் தானும் சிவனும் ஒன்னு போலன்னு கொஞ்சம் ஆணவம் வந்துருச்சு ப்ரம்மனுக்கு.  மேலும்  ரெண்டு பேர் அஞ்சு தலையோடு உலாவினால் நம்ம பார்வதிக்கும் சின்ன கன்ஃப்யூஷன் வந்துருக்காதோ?

கர்வம் வந்தவுடன், மட்டு மரியாதை இல்லாம  நடத்தை மாற ஆரம்பிச்சதும், சிவனுக்கு எரிச்சல். சட்னு   கை விரல் நகங்களால்  ஒரு தலையைக் கிள்ளி எடுத்தார்.  கையோடு வந்த தலையைத் தூக்கிப் போடலாமேன்னு  கையை உதறினால்.........   தலை விழுந்ததோ? ஊஹூம்.... விரலோடு ஒட்டிப் பிடிச்சுக்கிட்டு அப்படியே இருக்கு.   கையை எங்கே போய் ஒளிச்சு வக்கிறது?  போதாததுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் வேற பிடிச்சுக்கிட்டது அவரை.

அந்தத் தலையோடு  எங்கே போனால்  தோஷம் நிவர்த்தியாகுமுன்னு  ஊர் ஊரா அலைஞ்சுக்கிட்டு, கோவில் கோவிலாப்போய் தரிசனம் செஞ்சுக்கிட்டு இருக்கார் சிவன்.  நாளாக ஆக ஆக  கையில் ஒட்டுன தலை  அப்படியே தோலெல்லாம் சுருங்கி விழுந்து  வெறும் மண்டை ஓடு ஆச்சே தவிர கையை விட்டுப் போகலை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்றபடி  அதையே பிக்ஷை  பாத்திரமா வச்சுக்கிட்டு இரந்துண்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கார்.

ஒரு சமயம் புருஷோத்தமப் பெருமாள் கோவிலுக்கு  வர்றார்.  இந்தக் கோவில்தான் திருச்சிக்குப் பக்கம் இருக்கும் பிக்ஷாண்டவர் கோவில் என்ற உத்தமர் கோவில்!  இங்கே மகாலக்ஷ்மித் தாயார்,  கபாலப் பாத்திரத்தில் பிக்ஷை இடவும்,  கபாலம் சட்னு  விரலை விட்டு கழண்டு வெளியே விழுந்துருச்சு. பெருமாளின் கருணையை நினைச்சு  தாயாரையும் பெருமாளையும் வணக்குனதும் ப்ரம்மஹத்தி தோஷமும் போயிருச்சுன்னு  புராணக் கதை சொல்லுது.

இது இப்படி இருக்க, ப்ரம்மனின் தலையைக் கிள்ளின கையோடு, 'இவ்ளோ கர்வமா உமக்கு? இனி உம்மை  படைக்கும் தொழிலில்  இருந்து  சஸ்பெண்ட் செய்யறேன்'னு  வேற சொல்லியதால்... ப்ரம்மனுக்கு வேலையும் போச்சு :-(

அடடா....  இப்படி  ஆணவத்தோடு நடந்துக்கிட்டேனேன்னு மனம் வருந்தியும்,    போன உத்யோகம் திரும்பக்கிடைக்கணும் என்பதற்காகவும், பூலோகத்தில் வந்து  தவம் செய்யறார் ப்ரம்மா. இப்போ நாம் திருப்பட்டூர்னு சொல்லும் திவ்ய பூமியில்  பனிரெண்டு  லிங்கங்களைத் தானே தன் கையால் பிரதிஷ்டை செய்தும், பதினாறு பட்டையுடன் கூடிய ஷோடசலிங்கத்தையும் ஸ்தாபிச்சு தவத்தில் உக்கார்ந்துட்டார்.  பூஜை , அபிஷேகம் எல்லாம் செய்ய தண்ணீர் வேணாமா? ஒரு சின்ன குளத்தையும் நிர்மாணிச்சுட்டார். இதுதான் ப்ரம்ம தீர்த்தம்.

  பொதுவாப் பெண்களுக்கு ரொம்பவே இளகிய மனசு!!!  அம்பாள்  தவம் இருக்கும் ப்ரம்மனைப் பார்த்து மனம் இளகி,  சிவபெருமானிடம் , 'இரக்கம் காட்டுங்கோ'ன்னு  பரிந்துரைக்கவும்,  'மனைவி சொல்லுக்கு மரியாதை'ன்னு   சிவபெருமான் அங்கே ப்ரம்மனுக்குத் தரிசனம் கொடுத்துட்டு, சஸ்பென்ஷன் ஆர்டரை வாபஸ் வாங்கினதோடு,  'உமக்கு விதியை மாற்றி எழுதும் பவர் ஒன்னு கூடுதலாக் கொடுக்கறேன். நல்லவங்களாவும், பாபக் கணக்கு  கொஞ்சூண்டு இருந்து,  அதை நினைச்சு வருந்துபவர்களாகவும், தெய்வபக்தி உடையவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய தலையெழுத்தை மாற்றி எழுதிக்கலாம். ஆனால் இந்த  பவரை மிஸ் யூஸ் பண்ணாம கவனமாப் பார்த்து உம் வேலையைச் செய்யும்' என்றும் சொன்னார்.

