Wednesday, November 28, 2012

அந்த மூன்று சொற்கள்.


இங்கே பக்கத்துலே தான் இருக்கு.  நானும்  ஒருமுறை  அங்கே அண்ணன் குடும்பத்தோடு போயிருக்கேன்.  மாயாஜாலைத் தொட்டடுத்து வந்துரும்.  கண்ணில் படாமப்போக சான்ஸே இல்லை. அங்கேயே ஒரு காஃபியைக் குடிச்சுக்கலாம்.

ஆனா....காணோம்!  மெயின் ரோடில் குத்துக்கல்லாட்டம் கம்பீரமா நின்னதைக் காணோம்!!! வழிதவறிட்டோமோ? நோ ச்சான்ஸ்:( இதோ இருக்கே மாயாஜால். அப்ப அது எங்கே? காக்கா வூஷ்..... அறுசுவை அரசு காணாமல் போச்சுதே!  போகட்டும் மாயாஜாலுக்குள் நுழைஞ்சோம்.  காஃபிக்கு முன்னால் ஓய்வறைக்குப்போயிட்டு வரலாமுன்னு போனேன்.  ஊஹூம்.... ஒன்னும் சரி இல்லை.  என்னவோ போங்க..........   காஃபியும் வேணாம்  ஒன்னும் வேணாம்......

நித்தியகல்யாணப் பெருமாள் கோவிலில்  வண்டியைவிட்டு இறங்கும்போதே ஓடி வந்து வரவேற்றார் ஒரு மாடு பாப்பா. இருடா உள்ளே போயிட்டு வரேன்னுட்டு, வழக்கத்துக்கு மாறா ஒரு மாலை வாங்கிக்கிட்டேன்.

இந்தக் கோவில் சமாச்சாரம் தெரியுமோ?   இங்கிருக்கும் உற்சவர்  தினம்தினம் கல்யாணம் பண்ணிக்கிறார்.  கல்யாணக்க்வலையில் இருப்போர் ஜோடி மாலை வாங்கிப்போய் பட்டரிடம் கொடுத்தால் அவர் அவைகளைப் பெருமாளுக்குச் சாத்திட்டு, அதில் ஒரு மாலையைக் கொண்டுவந்து  கவலையில் இருக்கும் பொண்ணுக்கோ, பையருக்கோ  தருவார். அதைக் கழுத்தில் போட்டுக்கிட்டு ஒன்பது சுத்து சுத்திவரணும்.   விளக்கமா கதை சொல்லி முன்னே ஒருக்கில் எழுதியது இங்கிருக்கு.  பார்த்துக்குங்க.

பிரார்த்தனையான்னு கேட்ட பட்டரிடம் அதெல்லாம் ஒன்னும் இல்லை. சும்மாப் பெருமாளுக்குச் சார்த்திடுங்கோன்னேன். அவரும் சார்த்தியதும், பழக்க தோஷம் காரணமா  அந்த மாலையை எங்களுக்கே பிரசாதமாக் கொடுத்துட்டார்! கல்யாணக் கவலையில் இருப்போருக்கு  கைமேல் பலன்! எனக்கும்தான் பலிதம் ஆச்சு. ஹிஹி..... பெருமாளுக்கு மாலை சாத்தின மூணாம்நாள் எங்க (அறுபதாம்) கல்யாணம் கேட்டோ!!!

வெளியில் வந்தால் மாடுப்பாப்பா வழிமேல் விழிவச்சுக் காத்திருந்தது.  நந்தகோபாலிடம் இளநீர்களை  வாங்கிக் குடிச்சுட்டு உள்ளே இருக்கும் தேங்காயை, பாப்பாவோடு ஷேர் பண்ணிக்கிட்டோம். குழந்தை ஆசையாச் சாப்பிட்டான்.

கொடிசம்பங்கின்னு சொல்வோமே அந்தப்பூக்கள் அதிசயமாக் கிடைச்சது.  பச்சையை விடமுடியுதா?


ஒரு மூணுவருசத்துக்கு முன்னே  சென்னையில்  இஸ்கான் கோவிலைத் தேடிப்போனோம். புதுக்கோவில் ஒன்னு பக்கத்துலேயே கட்டிக்கிட்டு இருந்தாங்க.  அடுக்கடுக்கான கோபுரங்களும் அலங்காரமுமா இருந்துச்சு. அந்தக் கோவில் முழுசும் கட்டி முடிச்சு இப்போ  ஏப்ரல் மாசம் திறந்துட்டாங்கன்னு  பத்திரிகை செய்தி பார்த்தது நினைவில் இருந்ததால் அங்கேயும் ஒரு எட்டு எட்டிப்பார்த்துடலாமேன்னு  போனோம்.  ஈஸிஆர்  ரோடிலேயே விஜிபி தாண்டி கொஞ்ச தூரத்தில்  எதிர்ப்புறமா  நுழைவுக்கான அலங்கார வளைவு வச்சுருக்காங்க.

