Wednesday, February 27, 2013

புள்ளிருக்கு வேளூர் போகலாமா?

சிதம்பரத்தில் இருந்து சீர்காழி வழியா வந்துருந்தால் ஒரு  இருபத்தி மூணுகிமீ தூரத்தை  குறைச்சுருக்கலாம். புள்ளிருக்கு வேளூரைப் பார்த்த கையோடு திருக்கடையூர்  என்று இருந்துருக்கலாம்.  இங்கே இப்படி நாள் முழுசும்  கல்யாணக்கொண்டாட்டமுன்னு தெரியாமபோச்சே:( வந்தவழியாவே திரும்பிப்போனோம்.  இது நம்ம பயணத்திட்டத்தில் இல்லாத ஊர். ஆனால்  தானாய் அமைஞ்சு போச்சு!

இந்தப்புள் தான் 'அந்த' ஜடாயு.  ராவணன் சீதையைத் திருடிக்கொண்டு போன சமயம் பார்த்துட்டு அவனோடு சண்டை போட்ட அதே ஜடாயுவேதான். சண்டையில் இறகுகள் வெட்டப்பட்டு குற்றுயிராகக் கிடந்தது. சீதையைத் தேடிக்கொண்டு ராமலக்ஷ்மணர்கள் அந்த வழியில் வந்தபோது சமாச்சாரத்தைச் சொல்லிவிட்டு உயிர் நீத்த அற்புதப் பறவை. அதற்கு சிதை மூட்டி உடலைத் தகனம் செய்த இடம்தான் இந்தக்கோவிலில் இருக்கும் ஜடாயு குண்டம்.

காஞ்சீபுரத்திலிருந்து ஒரு 12 கிமீதூரத்தில் திருப்புட்குழின்னு ஒரு ஊர் உண்டு. அங்கே பெருமாள் ஸ்ரீ விஜயராகவன் கோவில் கொண்டுள்ளார். இது திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம். அந்த 108 இல் ஒன்னு. இங்கே விசேஷம் என்னன்னா.... ஜடாயுவுக்கு  ஸ்ரீராமர் ஈமக்கடன் செய்தது.  இப்படி ஒரு இடம் இருக்க,   இங்கே சுமார் 235 கிமீ தாண்டி வைத்தீஸ்வரன் கோவிலில் எப்படி ஜடாயுவை  தகனம் செய்த குண்டம் இருக்கு(ம்) என்பது கொஞ்சம் புரியத்தான் இல்லை.  ஆனாப் பாருங்க.... இது  சிவஸ்தலம். இங்கே ஜடாயு குண்டம் என்பது இன்னொரு சிறப்புதான் இல்லையா?  ஒரே சம்பவம் ரெண்டு இடத்துலே ஒருத்தருக்கே சம்பவிச்சதை  ஒரு அதிசயமுன்னு  எடுத்துக்கலாம். இன்னும் நான் திருப்புட் குழி போகலை. பெருமாள் வரச்சொல்லலைன்னு  அர்த்தம்.

நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் இங்கே சிவனை வழிபட்டது.  கையினில் வேல்பிடித்த சிவபாலன்  முத்துக்குமரன் இருக்குமிடம். சூரியன் வந்து ஈசனை  வழிபட்டதும் இங்கேதான்.மேலும்  இந்த 'புள்'ளைத் தகனம் செய்த   குண்டம் இப்படி எல்லாத்தையும்  கலந்து கட்டி இந்த இடத்துக்கு புள்  (ரிக்கு) இருக்கு வேளூர் என்று ஒரு புராணப்பெயர் இருக்கு. ஆனால்  நமக்கெல்லாம்  வைத்தீஸ்வரன் கோவில் என்றதும் சட்ன்னு  தெரிஞ்சுருது பாருங்க.  சிவன் சுயம்புவாக இருக்கிறார். வைத்திய நாதன்.  சென்னை  திருவான்மியூர் மருந்தீஸ்வரர் மாதிரின்னு  வச்சுக்கலாம்.