தனக்குக் கிடைச்ச புது வாழ்வு அடுத்தவங்களுக்கும் கிடைக்கட்டுமே! ப்ரம்மாவுக்கு மகிழ்ச்சி!

'வேறெங்கேயும் போக வேண்டாம். இங்கேயே என் பக்கத்தில் இருந்து உம் பணியைத் தொடங்கலாம்'னும்  சொல்லிட்டார்.  அங்கேயே ப்ரம்மனுக்கு அருள் புரிந்த  ப்ரம்மபுரீஸ்வரரும், ப்ரம்மனுக்கு மீண்டும் பதவி கிடைக்கக் காரணமாக இருந்த  அம்பாள்  ப்ரம்மசம்பத்து கௌரி என்னும் ப்ரம்மநாயகியும் கோவில் கொண்டாங்க. கூடவே ப்ரம்மனும் பக்கத்துலேயே தனி சந்நிதியில் அமர்ந்து தன்னுடைய பணியை மீண்டும் தொடங்கிட்டார்னு தலவரலாறு!

'அன்றெழுதின எழுத்தை அவனே வந்தாலும் திருப்பி எழுத முடியாது'ன்னு  எங்க அம்மா சொல்லிக்கிட்டு இருந்தது இப்போ எனக்கு நினைவுக்கு வருது. அடடா.... இதைச் சொல்லிக் கொடுத்தவங்க,  இந்தக் கோவில் விவரம் சொல்லலை பாருங்கன்னு......  ப்ச்.... அவுங்களுக்குத் தெரிஞ்சுருக்காது...  இல்லைன்னா  இப்படி ஒரு வழி இருக்குன்னு தெரிஞ்சா யார் சும்மா இருப்பாங்க?
அழகான அஞ்சு நிலை ராஜகோபுரத்துக்கு முன்னால் ஒரு வெளி மண்டபமும் அதுக்கொரு நுழைவு வாசலுமா இருக்கு இந்தக் கோவில். மண்டபம் கடந்து உள்ளே போறோம்.  கொடிமரம், பலிபீடம் அடுத்து  மூலவரைப் பார்த்தபடி நந்தி. அவருக்கு ருத்ராட்சக் குடை !


கோவில் விவரங்கள் எல்லாம் அறநிலையத் துறையினர் வச்ச தகவல் பலகையில் இருக்கு!

கோவில் அலுவலகத்தில் கேட்டதும்   படம் எடுத்துக்க அனுமதி கொடுத்தாங்க.
கொஞ்சம் பெரிய  கோவிலாகத்தான் இருக்கு! முன்மண்டபங்களும், வாகன மண்டபங்களும் ரொம்பவே  பெருசுதான்!




முதலில் ஸ்ரீப்ரம்மபுரீஸ்வரரை வணங்கிட்டு, ப்ரம்மா சந்நிதிக்குப் போனோம். கூட்டமெல்லாம் இங்கேதான். நல்ல பெரிய திருவுருவம்.  அஞ்சடிக்குக்  குறையாது!    நாலு தலைகளுடன்  மஞ்சள் காப்பில் இருக்கார். கையில் கமண்டலமும் அட்சமாலையும் உண்டு.  தாமரையில் அமர்ந்த திருக்கோலம்!
  மேலே :   கோவிலில் வாங்கிய படம்.

நவகிரகங்களில் குரு பகவானுடைய தேவதை ப்ரம்மா என்பதால்  மஞ்சள் காப்பு, மஞ்சள் வஸ்த்திரம் எல்லாம் பிரதானமாம்.  மஞ்சள்தான் ப்ரசாதமாக் கொடுக்கறாங்க. அதை  வாங்குன கையோடு  நெத்தியில் வச்சது போக பாக்கி இருப்பதை சனம் சுவரில் தடவிட்டுப் போகுதேன்னு கையைத் துடைக்க ஒரு துணியை வச்சுருந்தாலும்..... சுவரில் தடவுவதே விசேஷமுன்னு  சனம் நினைக்குது :-(