வளைவு தாண்டி ஒரு ரெண்டு ரெண்டரைக்கிலோமீட்டர் உள்ளே போகணும். சாலை  ஒன்னும் அவ்வளவா சரி இல்லை. வெறும் மண் ரோடு.  கோவில் அமைஞ்சுருக்கும் இந்தப்பகுதிக்கு அக்கரைன்னு பெயராம்.  பெரிய அன்னப்பறவை வந்து இறங்கி நிற்பதுபோல் தூரத்தே  வெள்ளை மாளிகையாத் தெரியுதுகோவில். ஒன்னரை ஏக்கர் நிலமாம். 10 கோடி ரூ  செலவு. அகலமான முன்படிகளுக்கு ரெண்டு புறமும் நம்மை மாலையும் (தும்பிக்)கையுமா  வரவேற்கும் யானைகள். உள்ளே ஏறிப்போனதும் 'ம்மா..........'ன்னு சொல்லும்  (தோட்டத்தில் மேயும் வெள்ளைப்)பசுவும் கன்றும்.





நல்ல பெரிய முன்முற்றம்தான். அதைக்கடந்தால் பிரமாண்டமான ஹால்!  நேரெதிரா ஒரு அரங்கமேடை. விழாக்களுக்கும் பிரசங்கங்களுக்கும் பயன்படுத்துவாங்களா இருக்கும். இதெல்லாம் கீழ்த்தளம்.  ஹாலுக்குள்ளே இருந்தும் மாடிக்குப்போக வழி இருக்கு.

வெளியே பசுவுக்கு ரெண்டு பக்கங்களிலும் மாடிக்குப்போகும் படிகள்.  படிகள் ஆரம்பிக்கும் இடத்தில்  ரெண்டு பக்கமும் ஒரு அறை போன்ற அமைப்பு. இதுதான்  இவர்கள் வெளியிடும் புத்தக விற்பனைக்கான ஸ்டால்.  மாடிப்படிகளின் முடிவில்   அகலமான டபுள் கதவுகளுக்கப்பால்  பிரமாண்டமான ஹாலும்  கருவறை மேடையும்.   ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோவில்.

அசப்பில் பார்த்தால் சண்டிகர் இஸ்கான் கோவிலின் ஜாடை, அந்த மேடை!  மூன்று பகுதிகளா அமைச்சுருக்காங்க. நடுவில்  குழலூதும் கண்ணனும் ராதையும் தோழிகள் லலிதா & விசாகாவுடன்.  இடதுபக்கம்  Nitai Gauracandra  சந்நிதியும் வலப்பக்கம் அண்ணன் பலராமன் தங்கை சுபத்ராவுடன் ஸ்ரீ  கிருஷ்ணர் சந்நிதியுமா இருக்கு. நடுச்சந்நியின் முன்பக்கம்  பண்டிட் ஓரமா உக்கார்ந்து  பிரசாதம் தர்றார்.

எல்லாமே பளிங்கு மூர்த்திகள்.  முன்புறம்  தனிமேடையில் அவரவர்களின் பாதச்சுவடுகள் பளிங்கில். (படம் எடுத்துக்க அனுமதி கிடைச்சது) பனிரெண்டரைக்கு ஆரத்தி இருக்குன்னார்.  இருந்து சேவிச்சுட்டே போகலாமுன்னு நாங்களும் மெதுவா ஒவ்வொரு இடமாப் பார்த்துக்கிட்டே வந்தோம்.  யசோதாவும் கண்ணனுமா ஒரு சின்ன மண்டபத்தில். ரொம்பவே ஹாயா உக்கார்ந்துக்கிட்டு  ஒரு உத்தரணி தீர்த்தம்( துளிப்பால்) வழங்கினார்  கோவில் வாலண்டியர்களில் ஒருவர்.  இவரைப்போல் பல இளைஞர்கள்  அப்பப்போ வந்து கோவில் வேலைகளில் பங்கெடுத்துக்கறாங்களாம்.