ஊர் முழுக்க ஏடு பார்த்துச் சொல்லும்  நாடி ஜோஸியம் கொழிக்குது. போனபிறவியும் வரும் பிறவியும் இருக்கட்டும். இந்தப்பிறவியில் பதிவர் அவதாரம். இதுக்கு மேல் வேறென்ன தெரிஞ்சுக்கணுமுன்னு  நாடி பார்க்காம  இருந்தேன்.  எங்க தாடி மாமாவுக்கு இதிலெல்லாம் பயங்கர நம்பிக்கை. கதைகதையாச் சொல்வார். அவருக்கு ரொம்ப வேண்டப்பட்ட நண்பர் இறந்தவுடன்,  தந்தை மரணம் பற்றி  மனம் நொந்துபோயிருந்த நண்பரின் மகன்களை நாடி ஜோஸியம் பார்க்க கூட்டி வந்தாராம். இங்கே ஓலைச்சுவடி வாசிச்சப்போ தெரிஞ்சதாம்  ஒரு குறிப்பிட்ட ஊரில் சலவைத்தொழிலாளி வீட்டில் அப்பா மீண்டும் பிறவி எடுத்துருக்கார்ன்னு.  உடனே அங்கே போய்  அவரிடம் மன்றாடிக்கேட்டு, எங்கப்பாவை திருப்பி எங்களுக்குக் கொடுத்துருங்கோன்னு அழுது புலம்பி  ஒரு தொகை கொடுத்து  வீட்டுக்குக் கூட்டி வந்துட்டாங்களாம். வீட்டின் உள் முற்றத்தில் அப்பாவைக் கட்டிப்போட்டு தினமும் நல்ல புல் கொடுத்து  சேவை செய்ஞ்சாங்களாம். தாடி மாமா ஒரு சுவாரஸியமானவர். அவரைப்பற்றி முந்தி எழுதியது இங்கே:-)


பிரமாண்டமான  கோவில்தான். இந்தப்பக்கங்களில் அநேகமா எல்லாக் கோவில்களுக்கும் வயசு  கேட்டால் ரெண்டாயிரமுன்னே  பதில்வருது.  மக்கள் தொகை அதிகமில்லாத அந்தக் காலக்கட்டங்களில்  ஊரே கோயிலுக்குள் குடி இருக்கும் அளவுக்குக் கட்டிவிட்டுருக்காங்க  பாருங்க!


 கோவிலுக்கு முன்னால் இருக்கும்  வெளிப்புற முன்மண்டபத்தின் ரெண்டு பக்கமும் வரிசையா இருக்கும் கடைகள் 'அந்தக்கால'  மதுரை மீனாட்சி அம்மன் கோவில்கடைகளை நினைவூட்டியது.

 இதைக்கடந்து  இருக்கும் இன்னொரு வாசலில் நுழைஞ்சால் அங்கேயும் நீண்ட மண்டபம்!

உள்பிரகாரம் இன்னும் ஜோரா இருக்கு!  சிதம்பரம் கோவில் விமானத்தைப்போலவே இங்கும்!

பெரிய முற்றம்போன்ற  அமைப்பில் நடுவில்  அழகான சின்னச்சின்ன கோபுரங்களுடன் தனித்தனிச் சந்நிதிகள்.  வலம் சுற்றிவரும் நமக்கிடப்புறம்  மேலே வெளிச்சம் வர  ஏதுவான பலகணிகளும்  நடையிலமைந்திருக்கும்  கடவுளர்களின்,  தேவர்களின் சந்நிதிகளும்  அருமை!  நிறைய சந்நிதிகள் மூடியே இருந்தன.கிட்டப்போய் கம்பிக்கதவின் உள்ளெ கண்களை அனுப்பினால்........  இருட்டு!






முத்துக்குமரன் சந்நிதியில் தரிசனம் கிடைச்சது. முக்கிய இடங்களில் எல்லாம் பெரிய தாம்பாளத்திலும்  பூக்கூடைகளிலும் , குட்டியா ஒரு பேப்பர் கவரில்   தருமை ஆதீனம், வேளூர் தேவஸ்தானம், வைத்தீஸ்வரன் கோவில், வைத்தியநாத சுவாமி திருச்சாந்துருண்டை, மூலிகை தீர்த்த மண்மருந்துன்னு  ஒரு சிகப்புக்கயிறுடன் ஸ்வாமி பிரசாதமும் கூடவே ஒரு குருக்களும்.