இங்கே மட்டும் சந்நிதிக்கு நேரெதிரா நின்னு கும்பிடுவது விசேஷமாம். அப்பதானே ப்ரம்மாவின் கண்பார்வையில் நாம் படுவோம் என்று காரணம் சொன்னாங்க. அப்ப பக்கவாட்டில் இருக்கும் முகங்கள்?
நமக்கிடது பக்கம் ஒரு மண்டபம் ரெண்டுமூணு படி ஏறிப்போகும் உயரத்தில் இருக்கு. இது பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி இருக்கும் இடமாம்.  பதஞ்சலி  முனிவர் படம் ஒன்னு!  எலும்பும் தோலுமா இருக்கார்! தரையில் ஒரு இடத்தில் விளக்கு வச்சுருந்தாங்க.  அந்த மண்டபத்துலே சுத்திவர வெவ்வேற முனிவர்களின் சித்திரங்கள். பொதுவா நான் ஃப்ளாஷ் பயன்படுத்துவதில்லை. அதிலும் கோவில், நிகழ்ச்சிகள் என்றால்  வர்ற அளவு வரட்டும் என்றுதான் இருப்பேன்.  முகத்தில் வெளிச்சம் பாய்வது எனக்கு சம்மதமில்லை என்பதே காரணம். அதனால் போதிய வெளிச்சம் இல்லாததால் படங்கள் கொஞ்சம் மசமசன்னு வந்துருக்கு.



ஒரு பத்து நிமிட் போல அங்கே உக்கார்ந்து தியானம் செய்ய முயன்றேன். மக்கள்ஸ் குறுக்கும் நெடுக்குமா நடந்து போவதுடன், சின்னப்பசங்க ஓடி விளையாடிக்கிட்டு இருந்ததால்...   மனம் ஒருமுகப்படலை :-(

அதே மண்டபத்தின் ஒரு பக்கம் சப்தமாதாக்கள்!
மயில்வாகனத்தில் சுப்ரமணியர், ரெண்டு பக்கங்களிலும் தெய்வானை வள்ளியுடன்!  முருகனே வந்து  சிவனை வணங்கிய கோவிலாம்!
பாதாள ஈஸ்வரர்ன்னு ஒரு சந்நிதி!

காலபைரவருக்கு தனியா ஒருசந்நிதி.  இவர் ஒரு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்!  தூக்கத்தில் பயந்து அழும் குழந்தைகளை இங்கே கொண்டுவந்து இவருக்கு ஒரு  விளக்கு வச்சு நமஸ்கரித்தால் போதும்.  இதுதான் ஃபீஸ். குழந்தைக்கு சரி ஆகிருதாம்!  நம்பணும். நம்புனால்தான் சாமி!

அடுத்தாப்லே பக்த நந்தியார்! மனைவியுடன்  இருக்கார்! சாமுண்டி, சன்டிகேஸ்வரர்ன்னு  அங்கங்கே!

அம்பாள்  ப்ரம்மசம்பத் கௌரிக்குத் தனியா ஒரு பெரிய சந்நிதி  இருக்கு. தனிக்கோவில்னு சொல்லலாம்.

வளாகத்துலே ஒரு கம்பி கேட் போட்ட வாசலுக்குள் போறோம். கோவில் நந்தவனமா இருக்குமுன்னு நினைச்சேன்.  ஆனால் துவாதச லிங்கங்களில் (12 லிங்கங்கள்) தச லிங்கங்கள்  தனித்தனி சந்நிதிகளா இருக்கு இங்கே!  பாக்கி ரெண்டு லிங்கங்கள்  கோவிலுக்குள்ளேயே    மூலவராகவும், பாதாள லிங்கேஸ்வரருமா இருக்காங்க.





கோவில் தீர்த்தமான  ப்ரம்ம தீர்த்தம், இறங்கிப்போக படிகளுடன்   இங்கே!  கரையில் நான்முகர் இருக்கார்.  கோவில் தலவிருட்சமான மகிழமரத்து நிழலில் பக்தர்கள் உக்கார்ந்துருந்தாங்க. பிக்னிக் வந்துருக்கும் மூட்! எல்லா சந்நிதிகளிலும் போய் வந்துக்கிட்டே இருக்காங்க.




மொத்த சந்நிதிகளிலும் கைலாசநாதர் சந்நிதி....   (கோவில் என்றே சொல்லலாம்!) அழகோ அழகு!  நம்ம மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் டிஸைனேதான். எதிரில் கொஞ்சம் பெரிய நந்தி!  பல்லவர்கள் கட்டியதாம்!
இங்கே உள்ளே பழுது பார்க்கும் வேலை நடக்குது. பக்தர்கள் வெளியே நின்னு கும்பிட்டுக்குங்கன்னு நிர்வாகம் சொல்லுது....  நம்ம மக்கள்ஸ் உடனே கேட்டுருவாங்களாக்கும்................ :-(

நாகர்புத்துலே வேண்டுதல்கள் ஏராளம்!

சொல்ல மறந்துட்டேனே.... இங்கேயும் தீபம் ஏற்றுதல் முக்கிய வழிபாடாக இருக்கு. எண்ணிக்கை, குறைஞ்ச அளவில்  36 தீபங்கள் !  27 நட்சத்திரங்களும் 9 கிரகங்களுக்கும் சேர்த்து இந்தக் கணக்காம்!
மீன்!       ஐ மீன்....        பாண்டியர்கள் கட்டுன கோவிலோ?

 இந்தக் கோவிலுக்குத் தொட்டடுத்து இன்னொரு கோவில் இருக்கு. வாங்க அங்கே போகலாம்!

தொடரும்..........  :-)