சந்நிதி மேடைக்கு நேரா எதிர்ப்புறம் ஹாலின் மறு கோடியில் ஸ்ரீ ப்ரபுபாதா அவர்களின் சிலைஉருவம். ஹரே க்ருஷ்ணா இயக்கத்தை வெளிநாட்டுக்குக் கொண்டு போனவர் இவர்.  வெறும் மூன்றேசொற்கள்தான் சொல்லணும்.  ராமா, கிருஷ்ணா, ஹரே  இதையே வெவ்வேற  வகையில்  மாத்தி மாத்தி அமைச்சுட்டா மகாமந்த்ரம் வந்துருதுன்னார்.

நம்மூர்ப்பக்கங்களில் அந்தக் காலக்கூட்டுக்குடும்பங்களில்  எப்படியும்  ரெண்டு பாட்டி தாத்தாக்கள் இருப்பாங்கதான். " வயசாயிருச்சுல்லே...  யாரையும் தொந்திரவு பண்ணாம  பேசாம ராமா கிருஷ்ணான்னு திண்ணையில்  உக்கார்ந்துக்கப்டாதோ? எதுக்கு இன்னும் உள்வீட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கணும்?"  வயசான மாட்டுப்பொண்களின்  குமுறல்கள்.  ஏன்னா அவுங்களுக்குமே மாட்டுப்பொண்களும்  மாப்பிள்ளைகளும்  பேரன் பேத்திகளுமா  வீடே நிறைஞ்சு  வழியும்.  இன்னும் சில வருசங்களில் போறவழிக்குப் புண்ணியம் தேடிக்க அதே ராமா கிருஷ்ணாவைச் சொல்லிக்கிட்டுத் திண்ணையில் இடம் பிடிக்கப்போவது இவுங்கதான் என்பது (வசதியா) மறந்து போயிருக்குமோ என்னவோ!

அந்த ரெண்டு சொற்களுடன் ஒரு ஹரே வைக் கூடச்சேர்த்துக்கிட்டால்  மகாமந்த்ரம் சொல்லி நாம சங்கீர்த்தனம் பாடிட முடியும்.  ஸ்ரீ சைதன்ய மகாப்ரபு   1486 வது ஆண்டு அவதரித்தார்.  கிருஷ்ணனும் ராதையுமா சேர்ந்து ஒரே உருவத்தில்  சைதன்யராகப்பிறந்தார் என்று ஐதீகம். வேதங்களிலும் உபநிஷதுகளிலும்  நிபுணத்துவம்  அடைஞ்சவர்.  இறைவனை அடைய எளியவழி நாம சங்கீர்த்தனம்தான். வெறும் மூன்றே சொற்களை மாத்தி மாத்திப்போட்டு  சாமியை  வசீகரிக்கலாம் என்றார்.

ஹரே ராம  ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

அவ்ளோதான் இந்த மந்த்ரம்.  மஹா மந்த்ரம்.  சொல்லிச் சொல்லி நாமும் மந்த்ரவாதி ஆகிடலாம். எவ்ளோ ஈஸி பாருங்க!!!!

கோவிலுக்கு வலதுபக்கம் பழைய கோவில் கட்டிடம் அப்படியேதான் இருக்கு.  அங்கிருந்த சிலைகளில்  பூரி ஜகந்நாத் க்ரூப் மட்டும் இங்கே புதுக்கோவிலில் ஒரு சந்ந்தியில் இடம் பிடிச்சுருக்கு.  மற்ற சிலைகள் உலோகம் என்பதால் உற்சவமூர்த்திகளாக  வச்சுருக்கலாமுன்னு நினைக்கிறேன்.

புதுக்கோவில் திறந்து அஞ்சு மாசம்தான் ஆகுது.  வெளியே தோட்ட நிர்மாணம் ஒன்னும்  ஆரம்பிக்கலை.  நிலத்தைச் சுத்தப்படுத்தும் வேலைகள் நடக்குது. பெண் தொழிலாளர்களுக்கு  புடவை யூனிஃபார்ம் கொடுத்துருக்காங்க.  வளாகத்தின் ஒரு மூலையில் கழிப்பரை(?) இருக்கு.  மழைக்காலங்களில்  அங்கே போய் வரும் சனம் சகதியைக் கொண்டுவராமல் இருக்கணும்.   வெளிவேலைகள் முடிஞ்சதும்  மேற்கூரையுடன் நடைபாதை போடுவாங்கன்னு எனக்குள்ளே  சொல்லிக்கிட்டேன்.