இப்பெல்லாம் கோவில்களில் சின்ன அளவு தட்சிணை பத்து ரூபாய் என்று இருப்பதால்  அந்தத் தட்டுகளிலே  பத்துரூபாய்த்தாள்களா நிறைய கிடக்கு. நாமும்  பிரசாதம் வாங்கிக்கறோம். இது நோய் தீர்க்கும் மருந்துன்னு  ஐதீகம்.  4448 நோய்களைத் தீர்த்து வைக்கிறார்  ஸ்ரீ வைத்தியநாதர் .

 ஜடாயு குண்ட விபூதியுடன்  சித்தாமிர்த தீர்த்த நீரையும் சேர்த்து குழைச்சு, முத்துக்குமரன் சந்நிதி முன்னால் இருக்கும்  குழி அம்மியில் வைத்து  அரைக்கிறாங்க. அரைக்கும்போது  இடைவிடாமல் ஓம் நமசிவாய மந்திரத்தை ஜெபிக்கணும். அரைச்ச  சாந்தை சின்னதா உருட்டி மாத்திரை மாதிரி செஞ்சுடறாங்க.  மாத்திரைகளை அம்பாள்  தையல் நாயகியின் சந்நிதியில் வச்சு  பூஜிச்சவுடன்  மருந்து ரெடி!   ஈசனுக்கு உதவ, மருத்துவகுணமுள்ள தைலத்தை ஏந்தி வந்ததால் அம்பாளுக்குத் தைலநாயகின்னும் ஒரு பெயர் உண்டாம்!


சரி...மருந்துக்கான சித்தா அமிர்த தீர்த்ததுக்கு  எங்கே போறது?   நோ ஒர்ரீஸ். இங்கே இந்தத் தலத்துலேயே அது  நிரம்பி இருப்பது  கோவிலின் திருக்குளத்துலேதான்.  சித்தர்கள் அனைவரும் சேர்ந்து அமிர்தத்தால் ஈசனை அபிஷேகம் செய்தார்கள். அந்த அமிர்தம் வழிஞ்சு நிரம்பி இருக்குது இங்கே.

கோவில் குளம் படு சுத்தமா இருக்கு! காணக் கண் கொள்ளாத காட்சி. ஹப்பா..... எத்தனை நாளாச்சு இப்படி சுத்தமானதொரு குளத்தைப் பார்த்து!!!!  நடுவிலே இருக்கும் நீராழிமண்டபம் அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு!  சிம்பிள் அண்ட் ஸ்வீட் வகை!



  குளத்தைச் சுற்றிலும்  மண்டபத்தோடு கூடிய நடைபாதை.  மனசுக்கு நிம்மதியா இருக்குன்னு அஞ்சு நிமிசம் உக்கார்ந்துட்டு  வந்தோம்.  குமரகுருபரர் இத்தலத்தைப் பாடிய பாடல்களில் ஒன்னு  சுவரில்  பதித்த  கரும்பளிங்குலே செதுக்கி இருக்கு.





கடவுள் என்பது முற்றிலும்  நம்ம நம்பிக்கைதான். நம்பினோர் கெடுவதில்லை என்பதால் நம்பிக்கையோடு அந்த மருந்தை உண்பவர்களுக்கு நோய்களில் இருந்து விடுதலை.  நம்பணும். நம்புனால்தான் சாமி. நமக்கு  வந்த நோய் தீரலைன்னா  ஒன்னு நம்ம நம்பிக்கை வீக்கா இருக்கு. இல்லைன்னா நம்ம வியாதி அந்த  4448 லிஸ்டுலே இல்லை. புதுசாக் கண்டுபிடிச்ச கலிகால நோய்ன்னு வச்சுக்கணும்.

இதேபோல  முத்துக்குமரனுக்கு  அணிவிக்கும் சந்தனக்காப்பு சந்தனமும் ' புழுக்காப்பு ' என்னும் பெயரில் பிரசாதமாக் கிடைக்குது.   போர் புரியக்கிளம்புமுன் தேவசேனாதிபதி முருகன் இங்கே வந்து அம்மை அப்பனை வணங்கியதாகவும் அப்போது அன்னை  பார்வதி  சக்தி வேல்  வழங்கியதாகவும் புராணக்கதை சொல்லுது.