மகளுக்குக் கொஞ்சம் போரடிச்சது. படிக்கட்டுகளிலும் அங்கேயும் இங்கேயுமா உக்கார்ந்து அரைமணி நேரம் போக்கினாள்.  ஆரத்தி சமயம் சமீபிச்சதும்  கொஞ்சம் மக்கள்ஸ் வந்து சேர்ந்தாங்க.  பனிரெண்டு மணிக்கு சந்நிதியை மூடிட்டு ஆரத்திக்காக பனிரெண்டரைக்கு   சங்கொலியுடன் திறக்கறாங்க. ஒரே சமயத்தில் மூன்று பண்டிட்டுகள்  மூன்று சந்நிதிக்கதவுகள் முன்னே நின்னு  ' சங்கே முழங்கு................பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்'

ஸ்விட்ச் போட்டதுபோல மூணு ஜோடிக் கதவுகளும்  ஒன்னாத்திறக்க  மூலவர்களுக்கு உபசாரங்கள் ஒரே சமயம் ஒன்னுபோல நடக்குது.  ஜோதித்திரிகளுடன் அடுக்கு தீப ஆரத்தி!  இதுவரைக்கும் எல்லாமே அருமையோ அருமை!   எல்லா தீபங்களையும் ஒரு தட்டுலே வச்சு  தீவட்டி மாதிரி புகையோடு எரிய எரிய அப்படியே தூக்கி வந்து  ஸ்ரீப்ரபுபாதா  சிலைக்கு ஆரத்தி காமிச்சுட்டு  மக்கள்ஸ்க்கு  தொட்டுக்கும்பிட(!!) தட்டை நீட்டறாங்க.

அநேகமா இன்னும் ஒரு வருசத்துலே புதுக்கருக்கு அழிஞ்சு கரிப்புகை பிடிக்காம இருந்தால் பாக்கியம்!வேறென்ன சொல்ல?:(

பழைய கட்டிடத்துக்கும் புதுக்கட்டிடத்துக்கும்  நடுவில் இருக்கும் இடைவெளியில் மேற்கூரையா துணிப்பந்தல் போட்டு பிரசாத விநியோகம். ரவா கேஸரி கிடைச்சது.


ISKCON  அன்றும் இன்றும் என்று ஒரு ஆல்பம் போட்டு வச்சேன்.  நேரமும் விருப்பமும் இருந்தால் பாருங்க. மகள் எடுத்தவையும் இதுலே இருக்கு.



மால்குடிப்போகலாமுன்னு   கிளம்பிப்போனால் புது ட்ரைவருக்கு  வழி தெரியலை.  ஈஸிஆர் ரோடில் இருந்து அலங்கார வளைவுக்குள் நுழையறோம் பாருங்க  அந்த வளைவை ஒட்டியே மால்குடிக்கு வாசல் இருக்கு.  அதைத் தவறவிட்டுட்டால்..... வளைவுக்குள் நுழைஞ்சதும் இடதுபுற வழியா ச்சட்னு  நுழைஞ்சுடலாம்.  மால்குடின்னு கீழ்ப்பகுதியில் இருந்ததை கண் பார்க்கலை:(

வாசலைத் தவறவிட்டு ஈஸிஆரில் இன்னொரு சுத்துப்போய் ரைட் எடுத்து மீண்டும் வந்து சேர்ந்தோம்.வளாகத்தில் ரெண்டு உணவகம். அந்த இன்னொன்னுதான் அந்த பஞ்சாபி தாபா. பெயர் ஸ்வதேஷ்! . சென்னை விஜயத்தில் ரெண்டு முறை மால்குடிக்கு வந்ததில் கோபாலுக்குப் பிடிச்சுப்போச்சு. மகளை அங்கே கூட்டிப்போய் சாப்பிடவைக்கணுமுன்னு   நேர்ந்துக்கிட்டார் போல:-)

எனக்கு அங்கிருக்கும் திண்ணை, நவநாகரீக (!!)மண் அடுப்புகள் எல்லாம் ரொம்பப்பிடிக்கும். மகளுக்கும் இடம் ரொம்பப் பிடிச்சதுன்னாள். கிராமத்து செட்டிங், கிணறு, குடிசை , தோட்டத்துலே உக்கார்ந்து சாப்பிடும்வகையில்  இருக்கைகள், குட்டியா ஒரு அல்லிக்குளம் இப்படி. ஊதுபத்தி, மெழுகுவர்த்தி,  வாசனை எண்ணெய், ஸ்கார்ஃப்கள்ன்னு  விற்கும் சின்னக் கடை. சுற்றுலாப்பயணிகளைக் கவனத்தில் வச்சு செஞ்சுருந்த அமைப்பு.  சுவாரசியமாவே இருக்கு.