நவகிரகக்கோயில்களுக்கு  ஒரு நாலு வருசத்துக்கு முன்னே யாத்திரை (!!)  போனப்ப இங்கே ஜஸ்ட் எட்டிப் பார்த்துட்டு ஓடுனதோடு சரி. ஒரே நாளில் ஒன்பது கோயில்களுக்கும் போய் வரணுமுன்னா  இப்படித்தான்,  ஹாய் ஹாய் பை பைன்னு  முடியுது. செவ்வாய் கிரகத்துக்கான அங்காரகன் இங்கே இருக்கார்.  செவ்வாய் தோஷமுள்ளவர்கள் வந்து பிரார்த்தனை செஞ்சுட்டுப் போறாங்க.



சுத்து வட்டாரத்தில் நிறையப்பேருக்கு முருகனும், வைத்தியநாதரும்  குலதெய்வம் என்பதால்  கல்யாணங்களும், குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்தல் விழாக்களும்  கோவிலில் நடந்துக்கிட்டேதான் இருக்கு. நாம் போனது புரட்டாசி மாதம் என்பதால்  எந்த மொட்டையையும் பார்க்கலை!

இன்னும் கொஞ்சநேரம் சுத்திப்பார்க்க ஆசை இருந்தும் நேரக்குறைவால் கிளம்பவேண்டியதாப் போச்சு.  கொலைவெறியோடு அடுத்த ஊரை நோக்கிப் போறார் கோபால். கூடவே  அப்பாவியா நானும்:-)

தொடரும்........:-)

பின்குறிப்பு:  பதிவுலகத்தோழி  ஒருவர்  'அன்று' பின்னூட்டியது இப்படி.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஒரே ஒரு லைன் தானா? அநியாயம். அந்த கோவில் மரம், காலைல கிடைக்கிற மருந்து, கோவில் குளம், சந்தனக்குழம்பு விரிவா சொல்லாம இப்படி செய்தா எப்படி. சரி உப்பிலியப்பன் கோவில் பத்தியாவது டீடெயிலா எழுதுங்க.

3/30/2009 8:58 AM
 அன்று துளசி கோபால் said...

வாங்க பத்மா.

ரொம்ப விரிவாச் சுத்திப் பார்க்கலைப்பா இந்தக் கோயில்களை.

நவகிரக டூர்ன்னு ஒரே நாளில் முடிச்சுடறாங்க(-:

அப்புறம் தனியாத்தான் இன்னும் ஒருமுறை மனசுக்கு உகந்தவைகளைப் போய் விலாவரியாப் பார்க்கணும்.

இந்த  இடுகை அன்புத்தோழி பத்மா  அர்விந்த் அவர்களுக்கு  சமர்ப்பணம்.

. உப்பிலியை அப்புறம் ஒரு சமயம் பார்க்கலாம் பத்மா.





44 comments:

  1. // 4448 நோய்களைத் தீர்த்து வைக்கிறார் ஸ்ரீ வைத்தியநாதர் .//

    இந்த லிஸ்ட் எங்காவது கிடைக்குமா டீச்சர்?

    ReplyDelete
  2. Really nice to see this post teacher. Used to go to this temple every kiruthigai with my dad just to bunk School :) now I really wish that at least visit there once in 6 months and not getting chance. Elam Muthukumaran leelai :)

    ReplyDelete
  3. சென்றதுண்டு... படங்கள் படு ஜோர்...

    ReplyDelete
  4. செவ்வாய் தோஷமுள்ளவர்கள் வந்து பிரார்த்தனை செஞ்சுட்டுப் போறாங்க.

    தனவ்ந்திரி முனிவருக்கும் சன்னதி உண்டே,,,

    ReplyDelete
  5. விவரங்கள் அருமை! படங்கள் கணகச்சிதம்!

    இப்படி விரிவா சொன்னால் தானே நல்லா இருக்கு! :)

    ReplyDelete
  6. துளசி அவர்களே,
    இடுகை பிரமாதம். இடுகையின் நீளத்தைக் குறையுங்கள்; பகுதியாக போடுங்கள்.

    மக்களுக்கு குறைந்த நேரத்தில் பல இடுகைகளை படிக்க ஆசை இருப்பதால், முழுவதும் படிக்கமாட்டார்கள்.

    நான் என்னை வைத்து சொல்கிறேன்..
    முழுவதும் படிக்க ஆவல்; ஆனால், இடுகை நீளம்; படங்களும் அதிகம்; படங்களை ரசிக்கவும் நேரம் வேண்டுமல்லவா? அதலால், நாளை முழுவதும் படிக்கிறேன்.

    உங்கள் உழைப்பு விழலுக்கு இரைத்த நீராக போகிவிடும் அபாயம் உள்ளது.

    என் அடுத்த பின்னூட்டத்தில் சில கேள்விகள் கேட்கிறேன்.
    நன்றி!

    ReplyDelete
  7. என் தையல் நாயகி கோவில் பேரைப் பார்த்ததும் ஓடோடி வந்தேன்!

    //கோவில் குளம் படு சுத்தமா இருக்கு! காணக் கண் கொள்ளாத காட்சி. ஹப்பா..... எத்தனை நாளாச்சு இப்படி சுத்தமானதொரு குளத்தைப் பார்த்து!!!!//

    வாவ்! எனக்கும் ஆச்சர்யமா இருக்கு. சந்தோஷமாவும். சித்திரை மாதம் பாத யாத்திரையின் போது பார்த்தது இந்தக் குளம்தானான்னு நினைக்கிற அளவு தலைகீழால்ல இருக்கு! எப்பவும் இப்படியே இருக்கணும்.

    அழகான படங்களுடனான பதிவிற்கும், மீண்டும் ஒரு முறை கோவிலுக்குக் கூட்டிச் சென்றதற்கும் நன்றிகள் அம்மா.

    ReplyDelete
  8. சந்தனம் மணக்குது செந்தூரம் ஜொலிக்குதுனு சீர்காழி பாடியது போல இந்தக் கோவில் முருகன் சந்தனக்கோலம் மிக அருமையாக இருந்தது நாங்க போன போது.
    கூட்டம் நெரிசல் அது வைகாசி மாதம் என்பதால். நோய் தீரும்பா.நம்பிக்கை வச்சாலே தானே சரியாகிடும்..நல்ல அனுபவிச்சுப் படம் எடுத்திருக்கீங்க.
    அழகோ அழகு குளமும் நீராழி மண்டபமும்.உங்களோட வராத குறையை இப்போ படங்கள் தீர்த்து வைத்துவிட்டது:)

    ReplyDelete
  9. பதிவும் படங்களும் அருமை துள்சிக்கா.

    கோபுரத்திலிருக்கும் ஒவ்வொரு சிலையும் ஒரு கதை சொல்லுதே. விருத்தனாக வந்து ஆனை(முகன்) துணையோடு வள்ளியை மணமுடித்த கதையும் இருக்கு அதுல.

    ReplyDelete
  10. பதிவை படிக்க ஆரம்பித்ததும் திருப்புட்குழியைப் பற்றிதான் நினைத்தேன். நீங்களே குறிப்பிட்டு விட்டீங்க.

    படங்கள் எல்லாமே அற்புதமாக இருக்கு. சிறப்பான பதிவு.

    ReplyDelete
  11. ஒரே கதை ஒரே ஆளுக்கு ரெண்டு மூனு எடங்கள்ள நடக்குறதெல்லாம் ரொம்பச் சாதாரணம். வேல் குடுக்குறதப் பத்தி இந்தக் கோயில்ல சொன்னிங்க. அதே போல சிக்கல்லயும் சொல்வாங்க. இதையெல்லாம் கண்டுக்காம போகனும்.

    புள்ளிருக்கும் வேளூர்னு இப்போ சொல்றதில்லை. மக்கள் வைத்தீசுவரங்கோயில்னே ஊரையும் சொல்லிர்ராங்க.

    புள் இருக்கும் வேளுர். இதில் ரிக்கெல்லாம் இல்லை. புள் (மயில்) இருக்கும் வேளூர். அவ்வளவே அதனுடைய பொருள். ஒரு காலத்துல இது முருகன் கோயில். பின்னாளில் சிவனாரும் மகனாரோட சேந்துக்கிட்டாங்கன்னும் சொல்வாங்க.

    இதுவரைக்கும் போனதில்லை. போகனும்.

    பத்து ரூவாங்குறது மினிமம் தட்சணை. அதப் போட்டாத்தான் திருநீறே கெடைக்குது. போடலைன்னா தட்சணைன்னே கேக்குறாங்க. திருநீறு கெடைக்காது. எங்கன்னு கேக்குறீங்களா? திருத்தணியில்தான்.