அவரவர் விருப்பத்தில் சாப்பாடு ஆச்சு. உள்ளூர் மக்கள்தான்  கண்ணில் பட்டாங்க.  அறைக்குப்போய் கொஞ்ச நேரம் ஓய்வு.  புது ட்ரைவரையும்  வண்டியையும்   திருப்பி அனுப்பிட்டோம்.  காலையில் நடந்த களேபரம்  முடிஞ்சுருச்சு. நானே வந்துருவேன்னு சீனிவாசன் கூப்பிட்டுச் சொல்லி இருந்தார்.

மாலையில் அவர் வந்ததும் 'கண்டுபிடிச்சு' வச்சுருந்த கடைக்குப்போனோம்:-)

பிகு: அடுத்த பதிவு வரும்வரை அந்த மூன்று சொற்களை  பிடிச்ச மாதிரி மாற்றிப்போட்டு பிடிச்ச ராகத்துலே பாடிக்கிட்டே  இருக்கலாமா?   கடவுளைக் காண  ஈஸி ரூட் இதுதானாம்!!!





43 comments:

  1. ஓய்வு அறையைப்பத்தி எங்கயும் நம்ம கருத்து மாறாது. :)

    “மாட்டுப்பொண்கள்” இந்த வார்த்தையை அப்பா,அம்மா சொல்வதைக்கேட்டு ஆஷிஷுக்கும், அம்ருதாவுக்கும் யாரைச்சொல்றாங்கன்னு கன்ஃப்யூஷன். :)). விவரமா சொன்னதக்கப்புறம் அம்மாவையும், அப்பாவையும் முறைச்சு பாத்து தாத்தா அப்படி சொல்லாதீங்க. கேக்கவே நல்லா இல்லை!!! அப்படின்னு கறாரா சொல்லிட்டாங்க.

    உங்க பதிவுல படிச்சதும் அந்த ஞாபகம் வந்துச்சு. :))

    ReplyDelete
  2. சிறப்பான கோவில்.... ரொம்ப நாளா பதிவுகள் காணோமேன்னு நினைத்தேன் நேற்று தான்...

    ReplyDelete
  3. கோவிலின் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது.

    மால்குடியும் அப்படியே.
    அறுசுவையைத் தேடி நாங்களும் ஏமந்தோம். அவருக்கு வயசாகிவிட்டது. மாயாஜாலுக்குள்ள காந்தீன் இருக்குனு சொன்னாங்க.
    நானும் ராமாகிருஷ்ணானு இருக்கப் பார்க்கறேன்:) மீண்டும் பதிவிட வந்ததுக்கு ரொம்ப நன்றி துளசி.

    ReplyDelete
  4. சுத்திச் சுத்தி வந்தீங்க. சென்னையச் சுத்திச் சுத்தி வந்தீங்க. இஸ்கான் புதுக் கோயில் பத்தி நானும் கேள்விப்பட்டேன். போட்டோக்களில் நல்லா கட்டியிருங்காங்கன்னு தெரியுது.

    ஈசிஆர்ல ரோட்டைப் பாத்துக்கிட்டே போகனும். இல்லைன்னா எடத்த விட்டுருவோம்.

    மால்குடிக்கு நானும் போயிருக்கேன்னு நெனைக்கிறேன்.

    பப்ளிக் டாய்லெட் பத்திச் சொன்னா வெக்கக்கேடு. சொல்லாட்டி மானக்கேடு. மாயாஜாலுக்குப் பலப்பல காரணங்களால போறதில்ல. சிட்டிக்குள்ள சத்யத்துலயே முடிஞ்ச வரைக்கும் படங்களைப் பாத்துர்ரது வழக்கம்.

    அவ்வளோ தூரம் போனிங்களே... இன்னும் கொஞ்சம் போயிருந்தா முதலைப் பண்ணை வந்திருக்கும். ஒரு எட்டு பாத்திருக்கலாமே. சரி... அடுத்த டிரிப்புல பாத்துக்கலாம் :)

    ReplyDelete
  5. சற்று இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிவிட வந்ததில் மகிழ்ச்சி டீச்சர். மகளுக்கு இப்போ தேவலயா?

    ஓய்வு அறை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி தான் போல....தில்லியிலும் சுற்றுலா தலங்களில், வெளிநாட்டவர்கள் முகத்தை பார்க்கணுமே...:((

    ReplyDelete
  6. கோவிலின் பிரமாண்டம் அசர வைத்தது...

    தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  7. மால்குடி அழகு. பெங்களூர் இஸ்கான் ஒரு குன்றின் மேல் இருக்கும் இதே போல் பிரமாண்டமாய். படம் எடுக்க அனுமதி கிடையாது.