    ReplyDelete
  12. குலமும் நீராழி மண்டபமும் என்ன அழகு! வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

    4448 நோய்களா?

    திருப்புட்குழி பெருமாளின் வலது திருக்கை ஆஹ்வான (வா என்று அழைக்கும்) ஹஸ்தம். எல்லோரையும் அவர் கூப்பிட்டுக் கொண்டேதான் இருக்கிறார். அதனால் அடுத்த தடவை இந்தியா வரும்போது அந்தப் பெருமாளையும் சேவித்துவிட்டு பதிவு போடுங்க. நாங்க ஒக்கார்ந்த இடத்திலேயே சேவிச்சுக்கறோம்!

    அடுத்த ஊர் போலாம், ரை...ரைட்ட்....

    ReplyDelete
  13. கோபுரம், பிரகாரம், சிற்பங்கள், நீர் நிறைந்த தெப்பக்குளம், நீராழி மண்டபம் என படங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க வைக்கின்றன.

    /திருச்சாந்துருண்டை, மூலிகை தீர்த்த மண்மருந்துன்னு/ தகவல்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. 4448 என்றால் எல்லா நோய்களையும் தீர்க்க வல்லது என்றுதான் கொள்ள வேண்டும். இல்லை அதற்கு மேலும் நோய் வகைகள் இருக்கிறதா, தெரியவில்லை.

    விளக்கமான பகிர்வு அருமை.

    ReplyDelete
  14. படங்களும் விளக்கங்களும் மிக அருமை !!! குளம் கண்ணுக்கு விருந்து.
    ஜடாயு ஹோம குண்டம் எப்படி சிவன் கோவிலில் ...
    உப்பிலியப்பன் கோவிலுக்கு போக ஆவலுடன் WAITING .PLEASE DONT REDUCE THE LENGTH

    ReplyDelete
  15. கோபுரங்கள், சிற்பங்கள், தகவல்கள் என சிறப்பாக இருந்தது.

    உறவினர்களுடன் நவக்கிரக கோயில்கள் டூரில் சட்புட்டுன்னு சென்றது....அப்படியும் திருநள்ளாறும், ஆலங்குடியும் போக முடியலை...:)

    இப்பதிவை படிக்கும் போது தையு மாமி (தையல்நாயகி) ஞாபகத்தில் வருகிறார்....:)

    அடுத்து மாயவரமா...:)

    ReplyDelete
  16. இந்த மாதிரி ஒருமுறை ஒரு கோவிலில் அதன் வயதை கேட்ட போது 2000 என்று சொன்னார்கள்.அங்கு தூணில் இருந்த கல்வெட்டில் தொப்பி போட்ட ஒருவருடைய சிற்பம் செதுகப்பட்டிருந்தது அதை காண்பித்து இது எப்படி 2000 வருடத்துக்கு முன்பு என்றேன்,உடனே பிளேடை மாற்றி அரசாங்க தொல்துறை சொன்னது என்றார்கள்.

    ReplyDelete
  17. குளம் சுத்தமாக இருப்பதற்கு காரணம் அங்கே காவலுக்கு ஆள் போட்டு குளத்தில் வெல்லத்தை கரைக்க விடுவது இல்லை.
    பாலிதீன் பையில் உள்ள வெல்லத்தை கரைக்கும் போது அந்த பாலிதீனையும் அதற்குள் போட்டு விடுவார்கள். மீறி போடுபவர்கள் காவல் ஆளின் வசவுக்கு ஆள் ஆவார்கள்.

    ReplyDelete
  18. உங்கள் தர்சனத்தில் பல கோயில்களையும் நாமும் தர்சித்து மகிழ்கின்றோம்.

    ReplyDelete
  19. வாங்க பழனி கந்தசாமி ஐயா.

    நானும் இந்த லிஸ்ட்டைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்!

    கிடைச்சால் ஒரு பதிவுக்கான மேட்டர் ஆச்சு:-)

    ReplyDelete
  20. வாங்க அருண்.

    இப்படித்தான் வெகு அருகாமையில் இருந்தாலும் போக வேளை வருவதில்லை:(

    முருகனாப் பார்த்துக் கூப்பிட்டால்தான் போக வாய்க்கும்.

    எல்லாம் அவன் செயல்!!!

    ReplyDelete
  21. வாங்க திண்டுக்கல் தனபாலன்.

    //சென்றதுண்டு//

    ஆஹா. சூப்பர்!

    ReplyDelete
  22. வாங்க இராஜராஜேஸ்வரி.

    அட! உள்பிரகாரத்தில் வலம் வரும்போது இடது பக்கம் வரும் சந்நிதிகளில் ஒன்றா?

    ReplyDelete
  23. வாங்க வெங்கட் நாகராஜ்.

    விரிவாகக் காணக்கிடைத்தால் விரிவாக. அங்கே சுருக் என்றால் இங்கேயும் சுருக்!

    வேறென்ன செய்வது சொல்லுங்க?

    ReplyDelete
  24. வாங்க நம்பள்கி.

    உங்க யோசனை நல்லதே. ஆனால் ஆரம்பம் முதல் பெரிய இடுகைகளாக ( வாசிக்கும்போது ஒரு கன்ஸிஸ்டன்ஸி வரணுமுன்னு) போடத்தொடங்கி இப்போ அதுவே வழக்கமாகிப்போயிருச்சு.

    இடுகையை ரெண்டா வெட்டணுமுன்னா எங்கேன்னு முழிப்பதுண்டு:(

    சின்னச்சின்ன இடுகைகளாப் போட்டுருந்தால் ஒரு ஐயாயிரம் தேறி இருக்கும்.

    பெரிய இடுகைகளில் ஒரு பயன் என்னன்னா..... பின்னாளில் புத்தகமா வரும்போது அளவு சரியாக இருக்கும். மூணு பக்கம் என்பதே என் கணக்கு.

    ReplyDelete
  25. வாங்க கவிநயா.

    ஓடோடி வந்த உம்மை ஏமாற்றவில்லைதானே:-))))

    குளத்துக்கு காவல் போட்டுருக்காங்களாம். கோமதியம்மா சொன்னதைப் பாருங்க!

    நம்மமக்களுக்கு தானாகத்தோணாது பாருங்க. அடிச்சு விரட்டுனாதான் சரி போல:(

    ReplyDelete
  26. வாங்க வல்லி.

    அதுக்குத்தான் போகலாமுன்னு சொன்னதும் சரின்னு கிளம்பிறணும். மத்ததை கடவுள் (கொஞ்சமாவது) பார்த்துக்கமாட்டாரா?

    ReplyDelete
  27. வாங்க அமைதிச்சாரல்.

    கதை சொல்லும் கோபுரங்கள்தான்! நம்மஆனையாரை விடமுடியாதேன்னு க்ளிக் க்ளிக்:-)

    அதுக்குக் கொஞ்சம் மேலே குழந்தைகள் சில இருக்கு பார்த்தீங்கதானே? ஆறுமுகன் அவதாரமா... இல்லே அனசூயாவின் கதையான்னு தெரியலைப்பா:(

    மூணு தரையிலும் ஒன்னு இடுப்பிலுமா இருக்கே!

    ReplyDelete
  28. வாங்க ரமா ரவி.

    திருப்புட்குழிக்கு வான்னு சூசகமா சேதி வந்துருக்கோ என்னவோ:-)))

    ரசனைக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  29. வாங்க ஜீரா.

    ரிக்கு இருக்கு அடிச்சுச் சொல்றாங்க தலபுராணத்தில்!

    வேதம் வந்து வணங்கிய மூலவர்.

    சூரியனும் வந்தானாம். ஆனால் அவன் பெயரை சேர்த்துக்கலை பாருங்க:-)

    கதை ரீப்பீட் ஆவதும், ரீ மேக் ஸ்டோரிகளும், காப்பி அண்ட் பேஸ்டுகளும் இந்தக்காலத்தில் மட்டுமில்லாம எப்போதுமே இருக்கு போல!

    ReplyDelete
  30. வாங்க ரஞ்ஜனி.

    இன்னும் சில பெருமாள்ஸ் நம்மை வா ன்னு கூப்பிடும் போஸ்கள் பார்த்தது நினைவுக்கு வருதுப்பா.

    சரி ஸீட் பெல்ட் போட்டுக்குங்க. கிளம்பலாம்:-)))

    ReplyDelete
  31. வாங்க ராமலக்ஷ்மி.