    ReplyDelete
  8. பச்சைக் கலர் பூ இப்பத்தான் பார்க்கிறேன். நல்லா இருக்கு. வாசனை உண்டா?

    மால்குடி போகணும்னு ஒரு ஆசை வந்துடுச்சு. இன்னும் கொஞ்சம் பயண விவரம் சேர்த்திருக்கலாமேனு தோணுது.

    ReplyDelete
  9. //பப்ளிக் டாய்லெட் பத்திச் சொன்னா வெக்கக்கேடு. சொல்லாட்டி மானக்கேடு.

    டாப்.

    ReplyDelete
  10. நித்ய கல்யாணப் பெருமாளை சேவிக்கப் போனபோது எனக்கு காலில் ஃப்ராக்சர் ஆகி சரியாகி இருந்த சமயம். காலில் வலி இருந்ததால் கணவரின் கையைப்பிடித்துக் கொண்டே பிரதட்சணம் செய்தேன். அடுத்த சில மாதங்களில் எங்களுக்கு 60 நடந்தது.
    என் அம்மா சொன்னாள்: நித்ய கல்யாணப் பெருமாள் அருளால் உனக்கு கல்யாணம் ஆயிற்று என்று.

    இஸ்கான் பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தன. அடுத்தமுறை மால்குடி போக வேண்டும்!

    ReplyDelete
  11. அழகா பளீர்ன்னு இருக்கு கோயில்.

    கோலம் போட்ட அடுப்படி செம ஜோர். ராத்திரி அடுக்களை அலம்பி விட்டப்புறம் கோலப்பொடியாலயோ சாக்பீஸாலயோ கோலம் போட்டு வெச்சுட்டு, காலைல பார்த்தா மங்களகரமா இருக்கும்.அந்த ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  12. கடவுளைக் காண ஈஸி ரூட் இதுதானாம்!!!//

    மகா மந்திரத்தை அழகாய் சொல்லி கொடுத்து விட்டீர்கள். கடவுளை கண்டு விடலாம்.
    மால்குடி, இஸ்கான் எல்லாம் அழகு.
    நித்தியகல்யாண பெருமாள் ஆசியால் சஷ்டியப்தபூர்த்தி விழா சிறப்பாக நடந்தது அல்லவா! பெருமாளுக்கு நன்றி.

    ReplyDelete
  13. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  14. / அந்த மூன்று சொற்களை பிடிச்ச மாதிரி மாற்றிப்போட்டு பிடிச்ச ராகத்துலே பாடிக்கிட்டே இருக்கலாமா? கடவுளைக் காண ஈஸி ரூட் இதுதானாம்!!!//

    அட !; ஆமாங்க... இந்த மூணே தாங்க தாரக மந்த்ரம். இங்கன வந்து பாருங்க.

    சுப்பு ரத்தினம்

    ReplyDelete
  15. துளசி மேடத்திற்கும், கோபால் சாருக்கும் அறுபதாம் கல்யாண வாழ்த்துக்கள்.

    இதை ஏன் தலைப்பில் போடவில்லை?

    ReplyDelete
  16. கோயில் மிகவும் அழகாக இருக்கின்றது.

    மால்குடி பார்க்கவே நன்றாக இருக்கிறது.

    மால்குடி டேய்ஸ் ஞாபகத்துக்கு வந்தது.சென்றவருடம் ரிவி நாடகமாகப் போட்டிருந்தார்கள் சில பார்க்கக் கிடைத்தது.

    ReplyDelete
  17. கோவிலின் அழகு படங்களில் தெரிகிறது. அறுசுவை அவர்களின் கைமணத்தை இப்போது சங்கீத சீசன் ஆரம்பித்து விட்டதே, ஏதாவது ஒரு சபாவில் ருசிக்கலாம்.

    ReplyDelete
  18. இஸ்கான் கோவில் படங்கல் எல்லாமே அமர்க்களமா இருக்கு. பகிர்வும் சுவார்சியம்

    ReplyDelete
  19. சென்னை வாசி எனக்கே தெரியாத இடங்கள்.அவசியம் ஒரு முறை மால்குடி போக வேண்டும்.ரொம்ப அருமையாக பிரமாதமான படங்களுடன் பகிர்ந்து இருக்கீங்க துளசிம்மா.

    ReplyDelete
  20. Hello!
    We had been residing so close to that place, yet I've never visited the temple. Shifted now... But looks so good!

    The "sambangi" flower brought back memories of my Appa-Paatti! That flower is the only thing I remember about her. She used to make the gajra of those flowers whenever I visited her. I don't even remember how she used to walk/talk. Just the flowers! Thanks for sharing the picture!