    சுத்தமாக இருப்பதே ஒருஅழகா அமைஞ்சுருதே! அதான் கேமெராவுக்குக் குஷி:-)

    கலிகாலத்தில் மக்கள் தொகை கூடிக்கிட்டே போவதைப்போல் நோய்களும் கூடிக்கிட்டே போகுது.

    வைத்தியநாதரிடம் இன்னும் வீரியமுள்ள மருந்துகள் வேணுமுன்னு அப்பீல் பண்ணிக்கலாமா?

    ReplyDelete
  32. வாங்க சசிகலா.

    உப்பிலியப்பனை இந்தமுறை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கலைப்பா. போன முறை போய் வந்ததுதான்.

    அது இங்கே;

    நேரம் இருந்தால் பாருங்க.

    http://thulasidhalam.blogspot.co.nz/2009/03/5.html

    ReplyDelete
  33. வாங்க ரோஷ்ணியம்மா.

    டூர் குழுவோடு போனால் ஒரேடியா குதிரைக்குக் கண்பட்டை போட்டமாதிரிதான். அங்கே இங்கே திரும்ப முடியாது.

    பகல் நேரங்களில் கோவிலை மூடுவதால்
    இருக்கும் நேரத்தில் கிடச்சதை தரிசிக்கணும்.

    அதிலும் குழுவில் யாராவது ஒரு கோயிலுக்கு ஒருத்தர்ன்னு ஆறமர நீட்டி முழக்கிருவாங்க. அவுங்களை விட்டுட்டு போகவும் முடியாது.

    என்ன செய்யறதுப்பா?

    ReplyDelete
  34. வாங்க குமார்.

    கர்நாடகா பயணத்தில் ஒரு சமணக்கோவிலில் (ஆயிரம் வருசப்பழசு)சீனர்களையும் ட்ராகனையும் செதுக்கி வச்சுருந்தாங்க. பதிவில் படமும் போட்டுருந்தேன்.

    அதுவுமில்லாம நம்மாட்களுக்கு பெருக்கல் வாய்ப்பாடு கொஞ்சம் நல்லாவே வரும். ரெண்டால் பெருக்கணுமுன்னா இன்னும் ஈஸி:-))))

    ReplyDelete
  35. வாங்க கோமதிஅரசு.

    வெல்லம் கரைப்பையெல்லாம் தடை செய்தால் தேவலை. கொசுத்தொல்லை போறாதுன்னு ஈத்தொல்லையும் வேணுமா?

    சாமிக்கு நேர்ந்துக்கிட்டு காஃபி நைவேத்தியம் செஞ்சு பக்தர்களுக்குத் தரக்கூடாதா?

    நம்ம அடையார் அனந்த பத்மநாபன் கோவிலில் சாமி புறப்பாடு தேர் நகர்ந்ததும் கோடை காலம் என்றால் சர்பத், குளிர்காலம் என்றால் ஏலக்காய் டீ தர்றாங்க. ரொம்ப நல்ல யோசனை. இதம் பதம்:-)

    நம்மாட்கள் கோலெடுத்தால் தான் அடங்குவாங்க:(

    ReplyDelete
  36. வாங்க மாதேவி.

    எல்லாக்கோவில்களுக்கும் சோம்பல் இல்லாமல் என் கூடவே வர்றீங்க. அதுக்கு நாந்தானே நன்றி சொல்லணும்?

    நன்றிப்பா!

    ReplyDelete
  37. உண்மை ஆன்மீகதேட www.enadhuanmeegam.blogspot.com

    ReplyDelete
  38. வாங்க சொர்னமித்திரன்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  39. பயனுள்ள ஆன்மீகத் தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  40. படங்கள் பிரமாதம்.

    ReplyDelete
  41. வாங்க கவியாழி கண்ணதாசன்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  42. வாங்க ஸ்ரீராம்..

    ரசிப்புக்கு நன்றி.

    ReplyDelete
  43. நேரில் சென்று தரிசனம் செய்தாற்போல் இருந்தது துள்சிம்மா. ஆமாம் கோபால் தவம் செய்ய ஆரம்பிக்கிறாரா :)

    ReplyDelete
  44. நேற்று முன் தினம் தரிசித்து வந்தேன். இந்தப் பதிவு மீண்டும் செல்லும் ஆர்வத்தை தூண்டியது. நன்றிகள் அம்மா

    ReplyDelete