    ReplyDelete
  21. வாங்க புதுகைத் தென்றல்.

    மாற்றுப்பெண் என்பதே மருவி மாட்டுப்பொண் என்றாகிவிட்டதுன்னு அம்ருதாவுக்கும் ஆஷீஷுக்கும் சொல்லுங்க.

    என்ன ஒன்னு.... இந்த மாமியார்கள் எல்லாம் மாட்டுப்பொண்தான் சரியான சொல் என்று நினைச்சுக்கிட்டே இருக்காங்க:(

    ReplyDelete
  22. வாங்க வெங்கட் நாகராஜ்.

    சென்னைக்குப்போகும் சமயம் நேரம் இருந்தால் இங்கேயும் ஒரு எட்டு போயிட்டு வாங்க. மறுபாதியின் லிஸ்ட் கூடிக்கிட்டே போகப்போகுது:-))))

    ReplyDelete
  23. வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

    ரசிப்புக்கு நன்றி.

    ReplyDelete
  24. வாங்க வல்லி.

    அறுசுவையோட சகோதரர்தான் ஞானாம்பிகா நடத்தறாருன்னு கேள்விப்பட்டேன்.

    குடும்பக் கைமணம். டிசம்பர் சீஸனில் விட்டுறாதீங்க:-)

    ReplyDelete
  25. வாங்க ஜீரா.

    சந்தர்ப்பம் கிடைச்சால் ஒரு எட்டு பார்த்து பார்த்துட்டு வாங்க. இன்னும் பெங்களூர் போல அராஜகம் ஆரம்பிக்கலை!

    முதலைப்பண்ணை முன்பொருக்கில் போய் மனம் நொந்து போயிட்டேன்.

    பத்து முதலைக்கான இடத்தில் நூறு முதலைகளைப்போட்டு வச்சுருந்தாங்க. நகர இடம் இல்லாமல் ஒன்றின்மேல் ஒன்று படுத்துக் கிடந்துச்சுகள்.

    பரிதாபம் கேட்டோ:(

    ReplyDelete
  26. வாங்க ரோஷ்ணியம்மா.

    மகள் உடல்நலம் இப்போ பரவாயில்லை.விசாரிப்புக்கு நன்றி.

    சுத்தம் அவசியம் என்பதை நம்ம மக்கள் எப்போ உணருவாங்களோ!!!

    ReplyDelete
  27. வாங்க திண்டுக்கல் தனபாலன்.

    வருகைக்கு நன்றிகள். இதுதான் தமிழ்நாட்டிலேயே இஸ்கானுக்கான பெரிய கோவிலாம்!

    ReplyDelete
  28. வாங்க ராமலக்ஷ்மி,

    உங்கூரு இஸ்கானுக்கு ரெண்டு முறை வந்துருக்கேன். போதுமடா சாமின்னு ஆக்கிடுறாங்க.

    அந்தக்காலத்து மதுரை மீனாட்சி கோவில்கடைகளைப்போல இங்கே அளவுக்கதிகமா இருந்துச்சு. மக்கள் கூட்டமும் இந்த தளத்தில்தான் அதிகம்:(

    ஒரே ஒரு ஆறுதல்..... கோவில் கருவறைமுன் கூட்டம் இல்லை:-))))

    ReplyDelete
  29. வாங்க அப்பாதுரை.

    சம்பங்கியில் ரெண்டு வகை இருக்கு. நில சம்பங்கிதான் மாலைகளிலும் கதம்பங்களிலும் வச்சுக் கட்டுவாங்க. வெள்ளை நிறத்தில் கொஞ்சம் தடித்த இதழ்களுடன் இருக்கும்.

    இந்தப் பச்சை வகை, கொடி சம்பங்கி. கொஞ்சம் அரிதாத்தான் கிடைக்கும். நல்ல மணம் உண்டு. ஒரு வித்தியாசமான சுகந்தம்!

    சொல்லப்போனால்....இந்தப் பயணத்தொடர் இன்னும் ஆரம்பிக்கவே இல்லைன்னுதான் சொல்லணும்:-)

    ஏகப்பட்ட சமாச்சாரங்கள் வந்துக்கிட்டே இருக்கும்.(எச்சரிக்கை:-))))

    ReplyDelete
  30. வாங்க ரஞ்சனி.

    ரொம்பவே பவர்ஃபுல்லான கோவில் இது. உங்களுக்கு சில மாதங்கள் கழிச்சுன்னா.... எங்களுக்கு மூணாம் நாளிலேயே:-)))))

    மால்குடிக்கு ஒரு மாலை வேளையில் போங்க. சுடச்சுட ஆப்பம் கண்ணெதிரே சுட்டுத்தருவாங்க!

    ReplyDelete
  31. வாங்க அமைதிச்சாரல்.

    எனக்கும் எங்க பாட்டி வீட்டு அடுப்படி ஞாபகம் வந்துச்சு.

    பச்சை நிற சாணகம் போட்டு மெழுகி பளீர்ன்னு கோலப்பொடியில் கோலம் போட்டு வைப்பாங்க. தினம் ராத்திரி எத்தனை நேரமானாலும் அடுப்படியை அலங்கரிச்சுட்டுத்தான் தூங்கப்போவாங்க அம்மம்மா.

    ReplyDelete
  32. வாங்க கோமதி அரசு.

    பயணம் முடிஞ்சு பதிவுகள் ஆரம்பிச்சதைப் பார்த்தேன். மகிழ்ச்சி!

    பெரும் ஆள் க்ருபையால் எல்லாம் நல்லபடியாக நடந்தது. தங்கள் ஆசிகளும் கிடைத்தன.

    ReplyDelete
  33. கொடிசம்பங்கி - Telosma cordata
    சென்னையில்? ஆச்சரியமான தகவல்!

    ReplyDelete
  34. வாங்க திண்டுக்கல் தனபாலன்.

    தகவலுக்கு நன்றி. அந்தப்பக்கம் போய் பலநாளாச்சு:(

    ReplyDelete
  35. வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

    ப்ரணவ் & தினேஷ் பாடும் மகாமந்த்ரம் அருமை! நல்ல கைடன்ஸ் கிடைச்சுருக்கே அவுங்களுக்கு!

    சிறுபிள்ளைகள் பாடுவது க்ருஷ்ணனுக்கு ரொம்பவே பிடிக்கும்!

    ReplyDelete
  36. வாங்க லோகன்.

    ஆஹா.... யூ மிஸ்ட் த ஃபன்!

    நாந்தான் அப்போ பயணத்தில் இருந்தேனே. நம்ம மக்கள்ஸ் கொண்டாடிட்டாங்களே!

    எல்லாம் ஒரே இடத்தில் இங்கே:-)

    http://madhumithaa.blogspot.co.nz/2012/10/blog-post_9.html

    ReplyDelete
  37. வாங்க மாதேவி.

    மால்குடி டேய்ஸ் நாடகமா???? ஹைய்யோ!!!!

    நான் இங்கே (நியூஸி) வந்தபின்தான் மால்குடி டேய்ஸ் தொகுப்புகள் அனைத்தையும் நூலகத்திலிருந்து எடுத்து வாசித்தேன்.

    ReplyDelete
  38. வாங்க ஸ்ரீராம்..

    சங்கீத சீஸனை ஜமாய்ங்க. அப்படியே ஞானம்பிகா, அறுசுவை கேண்டீன்களையும்!

    ReplyDelete
  39. வாங்க லக்ஷ்மி.

    சிங்கைப்பயணம் இனிமையாக நடந்துவிட்டது. ஓய்வு எடுத்துக்கிட்டீங்களா?

    ReplyDelete
  40. வாங்க ஸாதிகா.

    ஒரு நாள் ஃபேமிலி அவுட்டிங்ன்னு மால்குடி போயிட்டு அப்படியே எதிர்வாடையில் போய், காலை எட்டிப்போட்டு நடந்து வேடிக்கை பார்த்து வாங்க:-))))

    ReplyDelete
  41. வாங்க மாதங்கி.

    ஆஹா.... கொடி சம்பங்கி கொசுவர்த்தி ஏத்திருச்சா உங்களுக்கு!!!!!

    வாழ்க்கையில் சில மணங்கள் மனசை விட்டு அகலுவதில்லை! பூர்வ ஜென்ம வாசனை என்பது இதுதான் போல:-))))

    ReplyDelete
  42. வாங்க ரமேஷ்.

    என்னங்க இவ்வளோ ஆச்சரியம்? இதுமட்டுமா.... செண்பகப்பூ, மண் நிறத்தில் இருக்கும் மகுடம் பூ, மனோரஞ்சிதம் கூட சில சமயங்களில் சென்னையில் கிடைக்கும்.

    எல்லாம் நம்ம அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

    ஆமாம்.... முதல் வரவா நம்ம தளத்துக்கு?
    நல்வரவு.

    கொடி சம்பங்கியின் தாவரப்பெயர் கொடுத்ததுக்கு(ம்) நன்றிகள்.

    ReplyDelete